இது தான்(னா)யா சுதந்திரம்!!??
- காலையில் எழுந்ததும் வாயிற் கதவை நீங்கள் திறக்கும்போது, நாய் வளர்க்கும் நாங்கள் எங்கள் செல்லங்களை ஓரமாக, ஏதாவது குப்பை மேட்டுக்கோ, வெற்று இடத்துக்கோ கொண்டு போகாமல் உங்கள் வீட்டு வாசலில், கக்கா, உச்சா போற டாய்லெட்டாக யூஸ் பண்ணுவோம். (நானும் 2 செல்லங்கள் வைச்சுருக்கேன்)
- ஏற்கனவே சின்னச் சின்ன தெருக்கள், இதில் நீங்கள் உங்கள் 4 சக்கர வாகனத்தை வெளியில் எடுக்க முடியாதபடி, நாங்கள் காரையும், கால் டாக்சிகளையும் நிறுத்தி வைத்திருப்போம். நாங்கள் மற்றவர்களின் கஷ்டத்தைப் பற்றிதான் யோசிக்கவே மாட்டோமே...நாங்கள் எங்கே வேண்டுமென்றாலும் நிறுத்துவோம்.
- நாங்கள் தலையைக் கூடக் காட்டாமல், வண்டியைக் கூட காட்டாமல் நோட்டு நீட்டி ஓட்டுநர் உரிமம் பெறலாம். இவ்வளவு ஏன், நாங்கள் சிறு வயதிலேயேயும், லைசன்ஸும் வாங்காமல் கூட வண்டி ஓட்டுவோம் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
- ட்ராஃபிக் சிக்னலில் சிவப்பு இருந்தாலும் சரி, பச்சை இருந்தாலும் சரி நாங்கள் போய்க் கொண்டே இருப்போம். நாங்கள் இண்டிகேட்டர் உபயோகிப்பதில் உங்களை நன்றாகக் குழப்புவோம். ட்ராஃபிக் ரூல்ஸ்? எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. உங்களுக்கு இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த மாதிரிப் போகும் போதோ இல்லை சாதாரணமாக போகும் போதோ நாங்கள் எதிரில் வருகிறவர்கள், பக்கத்தில் வருகிறவர்கள் எல்லாரையும் கேடு கெட்ட நல்ல தமிழில் திட்டிக்கொண்டே போவோம், ஏன் என்றால் நீங்கள் ஒழுங்காக வண்டி ஓட்டினால் அதற்கு நாங்களா பொறுப்பு?!
- நாங்கள் மட்டும்தான் ரோட்டில் வண்டி ஓட்டலாம், ஓட்டுவோம், ஆம்புலன்ஸ் எல்லாம் எப்படி வரலாம்? அவர்களுக்கு அவசரம் என்றால் மேலே பறப்பது மாதிரி வண்டியை வைத்துக் கொள்ள வேண்டும், மேலே போவதற்கு ஈசியா ஃப்ரீ டிக்கட் கிடைக்கும்போது எதுக்கு ஆஸ்பத்திரி செலவெல்லாம்.? யோசிங்க....
- நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது, ரோட்டைக் கடக்கப் பாலங்கள் இருந்தாலும், ரோட்டில் நடக்க நடைபாதை, சுரங்கப் பாதை இருந்தாலும் நடு ரோட்டில் நாங்கள் திடீரென உங்கள் முன் தோன்றி ரோட்டைக் கடப்போம். ஓடுவோம், நிற்போம், உங்களைக் குழப்புவோம். நீங்கள் ப்ரேக் போடக் கஷ்டப்பட்டால் நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு.
- நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்துவோம், “No Parking” இடத்திலும் கூட. போலீஸ் எடுத்துச் சென்றாலும் நோட்டு வெட்டினால் கிடைத்து விட்டுப் போகிறது.
- நாங்கள் மொத்தக் குடும்பமே ஒரு வண்டியில் பயணம் செய்வோம். 4 சக்கரம் அல்ல, 2 சக்கர வாகனத்தில்.
- நாங்கள் பொது இடங்களில் புகை பிடிப்போம். உங்களுக்கு அது தொந்தரவாக இருந்தால் மூக்கைச் சுற்றி மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பொது இடங்களுக்கு வராதீர்கள். Passive smoking is also equally injurious to health. எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.
- நாங்கள் “தண்ணி” அடித்துவிட்டு ரோட்டில் உருளுவோம், கத்துவோம், உங்களுக்குக் கூட தொல்லை தருவோம். இந்நாட்டின் “குடி” உரிமை பெற்ற சுதந்திரக் “குடி” மகன் நாங்கள். நீங்களும் வேணும்னா தண்ணி அடியுங்களேன்.
- நாங்கள் பொது இடங்களில் கக்கா போவோம். உச்சா போவோம். உங்களுக்கு நாறினால் அதற்கு நாங்களா மூக்கைப் பொத்திக் கொள்ள முடியும்?
- தெருவில் எத்தனைக் குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் நாங்கள் அதைச் சுற்றிதான் குப்பையைப் போடுவோம். கண்ட இடத்துல குப்பையை போடுவோம். எங்கள் வீட்டுக் குப்பையை உங்கள் வீட்டுக் காம்பவுண்டு சுவர் தாண்டி உங்கள் ஏரியாவில் போடுவோம்.
- பொது இடங்களில் கண்ட இடத்தில் துப்புவோம். வெத்தலை, குட்கா, பான்பராக் எல்லாம் குதப்பியும் துப்புவோம். சுவத்துல எல்லாம் துப்பி டிசைன் போடுவோம்.
- (இங்கு நான் திரு. சுஜாதா அவர்கள் “கற்றதும் பெற்றதும்” ஆனந்த விகடனில் எழுதி வந்த போது ஒன்றில் இதைப் பற்றி எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு அதே வார்த்தைகள் நினைவில்லை ஆனால் அதன் அர்த்தம் நினைவுள்ளது. நம்மவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது ரோட்டில் குப்பையை எறிவதோ, துப்பவோ செய்வதில்லை. டாலரில் அபராதம் கட்ட வேண்டிவரும். ஆனால், இங்கு விமானத்திலிருந்து இறங்கி, செக்கிங்க் முடிந்து தாண்டியதுமே நம்மவர் குப்பையை எறிவார்கள், துப்புவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.)
- பஸ்ஸில் செல்லும் போது ஜன்னல் வழியாகத் துப்புவோம். அது உங்கள் மேல் விழுந்தால் கழுவிக் கொள்ளுங்கள்.
- பொது இடங்களில் நாங்கள் வரிசையில் நிற்க மாட்டோம். நின்று பழக்கமில்லை. இடையில் நுழைந்து, நொண்டிச்சாக்கு ஏதாவது சொல்லி முந்திக்கொண்டு முதலில் போய் நிற்போம். இல்லையானால் தனியாக ஒரு வரிசை உண்டாக்கி குழப்பத்தை உண்டு பண்ணுவோம்.
- எங்கள் வீட்டு ஃபங்ஷன் என்றாலும், கோயில் திருவிழாவானாலும், அரசியல் மீட்டிங்கானாலும் நாங்கள் ஸ்பீக்கர் போட்டு அலற விடுவோம். பட்டாசு கொளுத்துவோம். கொட்டு அடிப்போம். உங்களால ஃபோன்ல கூட பேசமுடியாத அளவு. அவ்வளவு ஏன் உங்கள் வீட்டிற்குள் கூட பேசிக்கொள்ள முடியாத அளவு காதைக் கிழிப்போம். உங்கள் ஃபோன் செலவு அப்படியாவது குறைகிறது இல்லையா?
- பரபரப்புச் செய்தி கொடுக்க வேண்டி யாரைப்பற்றியும் தாறுமாறாக ஊடகங்கள் வாயிலாக எழுதுவோம், கிழிப்போம், ஏசுவோம், மேடை போட்டு பேசுவோம். எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம். (பேச்சு சுதந்திரம் இருக்கும்போது ஏனுங்க நமக்கு ஃபோன் பில் மட்டும் வருது?)
- டிக்கெட்டே வாங்காமல் without ல் கூட நாங்கள் பயணம் செய்வோம்.
- ரோட்டில் மேடு, பள்ளம், குண்டு, குழி எல்லாம் இருக்கும், ஏன் என்றால், மக்களுக்கு வாழ்க்கையில் மேடு, பள்ளம் எல்லாம் இருக்கும், இதெல்லாம் சகஜமப்பா என்றத் தத்துவத்தை பின் எப்படி உணர்த்துவதாம்? Practical Learning
- மழை பெய்யும் சீசன் என்று தெரிந்தாலும் ரோட்டில் தண்ணி பைப், கேபிள் போட, சாக்கடை, ட்ரெயினேஜ் என்று குழி வெட்டி, மூடாமல் போட்டு வைப்போம். ட்ரெயினேஜ் சரி பண்ணிவிட்டு அதை மூட மாட்டோம். அப்பத்தானே 4 பேரு அதுல விழுந்து பேப்பர்ல நியூஸ் வரும்.
- ரோடு போடுவோம். ஆனால், ஒரே மழையில் அந்த ரோடு பிச்சுக்கொள்வது மாதிரிதான் போடுவோம். அப்பத்தானே வருஷா வருஷம் ரோடு போட்டு சம்பாதிக்க முடியும்.
- நோட்டுக் கொடுத்தால் உங்கள் வேலை எளிதாக முடியும். இல்லை என்றால் என்ன, இழுபறிதான். உங்கள் சொத்து, நிலம் எல்லாம் சிலசமயம் உங்களுக்கே கூடத் தெரியாமல் காணாமல் போய்விட வாய்ப்புண்டு.
- பொது சுகாதார வாழ்கயைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் வாழ்கையைப் பற்றியும், நலத்தைப் பற்றியும் யோசிக்கவே நேரம் செலவாகி விடுகிறது. இதில் ஊர் நலம் எங்கு வரும்?
- லாபம் பார்க்க உணவுப் பொருட்களிலும், காய்கறிகளிலும், பழங்களிலும் எப்படிப்பட்ட விஷத்தையும் தெளிக்கத் தயங்கமாட்டோம்.
- படிக்காமல், பரீட்சை எழுதாமலேயே நாங்கள் டிகிரி கூட வாங்கிவிடுவோம். ஏன் PH.D பட்டம் கூட வாங்கிவிடுவோம், வசூல் ராஜா M.B.B.S. போல.
- எங்கள் கையில்தான் கல்வியும். கல்வியும் வியாபாரம்தான். பணம் இருந்தால் கல்வி. பணம் இருந்தால் நல்ல ஆஸ்பத்ரியில் நல்ல ட்ரீட்மென்ட்.
- நாங்கள் சாதி அடிப்படையில்தான் கல்வி, வேலை எல்லாம் கொடுப்போம். உங்களுக்கு எந்தச் சாதி உங்களைக் காப்பாற்றும் என்று நினைக்கின்றீர்களோ எந்த ஜாதி வேண்டுமோ அதற்கு சான்றிதழ் பெற்று அதைப் போட்டுக் கொள்ளுங்கள்.
- நாங்கள் ஜாதியையும், மதத்தையும், தெய்வத்தையும் வைத்து எங்கள் மண், பெண், மற்றும் பொன் ஆசையையும் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் சாமியார்கள் என்போம். ஜாதி, மதம் எல்லாம் சொல்லி கலவரம் செய்வோம். கொலை கூடச் செய்வோம். கொலை செய்து விட்டு அங்கேயே கூட நிற்போம். எங்களை யாரும் பிடிக்க மாட்டார்கள். மேல்ஜாதி, கீழ் ஜாதி என்போம். மனித ஜாதி என்பதை மறப்போம். மனித நேயத்தை மறந்து விடுவோம். ஆனால் பேசுவது என்னவோ “Secular India” என்று.
- நாங்கள் போராட்டங்கள் நடத்துவோம். ‘ஹர்த்தால்’ என்போம். ‘பந்த்’ கடை அடைப்பு என்போம். வண்டிகள் ஓடாது என்போம். பல பொதுச் சொத்துக்களை எரிப்போம். பொது வாழ்க்கைக்கு ப்ரச்சினை பண்ணுவோம். எங்கள் சுதந்திரம்.
- பெண்களைக் கூட்டமாகக் கற்பழித்து, ஆயுதங்களால் குத்தி, உடல் உறுப்புகளை சிதைப்போம். சிதைத்து காமத்தை மாத்திரம் அல்ல ஆத்திரத்தையும் தீர்த்துக் கொள்வோம். அப்படியும் அப்பெண்கள் சாகாமல் எங்களுக்கெதிரே வழக்குத் தொடர்ந்தால் அவர்களை விலை மாதுக்கள் என்று நீதிமன்றத்தில் முத்திரைக் குத்தி நிரூபிப்போம். கைது செய்யப்பட்டால் போலி சான்றிதழகளை காண்பித்தும், மெட்சுர் ஆக வில்லை என்று காண்பித்தும், மிகப் பெரிய? வக்கீல்களை வைத்தும் வாதாடி கேஸ் ஜெயிப்போம். பெண் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. மிருகத்தனமான வெறியைத் தணிக்க 3,4 வயது பெண் குழந்தைகளையும் நாங்கள் பாலியல் பலாத்காரம் செய்வோம்.
- ரௌடியிஸம் பண்ணுவோம். கையில் துப்பாக்கி, கத்தி, கபடா, அறுவா, எல்லாம் தூக்குவோம், தலைவர்களையும் தூக்குவோம், சாதி சனங்களையும் வெட்டுவோம், பொது மக்களையும் குத்துவோம். கொள்ளை அடிப்போம். வெளிநாட்டவர்கள் தரும் பணத்தைப் பெற்று தாய்நாட்டை தகர்க்கக் கூடிய எதையும் செய்வோம். ஆனால், நாங்கள் சுதந்திரமா நடமாடுவோம். சட்டம் எங்கள் கையில்.
- நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணம், சொத்து சேர்ப்போம் ஆனால், கணக்கு காண்பிக்க மாட்டோம், வரி கட்டமாட்டோம். கறுப்பாகத்தான் இருக்கும், எங்கள் மனது வெள்ளை என்போம் ஆனால் வெள்ளை கறையுடன்தான் இருக்கும். கறை நல்லது. எதற்கையா வரி? கட்டபொம்மன் வசனத்தைப் பேசுவோம்...
- நாங்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்போம். அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்வோம். ஊழல் பண்ணுவோம். உங்கள் பணம் அயல்நாட்டு வங்கிகளில் ரகசியமாக எங்கள் பேரில் தில்லு முல்லுவாக சௌக்கியமா இருக்கும்.
- நாங்கள் பொய் சொல்லி பாஸ்போர்ட், எல்லாம் வைத்துக் கொள்வோம். எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் பயணம் செய்வோம். கள்ளக் கடத்தல் செய்வோம். கள்ளப் பணம் அச்சடிப்போம். கள்ளப் பணம் புரளச்செய்வோம்.
- இலட்சக் கணக்கானவர்கள் கண்டு களிக்க விளயாடும் நாங்களே பந்தயக்காரர்களின் வேண்டுகோளையும், அவர்கள் தரும் பணத்தையும் பெற்று வெற்றி தோல்விகளை தீர்மானிப்போம்.
- சட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தாத சுதந்திர நாடு?! ஆனால், அதே நாடு நலிந்தோரை அதே சட்டத்தால் இறுக்கிவிடும். நிஜக் குற்றவாளிகள் வெளியில் ‘சுதந்திரமாக’ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
- உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒரு பெண் நடு ராத்திரியில் தைரியமாக, நகைகளுடனோ, பணத்துடனோ நடமாட முடிந்தால் அன்றுதான் சுதந்திரம். பெண் என்ன? ஆணுக்கே உத்தரவாதம் இல்லையே.
- நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? நமக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது? உங்களுக்கு நினைவு இருக்கிறதா?
- ஆம் சரிதான். நிஜமாகச் சொல்வதென்றால் நம்நாடுதான் மிக மிகச் சுதந்திரமான நாடு. இஷ்டத்துக்கு வாழ முடிகிறது. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், இந்தப் பதிவு பத்தாது.
- சுருங்கச் சொன்னால் நம் நாடு உருப்படப் போவதில்லை.
****************************************
இப்படி, நம் இஷ்டப்படி மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாக்கும் காரியங்களைச் செய்யும்போது நாம் நம் இன்பத்தையும் சுதந்திரத்தையும் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். அடுத்தவர்களின் சுதந்திரத்தையும் மதித்து அவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கல்வி அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் இருக்க ஏண்டிய ஒன்றுதான். ஆனால், சுயநலம் காரணமாக கல்வியறிவு உள்ளவர்கள் கூட அதிகமாக மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்காமல் பல பிரச்சினைகளுக்கும் காரணமாகிறார்கள். எனவே எழுத்தாளர்களும், ஊடகங்களும், திரைப்படங்களையும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்சிகளை உருவாக்குபவர்கள்ம், தங்கள் படைப்புகளில் மற்றவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காமல் நம் சுதந்திரத்தைப் பாதிக்காமல் நம் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்த வேண்டும். அரசும், அதிகாரிகளும், நீதிமன்றங்களும், காவல்துறையினரும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் பாராமல் அவர்களைத் தண்டிப்பதில் தவறக்கூடாது. பொதுமக்களும், சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் தயங்கக் கூடாது.
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’. பள்ளிகளில் சிறு வகுப்புகளில் இருந்தே பாடதிட்டத்தில் நல்லொழுக்க வகுப்பை உட்படுத்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது என்றும், அடிப்படை, தலையாய குடிமை உணர்வையும், அறிவையும் (‘civic sense’ ) மனதில் பசுமரத்தாணி போல பதியும்படி போதிக்க வேண்டும். இது பள்ளிகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோருக்கும் தேவையான கடமை என்பதே என் கருத்து. இக்கருத்துக்களை எல்லாம் பாடம் போல் அல்லாமல் இயல்பான முறையில், நல்ல கதைகள், நீதிக்கதைகளின் மூலம் வளர்க்கலாம். இங்கு, எழுத்தாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கதை சொல்லுதலின் அவசியம் பற்றி மிக அருமையாக அவரது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இங்கு பதிய விரும்புகிறேன். மேலும், கண்கள் காணும் காட்சிகள் மனதில் ஆழப்பதிவதால் இக் கருத்துக்களை சிறு சிறு ஆவணப்படங்களின் மூலமாகவும் (Visual Aids) சிறிய வகுப்புகளில் இருந்தே கற்பிக்க வேண்டும். இவை எல்லாம், குழந்தைப் பருவத்திலிருந்தே சுயமாகச் சிந்திக்கும் திறனையும், பகுத்தறிவுச் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும். (Lateral Thinking).
ஒரு நாட்டின் வருங்காலச் சிற்பிகள் என்று கருதப்படும் ஒவ்வொரு குழந்தையும், நாட்டின் நல்ல குடிமகனாக உருவாவதில், பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்கும், ஏன் கல்லூரிகளுக்கும் பெரும்பங்கு இருப்பதோடு, ஒரு தலையாய கடமையும் கூட என்பது எனது கருத்து. இப்படி சமூகத்திலுள்ள அனைவரும் முயன்றால் முடியாதாது எதுவும் இல்லை. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரத்தானே செய்யும்!
------------------------------------------------------------
தீபாவளி இலவசம் .....

இலவச யோசனைகள்....
இரண்டு சாரி வாங்கினால், இல்ல ரூ 1000 க்கு வாங்கினால், ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் இலவசம்னு போடலாம். நல்ல கூட்டம் அலை மோதும்.
ரூ 5000 க்கு மேல் வாங்கினால் தீபாவளி அன்று 4 பேருக்கு சமைப்பதற்கு தேவையான காய்கறிகள் இலவசம்னு சொல்லலாம்
இது எப்புடி ???!!!!!! எல்லாம் விக்கற விலைல என்னத்த சொல்லறது...... நம்ம மக்கள் atleast இப்படியாவது சந்தோஷப்படட்டுமே!!!!!
------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
இன்று (24-10-2013) ஹிந்து தமிழ் நாளிதழில், ஊர்வலம் பகுதியில் வெளியான படம் இது. ஆஹா, ஏதோ பசுமைப் புரட்சியா?! னு நான் ஏமாந்து நினைச்சது போல நீங்களும் ஏமாந்துடாதீங்க. அதுல இருக்கற நியூஸ படிசப்புறம்தான் தெரிஞ்சுச்சு 'அடப்பாவிங்களானு'.
"எப்பவுமே, பொதுக்கூட்டம், பாதுகாப்புனு வெயில்லயும், மழைலயும் இருக்க வேண்டிய நிலை காவலர்களுக்கு. ஆனா இந்தப் பெண் காவலர் பசுமையான இந்த சூழலில் நிற்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்தான். நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள்" -செய்தி
எல்லாம் சரிதான்....இப்ப தெரியுதா நான் அடப்பாவிங்களானு சொன்னது ஏன்னு..பசுமையான சூழலாம்...பின்ன என்னங்க, விலைவாசி எகிறி போயி, ஒரு வாழைக்காயும், ஒரு வாழைப்பழமும் கூட 10ரூபாய், 12 ரூபாய்னு விக்கிற இந்த நிலமைல, ஒருவேள சாப்பாட்டுக்கே வழி இல்லாம ஒரு பக்கம் சனங்க வயித்தயும் வாயையும் கட்டிகிட்டு கிடக்க....இப்படி இத்தனை வாழைத்தார் கட்டி வீணடிக்காங்களேனு....இப்படிக் கூடவா?! முக்கியமான நபர்கள்?......யார் வீட்டுக்குப் போச்சோ?! யார் யார் வீட்டுல அடுத்த நாள் வாழைக்காய வைச்சே ஓட்டினாய்ங்களோ?! என்னக் கொடுமை சார் இது......
உங்க ஊர்ல இப்ப வாழைக்கா, பழம் என்ன விலைங்க.? அதாங்க எல்லாம் அங்க வரவேற்கப் போயிடுச்சே ..அதான்......
-----------------------------------------------------------------------------------------------------------
கதை கதையாம் காரணமாம்
ஆறறிவு?? படைத்த நாம் திருந்தப் போவது எப்போது??
உடலுக்குக் கேடு ஏற்படுத்தும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா டப்பாக்கள் கொடுங்கையூர், பெருங்குடி கிடங்குகளில் மண்ணில் புதைத்து அழிகப்பட்டன..’அடக்கம்’ செய்யும்........ – செய்தி
ரொம்ப சந்தோஷமான செய்திதாங்க. எப்பங்க ‘குடி’ திரவங்களுக்கு சமாதி கட்டப்போறாங்க? அந்த இனிய நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியக் குடிமகன்......ஐய்யோ தப்பா எடுத்துக்காதீங்க......’குடி’ மகன் இல்லீங்க.......குடிமகன்தாங்க.....ஏன்னா இந்தக் கேடுகெட்ட குடியினால எத்தனையோ குடும்பங்கள் சீரழியுதுங்க...குற்றங்கள் நடக்குதுங்க....அப்புறம் இந்தக் காதல் தோல்வினு நிறையபேரு தேவதாஸ் தாடியோட கையில பாட்டிலோட அலையறாங்க...இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராதானு ஒரு ஏக்கம் தாங்க.....சமாதி கட்டினதுக்கப்புறம் அது ‘ஆவி’யா வந்திடாம இருக்கணுங்க....
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
பசுமை வழியில் வாழ வேண்டும்- ஆளுநர் ரோசய்யா அறிவுரை
பசுமைக் கட்டிடசர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி 2013-ல் அவர் பேசியது........சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.(?).....நாம் அனைவரும் இயற்கையுடன் இணைந்து பசுமை வழியில் வாழக் கற்றுக் கொள்வதன் மூலம் நம்மால் நம் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும்”
கேக்க நல்லாத்தான் இருக்குது.......ஆனா, இயற்கையுடன் அப்படினா என்னாது? எங்க இயற்கை இருக்குது? தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு நகரத்துலயும், மாநகரத்துலயும், எத்தன காருங்க, ரெண்டு சக்கர வண்டிங்க ஓடுது புகய கக்கிக்கிட்டு.....கொஞ்சம் உங்க வீட்டு மொட்டை மாடில ஏறி பாருங்க சுத்தி.....பச்சையா ஏதாவது தெரியுதா? ஒரே காட்டடக் காடுதானே தெரியுது....இருக்கற ஒண்ணு ரெண்டு பச்சையையும் அழிச்சுட்டு எப்படா ப்ளாட்டு போட்டு கட்டடமா மாத்தலாம்னு நிறைய கூட்டமே அலையுது......
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
இப்படி பைத்தியக்காரக் கவிஞன் பாரதினு ஒருத்தன் பாடிட்டு போயிட்டான். அவன ரசிச்சு, அவன மாதிரியே கனவு கண்டு நானும் ஒரு காணி நிலம் வேணும்னு நாயா பேயா அலயறேன். ம்ம்ம்ம் எங்க?.....ஏழுதலை முறை விலை வேற...பெருமூச்சுதான் தென்றல்....தென்னை மரம்? ஹாங்......இப்போதைக்குத் தென்னை மரம்னா என்ன அப்படினு அடுத்த சந்ததயினர்க்குச் சொல்றதுக்கு இருக்கு ஆனா எதிர்காலத்துல.????..... கேணி? அப்படின்னா? பூதம் வராம இருந்தா சரி.....மாளிகை? ஒரு குச்சு வீடு கிடைச்சாலே பெரிய விஷயம்....குயில்? கூகிள் ல குயில்னு போட்டுத் தேடுங்க...படம் வரும் அதுதான் குயில்.....நிலா....ஹா இப்போதைக்கு அது ஒண்ணுதான்...அதுல கூட நம்ம மக்கள் ப்ளாட் போட்டு கட்டிடம் கட்டி அந்த ஒளியை மறைக்காம இருந்தா சரி......
ம்ம்ம் இதுல பசுமையோடு இணைந்து பசுமை வழியில் வாழக் கற்றுக் கொள்தல் என்பது ஏட்டளவிலும், உதட்டளவிலும்தான் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் இன்னும் நாம் பொருள் சார்ந்த உலகை நோக்கித்தான் பயணிக்கிறோம். ஆக்சிஜன் ஸ்வாசித்தல் மையங்கள் கூட உருவாகிவிட்டதாகவும் செய்தி. தன் குழியைத் தானே பறித்துக் கொள்ளும் அவல நிலை. நாம் திருந்தப் போவது இல்லை.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
தமிழ் திரைப்படங்கள் வெளியாகும்போது திடீர்னு ஒரு ‘சீசன்’ காளான் போல ஒரே மாதிரிப் படங்கள் முளைக்கும் பாருங்க..... அதாவது காதல் கதை ஒண்ணு சக்ஸஸ் ஆச்சுனு வையுங்க....... உடனே அதே கதை அமைப்புல பல படங்கள் அடுத்தடுத்து வெளிவரும். நம்ம தமிழ் திரையுலகின் ஒரு அவல நிலை. ‘காதல்’ படம் வெற்றி அடைஞ்சதும் அதே ரீதியில படங்கள் வெளி வந்துச்சு. ‘காக்க காக்க’ பெரும் வெற்றி, அடுத்து ‘சாமி’, ‘சத்யம்’னு போலிஸ் கதைகள் படமா வெளியாச்சு. ‘சுப்ரமண்யபுரம்’ வெற்றி பெற்ற உடனே, காளான்கள் போல மதுரையைச் சுத்திக் கதைக் களமா வைச்சும், நண்பர்கள் தங்கள் நண்பன் ஹீரோவின் காதலுக்கு ஹெல்ப் பண்ணி தங்கள் உயிரை விடுவது போலவும், கிராமீய மணத்துடனும் பல படங்கள் வெளி வந்துச்சு. அதே போல ‘அந்நியன்’ வெளிவந்து ஹிட் ஆனதும், ‘கந்தசாமி’, ‘வேலாயுதம்’னு கிட்டத்தட்ட அதே ஸ்டைல் படங்கள் வெளிவந்துச்சு.
இயக்குனர்களிடம் ‘உங்க படம் அந்த படத்தைப் போல இருக்குனு விமர்சனங்கள்.... என்று கேள்வி கேட்டால் போச்சு. ஒரு கதையே வரும் பாருங்க அதையே ஒரு படமா எடுக்கலாம்....
“இல்ல. இது வித்தியாசமான கதைக் களம். இந்தக் கதையோட கரு நான் என் அம்மாவுடைய வயித்துல கருவா இருக்கும் போதே வந்துருச்சு. அப்ப எடுக்க முடியாது இல்லையா. அப்புறம் நான் பிறந்து அந்தக் கதைய பாலிஷ் பண்ணி எடுக்க நினைச்ச போது ஃபைனாஸ் அது இதுனு அதற்கான சூழல் இல்லாததால எடுக்க முடியாம அப்படியே போட்டு வைச்சுட்டேன். இப்ப அதற்கான நேரம் வந்து சூழல் அமைஞ்சுச்சு, ஸோ அத தூசு தட்டி, படமா எடுத்தேன்” இப்படி பேட்டி எல்லாம் வரும். இப்படி பல சீசன் சொல்லலாம்.
அந்த வகைல, இப்ப வெளியாகி ஓடிக்கிட்டு இருக்கற வித்தியாசமான த்ரில்லர் கதை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஹிட் ஆனதுனால நம்ம இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிச்சு அதே மாதிரி ‘காக்காயும், ஆந்தையும், பாட்டி சுட்ட வடையும்’ அப்படினு ஒரு படம் எடுத்தாங்கனானு கொஞ்சம் கற்பனையத் தட்டிவிட்டா எப்படினு.........
இருட்டு கவிழும் நேரம். ரோட்டோரம் ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்காங்க. அங்க வடை சாப்பிட வர்ர ஹீரோயினோட மோதிரம் அவங்களுக்கே தெரியாம அந்த வடைமாவுல விழுந்து விட, அந்தப் பாட்டியும் அத பார்க்காம வடை சுட்டுகிட்டே இருக்க, (ஹீரோ, ஹீரோயின வில்லன்கிட்டருந்து காப்பாத்தி பிரிஞ்சு போன அவங்க அப்பா, அம்மா எல்லாரையும் ஒண்ணு சேர்க்க ட்ரை பண்ணிகிட்டு இருக்க, ஹீரோ, வில்லன் ரெண்டு பேருமே தாதாதான்) ஹீரோவும், வில்லனும் அதே இடத்துல இருந்தாலும், வில்லனுக்கு ஹீரோ இருக்கறது தெரியாது, ஆனா ஹீரோக்கு வில்லன் அங்க இருக்கறது தெரியும். இதப் பார்க்குற ஹீரோ, வில்லன் கண்ணுல படாம அத எடுக்க ட்ரை பண்ண, ஏன்னா ஹீரோக்கு மட்டும்தான் அந்த மோதிரம் எந்த வடைல இருக்குனு தெரியும், வில்லனும் அந்த மோதிரம் விழுந்ததைப் பார்த்து அத எடுக்க முந்திகிடுறாரு, ஆனா அவருக்கு எந்த வடைல அந்த மோதிரம் இருக்குனு தெரில. ஸோ, ‘ஏய்’னு சத்தம் போட்டுகிட்டே எல்லா வடையையும் அள்ளிப் போட்டுகிட்டு ஓடுறாரு. பாட்டி அழ, ஹீரோ அவங்கள சமாதானப் படுத்தி, ‘எல்லா வடையும் கெட்டு போறதுக்குள்ள உங்க கையில வந்து சேரும்,'னு வீர வசனம் பேசிட்டு அவரு காதலியையும் இழுத்துக்கிட்டு ஓட, இவங்கள போலீஸ் துரத்த, வில்லன் எல்லா வடையையும் தொலை தூரத்துல உள்ள (பரவால்ல ஏதோ ஒரு வெளிநாட்ட யோசிச்சுக்கோங்க) ஒரு வீட்டுக்குள்ள இருக்கற ஃபிரிட்ஜுல அங்க இருக்கறவங்களுக்குத் தெரியாம வைக்க சமயம் பார்த்து ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கும்போது, நம்ம ஹீரோ எப்படி அந்த வடைகளை வில்லன்ட்ட இருந்து பறிச்சுக்கிட்டு வராரு, அந்த மோதிரம் இருக்கற வடையை மட்டும் தனியா எடுத்து, அந்த மோதிரத்தை காதலியின் விரலில் போட்டு தன் காதல உணர்த்த, அவரை பிரிந்து போன அவர் குடும்பத்தாரோடு சேர்க்க முயல. எதுக்கு ஓடறாங்க அப்படின்றத ஹீரோ, பாட்டி கேக்கும்போது, வடைய ஒப்படைச்சுகிட்டே சொல்ல..... ...கடைசில ரெண்டுபேரும் சேர...... பாவம் மறுநாள் பாட்டிகிட்ட வரும் கஸ்டமருக்கெல்லாம் முந்தைய நாள் இரவு சுட்ட பழைய வடைகள தர படம்.. சுபம். இடைல டூயட், ஆண் காக்கை – ஹீரோ, பெண் காக்கை-ஹீரோயின, ரெண்டுபேரும் ஓடிகிட்டே இருப்பாங்க, ஆந்தை.-வில்லன். ஆந்தைக்கு இரவிலதானே கண்ணு தெரியும் ஸோ நைட்லதான் கதை ஓட்டம். கழுகுகள் – போலீஸ். பல காக்கைகள், ஆந்தைகளை சுடும், ஆந்தைகள் காக்கைகள சுடும், காக்கையும், ஆந்தையும் கழுகுகளையும் சுடும். அப்புறம், மரம் கொத்தி பறவைகள், கிளிகள், குருவிகள் இவர்களின் பங்களிப்புனு......மீதி வெள்ளித் திரையில்......இது எப்புடி?! நாங்களும் யோசிப்போம்ல...ஆனா என்ன ரூமெல்லாம் போட வேண்டியதில்ல.......வேலை செஞ்சுகிட்டே, காய் நறுக்கிட்டுருக்கும்போதே கதையும் நறுக்குவோம்ல......
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
பட்டாஸு வாங்க நீ(ங்க) ஓட, சத்தம் கேட்டு நாய் ஓட, எல்லோரும் கொண்டாடும் தீபாவளி
இதோ, தீபாவளி நெருங்கியாச்சு. நம்ம தமிழ் தொலைக்காட்சி சானல்கள் தயாராயாச்சு. தீபாவளி சிறப்பு நிகழ்சிகள் அப்படினு “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக திரைக்குவந்து சில மாதங்களே ஆன..(பெட்டியை விட்டு வெளியே கூட வராத, இல்ல வெளிய வந்தாலும் ஓடாத, இதையும் கூட சேர்த்துக்கலாமேங்க) புத்தம் புது திரைப்படம்”னு ஏதோ யாருக்கும் காதுல கேக்காம போயிடக் கூடாதுனு செம டெசிபல்ல அரைகூவ ஆரம்பிச்சாச்சு. வெள்ளித்திரைல வந்து கொஞ்சமே நாட்களும்/மாசங்களும் ஆன, ரேஸில முந்திக்கிட்ட, முந்திக்கிட்டு இருக்கற நடிகருங்க, ஒரே ஒரு படத்துல முகம் காட்டின தமிழ் தெரியாத நடிகைங்க, எல்லோரும் கையில மத்தாப்பு, பட்டாஸுனு பிடிச்சுகிட்டு டி.வி.ல வந்து “தமில் மக்கல்கு திவாலி நல்வால்துகல்/வாத்துகல்” அப்படினு கொஞ்சு தமிழில கொஞ்சிச் சொல்ல, அவங்க எல்லோரும் சின்ன வயசுல எப்படி பட்டாசு வெடிச்சாங்கனு, அந்த அனுபவத்த எல்லாம் சொல்ல, தமிழ் நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் ஏக்கத்தோட, ஏதோ காணக்கிடைக்காத தெய்வம், பாக்கியம் வீட்குக்குள்ளயே வருதுனு ஜொள்ளொழுகப் பார்த்து பரவசமடைய ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு வருஷமும் இதுதான் வழக்கம். உங்காத்து வழக்கமா? எங்காத்து வழக்கமா?
வடக்கில் ராமரும், லக்ஷ்மியும், தீபாவளிக்கு ரெடியாகி விட்டார்களா என்று தெரியவில்லை. தென்னகத்தில் கிருஷ்ண பகவான் ரெடியாகிவிட்டார், வடக்கே ராமரின் 14 வருட வன வாழ்க்கை முடிந்து வருவதையும், இலங்கை வெற்றியையும் கொண்டாட அவரை வரவேற்கும் பண்டிகையாகவும், வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வைத்து, புதுவருட தொடக்கமாக லஷ்மி பூஜையும், கொண்டாடுவது வழக்கம். பார்த்து, நம்மூர்ல பகல் கொள்ளைக்காரங்க நிறைய இருக்காங்க. அதனால, லக்ஷ்மியிடம், ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீனு, தீபாவளி ஆஃப்ராக, கொட்டும் பணத்தை பாதுகாக்க செக்யூரிட்டி கார்டயும் அனுப்பச் சொல்லி வேண்டலாம். இது இலவச ஆலோசனைதான். No consultation fee charged. அதுக்கப்புறம், ராமர் வெற்றியை தீபாவளியாக கொண்டாடுறது இன்னும் சர்ச்சையாகவேதான் இருக்கு. தசாவதாரத்தில், (கமல் ஸார், இது உங்க படம் இல்லைங்க. உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம். உங்க அவதாரங்களுக்கும் விமர்சனம் வந்துச்சு, அது வேற விஷயம்.) ராமாவதாரத்துக்கு அப்புறம்தானே கிருஷ்ணாவதாரம்? கிருஷ்ணர்தானே நரகாசுரனைக் கொன்னாரு? அப்படி இருக்கும் போது அதுக்கு முன்னாடியே பிறந்த ராமர் எப்படி தீபாவளி கொண்டாடி இருப்பார்? நியாயமான கேள்வி. வைணவ சமய சொற்பொழிவு ஆற்றுபவர்கள், ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதற்கு ஏதாவது ஒரு சானலில் விளக்கம் கொடுத்து சந்தேகத்தைத் தீர்த்து நம்ம தமிழ் மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தலாம். தனுஷ்கோடி கோதண்டராமர் அருள்வாராக.
தென்னகத்துல, கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாட தீபாவளி. ஆனா இதுல ஒரு சின்ன வழக்கு இருக்கு. கொன்றது கிருஷ்ணரா, இல்ல அவர் மனைவி சத்யபாமாவானு. இன்னும் அந்த வழக்கு முடிவுக்கு வரல. அதனால, நம்ம தமிழ் சானல்களுக்கு ஒரு சஜஷன். ராமர் விவகாரத்தையும், கிருஷ்ணர் விவகாரத்தையும் எடுத்துகிட்டு பட்டிமன்றம் நடத்தலாம். சாட்சிக்கு அந்த குருவாயூர் கிருஷ்ணன கூப்பிட்டுக்கலாம். சாலமன் பாப்பையா ஐயாவையோ, லியோனி ஐயாவையோ ஏன் நம்ம ராமரையே கூட நடுவரா போட்டுக்கலாம். ராமர் சத்யசீலர், எந்த புறமும் சாயாதவர். தன் மனைவியையே கற்பு, சத்திய, சோதனைக்கு உட்படுத்தியவர். அப்புறம் எவனோ ஒருத்தன் சொன்னான்னு, மனைவிய வீட்டை விட்டு வெளியே அனுப்பியவர். ஸோ அவர் ஒரு நல்ல நடுநிலையாளர். அப்புறம், ராமரும், கிருஷ்ணரும் எப்படி தீபாவளி கொண்டாடினாங்கனு, அதுவும் தலை தீபாவளி கொண்டாடினாங்கனு ஒரு ஷோ, நேரடி நிகழ்சி பண்ணலாம். பகவான் ராமரும், கிருஷ்ணரும் தமிழ் நாட்டு மக்களுக்கு சின்னத்திரை மூலமாக காட்சியளித்து, அவர்களோடு தீபாவளி கொண்டாடி அருள் பாலிக்கலாம். ராமர் கிட்டயும், கிருஷ்ணர்கிட்டயும் அப்பாயின்மென்ட் வாங்க மறந்துடாதீங்க. அவங்க ரொம்ப ‘பிச்சி’....
ஆரம்பிச்சுட்டாங்கய்யா...ஆரம்பிச்சுட்டாய்ங்க.....எல்லா சானலும் போட்டி போட்டுகிட்டு, ‘தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்’ னு ஒவ்வொரு ½ மணி நேரத்துக்கும் கூவ ஆரம்பிச்சுட்டாங்க. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள டைரெக்டர், ஹீரோ, ஹீரோயின், ம்யூசிக் டைரெக்டர் இப்படி எல்லாரையும் கூப்பிட்டு திரைல அலசுவாங்க. நிறைய கதை கேக்கலாம். தீபாவளி அன்னிக்கு ஏதோ நம்ம சாதி, சனங்கள, இப்படி வருஷத்துல எப்பவாவது தானே பாக்கறோம்னு பாக்க போனா, சின்னஞ் சிறுசுகள்ல இருந்து, பெரிசு வரை எல்லாம் டி.வி.லயே தலைய விட்டுருப்பாங்க. சரி நடுல விளம்பரம் வருமே அப்பவாது தலைய வெளில எடுத்துப் பேசுவாங்கனு பார்த்தா, வேற சானல் மாத்தி, இப்படி மாத்தி, மாத்தி... நம்மளும் அவங்க கூட உக்காந்து டி.வி.ய பாத்துட்டு கடைசில போய்ட்டு வரோம்னு கிளம்பற டையத்துலதான், நம்ம மர மண்டைக்கு உறைக்கும். நம்ம வீட்டுலயும்தான் டி.வி. இருக்குது, பெட்ரோல் விக்கிற விலைல இம்புட்டு தூரம் வந்து டி. வி. பாக்கறதுக்கு, இதுக்கு நம்ம வீட்டுலயே உக்காந்து பாக்கலாம்லனு தோணும்....என்ன சொல்றீங்க?
சரி, அது ஒரு பக்கம்.. இந்தப் பட்டாஸு வெடிக்கறது இருக்கு பாருங்க. ஊதுபத்திய கைல வைச்சுக்கிட்டு பசங்க அலையும் போது, ரோட்டுல நடக்கக் கூட முடியாம, எந்தப் புத்துல என்ன பாம்ப் இருக்கோனு பயந்துகிட்டே நடக்கணும். டூவீலர்ல போனாலும் பயம்தான்....”நாமதான் தொடர் குண்டுவெடிப்புக்கு பழகின ஆளுங்கதானே..இதென்ன மாட்டரு...சப்ப மாட்டரு....இந்த பாம்ப் எல்லாம் ஜுஜுபி” அப்படினு தோணுதோ அதுவும் சரிதான். எத்தனை காது ரப்சர் ஆன கேஸு வருதோ... இந்தப் பசங்க கையில வைச்சுக்கிட்டே பட்டாஸத் தூக்கி ஏதோ பந்து எறியரா மாதிரி இல்லன பம்பரம் எறியரா மாதிரி ஸ்டைலா போடுவாங்க பாருங்க எங்கேயாவது நம்ம மேல விழுந்துருமோனு வேற பயமா இருக்கும். முன்பு, நம்ம இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பற ராகெட் எல்லாம் கடல்ல விழுந்தா மாதிரி, எங்க வீட்டு பால்கனில, மொட்டைமாடில நிறைய ராக்கெட் வந்து விழும் பாருங்க.. சில சமயம் அங்க காயற துணில கூட பட்டு எரிஞ்சு ஓட்டை விழுந்துடும்னா பார்த்துக்கங்க. அவங்க கிட்ட போயி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட சட்டத்துல ஏதாவது ஓட்டை இருக்கானு பாத்து வைச்சுக்கணும்.
வீட்டுல வளரும் செல்லப் பிராணிங்க, அதுவும் நாய்கள் இருக்கு பாருங்க வெடிச் சத்தத்துல பயந்து படற பாடு ரொம்ப பரிதாபம். பட்டாஸு சத்தம் கேட்டா போதும் எங்க வீட்டுல இருக்கற டைகரும், கீசரும், என் நண்பர் வீட்டுல இருக்கற கண்ணழகியும், ப்ரௌனியும் ரொம்ப அங்கயும், இங்கயும் அலைஞ்சு, தண்ணி, தண்ணியா குடிச்சு, சாப்பிடாம அலஞ்சு படற பாடு.... ‘நாய் மாதிரி அலையுது பாரு’னு சொல்லுவமே அது இதப் பாத்துதானோ?! இந்த பட்டாஸு சத்தம் நமக்கே டெஸிபல் அதிகம். அவங்களுக்கு கேக்கவே வேணாம். பட்டாஸோடு தீபாவளி இலவசமாக ரெண்டு காதுக்கு ரெண்டு கவசமும், மூக்குக்கு ஒரு கவசமும் (ஸ்வாசிக்க சிறு ஓட்டை மட்டும்) கொடுத்தா பட்டாஸு கடைக்காரர்களுக்கு புண்ணியம். மோக்ஷம் உறுதினு பகவான் கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருப்பதாகக் கேள்வி.
பிராணிகளைக் காப்போம், பூமியைக் காப்போம், சுறுப்புறச்சூழல் அப்படினு எல்லாம் மேடை, மேடையா வாய் கிழிய பேசுவது, நாளிதழ், மாத இதழ், வலைத்தளம், ஏன் T-ஷர்ட் கூட விட்டு வைக்காம எல்லாத்துலயும் ஒரு பேனா விட்டு வைக்காம எழுதறது இல்லனா நைட்டெல்லாம் முழிச்சிருந்து கம்ப்யூட்டர்ல அடிக்கறது, ஸ்கூல்ல எல்லாம் டான்ஸும், ட்ராமாவும் போடறது எல்லாமே நாம ப்பளிசிட்டிக்கும், போட்டில ஜெயிக்கறதுக்கும்தானே செய்யறோம்? எல்லாமே ஏட்டுச் சுரைக்காய்தான். கேடுகெட்ட ஜென்மங்கள். திருந்தப் போவதில்லை.
தீபாவளி அன்னிக்கு ‘தல’ படம் “ஆரம்பம்”, கார்த்தியோட படம் “ஆல் இன் ஆல் அழகு ராஜா”,
டைரக்டர் செல்வராகவனின் “இரண்டாம் உலகம்”,
விஷாலின் “பாண்டியநாடு” ரிலீஸ்.
ஸோ ரசிகர்கள் எல்லாரும் இப்பவே முதல் ஷோவுக்கு புக் பண்ணிருப்பாங்க....இந்த சினிமாக்களூம், டி.வி. நிகழ்சிகளும், ஏன் மழையும் கூட எல்லாரையும் பிசியா வைச்சிடுச்சுனா பட்டாஸு புஸ்ஸுல!!? ஆனா ‘தல’ படம் ‘ஆரம்பம்’ ஆரம்பத்துக்கு பட்டாஸ் இல்லாம ரசிகர்கள் ஆரம்பிக்க மாட்டாங்களோ?!!
பி.கு - (இப்படி நடந்தா நான் குருவாயூருக்கு வந்து துலாபாரம் கொடுக்கறதா வேண்டியிருக்கேன். இல்லனா பங்களூர் இஸ்கான் கோவில்ல “பிட்ஸா” ப்ரசாதம்” தருவதாக வேண்டியிருக்கேன்.)
கொசுறு செய்தி - சென்னையில் எல்லா ஜவுளிக் கடைகளும், அதுவும், தி,நகரில் ரங்கநாதன் தெருவும், பாண்டிபஜாரும், பனகல்பார்க் ஏரியாவும் மக்கள் பிதுக்கம். அல்லோகலம். அபிமன்யு சக்கரவ்யூகம். உள்ளே போனால் வெளியேவரமுடியாது. பெண்களுக்கு கொண்டாட்டம். ஆண்கள் பாவம், பரிதாபம். உள்ளே போன மனைவியையும், பெண்ணையும் காணவில்லையாம், என் நண்பரின் SMS. தீபாவளிக்குள் திரும்பி வந்து விடுவார்கள் என் பதில் SMS.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக