செவ்வாய், 5 ஜூலை, 2016

விலங்குகளின் தகவல் பரிமாற்றம் 1 – தேனீக்கள் - இயற்கையின் ரகசியங்கள்

கோடை காலத்தில் மரக்கிளைகளின் இடையே எங்கே இருக்கிறது என்று அறிய முடியாமல் கூ என்று வரும் குயிலின் இனிய நாதம்

மழை பெய்யும் நாட்களில் இரவில் அரங்கேறும் தவளைகளின் கச்சேரி

தினமும் காலையில் எழும் போது கேட்கும் குருவிகளின், கிளிகளின் அன்றைய தினத்தின் கீச் சத்தம்.

காக்கைகள் சரியான நேரத்திற்கு ஜன்னலின் ஓரம் வந்து அமர்ந்து தங்கள் தினப்படியான கப்பத்தினைக் கேட்டுக் கொடுக்கும் குரல்

இரவின் அமைதியில் கேட்கும் சுவர்க்கோழிகளின் ரீங்காரம்

அடர்த்தியான காடுகளின் இடையே கேட்கும் விதம் விதமான இயற்கை ஒலிகள் என்று

நம்மைச் சுற்றி எத்தனையோ இயற்கையின் ஒலிகள் கேட்கத்தான் செய்கின்றன. ஆனால் நகரத்து வாழ் மக்கள் விரைந்தோடும் வண்டிகளின் சத்தத்தில், வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டிகளுல் மூழ்கிக் கிடத்தலில் இந்த இயற்கை ஒலியினைத் தொலைத்துவிட்டு...

பல கிராமத்து வாழ் மக்களோ வீட்டினுள் இருக்கும் முட்டாள் பெட்டியின் சத்தத்தில் தொலைத்தோ, அல்லது கிராமத்து இயற்கை வளம் அழிந்து வருவதாலோ,  இந்த இயற்கையின் இனிய ஒலிகளை அனுபவிக்க முடியாத ஒரு நிலைக்குத் தங்களைத் தள்ளிக் கொண்டு……இப்படியாக

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான தொடர்பும், தகவல் பரிமாற்றமும் மெதுவாக இற்றுப் போய் அற்றுப் போகும் நிலையிலான ஒரு வாழ்வு.

ஒவ்வொரு விலங்கினமும் எழுப்பும் ஒலி, தங்களுக்குள்ளும், மனிதனுடனும் தொடர்பு கொள்ள/தகவல் மரிமாறிக் கொள்ள எழுப்பும் ஒலியே. ஆனால், அதனை மனிதன் படித்தானில்லை. விலங்குகளுக்கு மொழி உண்டா? விடை கொடுக்க முடியாத கேள்விதான் என்றாலும், விஞ்ஞானிகள் மொழிக்குக் கொடுக்கும் வரையறை, மொழி என்பது அடையாளக் குறியீடுகளுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு என்பதே. ஆனால்

விலங்கினங்கள் பொதுவாக மனிதனைப் போன்றில்லாமல் குறிப்பிட்ட மூன்று விதமானச் சூழ்நிலைகளில் மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றன.

1.   உணவு பற்றிய தகவலைப் பரிமாறிக் கொள்ள

2.   இனப்பெருக்கக் காலத்தில் தங்கள் இணையுடனான உறவை வலுவாக்கிக் கொள்ள அல்லது

3.   ஆபத்தான காலக்கட்டத்தில்/ஆபத்தில் சிக்கிக் கொண்டால்

ஒரு சில விலங்கினங்களின் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் மதிநுட்பமான முறையில் இருப்பதால், விஞ்ஞானிகள் அதனை விலங்குகளின் மொழி என்றே முடிவு செய்ய வேண்டியதானது. உதாரணத்திற்குத் தேனீக்களின் இனத்தில் ஒரு தேனீ உணவைக் கண்டுபிடித்துவிட்டால் உடன் தனது கூட்டிற்கு வந்து, ஆட்டல் நடனம் செய்து – இதில் இந்த ஆட்டல், எண் 8 வடிவத்தில் நிறைய நேரம் என்றால் உணவு தூரத்தில் உள்ளது என்று அர்த்தம். ஆட்டல் நடனம் வட்ட வடிவில் சிறிது நேரம் என்றால் உணவுக் கூட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில்/அருகில் என்ற அர்த்தத்தில் அங்கிருக்கும் தனது சகாக்களான உழைப்பாளித் தேனீக்களுக்குத் தகவலைப் பரிமாறுகின்றன.

How can honeybees communicate the locations of new food sources? Austrian biologist, Karl Von Frisch, devised an experiment to find out! By pairing the direction of the sun with the flow of gravity, honeybees are able to explain the distant locations of food by dancing. "The Waggle Dance of the Honeybee" details the design of Von Frisch's famous experiment and explains the precise grammar of the honeybees dance 

வேகமும், சுற்றுகளின் எண்ணிக்கையும் தூர அளவைக் குறிக்கின்றன. 40 சுற்றுகள் என்றால் உணவு 100 மீ தூரத்தில் என்றும் 24 சுற்றுகள் என்றால் 500 மீ ருக்கும் அதிகம் என்று அர்த்தம். நடனத்தின் நோக்கு நிலை (Orientation) உணவு இருக்கும் இடத்தின் அறிகுறியாகும். நடனத்தின் தீவிரமும், கால அளவும் உணவின் செழுமையைக் குறிக்கும். 

இந்த நடனமாடும் தேனீ உணவின் தரத்தைத் தனது சக உழைப்பாளித் தேனீக்களிடம் எப்படி அறிவிக்கின்றன என்றால், அந்தத் தேனீக்கள் இந்த நடனமாடும் தேனீயை முகர்ந்துப் பார்த்து பூக்களின் மணத்தை அறிந்து கொள்கின்றன. உடன் அந்தத் தேனீக்கள் புறப்பட்டுவிடும். இப்படித் தேன் எடுக்கப் புறப்படும் புதிய குழு தேனீக்கள் இந்த முக்கியமானத் தகவலைப் பரப்புகின்றன. ஒரு மணி நேரத்திற்குள் 10,000 தேனீக்கள் அந்த இடத்திற்கு வந்து விடும் என்ற தகவல், தேனீக்களின் இந்த வகையான மிக நுட்பமானத் தகவல் பரிமாற்றத்திலிருந்து அறிய முடிகிறது.

ரகசியங்கள் தொடரும்..

------கீதா 

காணொளி - நன்றி யுட்யூப் 

வெள்ளி, 1 ஜூலை, 2016

BGR-34 நீரிழிவு நோயைத் தடுக்கும் ஆயுர்வேத மருந்தும், நீரிழிவு நோயும்

Image result for bgr 34
நம் சகோ மதுரைத் தமிழன் இந்த மருந்தைக் குறித்த  ஒரு நல்ல அறிமுகப் பதிவு போட்டிருந்தார். நீரிழிவு நோயின் தலைநகரம் என்று சொல்லும் நிலைக்கு உள்ளான நம் நாட்டிற்குத் தேவையான ஒன்றுதான், நமது மத்திய அரசின் CSIR சமீபத்தில் வெளியிட்ட BGR 34 எனும் நீரிழிவு நோய்க்கான/ஆண்டி டயபட்டிக் ஆயுர்வேத மருந்து. நல்ல மருந்தாகவே இருந்தாலும் அதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இந்த மருந்தைப் பற்றி அறிந்ததும் என் மகன் கேட்ட கேள்விகள். இதனை மனிதர்களிடம் உபயோகித்துப் பார்த்தார்களா? எத்தனை பேரின் சுகர் லெவல் குறைந்தது. ஆய்வு நடத்தப்பட்டதா? எந்த ஒரு மருத்துவம் பற்றிய ஆய்வும் பல நிபுணர்களின் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டப் பிறகே, அதுவும் வெளிப்படையாக அந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே வெளியிடப்பட வேண்டும். இதைப் பற்றிய ஆய்வுப் பேப்பர்கள், விவாதப் பேப்பர்கள் இருக்கிறதா? என்றும் கேட்டான்.

நல்ல கேள்வி. நான் கூகுளில் தேடியவரை நம்பள்கி, மதுரைத் தமிழனின் தளத்தில் கொடுத்திருந்த லிங்க் மட்டுமே கிடைத்தது. தகவல்கள் இருந்தனவே அல்லாமல், ஆய்வுப் பற்றிய விரிவான குறிப்புகள் எதுவும் இல்லை. ஒரு வேளை என் அறிவுக்கு எட்டவில்லையோ என்றும் தெரியவில்லை.

நம்பள்கி அவர்கள் கொடுத்த லிங்கில் நான் அறிந்தவை, இந்த மருந்து ஒரு குளிகை ரூ 5 என்றாலும், 2 காலையிலும், 2 மாலையிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அப்படியானால் ஒரு நாளைக்கு ரூ 20 செலவாகும் இது மட்டும் எடுத்துக் கொண்டால். அலோபதி மருந்துடன் எடுத்துக் கொண்டால் இன்னும் ரூ 500 கூடலாம். அப்படிப் பார்க்கும் போது இந்த மருந்து விலை குறைவு என்று சொல்வதற்கில்லை.

பக்க விளைவுகள் இருக்காது என்று சொல்லுகின்றார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், அலோபதியிலும் பக்க விளைவுகள் என்று பெருவாரியாகச் சொல்லுவதற்கில்லை. மெட்ஃபார்மின் வகைகள் ஒரு சிறிய வயிறு உப்பலை ஏற்படுத்துகிறது என்று பொதுவாகவே சொல்லப்படுகிறது. எனக்கும் உண்டு.

முதலில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், குளுக்கோஸ் டாலரன்ஸ் GTT. ஒரு சில நீரிழிவு நோய் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மட்டுமே இந்தச் சோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இதைக் கண்டறிந்தால் சர்க்கரையை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பெற்றிருக்கிறதா, எவ்வளவு, நாம் நீரிழிவு நோய்க்காரரா, நாம் நீரிழிவு நோய் வரும் வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறோமா என்பது தெரிந்துவிடும்.

ஆனால் பல மருத்துவர்கள், மருத்துவமனைகள் வெறும் வயிற்றிலும், சாப்பாட்டிற்குப் பிறகு 1 ½ , 2 மணி நேரத்திற்குப் பிறகான பரிசோதனையைச் செய்யச் சொல்லுகின்றனர். இந்தச் சோதனை தற்காலிகமானதே. இதை வைத்து ஒருவரை நீரிழிவு நோய்க்காரார் என்று தீர்மானிக்க முடியாது. ஆனால், வரும் வாய்ப்பு உள்ளதா என்று ஓரளவு யூகிக்கலாம். நீரிழிவு நோய்க்காரார்கள் இந்தப் பரிசோதனையை நன்றாக டபாய்க்க வழி உண்டு. டபாய்க்கவும் செய்கிறார்கள். இது தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதாகும்.

அடுத்து 3 மாத சர்க்கரை அளவு.  இதையும் ஒரு சிலர்தான் பரிந்துரைக்கிறார்கள். இதுவும் முக்கியமான பரிசோதனை. நாம் மூன்று மாதங்களில் செய்த திருட்டுத்தனங்கள் தெரிந்துவிடும். ஆனால், இதையும் டபாய்க்கலாம் அதற்கான சூத்திரங்கள் இங்கு பொதுவெளியில் பேச முடியாது. அது நல்லதல்ல. இதுவும் தங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஒவ்வொருவருக்கும் இன்சுலின் சுரப்பும், மெட்டபாலிசமும் வேறுபடும். ஒரு சிலருக்கு என்னதான் இன்சுலினே எடுத்துக் கொண்டாலும், குறைந்து கூடி என்று வேரி ஆகும். இன்சுலின் டிப்பெண்டன்ட் ஆகாமல் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கே கூட ஒருவர் மூன்று வேளை, ஒரு சிலர் இரு வேளை, ஒரு சிலர் ஒரு வேளை என்று சாப்பாட்டுடன், சாப்பிட்ட பிறகு, சாப்பிடும் முன், 1/2 மணி நேரம் முன், பின் என்று எத்தனையோ இருக்கிறது.

ஒவ்வொருவரது வாழ்க்கை முறையும் கூட இதில் உட்படும். பலரும் எனர்ஜி பர்ன் செய்ய எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் வெறும் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு, உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், இல்லை உடற்பயிற்சி செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல், “நான் சர்க்கரை நோயாளி” என்றும் "எனக்குச் சர்க்கரை குறையவே மாட்டேன் என்கிறது” என்றும் பெருமையாகச் சொல்பவர்களையும் பார்க்க நேரிடுகிறது.

இப்படி இருக்க இந்த மருந்து எல்லோருக்கும் பொதுவாக, ஒரே அளவாக எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படி எடுத்துக் கொண்டாலும், அதை நாம் அலோபதியுடன் எடுத்துக் கொள்ளும் போது இதன் பலனை எப்படி அறிய முடியும்.?

நம்பள்கி கொடுத்த லிங்கில் பலரும் இதை அலோபதியுடனே எடுத்துக் கொள்வதாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். 3, 4 மாதம் எடுத்தும் பலன் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஆயுர்வேத மருந்துகள் அலோபதி போன்று உடனடி நிவாரணம் தராது. ஒரு சில காலம் கழித்தே அதன் பலன் அறிய முடியும். இந்த மருந்தைத் தனியாக எடுத்துக் கொண்டு பலன் அறிய வேண்டும். அதுவும் முழுமையான பலனைக் குறைந்த காலத்தில் அறிய முடியாது. அந்தச் சுட்டியில் 1000 பேருக்குப் பரிசோதனை செய்து பலன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆயிரம் பேரில் எத்தனை பேர் இன்சுலின் டிப்பெண்டன்ட்? இதைப் பற்றிய தகவல்கள் இல்லை. பொதுவாக “நீரிழிவு நோயாளிகள்” என்று சொல்லிவிட முடியாது. சிலர் பார்டரில் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மட்டுமே பரிந்துரைக்கப்படும்.

மட்டுமல்ல 1000 என்பது மிகவும் குறைவு. நீரிழிவு நோயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் இருக்கும் பொது மேற்கொண்ட பரிசோதனைகளை, முடிவுகளை விவரமாக வெளியிட வேண்டும்.

இங்கு ஒரு சிறு உதாரணம். நான் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக நான் நீரிழிவு நோயாளி. மாத்திரை மட்டுமே. 10 வருடங்களுக்கு முன் என் இடது கண்ணில் ஒரு மிகச் சிறிய புள்ளி போன்ற இடத்தில் மட்டும் சிறிது நிழல் போல மறைக்கும். பரிசோதனையில் தெரிந்தது டயபட்டிக் ரெட்டினோபதி என்று.  ரெட்டினாவைப் பாதிக்கவில்லை. பார்வையில் கோளாறு இல்லை.
Image result for 24 hrs diabetic monitor
எப்படி இது? என் எல்லா சர்க்கரை அளவும் மிகவும் கட்டுப்பாட்டிற்குள்தானே இருக்கிறது? என்று மருத்துவரிடம் வினவிய போது அவர் சொன்னது இதுதான். நாம் என்ன 24 மணி நேரமுமா சர்க்கரை அளவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்? எப்போது அது ஏறுகிறது என்று நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாம் இடையிடையில் விருந்துச் சாப்பாடும், இனிப்புகளும் சாப்பிடுவது இல்லையா? அப்படி ஏதேனும் ஒரு சமயத்தில் கண்ணைப் பாதித்திருக்கும் வாய்ப்பு உள்ளது. (இப்போது மேலை நாடுகளில் நம் உடம்புடன் பொருத்தப்படும் கைக்கடிகாரம் போன்று சர்க்கரை மானிட்டர் வித விதமாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள என் கசின் வாங்கித் தரட்டுமா என்றான்? அதை அணிந்து கொண்டு டென்ஷனுடன் அட போடா என்றுவிட்டேன்)

3 வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட ரத்தத்தில் எனது சர்க்கரை மூன்று மாத ஆவரேஜ் "நான் டயபடிக் ரேஞ்சில்" இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும், எனது சர்க்கரை அளவு மருந்து இல்லாமலேயே அப்படித்தான் இருந்தது. இந்தப் பரிசோதனைகள் தற்காலிகமானவையே. எனக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டதே. நானும் கள்ளத்தனங்கள் செய்வதுண்டு. ஆனால், அதற்கு ஏற்றபடி அன்றைய உணவு முறை உடற்பயிற்சி எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டுவிடுவேன்.

நான் என் அனுபவத்திலிருந்து அறிந்தது என்னவென்றால், இது என்னையே நான் பல முறை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுச் சொல்வது.

என்ன மருந்து எடுத்துக் கொண்டாலும், மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலிருந்து, உடற் பயிற்சி வரை, ஸிஸ்டமாட்டிக்காக இருந்தால், குறித்துக் கொள்ளுங்கள் மிக மிக ஒழுங்கு முறையுடன் கள்ளத்தனங்கள் இல்லாமல், (ஒரு சிலர் நன்றாக வளைத்துக் கட்டி இனிப்பு, ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்) இருந்தால் சர்க்கரை அளவை நன்றாகப் பராமரிக்க முடியும்.  நீரிழிவு நோய் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே. கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், பிற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு அனுபவியுங்கள்!

------கீதா

படங்கள் இணையத்திலிருந்து.  (நான் மருத்துவரும் அல்ல நிபுணியும் அல்ல. இந்தப் பதிவு என் அனுபவத்தில் அறிந்ததைப் பகிர்ந்துள்ளேன்.)

புதன், 29 ஜூன், 2016

பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்களா?

நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல

என்னாச்சு கீதாவிற்கு? மூளையைக் காணாமல், இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாலோ??!!!

ஏற்கனவே மனசு குமார், இது கீதா இல்லையோனு குழம்பிக் கிடக்கிறார். இதுல நீ வேற......ஹும் இந்த கூகுள் ப்ளாகர் எந்த ப்ளாக் போனாலும் “நீ ரோபோ இல்லை”னு நிரூபிக்கச் சொல்லுது.

நீ ஹேங்க் மோடில் இருப்பதால், உன் சார்பில் கருத்து போடலாம் என்று தட்டினேன்.

அடப்பாவி! உன் கைவிரல் கணினியின் கீ போர்டில் பட்டதுமே ப்ளாகர் கண்டு பிடித்துவிட்டது.....இது வெர்ச்சுவல் கீதா னு...

சரி இப்ப அதுக்கென்ன?

“மூளையைக் குறைவாகப்பயன்படுத்தும் பெண்கள்” என்று நம் சகோ கூட்டாஞ்சோறு செந்தில்குமார் பதிவு ஒண்ணு போட்டிருந்தார். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும்.

ஹ்ஹ்ஹ நீயே மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறாய். இதுல வேற மூளையைப் பற்றி பதிவா.....நல்ல ஜோக்.....

பரவாயில்லை.

பெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று செந்தில் சகோ ஒரு பதிவிட, பெண்ணாகிய நான் சும்மா இருக்கலாமா? அதுவும் அபயா அருணா வேறு எனது மூளை ஐன்ஸ்டீன் மூளையின் அருகில் இருப்பதாக கூகுள் சொல்லுகிறது என்று சொல்லிவிட்டார். சும்மா இருக்க முடியுமா...

சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாவது, பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட அளவில் 8% சிறியதாக இருந்தாலும் அது பெரிய விசயமே இல்லை.  ஏனென்றால், ஆண்களை விட, பெண்கள் தங்கள் மூளையை மிகவும் திறம்பட உபயோகித்து, குறைவான ஆற்றல் மற்றும், சில செல்களை மட்டுமே பயன்படுத்தி ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்து முடிக்கிறார்கள். 

ஓ அதனால்தான் பெண்களுக்கு நிறைய நேரம் இருக்கிறதா?

அப்படியல்ல. பெரும்பாலும், வீட்டு நிர்வாகம், குழந்தைகள் பராமரிப்பு எல்லாமே அவர்கள் கையில்தானே. இருவரது மூளையின் அமைப்பில் ஒரு சில வேறுபாடுகள் இருந்தாலும், இருவரது மூளைத் திறனும் ஒரே போன்றுதான் இயங்குதிறது.

ஆண்களின் ஹிப்போகேம்பஸ் பெரிதாகவும், நியூரான்ஸ் அதிகமாகவும் இருப்பதால் அறிவுத் திறன் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பெண்களின் ஹிப்போகேம்பஸும் அதற்கு நிகர்தான் என்றாலும், ஆண்களை விடச் சற்றுச் சிறிதுதான். ஆனால், அறிவுத்திறன் அதே போன்றுதான். மட்டுமல்ல சிறிதாக இருப்பதே சிறந்தது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹிப்போகேம்பஸ் தான் நினைவுத்திறனிற்கும், உணர்ச்சிகளுக்கும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஹிப்போகேம்பஸ் சிறிதாக இருப்பதே சிறந்தது என்றால், அதனால்தான் ஆண்களை விட பெண்களுக்கு நினைவுத்திறன் அதிகமாக இருக்கிறதோ!! பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறார்களோ?

ஆமாம், பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியின் பிறந்தநாள், தங்களின் கல்யாண நாள், இன்னும் ஒரு சில நாட்களை எல்லாம் மறந்துவிட்டு வீட்டில் மாட்டிக் கொள்வதைப் பற்றி அப்பப்போ விசு, வெங்கட்ஜி எல்லாரும் நகைச்சுவையுடன் சொல்றாங்களே.

பெண்கள் என்றோ வாங்கிய புடவைகளைக் கூட மறக்கமாட்டாங்க, வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மறக்க மாட்டாங்க, கணவனின் நடவடிக்கைகளைத் துப்பறியும் சங்கர்லால் மாதிரிக் கண்டுபிடித்து விடுவாங்கனு விசு தான் நிறைய நகைச்சுவையாக எழுதியிருக்கிறாரே. மதுரைத் தமிழனின் பூரிக்கட்டை அடியும் புகழ்வாய்ந்தது.
மற்றொரு விஷயம், ஆண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்களாம்.

ஹ்ஹ்ஹ்ஹ அதான் மனைவிகள், “ஹும் நான் பேயா, நாயா கத்தறேன் இந்த மனுஷன் மண்டைல ஏதாவது ஏறுதா பாரு” அப்படினு சொல்றாங்க போல.
ஆனால், பெண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் இரு பக்கத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதிவேகமாக இயங்குமாம்.

ஹ்ஹ்ஹ் “எப்படி நம்ம மண்டைல ஓடுறத நாம சொல்றதுக்கு முன்னாடியே இவங்க கண்டு பிடிச்சுடறாங்க. (நன்றி விசு) சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் பெண்கள் என்பது அதனால்தானோ? (வம்பு என்றும் சொல்லப்படும்!!)

ஆண்கள் கணக்கில் திறன்வாய்ந்தவர்கள் என்றாலும் ஹோம் மினிஸ்ட்ரியில் பெண்களை அவர்கள் விஞ்ச முடியாது. ஆண்கள் ஸ்பேஷியல் ரீசனிங்க் அதாவது கட்டுமானப் பணிகள், வயரிங்க் போன்ற வேலைகளிலும், பெண்கள் இண்டக்டிவ் ரீசனிங்க் – அதாவது அனுமானிக்கும்/யூகிக்கும் தற்புனைவுத் திறனிலும், சூழ்நிலைகளை எளிதாகக் கணிக்கும் திறனிலும் சிறந்தவர்களாக இருப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு சொல்லுகிறது. இந்தப் புனைவினால் வீட்டில் சில பிரச்சனைகள் உவாவதும் நடக்கிறதே. மட்டுமல்ல பெண்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவர்களாகவும், ஆண்கள் அதற்கு நேரெதிர் என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது.

சரி என்னதான் சொல்லவருகிறாய்?

பெண்களைப் பற்றிய ஏதேனும் சிறிய குறைபாட்டைப் பேசினாலோ, எழுதினாலோ உடனே எதிர்ப்புக் குரல்கள், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களிடமிருந்தும் எழுகிறது. ஆனால், அதே சமயம், ஆண்களைக் குறைவாகப் பேசும் போதோ, காட்சிப்படுத்தும் போதோ, பெண்கள் ஏன் குரல் கொடுப்பதில்லை. ஆண்களும் மௌனமாகத்தான் இருக்கின்றார்கள். இது ஏன் என்று என் மூளையற்ற மண்டைக்குப் புரியவில்லை. சரி அதிருக்கட்டும்...

இன்னும் நிறைய சொல்லலாம். மூளை புரியாத புதிர். அதைப் பற்றிய ஆய்வுகள் இன்று ஒன்று சொல்லும் நாளை ஒன்று சொல்லும். இப்படித் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே....

இருவரது மூளைத் திறனும் ஒவ்வொன்றில் சிறந்து, சமமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதைப் பற்றிச் சொல்லும் போதுதான் இந்தத் தலைப்பு வருகிறது. பெருவாரியான பெண்கள் தேவையற்ற விஷயங்களில் (இது ஒரு பெரிய பட்டியல்) தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாலும், வீட்டு நிர்வாகம், குடும்பப் பராமரிப்பு என்று இருப்பதாலும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக மூளைத் திறன் பெற்றிருந்தாலும் அவர்கள் அத்திறனை உபயோகிப்பது குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதில் விதி விலக்குகள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

(தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ.)

-----கீதா



சனி, 25 ஜூன், 2016

காணவில்லையே அன்றோடு... அதைத் தேடுகின்றேன் இப்போது

Image result for brain

காணவில்லை என்பது அவ்வப்போது செய்தித்தாள்கள், காவல்நிலையங்கள், தொலைக்காட்சிகள், பொது இடங்கள் என்று பார்ப்பதுதானே! ஏன் இந்த அலட்டல்

இந்தக் “காணவில்லை” என்பது அப்படிப்பட்டது அல்ல!

அப்படி என்னத்தைக்  காணவில்லை, எதைத் தேடுகின்றாய்?

ஒன்றுமில்லை...கீதாவின் மூளையைக் காணவில்லை.

என்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா?  நீ?

ஆம் நம்பித்தான் ஆக வேண்டும். இதைச் சொல்லுவதும் எழுதுவதும் வெர்ச்சுவல் கீதா!

வெர்ச்சுவல் கீதா?

அது ரகசியம். இப்போதைக்கு ஜீன்ஸ் படத்துக் கண்ணோடு காண்பதெல்லாம் ஐஸ்வர்யா ராயின் இடத்தில் கீதாவை நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய என் கவலை கீதாவின் மூளையைக் கண்டு பிடித்துப் பொருத்தி அவளை அமன்னிக்கவும் எழ வைப்பதுதான். இப்போது அவள் “ஹேங்க்” மோடில்.

மூளை எப்படிக் காணாமல் போகும்? அர்த்தம் வேறாகிப் போகிறதே! ஒன்றுமே புரியவில்லை.

ஐயையோ! புரியவில்லை என்று மட்டும் மாந்தர்களிடையே சொல்லிவிடக் கூடாது.  “உன் மூளை எங்கே போச்சு? முட்டாள்” என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

??????????

இப்படிக் கேள்விக் கணைகளும் கூடாது! அப்படித்தான். புரியவில்லை என்று, எப்போதோ சொன்ன அந்த வார்த்தையினால்....கேள்விகள் கேட்டதால் “அறிவு இருக்கா? மூளை கெட்ட ஜென்மம். உனக்கு மூளையே இல்லை. நோ காமன்சென்ஸ். புத்தி கெட்டவள்.  அறிவு வளரவே இல்லை.  மூளை இருந்தாத்தானே வளரும். அறிவே இல்லாத முண்டம். முட்டாள். நீ எல்லாம் என்னத்த எழுதற? அறிவுதான் இல்லை. மெமரியாவது இருக்க வேண்டாம்? அதுவும் இல்லை. இவ எல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிச்சாளோ. எம் ஏ வாம்.”

கீதா தன் மெமரியைக் கூட்ட, மூளைத் திறனை வளர்க்க என்ன செய்யலாம் என்று மூளையைத் தேய்த்துக் குழப்பிக் கொண்டாள்.

மெமரி பளஸ் சாப்பிடலாமா? ம்ம்ஹூம். அந்தக் கீரையின் பெயரென்ன? ம்ம்ம் வல்லாரைக் கீரை! சாப்பிட்டால் ஞானியாம். போன பிறப்பு, அடுத்த பிறப்பு எல்லாம் தெரிந்துவிடுமாம். இந்தப் பிறப்புக் கதையே தேறமாட்டேன் என்கிறது. இதில் இது வேறா!  சரி, பேசீச்சம் பழம், தேன்? ஏற்கனவே இனிமையானவள். நோ!

வால்நட்டில் ஒமேகா 3 இருக்கிறது.  மூளைக்கு நல்லது.

ஓகே! ஆனால் விலை மிகவும் அதிகமாயிற்றே!

ஃப்ளெக்ஸ்/ஆளி விதையிலும் இருக்கிறது. சரிதான்.

அதென்னவோ தெரியவில்லை. நகரத்து பணக்கார மாந்தர்களின் கண்களில் படாமல், சீந்தப்படாமல் எங்கோ மூலையில் கிராமங்களில் விலை குறைவாக இருந்தவை எல்லாம் இப்போது இயற்கை, சித்த மருத்துவர்களின் விளம்பரங்களினால் புதிய ட்ரென்ட்! சிறு தானியங்கள் நகரத்தில் பெரிய பெரிய கடைகளில் மினு மினுப்புடனும், ஆர்கானிக் என்ற முத்திரையுடனும் க்ரீடம் சூட்டப் பெற்று, குதிரைக் கொம்பின் விலையில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும்படியாக இருக்கின்றன.

ஹூம் பணம் உள்ளவர்கள் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்தால் போதும் என்று பொருளாதார விற்பன்னர்களும் ஆட்சியாளர்களும் நினைத்துவிட்டார்கள் போலும். ஒரு வேளை அவர்கள் மட்டும்தான் மக்களோ?

இப்படி எல்லாம் மூளையைக் கசக்கினால்.....  அப்போ என்னதான் வழி? கூகுள் ஏஞ்சல் ஏதாவது வழி சொல்லும் என்று தட்டினாள். நிறையவே வழிகளைக் கொட்டிக் காட்டியது.  மாஓஜாங்க் டைட்டான்ஸ், சுடோக்கு...

அட! சுடோக்கு! அடுக்கினாள். சொடுக்கினாள். முடுக்கினாள்....

அடுப்புல வைச்சுருக்கறதக் கூட மறந்துட்டு அப்படி என்ன கேடு கெட்ட வேலை. தீயுது.

ஹும் இதுவும் வேலைக்காவாது. என்ன செய்யலாம். எப்படியாவது சரி செய்ய வேண்டும்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். மூளையைக் கண்டான் கணினியைப் படைத்தான்! கணினியின் செயல்பாட்டில் கேடு வந்தால் செர்வீஸ் செய்வதில்லையா, மெமரியைக் கூட்ட கூடுதல் மெமரி கார்ட் போட்டு,  அது போல....ஆஹா நல்ல ஐடியா...

நரம்பியல் நிபுணரிடம் சென்றாள்.

வயது 51 ஆகிவிட்டதால் மூளை பழசாகிவிட்டதாம். செர்வீசுக்குப் போக வேண்டுமாம். மருத்துவரிடம் செர்வீஸ் செண்டர் இல்லாததால் மருத்துவர் பரிந்துரைத்த செர்வீஸ் செண்டரில் கொடுத்தாயிற்று.

ப்போது செர்வீஸ் செண்டரில் கொடுத்த மூளையைக் காணவில்லை. இதுதான் கீதாவின் மூளை காணாமல் போன பிரச்சனைக் கதை.

சரி எப்படிக் கண்டு பிடிப்பாய்,  வெர்ச்சுவல் கீதா?

அதற்கென்றுத் தனி எண் எல்லாம் உண்டு. ஒரு வேளை மாறிப் போய்விட்டதோ? மாறிப் போயிருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?

செர்வீஸ் சென்டரில் இப்போதைக்கு இதில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் என்று சில மூளைகளைக் காட்டினார்கள்.

அடடா அப்படியென்றால் பலருக்கும் பழசாகி, மழுங்கிவிடுகிறது போலும்!

ஐயோடா சாமி! அது பிரதமர், முதல்வர், அரசியல்வாதி இல்லை ஏதேனும் சாமியார்களின் மூளையாக இருந்துவிட்டால்...இல்லை யார் எழுதுவதும் இலக்கியமே இல்லை என்று சொல்பவரின் மூளையாக இருந்துவிட்டால். ஐயகோ கொடுமை!

காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றால் அவர்களும் அவர்களது மூளையைத் தேடிக் கொண்டிருக்கின்றார்களாம்.

என்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா? ஹஹஹஹ் அது இருந்தால்தானே காணாமல் போவதற்கு. அப்படியே இருந்திருந்தாலும் இவளது மூளையை எல்லாம் யாரு திருடப் போகிறார்கள் என்ற குரலும் கேட்கிறது அகத்திலிருந்து.

"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க" என்று சமூக வலைத்தளங்களில் வலம் வருவதாக தோழி அபயா அருணா நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார். ஒரு வேளை அது கீதாவின் மூளையோ என்று பார்த்தால்.....அந்த மூளை சத்தியமாக கீதாவின் மூளை இல்லை என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். ஹிஹிஹி...

நீங்கள் எல்லோரும் உங்கள் மூளையைப் பத்திரமாகத்தானே வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? செர்வீஸ் செண்டர் எல்லாம் ஃபுல்லாக இருக்கிறதாம். தொலைத்துவிடாதீர்கள். சகோதர சகோதரிகளே, கீதாவின் மூளையைத் தேடிக் கண்டுப்பிடித்துத் தருகிறீர்களா...

(மிக்க நன்றி அபயா அருணா. அங்குப் பின்னூட்டம் இட வந்து இட முடியாமல் இங்கு மொக்கைப் பதிவாய் மாறியதற்கு)

------கீதா

(படம் இணையம்)