திங்கள், 9 அக்டோபர், 2023

சில்லு சில்லாய் - 14 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 1


என்னைப் போல் சாப்பாட்டை விரும்பி ரசித்துச் சாப்பிடும் பிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்! பெங்களூருக்கு வந்ததிலிருந்து இப்பதிவை எழுதத் தொடங்கி எழுதிக் கொண்டே……..இப்போதுதான் முடிக்க முடிந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின் வாழ்க்கை, உணவு முறை, உணவகங்கள் என்று நான் கொஞ்சம் கூர்ந்து நோக்குவது வழக்கம்.

பெங்களூருக்கு வந்து தாமசிப்பது இது இரண்டாவது முறை. முதன் முறை 22 வருடங்களுக்கு முன். அப்போது பார்த்த பெங்களூருக்கும் இப்போதைய பெங்களூருக்கும் எவ்வளவு மாற்றம்! மாற்றம் ஒன்றே மாறாதது. ஏற்கத்தான் வேண்டும். மாற்றங்களில் குறிப்பாக வாழ்க்கை முறை மற்றும் உணவகங்கள். நான் இங்கு வந்த பிறகு புதியதாய் முளைத்தவை அதுவும் தற்போது வீட்டருகில் ஒரு மாதத்திலேயே 4 புது உணவகங்கள்! இனிப்புக் கடைகள். எல்லாம் ஜே! ஜே!

இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு Silicon Valley, பூங்கா நகரம் – Garden city இப்போது சாப்பாட்டு Valley/பள்ளத்தாக்கு என்று சொல்லும் அளவிற்கு மாறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. சில அடிகள் நடந்து காலில் ஏதோ தட்டியதே என்று திரும்பிப் பார்த்தா ஏதேனும் ஓர் உணவகம், காஃபி கடை இருக்கும். பக்கத்திலேயே பேக்கரியையும் பார்க்கலாம். இது உறுதி. இப்போது இருக்கும் எங்கள் வீட்டருகில் சுற்றிலும் எண்ணற்ற உணவகங்கள், ஜூஸ், சாட், துரித உணவகங்கள், பேக்கரிகள், வட இந்திய உணவகங்கள். எல்லாம் எப்போதும் ஜே! ஜே!

சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பன்முகத்தன்மை கொண்டதாக பெங்களூர் இருப்பதாலோ என்னவோ உணவிலும் கூட பளிச்சென்று தெரிகிறது. தென்னிந்திய, வட இந்திய, சீன அப்புறம் பல மேற்கத்திய உணவுகள், பெயரே வாயில நுழையாத பெயருடைய உணவு வகைகளுக்கான உணவகங்களோடு, சாலையோரம், தெரு ஓரக் கடைகள் கூட போட்டி போட்டுக் கொண்டு சக்கை போடு போடுகின்றன.

வித விதமான உணவுகள், சுத்தமான உணவகங்கள், நம்ம பட்ஜெட்டை பதம் பார்க்காத உணவு வகைகள். அதாவது நான் சொல்வது தினமும் சாப்பிடும் சாப்பாட்டு வகைகள்.

எனக்கு ஆச்சரியம். புதுசு புதுசா உணவகங்கள் தொடங்கினாலும் கூட்டம்தான். சில உணவங்களில் இடம் இல்லாமல், வெளியில் போடப்பட்டிருக்கும் மேசைகளில் வைத்துக் கொண்டு நின்று கொண்டே சாப்பிடுவாங்கவதைப் பார்க்கலாம். எல்லா உணவகங்களிலும் கூட்டம்தான். எப்படியும்  உணவகங்களுக்கு வருவாய் கிடைத்துவிடுகிறது என்றே தோன்றுகிறது, Thanks to Bangaloreans and Foodies!

அந்த அளவுக்கு இங்குள்ள மக்கள் உணவுக்காதலர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னாலும், நான் பார்த்தவரையில் எனக்குத் தோன்றிய காரணங்கள் - நோ கிச்சன் சித்தாந்தம், மத்தியதரக் குடும்பங்களின் வாழ்க்கை முறை மாற்றம், Budget Friendly – பாக்கெட்டை பதம் பார்க்காத உணவு, தொழில்நுட்பத் துறையின் ஆக்ரமிப்பு அதில் பல்வேறு மாநில இளைஞர்கள், இளைஞிகள், கணவன் மனைவி இருவருமே பணி செய்பவர்கள் என்பதால் மன அழுத்தத்தைக் கடக்க என்பதோடு செலவழிக்க நல்ல வீங்கிய பர்ஸ் என்று பல காரணங்கள்.  வார இறுதி நாட்களில், கூட்டத்தைப் பார்க்க வேண்டும்! குடும்பங்களோடு குழுமி ரசிக்கிறார்கள். 

என்னை ஆச்சரியப்படுத்தும் இன்னொரு விஷயம் – எந்தப் பெயரைச் சொல்லி என்ன உணவு கொடுத்தாலும் அந்தப் பெயருக்கான உணவுதானா என்று எதுவும் பார்க்காமல் எதைக் கொடுத்தாலும் சாப்பிடும் கூட்டம்!

பொதுவாகவே எல்லா ஊர்களிலும் இப்போது மக்கள் வெளியில் சாப்பிடுவதை விரும்புறார்கள் என்றே தோன்றுகிறது. சாப்பாட்டுக் கடைகளுக்கும் கோளுதான். குறிப்பாக மத்தியதர குடும்பங்கள். இதே நகரத்தின் மற்றொரு பக்கத்தை பற்றியும் வரும்.

ஆஹா என் பிரிய காஃபி, பாரம்பரிய முறையிலான ஃபில்டர் காபி என்பது பெங்களூரின் நாடி நரம்பு. வாழ்க்கை! சிக்கரி கலந்த காஃபி. நன்றாக இருக்கும். Not bad you know! முன்பு ரூ 10. இப்போது ரூ 12 லிருந்து 15 வரை. வீட்டில் சிக்கரி கலக்காத காஃபி. அது தனி ஃப்ளேவர்!

தெருவோர காபி/பெட்டி கடைகளில் (நவீன பெட்டிக் கடைகள்) ஒரு கையில் காபி கப்/க்ளாஸ், மற்றொரு கையில் சிகரெட் என்று ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி ஆங்கிலம் ஹிந்தி ஒலிக்க கலந்து கட்டிய கும்பல் சர்வ சகஜ காட்சி! படித்தவர்கள்!

சரி, இப்ப பெங்களூர்/கர்நாடக ஸ்பெஷல் என்று சொல்லப்படும் சில பதார்த்தங்கள், வீட்டில் செய்வதென்றாலும், ஹோட்டல்களில் அவற்றின் சுவை எப்படி இருக்கும் என்று அறிய வேண்டி சுவைத்தவை.

பென்னே தோசா/பென்னே மஸாலா தோசா – அதாங்க வெண்ணை தோசை. இதற்கான பொருட்களும் அளவும் சற்று வித்தியாசம். வெளியில் மொறு மொறு, உள்ளே மிருதுவாக வெண்ணைல???? குளிப்பாட்டி இருப்பாங்க. என்னால் ஒரு தோசை கூடச் சாப்பிட முடியாது எனவே பை டூ. ஹான் இன்னொன்று, இங்கு இந்த பை டூ ரொம்ப பிராபல்யம் ஜூஸ் கடைகளில், சாட் கடைகளில்.

வடை – இங்கு வடை நன்றாக இருக்கும். ஆனால் தொட்டுக் கொள்ளத் தரப்படும் தேங்காய் - வெள்ளைச் சட்னி பெரும்பாலான உணவகங்களில் ஸோ ஸோ தான். நான் தவிர்த்து விடுவேன். இந்த வடையைப் பற்றிச் சொல்லும் போது சென்ற திங்கள், ஸ்ரீராமின் பதிவான வடை மகாத்மியத்திற்கான பதிலாக இங்கு வீட்டில் செய்யும் முறையை படங்களோடு, வீடியோவோடு கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனா செய்யும் போது படங்கள் எடுக்கவில்லை. இப்ப பதிவு வேறு திக்கில் செல்வதால் அதை அப்புறம் சொல்கிறேன்.

இங்கு தயிர் வடையும், சாம்பார் வடையும் ரெண்டாங்கெட்டான். அதாங்க கொஞ்சம் திதிப்பாக இருக்கும்.

இங்கு வித்தியாசமான பெயரில் சுவைத்த மற்றொரு பதார்த்தம் போண்டா சூப். போண்டாவை கர்நாடக ரஸத்தில் – அதாவது ரசம் கொஞ்சம் கெட்டியாகப் பருப்பு தூக்கலாக இருக்கும் - போட்டுத் தருகிறார்கள். இதுவும் திதிப்பு காரம் என்று இருக்கும். கிட்டத்தட்ட நம்ம ஊர் ரஸ வடை. இது எனக்குப் பிடித்தது.

கர்நாடகாவின் பிராபல்ய பிசிபேளா பாத். இது இல்லாமலா! பூந்தி, ஓமப்பொடி இல்லைனா சிப்ஸ் அல்லது பொரித்த ஜவ்வரிசி வடாமுடன் தருகிறார்கள். ஜவ்வரிசி வடாம் வீட்டில் செய்யும் ருசி கிடையாது. இது பெரும்பாலான உணவகங்களில் மெனுவில் நிச்சயமாக இருக்கும். இங்குள்ளவர்களின் விருப்ப உணவு. சுவை ஒரு சில உணவகங்களில்தான் பாரம்பரிய அந்த பட்டையின் லேசான மணத்துடன் இருக்கும். பல இடங்களில் வெறும் சாம்பார் சாதம் போலதான் இருக்கிறது. காய்கள் இருக்கான்னு தேடணும்.  

பெங்களூர்க்காரர்களுக்கு பிரியாணி/புலாவ் இல்லை என்றால் சாப்பாடு முழுமை அடையாது போல! அந்த அளைவிற்குப் பிராபல்யம். இது பொதுவாகச் சொல்லப்படும் பிரியாணி இல்லை. நாட்டி தொன்னே பிரியாணி (நாட்டி - நாட்டுப்புறம்/மலயாளத்தில் நாடன்) – (தொன்னே - பப்பாளி மரத்தின் பெரிய இலை அல்லது பனை, மந்தார இலையில் செய்யப்பட்ட பெரிய தொன்னை) அதாவாது கிராமத்து ஸ்டைல். அசைவம்தான் பிராபல்யம் என்றாலும் நான் சொல்லுவது சைவ புலாவ். நிஜமாகவே நன்றாகச் செய்கிறார்கள். அல்லது நான் சுவைத்த இடங்களில். (இந்த பிரியாணி/புலாவ் கடவுளரையும் விட்டுவைக்கவில்லை கேட்டேளா! கோயில் பிரசாதங்கள் பற்றியும் வரும்.)

சுவை தொடரும்…..சாப்பாடு பத்தி சொல்லி அப்படி டக்குனு முடிக்க முடியுமா!! சொல்லுங்கள்?!

சில்லு - 2 - பொன்னாங்கண்ணிக் கீரை கடையல் 

ஆங்கிலத்தில்

சரி, அப்படியே போற போக்குல மேலே இருக்கற பொன்னாங்கண்ணிக் கீரை கடையல் காணொளியும் முடிஞ்சா பார்த்துடுங்க. ஒரு நிமிட ஷார்ட்ஸ்தான். இது ஆங்கிலத்தில். சும்மா குரல் சேர்த்து முயற்சி. 1 நிமிடக் காணொளியில் தனித் தனியாகச் செய்து கோர்த்ததால். நான் கொடுத்த குரல், குறிப்புகள் செய்வதுடன் சிங்க் ஆகலை. அடுத்த முறை சப்டைட்டில் எடிட்டரில் போட்டு செய்ய வேண்டும். இதே காணொலி தமிழிலும் இருக்கு. அது எழுத்தில் குறிப்புகளுடன் வரும் Reserved!


------கீதா 

41 கருத்துகள்:

  1. வணக்கம் பெங்களூருவைப் பற்றிய விவரங்கள் அருமை.

    எல்லா கடைகளிலும் கூட்டம், இதற்கு காரணம் இருபாலரும் வேலைக்கு செல்கின்றனர். சமைப்பதற்கு நேரமில்லை மேலும் அலுப்பு.

    இந்தியாவைக் குறித்து சீனா நாட்டின் எதிர்கால திட்டம் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கட்டப்படும் வீடுகளில் அடுப்படி இருக்காது.

    இதன் முன்னோட்டமாக ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் இறக்கி விடப்பட்டுள்ளது.

    மக்களுக்கு தங்களது உடல் நலன் பற்றிய கவலையே கிடையாது.

    கேட்டால் தாங்கள் படித்த மேதாவி என்பார்கள். படிக்காத நான் இரண்டு நபர்களை இரண்டு டிகிரி படிக்க வைத்தேன், பலன் இருவருமே என்னை படிக்காத முட்டாள் என்று சொல்லி விட்டார்கள்.

    இன்று எல்லா வீடுகளிலும் இதே நிலைப்பாடுதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஅமாம் கில்லர்ஜி, நீங்க சொல்லியிருக்கும் அனைத்தும் காரணங்கள்....பதிவிலும் சொல்லியிருக்கிறேன்.

      சில கருத்துகள் இன்னும் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.

      கில்லர்ஜி ஒன்று மட்டும் நினைச்சுக்கோங்க, யார் நம்மை முட்டாள் என்று சொன்னாலும் நாம் முட்டாள் ஆகிவிடமாட்டோம். அது பிள்ளைகளாகவே இருந்தாலும் சொந்தபந்தமா இருந்தாலும்.

      நம் திறன் நமக்குத் தெரியாதா? உங்கள் திறனை அறிய நீங்கள்தானே தவிர மற்றவர் கிடையாது கில்லர்ஜி! உங்கள் திறன் உங்களுக்குத் தெரியும் போது எதுக்கு அடுத்தவங்க சொல்லும் இப்படியானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. //முதன் முறை 22 வருடங்களுக்கு முன். அப்போது பார்த்த பெங்களூருக்கும் இப்போதைய பெங்களூருக்கும் எவ்வளவு மாற்றம்!//

    ஆமாம், முன்பு பார்த்த பெங்களூர் இல்லை மாற்றங்கள் நிறைய.

    //பொதுவாகவே எல்லா ஊர்களிலும் இப்போது மக்கள் வெளியில் சாப்பிடுவதை விரும்புறார்கள் என்றே தோன்றுகிறது.//

    ஆமாம், முன்பு ஓட்டலில் உணவு எப்போதாவது என்று இருந்தது. இப்போது அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுகிறார்கள்.

    //கர்நாடகாவின் பிராபல்ய பிசிபேளா பாத். இது இல்லாமலா!//

    மாமியார் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர்களிடம் கற்றுக் கொண்டு பிசிபேளா பாத் செய்வேன். பட்டை இல்லாமல் பிசிபேளாபாத் சாம்பார் சாதம் போலதான் இருக்கும்.
    இப்போது கோவில்களில் தக்காளி சாதம் பிரியாணி ருசியோடு கோவில்களில் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
    உங்கள் குரல் இனிமையாக ஒலிக்கிறது காணொளியில் அருமை.
    தொடரட்டும் உங்கள் சமையல் காணொளிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா வாழ்க்கை முறையும் மாறி வருவதால் உணவகங்களும் பெருகிவிட்டன. கையில் கொண்டு கொடுக்கும் வரை!!!

      ஆஅமாம் பட்டை இல்லைனா அது வெறும் சாம்பார் சாதம்தான்...பிஸிபேளாபாத் பொடி உண்டு அதைச் செய்து வைத்துக் கொண்டால் டக்னு செய்துவிடலாம்.

      காணொளி கண்டதற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிக்கா..

      கீதா

      நீக்கு
  3. தாமசிக்கிறது எல்லாம் திருவனந்தபுரத்தில்தான் பெங்களூரில் வசிக்கிறது மட்டும். பெங்களூர் புகழ் இட்டிலி சாம்பார் பெண்னெயையும், மசால் தோசையையும், ரவா இட்டிலியையும் விட்டு விட்டீர்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமசிக்கிறது எல்லாம் திருவனந்தபுரத்தில்தான் பெங்களூரில் வசிக்கிறது மட்டும். பெங்களூர்//

      ஹாஹாஹாஹா....நினைத்தேன். இங்கு வெளியிடும் முன் துளசிக்கு அனுப்பியிருந்தேன் பதிவை. அவர் பார்த்துவிட்டு ....'தாமசிப்பது' வார்த்தைய எடுத்து வசிப்பது என்று மாற்று என்றார்....அவரிடம் இருந்து கருத்து வருவதற்குள் வெளியிட்டுவிட்டேன்...அப்படியே இருக்கட்டும்....ஜெ கே அண்ணா வந்து சொல்வதற்கு இருக்கட்டும் என்று!!!

      நீங்க சொல்லியிருப்பவை எல்லாம் வரும். அடுத்து இன்னும் பதிவு இதன் தொடர்ச்சி வரும் அண்ணா. இது முடியவில்லை....பதிவில் சொல்லியிருக்கிறேனே!

      பென்னே தோசை பென்னே மசால் தோசை சொல்லியிருக்கிறேன்..

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  4. நல்ல டாபிக்கை எடுத்திருக்கீங்க. Eye checkup பண்ணினதால் (கண்ணுல சொட்டு மருந்து விட்டு 1 மணி நேரம் கழித்து செக் பண்ணுவாங்களே) கண் சரியாத் தெரிய மாட்டேங்குது. ஜோதில கலந்துக்கறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை....கண்ணு செக்கப்பா....இப்படி வயசெல்லாம் தெரியும்படி பப்ளிக்கா சொல்லலாமா!! ஹிஹிஹிஹி

      நான் வரேன். ஒரு வேலை முடிச்சு அனுப்பணும். நேத்து நல்ல மழை பவர் கட் ஸோ முடிக்க முடியலை. முடிச்சு அனுப்பிட்டி, வீட்டு வேலைகள் முடித்துவிட்டு வரேன் பதில் சொல்ல....

      நமக்குப் பிடிச்ச டாப்பிக்காச்சே!!!

      கீதா

      நீக்கு
    2. ஆறு மணி நேரம் கணிணி, ஒரு மணி நேரம் மொபைல், இரண்டு மணி நேரம் தொலைக்காட்சி... அதனால் பெட்டர் கண்ணை செக் பண்ணிக்கொள்வோம் என்று சென்றேன். ஒரு பிரச்சனையும் இல்லை என்றார் டாக்டர். இருந்தாலும் டைலேட் செய்து செக் பண்ணணுமா எனக் கேட்டதற்கு, பண்ணலாமே என்று சொன்னார். வருடத்துக்கு ஒரு முறை செக் பண்ணிக்கோங்க, இருபது நிமிடங்களுக்கு மேல் கண்ணை சில விநாடிகள் வேறு பக்கம் திருப்புங்க என்றெல்லாம் சொன்னார்.

      கண் சரியல்லைனா நீங்க பண்ணின அசடை, கத்திரிக்காய் புளிக்கூட்டுன்னு நினைத்து சாப்பிடக் கூடாதில்லையா?

      நீக்கு
    3. சும்மா உங்கள கலாய்ச்சேன். செக் பண்ணிக் கொள்வது நல்லதுதான்...கண்கள் பிரச்சனை இல்லாமல் இருக்குன்னு சொல்லிருக்கறது மகிழ்வான விஷ்யம் நெல்லை. கவனமா பாத்துக்கோங்க கண்களை.

      நானும் கணினி நிறைய யூஸ் பண்ணுகிறேனே...கிட்டத்தட்ட முழு நாள்....மொபைல் கொஞ்சம் கம்மிதான்....வாட்சப் வெப்ல பார்க்கறதுனால வேலையும் அதுவும் சைட் பை சட்....ஆனா ஸ்க்ரீன் டைம் ஜாஸ்திதான்.....தொலைக்காட்சி கிடையாது.

      எனக்கும் பவர் கொஞ்சம் உண்டு எனவே கண்ணாடி. மற்றபடி இதுவரை பிரச்சனை இல்லை.. இப்ப சப்டைட்டில் வீடியோ ஆரோக்கிய வீடியோஸ்தான்...தொடர்....அதை பத்தியும் பதிவு எழுதலாம்னு எண்ணம் உண்டு ஆனா பாருங்க...நேரமும் மனசும் ஒத்துழைக்கணும்.

      கீதா

      நீக்கு
    4. கண் சரியல்லைனா நீங்க பண்ணின அசடை, கத்திரிக்காய் புளிக்கூட்டுன்னு நினைத்து சாப்பிடக் கூடாதில்லையா?//

      ஹாஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன் நெல்லை...அசடு மட்டும் என்னவாம்...புளிக்கூட்டுதான்!!!

      கீதா

      நீக்கு
  5. 2 பேரும் வேலைக்குப் போறாங்க, இல்லை காலைல கணவன் சீக்கிரமே ஆபீஸ் போகணும், பிறகு பையனுக்கு வேண்டியதைச் செஞ்சு அனுப்பணும் என்றெல்லாம் இருந்தால், வெளியில் சாப்பிடுவதில் என்ன தவறு? SLV போன்ற சுத்தமான கையேந்தி ஹோட்டல்கள் நிறைய இருக்கும் பெங்களூரில், வெளியில் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போவதோ இல்லை மதிய உணவுக்கு இந்த உணவகங்களை நம்பி இருப்பதோ தவறில்லை.

    இங்க பெங்களூர்ல சுடு தண்ணீரில் போட்ட ஸ்பூன்கள், கண்ணுக்கு முன்னால் சுத்தமாகச் செய்வது, தட்டை வெந்நீரில் அலம்புவது, ஒவ்வொரு உணவகத்திலும் வெந்நீர், குளிர்ந்த நீர் என்று நல்ல தரமான நீர். அதனால் வெளியில் சாப்பிடுவதால் உடலுக்கு ஒன்றும் ஆகாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியில் சாப்பிடுவது தவறே இல்லை, நெல்லை. நானும் சாப்பிடுவதை விரும்புவேன் தான்.

      ஆனா தினமும் சாப்பிடுவது என்பது ஆரோக்கியத்த பாதிக்கும். காரணங்கள் இருக்கு.

      என்ன தரமான உணவகம் ஆனாலும் ...இது பத்தி இந்தத் தொடர் பதிவில் வரும்...

      எனக்கும் வெளியில் சுவைக்க ரொம்பப் பிடிக்கும்தான். எப்பவாச்சும் போவதுண்டுதான்.

      இங்கு சுத்தமாக இருக்குதான் வெந்நீரில் கழுவுறாங்க ஸ்பூன்கள் வெந்நீரில் தான்போட்டும் வைச்சிருக்காங்க. கையேந்தி பவன்களும் நல்லா இருக்கு நிச்சயமா சொல்லலாம்.

      ஆனா உடலுக்கு ஒன்றும் ஆகாதுன்னு சொல்ல முடியாது....இனி வரும் பதிவில் சொல்றேன்.

      மிக்க நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  6. பொதுவாகவே வெளியிலிருந்து ஆர்டர் செய்து சாப்பிடுவது, அதிலும் இளைய தலைமுறையிடம் இந்த வழக்கம் ரொம்பவே அதிகமாகிவிட்டது.

    காலம் செய்த கோலம் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இளைய தலைமுறை ஸ்விக்கிட், ஜொமாட்டோ இல்லைனா அவங்களே நேரடியா போய் சாப்பிடத்தான் செய்யறாங்க. சமைப்பு என்பது இல்லை. வாழ்க்கை முறை மாறியிருக்கு இல்லையா நெல்லை. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. யதார்த்தம்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  7. நம் உடல் நலத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    வெளியில் சாப்பிடணும்னா இட்லி, சட்னி/சாம்பாரோடு நிறுத்திக்கணும். வாய்க்கு ருசி என்று பரோட்டா, பூரி, Bun , பர்கர் என்று சாப்பிட்டால் உடலுக்குப் பிரச்சனை கண்டிப்பாக வரும்.

    என்னைப் பொறுத்தவரையில் நான் கண்டதெல்லாம் வெளியில் சாப்பிடுவதில்லை. தமிழகம் வந்தால் எண்ணெய் இல்லாத ரவாதோசை, சாதா தோசை போன்றவைகளைச் சாப்பிடுவேன். இங்க பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதில்லை.

    சமீபத்தில் ஃப்ரைடு ரைஸ் என்று ஒன்று சாப்பிட்டேன். படுபாவிப்பய. சாதத்தை வறுத்தால் உடலுக்குக் கெடுதி அல்லவா? நல்லவேளை தமிழக அல்லது சாதா வட இந்திய உணவுகளைத் தவிர எனக்கு வேறு எதுவும் பிடிக்காது.

    நான் வேலை பார்த்த கம்பெனியில், தாய் உணவகம் இருந்தது. அதுல சாதத்தை பாதி மாத்திரம் வடித்துவிட்டு குளிர்சாதனத்தில் வைத்திருப்பார்கள். கஸ்டமர் வந்து சாதம் சம்பந்தமான உணவு வகைகளைக் கேட்டால் (என்னன்னவோ பெயர்கள்), உடனே இதனை எடுத்து அவனில் சிறிது சூடுபடுத்தி, மற்ற கலவைகளோடு கலந்து சூடுபடுத்திக் கொடுப்பார்கள். அப்போதுதான் செய்ததுபோல அது மாறிவிடும்.

    இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் நான் சாப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நம்ம உடல் நலம் நம்ம கையில். பரோட்டா பூரி எல்லாம் விடுங்க....நான் சட்னி குறிப்பா தேங்காய் சட்னி வெள்ளை அதைக் கூடத் தவிர்த்துவிடுகிறேன்...ரொம்பப் பிடிக்கும் ஆனாலும் தவிர்க்கிறேன்.

      நெல்லை, எப்பவாச்சும் சாப்பிடுவது பிரச்சனை இல்லை.

      படுபாவிப்பய.// ஹாஹாஹாஹா என்னது ஃப்ரைட் ரைஸ்ல சாதத்தை வறுக்கறாங்களா!! ஓ வாணலியில் போட்டு தீயைப் பெரிசாக்கி வாணலில ஃப்ரைட் ரைஸ் போட்டு தூக்கிப் போட்டு பந்தாடுவாங்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!ஹாஹாஹாஅ அதை சொல்றீங்களா!!

      //நான் வேலை பார்த்த கம்பெனியில், தாய் உணவகம் இருந்தது. அதுல சாதத்தை பாதி மாத்திரம் வடித்துவிட்டு குளிர்சாதனத்தில் வைத்திருப்பார்கள். கஸ்டமர் வந்து சாதம் சம்பந்தமான உணவு வகைகளைக் கேட்டால் (என்னன்னவோ பெயர்கள்), உடனே இதனை எடுத்து அவனில் சிறிது சூடுபடுத்தி, மற்ற கலவைகளோடு கலந்து சூடுபடுத்திக் கொடுப்பார்கள். அப்போதுதான் செய்ததுபோல அது மாறிவிடும்.//

      பெரும்பாலும் இப்படித்தானே செய்யறாங்க, நெல்லை...குறிப்பா பெரிய ஹோட்டல்களில்...

      //இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் நான் சாப்பிடுவதில்லை.//

      ஹாஹாஹாஹா நெல்லை நீங்களே நல்லா சமைக்கறப்ப இது எதுக்கு!!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  8. பெங்களூரில் உணவு, சென்னையைவிட/தமிழகத்தைவிட விலை மலிவு. சுத்தம் அதிகம். என்ன ஒண்ணு, தமிழக சாம்பார்/சட்னி போன்றவற்றை கர்நாடகாவில் எதிர்பார்க்கக்கூடாது.

    அது சரி..நல்ல வெஜிடபிள் பிரியாணி எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. விலையும் மலிவு, சுத்தம் அதான் கூட்டம் அள்ளுது. நமக்கு அந்த சாம்பார் சட்னி போல் வராதுதான் ஆனா இங்குள்ளவங்களும் சரி இங்கு வந்திருப்பவங்களும் சரி , என்ன கொடுத்தாலும் என்ன பெயர் சொல்லிக் கொடுத்தாலும் சாப்பிடறாங்க....

      நல்ல வெஜிட்டபிள் பிரியாணி கோயில்ல கிடைக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா...இது பத்தியும் சொல்றேன் நெல்லை..அதிருக்கட்டும் பிரியாணியா, புலாவா?

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  9. தயிர் சாதமே ஆனாலும் கடையில் சாப்பிட்டால் தனி ருசிதான் என்று நினைப்பவர் உண்டு.  ஓரளவு அது உண்மையும் கூட.  அதுதான் எல்லா இடத்திலும் கூட்டம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், அது சரிதான் ஆனா பாருங்க தயிர் சாதம் எல்லா உணவங்களிலும் நல்லா இருக்கறதில்லை.

      அதான் பதிவுல சொல்லியிருக்கேன் என்ன பெயர் சொல்லி எதைக் கொடுத்தாலும் அது அந்தபதார்த்தம்தானா இப்படித்தான் இருக்குமா அது என்று எல்லாம் இல்லாமல் சாப்பிட கூட்டம் இருக்கு...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  10. என்னதான் வீட்டில் இது போலவே செய்வேன் என்று சொன்னாலும் ஒரு நாளைப்போல தினமும் இட்லி, தோசைக்கு மூன்று சட்னி, சாம்பார் என்று வீட்டில் செய்ய முடியுமா?  இது ஒரு காரணம்.  சகாய விலையில் சட்னி சாம்பாருடன் சுவைக்கலாம்.  ஆனால் ஒன்று வீட்டில் சாப்பிட்டால் ஐந்து ஆறு தோசை கூட சாப்பிடுவோம்.  ஆனால் அக்கடையில் சாப்பிட்டால் ஒன்றுதான்.  ஒரு மசால் தோசை முடித்து விட்டு இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடும் வாடிக்கையாளரை எங்காவது பார்த்ததுண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பா ஸ்ரீராம், நாம என்னதான்வீட்டுல செஞ்சாலும் வெளியில் சுவைக்க ரொம்பப் பிடிக்கும் அது எப்படி செஞ்சுருக்காங்கன்னும் தெரிந்து கொள்ள ரொம்பப் பிடிக்கும்.

      ஆமா வெளில ஒன்று சாப்பிடுவதே கஷ்டமா இருக்கு.

      //ஒரு மசால் தோசை முடித்து விட்டு இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடும் வாடிக்கையாளரை எங்காவது பார்த்ததுண்டா?//

      இங்க வந்து பாருங்க ஸ்ரீராம்.....மசால் தோசை ரெண்டு, கூடவே ரவா இட்லி, வெஜிட்டபிள் ரைஸ்னு கட்டி அடிக்கறாங்க. ஆனா சாப்பிடறவங்க எல்லாரும் பசங்க 40 வயசுக்குள்ள...பெண்கள் உட்பட நல்லா சாப்பிடறாங்க.

      எனக்கு ஒரு வடை சாப்பிட்டதுமே போதும்னு ஆகிடும்!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. பிரியாணி நாடு விரும்பும் நாக்குச் சுவை ஆகிவிட்டது.  எனவேதான் எல்லா கடைகளிலும் இன்றியமையாததாக அது அமர்ந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.....ஆனா இங்கு தமிழ்நாட்டில் போல இல்லை ஸ்ரீராம். நான் ஒரே ஒரு முறைதான் சாப்பிட்டேன். வெஜ் ப்ரியாணி....வந்த புதுசுல....எங்கன்னு யோசிக்கறேன். நல்லா இருந்துச்சு. ரொம்பப் பெரிய ஹோட்டல் எல்லாம் இல்லை. ஆனா இங்க பொதுவா புலாவ்தான் பிரசித்தமா இருக்கு.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு

  12. சிக்கரி இல்லாத காஃபி ஏனோ எனக்கு சுவைப்பதில்லை. சிக்கரி கொஞ்சமாக கலந்தால்தான் சுவை. ஆனால் அதிகம் போடக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கரி போட்டாலும் பிடிக்கும் ஸ்ரீராம். எங்க பிறந்த வீட்டில் நீங்க சொல்றாப்ல கொஞ்சம் சேர்த்துதான் காஃபி போடுவாங்க. ஆனா என் மாமியார் சிக்கரி கலக்காத காஃபிதான் போடுவாங்க. அவங்க வீட்டுல எல்லாருமே அப்படித்தான். அதாவது அக்கா தங்கை குடும்பங்கள் எல்லாமே....எனக்கும் அப்படிப் பழகிவிட்டது. ஆமா கொஞ்சமா சேர்த்தால்தான் சுவை. அதிகம் கூடாது....இங்க பங்களூர்ல வெளியில் ஹோட்டல்களில் பொதுவா காஃபி ஓகே...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. கடைகளில் கூட்டம் அம்முவதற்கு காரணம் கொழுத்த பர்ஸ் என்பதில்லை. சுவைத்த நாக்கு! காசு கம்மியாக இருப்பவர்கள் கூட சுவைக்கத் தவறுவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரியே ஸ்ரீராம். ஆனா இப்ப ஒரு புள்ளிவிவரம் எடுத்தாங்க இங்க...அதுல பாத்தீங்கனா பேசியிருக்கறவங்க சொன்னது....ரெண்டு பேரும் சம்பாதிப்பதால் செலவழிக்கும் திறன் அதிகமாகியிருக்கு. 10, 15 வருடங்களுக்கு முன் இருந்த மத்தியதரக் குடும்பத்தின் பொருளாதாரம் இப்ப தொழில்நுட்ப வேலைகளினால் கூடியிருக்கு அதனால் இப்படி வெளியில் சாப்பிடுவதும் அதிகமாகியிருக்குன்னுதான் பசங்களே அதாவது இப்ப 40 ஐத் தொடும் பசங்க, பெண்கள் சொல்லியிருக்காங்க....அவங்களே 25 வயசுல இப்படிச் சாப்பிட்டதில்லையாம்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  14. படம் பெயர் மறந்து விட்டேன்.  ஹீமா குரேஷி நடித்த சமையல் படம் ஒன்று சமீபத்தில் பார்த்து ரசித்தேன்.  நம்ம ஊர் இந்தியன் கிச்சனை விட நன்றாய் எடுத்திருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா...நோட் பண்ணிக் கொண்டுவிட்டேன்...

      மிக்க நன்றி ஸ்ரீராம் இதுக்கு குறிப்பா!!!!

      கீதா

      நீக்கு
  15. காணொளி ஸ்பீக்கர் இல்லாமல் பார்த்தேன்.  நான் இந்த வெட்டி ஒட்டும் கலை எல்லாம் அறிந்து கொள்ள்வில்லை.  நன்றாக செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். வெட்டி ஒட்டும் கலைக்கு நேரமும் பொறுமையும் தேவையா இருக்கு. இப்ப நிறைய காணொளிகள், பறவைகள் சில கோயில்கள் எடுத்ததெல்லாம் இருக்கு ஆனா நேரம் இல்லை வெட்டி ஒட்ட...எப்ப போடுவேனோ...

      கீதா

      நீக்கு
  16. சமீபத்தில் சென்னையில் பல அசைவ கடைகளில் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது உணவு பாதுகாப்புத்துறை.  ஆச்சர்யம்.  ஆனால் மக்கள் கவலைப்படுவதில்லை.  மூடப்பட்டஅதே கடை மறுபடி திறந்த உடன் கூட்டமும் மறுபடி சேர்ந்து விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! இப்ப நீங்கதான் அனுப்பிருந்தீங்கன்னு நினைக்கிறேன்...எபி வாட்சப் குழுவுல....நாய்களை வெட்டி அனுப்பியிருக்காங்க அதைக் கண்டுப் பிடிச்சத...

      என்னமோ போங்க.....இங்கும் சரி எங்கும் நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்தா பெரும்பாலானவை கண்டிப்பாகச் சிக்கும். ஒரு சில என்னால் வெளியில் சொல்ல இயலவில்லை. அதைப் பார்த்த பிறகு வெளியில் சாப்பிட பயமாகத்தான் இருக்கு

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  17. உணவுப் பள்ளத்தாக்கு
    ஆச்சரியமூட்டும் தகவல்கள்
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  18. வரேன் வரேன் வீட்டுக்கு விரைவில் வரேன்...

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பெங்களூரின் உணவு பட்டியல்கள், அதை சாப்பிடும் விபரங்கள் குறித்த இப்பதிவை சுவாரஸ்யமாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் . ஆம், முன்பு இருந்த பெங்களூர் போல் அல்லாமல், இப்போது நீங்கள் சொன்னபடி நிறைய மாறியுள்ளது. . எங்கு பார்த்தாலும் தீனி கடைகள்தாம்... எல்லாவிதத்திலும் ஒரே மக்கள் வெள்ளந்தான்... எப்போதும் தின்று கொண்டேயிருக்கும் மக்களைக் கண்டு நானும் எப்பவாவது வெளியில் செல்லும் போது வியந்திருக்கிறேன். இவர்கள் வீட்டில் சமைப்பதையே வெறுக்கிறார்களோ என எனக்கும் தோன்றும். அவர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் குழந்தைகளும் இப்போது இப்படிபட்ட உணவுகளைதான் விரும்புகிறார்கள். அடுக்கு மாடி வீடுகள் பெருகி விட்டதைப் போன்று உணவகங்களும் பெருகி விட்டன. விதவிதமான உணவுகள்..! ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் சுவைக்க தயாராக இருக்கும் மக்கள்.

    பொன்னாங்கண்ணி கீரை கடையல் காணொளி மிக அருமையாக உள்ளது. உங்கள் குரல் மிக இனிமை. விரைவில் யூடியூபில் பல சமையல் காணொளிகளை பகிருங்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, வேலைப்பளு அதான் பதில் கொடுக்க தாமதம்,

      நீங்கள் ஹ்சொல்லியிருப்பதைப் போல் இங்கு எங்கு பார்த்தாலும் உணவகங்கள், மக்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்காங்க குழந்தைகளும் தான். குழந்தைகள் அதிகமாகவே. நிறைய சிறிய குழந்தைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சியும், எடையும் இருப்பது போல் தெரிகிறது. ஈர்க்கும் வகையில் உணவுகள் அதை வைத்திருக்கும் விதம் என்று இருப்பதாலும்...

      கீரை க்டையலைப் பார்த்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி கமலாக்கா. அப்படி சமையல் காணொளிகள் போட ஆர்வம் இருந்தது....இருக்கு ஆனால் இப்ப வர மாட்டேங்குது. தன் கையே தனக்குதவி. சமைக்கும் போது எடுப்பதும் சிரமமாக இருக்கு. அப்புறம் அதை கணினியில் சேமித்து கட் பண்ணி ஒட்டி ரொம்ப நேரம் எடுக்கிறது கமலாக்கா. எனக்கு வேலைப்பளு அதனால் சிரமமாக இருக்கு இப்ப.

      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கும் உங்கள் ஊக்கத்திற்கும்

      கீதா



      நீக்கு