ஞாயிறு, 28 ஜூலை, 2019

காசு வரை பிள்ளை


https://engalblog.blogspot.com/2018/07/blog-post_10.html அருமையான தலைப்பிற்கும், கேவாபோக பகுதியில் அங்கு வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் மற்றும் எபிக்கு. 

இங்கு எங்கள் தளத்திலும் இது ஒரு சேமிப்பாக......


“அப்பா! அம்மாவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. எல்லாமே நார்மல். பெரிசா ஒன்னுமில்லை. ஹார்ட்தான் கொஞ்சம் வீக்கா இருக்கு. ட்யூ டு ஏஜ் னு டாக்டர் சொல்லிட்டார்”

“இறைவா!” என்று கண்ணை மூடிக் கொண்டு கையை நெஞ்சில் வைத்துக் கொண்டார் வேதமூர்த்தி. “கணேசன், ராஜா, லலிதா எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டியா சுந்தர்!? அம்மா மூணு நாளா சரியா பேசமுடிலைல. அதனால எல்லாரையும் பாத்து பேச ஆசைப்படுவா”

“சொல்லியாச்சுப்பா. எல்லாரும் ஈவ்னிங்க் வீட்டுக்கு வந்துருவோம்னிருக்காங்க”

மாலை அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்ததும் எல்லோரையும் பார்த்து சந்தோஷப்பட்டார். உள் ரூமில் படுக்க வைத்து மீனாட்சி உறங்கியதும், தான் வருவதாக வேதமூர்த்தி சொல்லவும் கதவை மூடி வைத்துவிட்டு எல்லாரும் ஹாலில் கூடினர். எல்லோரும் என்றால் வேதமூர்த்தியின் மூன்று பிள்ளைகள், மருமகள்கள், மகள், மாப்பிள்ளை. அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. எப்படித் தொடங்குவது? யார் தொடங்குவது என்று இருக்கலாம்.

முதலில் மூத்தவன் சுந்தர்தான் தொடங்கினான். “இந்த 3 நாள் அம்மா ஆஸ்பத்திரியில இருந்ததுக்கு 2 லட்சம் செலவாகியிருக்கு. இதோ மெடிக்கல் பில் எல்லாம்.”

மீண்டும் அமைதி. “சரி இப்ப என்ன சொல்ல வர? நாங்க மூணு பேரும் ஷேர் பண்ணிக்கணும்னு சொல்ல வரியா?” பெண் லலிதா அமைதியைக் கலைத்தாள்.

“எங்களால இப்ப முடியாது. குழந்தைங்க படிப்பு அது இதுனு. நிறைய செலவு இருக்கு” – மூன்றாவது மருமகள்

“எங்களாலயும் இப்ப முடியாது.” இது இரண்டாவது மருமகள், மகன்.

“அப்ப நாங்க இப்ப 2 லட்சம் செலவு செஞ்சுருக்கோமே அதுக்கு என்ன சொல்லறீங்க? எங்களுக்கு மட்டும் செலவு இல்லையாக்கும்? பெரிய பையன் இன்னும் செட்டில் ஆகலை. அவன் படிப்பு செலவே ஒரு தொகை ஆகிருச்சு. அடுத்து ரெண்டு பேரு. ஏங்க சும்மா வாய மூடிட்டுருக்கீங்க. சொல்ல வேண்டியதுதானே." – இது மூத்த மருமகள் சுந்தரின் மனைவி.

“அண்ணி. அப்பாகிட்டயே சொல்லிடலாம். இத்தனை செலவாச்சுனு”

மீனாட்சியின் தேவைகளைக் கவனித்துவிட்டு எழுந்து வந்தவரின் காதில் இந்த உரையாடல்கள் விழவும், மீண்டும் உள்ளே சென்றார்.  பண விஷயம் பற்றிப் பேசப்பட்டது மீனாட்சியின் காதில் விழவில்லை என்பதை அறிந்து அவர் மனதில் ஒரு சமாதானம். நல்லகாலம் மருந்துகள் அவளை அசத்தியிருக்கிறது.

“சரி..பணத்தைப் பத்தி அவர்கிட்ட சொல்லிடலாம்.….அப்புறம்? இப்ப ரெகுலர் செக்கப்னு சொல்லிருக்காங்கல்ல. யாரு இவங்களை இங்க வைச்சுக்கறதாம்?”

மீண்டும் அமைதி.

“இப்படி இருந்தா எப்படி? ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆகணும்.” என்று லலிதா சொல்லவும் பெரிய மருமகள் முந்திக் கொண்டாள். 

“நான் வேலைக்குப் போயிட்டிருக்கேன். அதனால…..” என்று இழுத்தாள்.

இரண்டாவது மருமகளும், மூன்றாவது மருமகளும் அதே காரணத்தையும் இன்னும் ஏதோ பல காரணங்களையும் எல்லோரும் சொன்னார்கள்.

“அண்ணா, அப்ப யாரு பாத்துக்குவாங்க? பாவமில்லை?” - இது லலிதா.

“ஏன் நீ தான் கொண்டு வைச்சுக்கயேன்”

“என்ன அண்ணா இப்படிச் சொல்லற. நீங்க மூணு பேரும் இருக்கறப்ப பொண்ணு நான் கொண்டு வைச்சுக்கிட்டா நல்லாருக்காது. என் அத்தையும், மாமாவும் எங்கூடத்தானே இருக்காங்க”

“பொண்ணுனா அம்மா அப்பாவை பாத்துக்கக் கூடாதாக்கும்? மாப்பிள்ளை நீங்க இதுக்குப் பதில் சொல்லுங்க. நாங்க இப்ப எங்க பொண்டாட்டிங்களோட அம்மா அப்பாவை பார்த்துக்கலை?”

பதிலில்லை.

“அண்ணா ஊர்ல இருக்கற வீட்டை வித்துட்டு, இங்க நல்லதா நம்ம வீட்டுப் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்து வைச்சா?”

“இங்க வீட்டு விலையும் சரி, வீட்டு வாடகையும் சரி…உள்ள ரூபாய் அத்தனையும் போகும். கைவிட்டுப் போட வேண்டி வரும். அப்புறம் ஹாஸ்பிட்டல் செலவு யாரு பாப்பாங்க.? நீ கொடுப்பியா? உங்களுக்குத்தான் இன்னொரு வீடு இருக்குதே அதைக் கொடேன்”

உள்ளே சென்றிருந்த சுந்தரின் மனைவி, “ஏங்க கொஞ்சம் இங்க வரீங்களா? காப்பி கலந்திருக்கேன் எல்லாருக்கும்…” என்று கூப்பிட்டாள். கூப்பிட்டது காபி எடுத்துக் போக அல்ல என்பதும் சுந்தருக்குத் தெரியாதா என்ன?

“அத்தையையும் மாமாவையும் நாம பாத்துக்கிட்டா நாளைக்கு நாமதான் பாத்துக்கிட்டோம்னு ஊர்ல உள்ள வீட்டை நம்ம பேருக்கு மாத்திக்கலாம்ல. அதையும் இப்ப சொல்லிடுங்க …அப்படி இல்லைனா உயில் எழுதச் சொல்லுங்க”

“ம்”

சுந்தர் ஸ்னாக்ஸுடன் ஹாலுக்கு வந்தான். “நாங்க அம்மா அப்பாவை பாத்துக்கிட்டா அவங்க காலத்துக்குப் பிறகு அவங்க வீட்டை நாங்க எடுத்துக்குவோம்.”

மற்ற இரு மருமகள்களும், “அதெப்படி? எங்களுக்கும் அதுல பங்கு உண்டுல்ல?”

சுந்தரின் மனைவி காபியுடன் வந்தாள், “அத்தைக்குத்தான் ஒன்னுமில்லைல. அவங்க ஊர்லயே இருக்கட்டும்”

இப்படிப் பணம்தான் பேசப்பட்டதே ஒழிய அங்கு அம்மா அப்பா என்ற நேயம் எதுவும் பேசப்படவில்லை.

இன்று இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் வேதமூர்த்தியும், மீனாட்சியும்தான். பிள்ளைகள் எது கேட்டாலும் பணத்தினால் மட்டுமின்றி உடல் உழைப்பாலும் செய்து கொடுத்துவந்தனர்.

இப்போதும் கூட மீனாட்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது ஊரில் உள்ள மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் பெரிய மகனுடன் பேசி இங்கு வந்தனர். பில் பற்றி பேசியது மட்டுமே அவர் கேட்டது. அவர் உள்ளே சென்றுவிட்டதால் நல்லகாலம் இவர்களை வைத்துக் கொள்வதைப் பற்றி பேசியது வேதமூர்த்தியின் காதில் விழுந்திருக்கவில்லை.

பில் பற்றி பேசப்பட்டது கேட்காதது போல் ஹாலுக்கு வந்தார் வேதமூர்த்தி. 

“சுந்தர்! நான் கேக்கணும்னு நினைச்சேன். டென்ஷன்ல கேக்க விட்டுப் போச்சு. மெடிக்கல் பில் எவ்வளவு ஆச்சு?” வேதமூர்த்தி கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்தனர்.

“எங்கிட்ட அமௌன்ட் பத்தி சொல்ல உங்களுக்கு மனசு ரொம்பக் கஷ்டப்படும்னு எனக்குத் தெரியும். உங்களுக்கும் எவ்வளவோ செலவு இருக்கும். இந்தக்காலத்துல ஒவ்வொண்ணும் எவ்வளவு செலவாகுது. அதனால எவ்வளவு ஆச்சுனு சொல்லுப்பா”

சுந்தருக்கு கொஞ்சம் குற்ற உணர்வு வந்ததுதான். ஆனால் தனது மனைவியை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது. மெடிக்கல் பில்லை நீட்டியதும் வேதமூர்த்தி அதற்குச் செக் எழுதிக் கொடுத்தார்.

“அடுத்த செக்கப் தேதி டாக்டர் எழுதிக் கொடுத்துருக்காரா?”

“ஆமாப்பா. இதே தேதி அடுத்த மாசம்.”

“ஆனா, நான் பிள்ளைங்க எல்லாரும் ஊருக்குப் போறோம்.” இது சுந்தரின் மனைவி. முந்திக் கொண்டாள்.

“அதனாலென்னம்மா. நீங்க போய்ட்டு வாங்க”

“அப்பா நாங்களும் வெக்கேஷனுக்கு பிள்ளைங்கள கூட்டிட்டு ஊருக்குப் போறோம்பா.”

“இந்தச் சின்ன வயசுலதான் ஊருக்கு எல்லாம் போய்ட்டு வரமுடியும் போய்ட்டு வாங்கப்பா சந்தோஷமா”

இதென்ன இவர் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டாரா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி பேசுகிறாரா? என்று எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அம்மாக்குத்தான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாங்களேப்பா. ஊர்லயே பாத்துக்கலாம். அப்புறம்….அப்பா அந்த வீடு அம்மா பேர்லதான் இருக்குல்ல? அம்மாக்கு ஒன்னுமில்லைதான்….இருந்தாலும்… உயில் எழுதிரலாமாப்பா?”

“……………………………………………………………..   எழுதிடலாம்.. நாளைக்கு ஊருக்குப் போக டிக்கெட் புக் பண்ணனுமே கிடைக்குமா”

“டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா தத்கல்ல. நாளைக்குக் காலைல ட்ரெயின்…”

“…………………………………………………………………..”
ரயிலில் வேதமூர்த்தியின் மடியில் மீனாட்சி படுத்திருக்க, வேதமூர்த்தி முந்தைய நாள் நடந்த இத்தனையையும் வேதனையுடன் நினைத்தார். ‘நல்ல காலம் மீனாட்சிக்கு நேத்து பிள்ளைங்க பேசினது எதுவுமே தெரியாது. பாவம். மருந்து சாப்பிட்டதுல நல்ல தூக்கம்” மீனாட்சியின் தலையை வருடிக் கொடுத்தார்.

“எதுக்கு இப்பவே ஊருக்குப் போகணும். இங்க எல்லாரும் இருக்காங்கல்ல…மனசு தெம்பாயிடும்” என்று சொன்னவளை, “ஊர்ல வேலை இருக்குதுனு” சொல்லி எப்படியோ சமாளிச்சுக் கூட்டி வந்தாச்சு. இதோ இப்பவும் நல்ல தூக்கம் தான். எப்படி ஒரு நிம்மதியான தூக்கம்! தெரியாமலே போகட்டும். வேதனை என்னோடயே போகட்டும். இறைவா! எங்க குழந்தைங்கள தண்டிச்சுராதப்பா! அவங்க எல்லாருக்கும் நல்ல மனசைக் கொடு.. எனக்கு முன்னாடி மீனாட்சிய கூப்பிட்டுரு. அவளால இந்த வேதனை எல்லாம் தாங்கிட்டு தனியா இருக்க முடியாது. இல்லைனா எங்க ரெண்டு பேரையும் ஒரே சமயத்துல அழைச்சிடு.” வேதமூர்த்தி கண்ணை மூடிக் கொண்டு மீனாட்சியின் கைகளுடன் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.

வேதமூர்த்தியின் மொபைல் அடிக்கவும் பார்த்தால் பெரிய பேரன். 

“ஹை! தாத்தா! எப்படி இருக்கீங்க? பாட்டி எப்படி இருக்காங்க?”

“பரவால்லடா என் பேராண்டி... செல்லம். நீ எப்படி இருக்கடா?”

“நான் நல்லாருக்கேன் தாத்தா. நீங்க ஊருக்குப் போயிட்டுருக்கீங்கனு தம்பியும் தங்கச்சியும் அங்க நடந்ததெல்லாம் சொல்லிட்டாங்க. கவலைப்படாதீங்க. என் படிப்பு ஓவர். அடுத்த வாரம் லேண்டிங்க். நான் உங்க கூடத்தான் இருக்கப் போறேன். எனக்கு வேலை கிடைச்சதும் எங்கூடத்தான் நீங்க ரெண்டு பேரும் இருக்கப் போறீங்க. ஓகே? மற்றவை நேரில்! டேக் கேர் தாத்தா…”

வேதமூர்த்திக்கு மனமும் உடலும் பரவசமாகி பல வருடங்கள் குறைந்து இளமையானது போல் துள்ளியது. "இறைவா!" என்றவரின் கண்களில் நீர் பனித்தது.. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள மீனாட்சி எழுவதற்குக் காத்திருந்தார்.

----------கீதா

புதன், 3 ஜூலை, 2019

விவேகானந்தம் - குறும்படம்

அனைவருக்கும் வணக்கம்.

எங்கள் குறும்படம் விவேகானந்தம் பற்றி எனது முந்தைய பதிவில், படத்தை யுட்யூபில் பதிவேற்றம் செய்ததும் இங்கும் தருகிறேன் என்று சொல்லியிருந்த நினைவு. ஆனால் தாமதமாகிவிட்டது. முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  பல பணிகள், பிரயாணங்கள், மகனின் மருத்துவக் கல்லூரி அட்மிஷன் மனதில் குழப்பங்கள் என்று நேரம் டைட்டாகச் செல்கிறது.

இதோ யுட்யூப் சுட்டி. மலையாள வசனங்கள் ஆங்கில சப்டைட்டிலுடன். விவேகானந்த கேந்த்ர படனம் என்ற கல்வி நிறுவனத்தை வளர்த்த ஒரு சிறந்த மனிதரைப் பற்றியது. நேரம் இருக்கும் போது பாருங்கள். பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளைப் பதியலாம்.

படத்தில் போதை மருந்து பற்றிய ஒரு உரை வரும் அதைப் பேசுபவர் தான் அம்மனிதர்  பாஸ்கர பிள்ளை சார்.  அவர் தான் இக்கல்வி நிறுவனத்தை நிறுவுபவர்.


மிக்க நன்றி

அன்புடன் துளசிதரன்