திங்கள், 28 ஜனவரி, 2019

முதல் புதினமும், முதல் பார்வையும்


காலம் செய்த கோலமடி பற்றி மீண்டும் ஒரு விமர்சனம். நான் எதிர்பார்க்காதது. நண்பர் திருப்பதி மகேஷின் தோழியான கவிப்பூரணி (இவரும் பார்வைத் திறன் அற்றவர்) என்பவரிடமிருந்து எனது மின் அஞ்சலுக்கு வந்ததோடு என்னை அழைத்தும் பேசினார். திருப்பதி மகேஷின் தோழி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை. வலைப்பூ ஏற்கனவே எழுதிவந்தவராம். ஆனால் இடையில் எழுத இயலாமல் போக மீண்டும் சமீபத்தில் தொடங்கியுள்ளதாகச் சொன்னார். எனை அழைத்த நேரத்தில், அப்போது நான் ஒரு கல்யாண ரிசப்ஷனில் இருந்தேன். மகிழ்ச்சி ஒரு புறம். அதே சமயம் என்னால் சரியாகப் பேச முடியாத சூழல்.

நானே நினைக்காத வேளையில், எதிர்பாராமல் ஒரு விமர்சனம் வரும் போது இன்ப அதிர்ச்சியில் வார்த்தைகள் திக்குமுக்காடிப் போகின்றன. வேறு ஒன்றும் மனதில் தோன்றவில்லை. எனக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் தவித்தல். வேறு வார்த்தைகள் இல்லை.

மிக்க மிக்க மனமார்ந்த மகிழ்ச்சியுடன் நன்றிகள் பல சகோதரி கவிப்பூரணி மற்றும் நண்பர் மகேஷ்! 

----துளசிதரன்  



ஓவியம் : ஓவியர் தமிழ்ச்செல்வன் 


புதினங்கள் வாசிப்பது என்றாலே அலாதி பிரியம் எனக்கு. உங்களில் பலருக்கும் அப்படித்தான் என்று நம்புகிறேன். ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் அது ஒரு அழகான தியானம் போல் ஒன்றிவிடுவேன். மனம் முழுவதும் அதிலேயே லயித்துவிடும். வேறு எந்த வேலைக்கும் போக விருப்பம் எழாது. அந்த ஒரு காரணத்திற்காகவே நாவல் படிக்கும் பழக்கத்தை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஒதுக்கியே வைத்திருந்தேன். மீண்டும் 2018 நவம்பரில்தான் துவங்கினேன். சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் மற்றும் தி.ஜானகிராமனின் மோகமுள் ஆகிய இரு நாவல்களும் அப்போது வாசித்தேன்.

2019ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று தம்பி திருப்பதி மஹேஷ் அறிமுகம் செய்த, துளசிதரன் சார் அவர்கள் எழுதிய முதல் நாவலான "காலம் செய்த கோலமடி" என்ற புதினத்தை வாசிக்க முடிவு செய்து தொடங்கினேன்.

என்னை மிகவும் கவர்ந்தது அந்த தலைப்பு.  பெரும்பாலும் எல்லோரது வாழ்விலும் ஏதோ சில தருணங்கள் நிகழ்ந்திருந்தால் அல்லது நிகழாது இருந்திருந்தால் வாழ்வே வேறு திசையில் பயணித்திருக்கும் என்று பல நேரங்களில் நாம் எண்ணியிருப்போம். எல்லாம் காலம் செய்த கோலத்தால் இப்படி ஆகிவிட்டது என்று மிகவும் இயல்பாகச் சொல்லுவோம். அதனாலேயே இந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சரி, யாருடைய வாழ்விலோ நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவம் அவர் வாழ்வை மாற்றுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கும் என்று எண்ணித் தொடங்கினேன். ஆனால் படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அது மூன்று பேரது வாழ்வை மாற்றப்போகிறது என்றது வாசகர்களுக்கு சுவாரசியம் கூட்டுவதாக இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

கதையின் களம் மிகவும் நுண்ணீயமாகவும் சிக்கலாகவும் இருந்தாலும் அ்தை எடுத்துக் கொண்டு மிகவும் துணிச்சலோடு கையாண்டுள்ள துளசிதரன் சாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். முதல் நாவலையே இவ்வளவு நல்ல செவ்வியல் தரத்தோடு நல்க வேண்டும் என்ற அவரது எண்ணம் ஈடேறியது என்றே நான் உணர்கிறேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில், இல்லை இல்லை, கேரளத்தில் பணியாற்றியதால் மலையாள மொழி, ஆக மூன்று மொழிகளில் புலமை பெற்றிருப்பதாலும் குறும்படங்கள் இயக்குபவராக இருப்பதாலும் அவரது எழுத்து நடை மிகவும் தரமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன். முதல் புதினத்திலேயே ஒரு தேர்ந்த எழுத்தாளரின் முத்திரையைப் பதித்துவிட்டார்.  

1983 தொடங்கி 2017 ஆக மொத்தம் 33 ஆண்டுகள் இந்த புதினத்தைப் படைக்க ஆசிரியர் காத்திருந்தார் என்பது அக்கதை மீதும் கதாப்பாத்திரங்களின் மனப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மீதும் எழுத்தின் மீதும் அவர் கொண்டிருக்கும் ஆழமான காதலை வெளிப்படுத்துகிறது. தான் ஒரு ஆசிரியர் என்பதால் கதையில் கல்வி குறித்த தனது ஆழமான கருத்துக்களைக் கூறுவதோடு சில இடங்களில்  மனோதத்துவமும் கூட பேசி இருக்கிறார்.  அளவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு முக்கியமாக மூன்று கதாப்பாத்திரங்களைச் சுற்றிதான் கதை நகர்கிறது. அதிலும் அந்த மூவருமே அவர்களது கதையை நேருக்கு நேர் அமர்ந்து சொல்லும் முப்பரிமாண பாணியில் அமைந்திருப்பதே இப்புதினத்தின் புதுமை. துரைராஜ், லதா, கோபால் ஆகிய மூவருடனும் உரையாடிய உணர்வை ஏற்படுத்துகிறார் கதாசிரியர்.

புகை பிடித்தல், எண்பதுகளில் அநேகமாக, ஃபேஸ்புக் வாட்சாப் போன்ற சர்வசாதாரணமான விசயமாக, அந்த காலங்களில இருந்திருக்குமோ என்னவோ என்று எனக்கு எண்ணத் தோன்றியது. அக்காலத்து பெற்றோர் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் தவறு செய்தாலும் எவ்வளவு நாசுக்காக கையாளுகிறார்கள் என்பது  கொபாலின் பெற்றோர் மூலம்  அறியலாம். கோபாலுடைய கதாப்பாத்திரம் மிகவும் எதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே மனிதனுக்குள் மனிதத் தன்மையும் அசுரத்தனமும் மாறி மாறி வேலை செய்கிறது என்பது மிகவும் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ‘உன் நண்பன் யாரெனக் கூறு, நீ யார்  என்று நான் சொல்கிறேன்’ என்று ஒரு கூற்று உள்ளது. அது இந்த கோபால் விசயத்தில் மட்டுமல்ல நம் எல்லோரது வாழ்விலும் கூட மிகவும் நெருக்கமாக பார்த்தால் நம் கூட இருப்பவர்கள் நம்மை எவ்வளவு தூரம் நாம் அறிந்தும் அறியாமலும் நம்மைக் கையாளுகிறார்கள் என்பதை அறியலாம். கோபாலின் நண்பன் போசு தன்னை முழுமையாக ஆகிறமித்ததாக பல இடங்களில் சொல்கிறார். போசுக்கு பெண்கள் சைக்காலஜி மிகவும் பரிட்சயமாகவே இருக்கிறது.

லதா தனது கடந்த காலத்து வாழ்க்கைக்கும் தற்கால வாழ்க்கைக்கும் அடிக்கடி பயணித்து துரைராஜுவுக்கு நன்றியோடு இருக்க தனக்குத்தானே அந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து நிகழ்கால வாழ்வை காத்துக்கொள்ள அதை ஒரு வேலியாக்க முயற்சித்து வெற்றி பெற  முடியாமல் போனதும் துரைராஜ்க்கு லதாவின் பூர்வீகம் தெரிந்ததும்  கதையின் த்ரில்லான கட்டங்கள்.   மிகவும் அன்பான மற்றும் நேர்மறையான கதாப்பாத்திரமான  ஜெயலக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால், துரைராஜ் ஜெயலக்ஷ்மியின் கெமிஸ்ட்ரி வாசகர்களுக்கும் கொஞ்சம் ரசனையூட்டுவதாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அதோடு, அவர்களது திருமணம் ஏதோ ஒரு அவசரத் திருமணமாக, அதாவது இவர்களுக்குள் காதல் உறுதியாக இருப்பதாகக் காட்டாமலேயே எப்படி இந்தத் திருமணம் நடக்கச் சாத்தியமானது என்று கொஞ்சம் யோசிக்கத்தான் தோன்றியது.

லதா கோபாலின் முதல் சந்திப்பிற்குப் பி்றகும் அடுத்தடுத்த சந்திப்புகளுக்குப் பிறகும்  லதாவின் மனப்போக்கை மிகவும் எதார்த்தமாகவும் ஒரு பெண்ணின் கோணத்திலிருந்தும் மிக இயல்பாக எந்த விதமான சாயமும் தீட்டாமல்  காட்டி  ிருக்கிறார் ஆசிரியர். இறுதியில் இவர்கள் ஒன்றிணைவதாக எடுத்த முடிவு  மகிழ்வான முடிவானாலும் எத்தனையோ திரைப்படங்கள் காட்ட அஞ்சிய முடிவை மிகவும் தைரியமாக லதாவும் கோபாலும் எடுத்துள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது.

கதை 2016ஆம் ஆண்டிற்கு நகர்ந்த பின் ஒரு விதமான வேகம் இல்லாமல் முதல் பகுதியைப் போலவே ஆசுவாசமாக கதாப்பாத்திறங்களைக் குறித்தும் அவர்களின் வாழ்வியல் மற்றும் மன மாற்றங்களை கொஞ்சம் ஆழமாக அலசி  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புதினங்கள் எவ்வளவு நீளமாக இருந்தாலும் படிப்பதற்கு ஆர்வம் மிகுந்து கொண்டேதானே இருக்கும்! அதனாலேயே எனக்கு  அப்படி தோன்றியது.  
 
ஆக மொத்தம் துளசிதரன் சார் மென்மேலும் சிறந்த பல படைப்புகளை எதிர்காலத்தில் வழங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த கதையை வழங்கிய சாருக்கும் புத்தகமாகக் கொண்டுவர படைப்பாளருக்கு உதவியாக இருந்த  அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும். ஒரு நல்ல புதினம் வாசித்த திருப்தியில் எனது பார்வையை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு புத்தகத்தை வாசித்து அதற்கு என்னுடைய அபிப்பிராயத்தை எல்லாம் சொல்ல வருமா என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அதை து்ளசிதரன் சாருடைய புதினத்தை வைத்து டெஸ்ட் செய்துவிட்டிருக்கிறேன். இதுதான் ஒரு புத்தகம் பற்றிய எனது முதல் பார்வை. எவ்வளவு நல்ல ஆசிரியராக இருந்தாலும் நம்மள மாதிரி சின்னவங்க கொஞ்சம் அபிப்பிராயம் சொல்றதா சொல்லி அவங்கள ஒரு வழி படுத்திடுவோமில்ல... ஏதோ நம்மளால முடிஞ்சது:)) அவ்வ்வ்வ்வ்  ஏதேனும் குற்றங்களோ குறைகளோ இருப்பின் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுருங்க..... 

--------கவிப்பூரணி