வியாழன், 22 ஜனவரி, 2015

தங்கத்திலே ஒரு குறை இருந்தால் அது தரத்தினில் குறைவதுண்டோ....அது போல்தான் அங்கத்தில் உள்ள குறையும்..

        

          பதிவர் சகோதரி ஏஞ்சலின், எங்கள்,  பிரிவு தரும் வேதனை...பிரிந்து போகா வேதனை...பிறர் அறியா வேதனை இடுகைக்குத் தந்த பின்னூட்டத்தில், உடல் ஊனம் ஒரு பிரச்சினையே அல்ல என்பதை உலகிற்குத் தன் எழுத்து மற்றும் பேச்சாற்றலால் உணர்த்திக் கொண்டிருக்கும் நிக் எனும் நிக்கோலாஸ் ஜேம்ஸ் வூஜிசிக்கைப் பற்றிக்  குறிப்பிட்டிருந்தார். 

காணொளி-கூகுள்

பாலா இயக்கிய “நான் கடவுள்” எனும் படத்தில், உடல் ஊனமுற்றவர்களை பிச்சைக்காரர்களாக்கி பணம் சம்பாதிக்கும் கும்பலின் இம்சையைத் தாங்க முடியாமல், கைகளும், கால்களும் இல்லாத எப்போதாவது மட்டும் பேசும் ஒரு மனிதரிடம் சிலர் சென்று முறையிடும் ஒரு காட்சி வருகின்றது.  கை, கால்கள் இல்லாத இடுப்புக்கு மேலே உள்ள உடல் பாகம் மட்டும் உள்ள ஒருவரை ஆடை அணிவித்து, தலையில் முண்டாசுக் கட்டியபின் ஒருவர் ஒரு ஷெட்டில் கொண்டுவந்து வைப்பார். அதிசயப் பிறவியானதால், அவரை எல்லோரும் சாமியாகக் கருதி, காணிக்கையிட்டுத் தங்கள்  குறைகளைச் சொல்லும் காட்சிகளும் அப்படத்தில் உண்டு. அது போன்ற உருவமைப்புள்ள மனிதர்தான் நிக்கோலா ஜேம்ஸ் வூஜிசிக் என்பவர்.



      1982 டிசம்பர் 4 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மருத்துவமனையில் கை கால்கள் இல்லாத உடலுடன் பிறந்த அவரைக் கண்ட அவரது பெற்றோர்களான பாஸ்டர் போரிஸ் வூஜிசிக்கும், நர்ஸான லுஸ்காவும் செய்வதறியாது திகைத்தனர். கை,கால்கள் இல்லாத அவர்களது குழந்தைக்கு கையும், காலுமாக அவர்கள் மாறி அவனை வளர்க்க முடிவு செய்தனர்.  தெற்றா அமீலியா எனும் ஜெனிட்டிக் குறைபாடு, உலகில் மிகவும் அரிதாக மிகச் சிலருக்கு மட்டும் வருகின்ற ஒன்று.  அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் மட்டும்தான் இப்படிக் கை மற்றும் கால்கள் இன்றிப் பிறக்குமாம். அப்படிப் பிறக்கும் குழந்தைகள் அதிக நாட்கள் உயிர் வாழ்வதில்லையாம்.  ஆனால், நிக்கின் பெற்றோர்களது அன்பும், பாசமும் நிக்கை ஆரோக்கியத்துடன் வளரச் செய்தது. பள்ளிப் பருவத்தில் ஔ முறை தன் தந்தையிடம் ஒரு ஜோடி ஷூ வாங்கிவரச் செய்து இரவெல்லாம் மனமுருகிப் பிரார்த்தனை செய்த நிக், ஹேசு தனக்குக் கை கால்களை வளரச் செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து, இறைவனை வெறுக்க ஆரம்பித்தாராம்.  இடையில் ஒரு முறை தற்கொலை செய்ய முடிவெடுத்துக் குளிக்கும் தொட்டியில் விழுந்தும் இருக்கிறார்.  ஆனால், தன் மரணத்திற்குப் பின் தனக்காகக் கண்ணீர் சிந்தப் போகும் தன் பெற்றோர்களை நினைத்துத் தற்கொலை முயற்சியிலிருந்து பின்வாங்கியிருக்கின்றார். அதை அறிந்த நிக்கின் தாய், அன்று செய்தித் தாளில் வந்திருந்த, உடல் ஊனமுற்ற ஒருவர் தன்னம்பிக்கையுடன் வாழும் செய்தியை வாசித்துச் சொல்லி அவரதுப்படத்தையும் காண்பித்திருக்கின்றார்.  அன் நிகழ்ச்சி நிக்கிற்கு வாழ வேண்டும் என்ற மன உறுதியைக் கொடுத்ததாம்.
 

பள்ளியில் நல்ல பேச்சாளராகத் திகழ்ந்த அவர், கல்லூரியில் வணிகவியலில் பட்டமும் பெற்றார். அவருக்கே உரித்தான விதத்தில், நீச்சல் மற்றும் சர்ஃபிங்கில் தேர்ச்ஹ்கி பெற்று,2005 ஆம் ஆண்டு “யங்க் ஆஸ்திரேலியம் ஆஃப் தெ இயர்”  ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருக்கிறார். இப்போது நிக், தன் மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியுடன் அமெரிக்கா கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருகின்றார்.  லாஸ்ட் ஷிப், பட்டர்ஃப்ளை சர்க்கஸ் எனும் திரைப்படங்களை உருவாக்கி அதில் நடித்திருக்கிறார் நிக். அன்ஸ்டாப்பபிள், லைஃப் வித்தவுட் லைம்ப்ஸ், ஸ்டாண்ட் ஸ்ட்ராங்க் எனும் புத்தகங்களையும், நிக் எழுதியிருக்கிறார். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தன் நம்பிக்கையின் அவசியம் பற்றி உரையாற்றியும், உலகெங்கும் ஏசு தேவனின் அன்பையும், கருணையயும் பற்றி பிரச்சாரங்கள் நடத்தி, உடல் ஊனம், மனதை ஊனப்படுத்த விடாமல் தடுத்து எப்படி வாழ்வை இன்பமயமாக்கலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.

2007ல் நிக்கைப் போல் ஒரு குழந்தை கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் டெட்ரா அமிலியா எனும் ஜெனிட்டிக் குறைபாடுடன் பிறந்தது.  அக்குழந்தையின் பெற்றோர்கள், தங்களது வறுமை மற்றும் அக்குழந்தையை வளர்க்க இயல்லாமை காரணமாகவோ என்னவோ, அக்குழந்தையை ஒரு அனாதை விடுதியில் விட்டிருக்கிறார்கள்.  குழந்தை மருத்துவரான சிஸ்டர் டாக்டர் மேரி லிட்டி அக்குழந்தையின் தாயாக மாறி, அக்குழந்தையை பத்தனம்திட்டை குன்னம்தானம் தெய்வபரிபாலன பவனுக்குக் கொண்டு சென்று, அங்கு வளரும் நூற்றுக் கணக்கான அனாதைக் குழந்தைகளுடன், அக் குழந்தைக்கு அபிஷேக் என்று பெயரிட்டு,அவனை அங்கு வளரச் செய்திருக்கிறார்.  அபிஷேக்கிற்கு 11/2 வயதான போது அவனை வேலூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, 6 மாத காலம் பிசியோதெரப்பி செய்து அவனை ஒரு “நிக்காக” மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  7 வயதான அபிஷேக், இப்போது தன் கால் விரல்களின் இடையே பேனா மற்றும் பென்சிலைப் பிடித்து விரைவாகவும் தெளிவாகவும் எழுத முடிகிறது.  இயந்திர நாற்காலியில் அமர்ந்து அதைச் சுலபமாக இயக்கி ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு அபிஷெக்கால் போகவும் முடிகின்றது.  நிக்கின் வீடியோக்களைப் பார்க்கும் அபிஷேக், தானும் வளர்ந்து பெரியவனாகி ஒரு “நிக்” ஆவேன் எனும் போது மதர் மேரி லிட்டிக்கும், அந்த அனாதை இல்லத்திலிருக்கும் கன்னியா ஸ்த்ரீகள் மற்றும் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை, இதை எழுதும் நான் மட்டும் அல்ல, வாசிக்கும் நீங்களும் உணர்கின்றீர்கள் இல்லையா? – “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”


மதம் மற்றும் இறைவனின் பெயரால் வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்துக் கொண்டு ஒரு பாவமும் அறியாக் குழந்தைகள் என்றும் பாராமல், அவர்களைக் கொன்று குவிக்கும் கல்நெஞ்சக்காரர்களின் நடுவே, மதர் மேரி லிட்டி போன்றவர்களைப் பற்றிக் கேட்கும் போது, பாலைவன பயணத்தின் போது எப்போதாவது தென்படும் பாலைவனச் சோலைக்குச் சென்று இளைப்பாகும் சுகம் மனதிற்கு ஏற்படுகின்றது. நிக்கிற்கும், அபிஷேக்கிற்கும், மதர் மேரி லிட்டிக்கும் ஆயுளும், ஆரோக்கியமும் கூடவே எல்லாம் நன்மைகளும் நிகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

காணொளிகள் :  கூகுள்  : நன்றி

பின் குறிப்பு: 

 

விருப்பமுள்ளோர் உங்கள் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு.  இதற்கான விவரங்களை மேலும் அறிய சொடுக்குங்கள் இந்தச் சுட்டியை...


வாழ்த்துக்கள்!  






செவ்வாய், 20 ஜனவரி, 2015

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – சிக்மண்ட் ஃப்ராய்ட்

இணையத்திலிருந்து

         தினமும் உடலுக்குப் பயிற்சி அளிப்பது வாடிக்கைதான் என்றாலும், மனதிற்கு அளிப்பது இப்போதெல்லாம் வலைத்தளங்களின் மூலமும், எப்போதாவது இணையத்தில் உள்ள புத்தங்களின் மூலமும்தான். தினமும் மனதிற்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த காலம் உண்டு.  பல வருடங்களுக்கு முன். அதன் பின் (திருமணத்திற்குப் பின்) வாழ்க்கைச் சூழல் மாறியதால் வாசிப்பு குறைந்து, இல்லை என்றாகிப் போனது. இப்போது, நண்பருடன் வலைத்தளம் ஆரம்பித்த பிறகுதான் மீண்டும் எனது வாசிப்பு மெதுவாகத் தொடங்கியுள்ளது.  அதுவும் இணையத்தில்தான்.  தினமும் மனதிற்கும் பயிற்சி கொடுக்க ஆசைதான். ஆனால், இயலவில்லை.  இப்போது சென்னையில் புத்தகக் கண்காட்சி! இதற்கு முன், வருடந்தோறும் நடந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்றதுண்டு குடும்பத்துடன். பல புத்தகங்கள் வீட்டிற்கு அணிவகுக்கும், ஆங்கிலத்தில் வேதங்களும், உபனிஷத்துகளும், தத்துவமும் பேசும் புத்தகங்கள், தொழில்நுட்பப் புத்தகங்கள் என்று. எனக்கும் அவற்றிற்கும் தூரம் அதிகம், நேர்துருவங்கள். (எதிர் எதிர் துருவங்கள் என்றால் கவரப்படும்.  நேர் துருவங்கள்தான் ரிப்பெல் செய்யும்!)

      இம்முறையும் செல்ல ஆசை இருந்தாலும், கொஞ்சம் யோசனையாகவே இருந்தது.  வேறு ஒன்றும் இல்லை, சென்றால் நிச்சயமாகக் கைப்பையின் வாய் பிளக்கும், என் உயரத்தின் கால் பகுதி அளவாவது தொடும்வரை புத்தகங்கள் அடுக்கப்படும் ஆதலால், அதற்கானச் சூழல் இல்லாததால் அந்த யோசனை.  கொஞ்சம் வருத்தம்தான். கவிஞர் முத்துநிலவன் ஐயா வருவதாக அறிவித்ததால், ஆவி, குடந்தையார், நான், ராயச் செல்லப்பா சார், வாத்தியார் எல்லோரும் சென்றோம்.  கவிஞரை நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. துளசியும் அவருடன் தொலபேசினார். சகோதரி தென்றல் கீதா அவர்களையும் பார்த்ததும், ஆச்சரியமும், சந்தோஷமும். சகோதரி எங்களுக்குத் தனதுப் புத்தகமாகிய “ஒரு கோப்பை மனிதம்” தனது கையொப்புடன் அன்பளிப்பாகக் கொடுத்தார். நன்றி சகோதரி!  மிகவும் மகிழ்ச்சி! வாசிக்கின்றோம். சகோதரி க்ரேஸ் அவர்களின் தந்தையும் வந்திருந்தார். தளிர் சுரேஷும் வந்திருந்தார்.  சென்னையில் இருந்தாலும், இதுதான் அவரை முதல் தடவையாக நேரில் சந்தித்தேன். 



எனக்குத் தெரிந்த அளவில் - வேட்டி சட்டையில் இருப்பவர் நண்பர் தளிர் சுரேஷ், அவர் கையைப் பிடித்திருப்பவர் வாத்தியார் பாலகணேஷ், இருவரின் நடுவில் கண்ணாடி அணிந்திருப்பவர் நம் கவிஞர் முத்து நிலவன் ஐயா, வாத்தியாருக்கு அடுத்து கண்ணாடி அணிந்து இருப்பவர், பதிவர், குறும்பட இயக்குனர் குடந்தை ஆர்.வி. சரவணன், சிவப்பு டீஷர்டில் இருப்பவர், பதிவர், தற்போது ஒரு குறும்படம் இயக்கியிருக்கும் கோவை ஆவி, அடுத்து சகோதரி தென்றல் கீதா.  எல்லோரும் நண்பர்களே.

    மீனாட்சிப் பதிப்பகத்தில், சுஜாதா அவர்களின் புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைப்பது அறிந்து குடந்தையார் சில புத்தகங்கள் வாங்கினார். 7 மணி ஆகிவிட்டதால் வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டேன். பின்னர் இரு முறை செல்ல நேர்ந்தது. அரங்க அமைப்பு நன்றாக இருந்தது. ஹப்பா! எத்தனைப் பதிப்பகங்கள்!  எவ்வளவுப் புத்தகங்கள்! பிரமிப்பாக இருந்தது. எழுதுபவர்ககள் அதிகமாகியுள்ளனரோ?! குழந்தைகளுடன் பெற்றோர் வந்திருந்தனர். வாசிப்புக் கூடியுள்ளது என்பதை அறிய முடிந்தது. என்றாலும், பெரும்பாலான குழந்தைகள் ஆங்கிலப் புத்தகங்களையே விரும்பி வாங்கினர்.  பெற்றோரும் அவர்களை ஆங்கிலப் புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களையே நாடிச் செல்ல வைத்தனர்.  அதிலும் மிகவும் வருந்தத்தக்க ஓரு நிகழ்வைக் காண நேர்ந்தது. 

ஒரு சிறு குழந்தை தமிழ் சித்திரக் கதைப் புத்தகத்தைக் கண்டு அதைக் கேட்க, உடனே அந்தக் குழந்தையின் தாய், “இந்தப் புக்லாம் வேண்டாம். இது தமிழ். உனக்கு இங்கிலிஷ்ல அதே புக் வாங்கித் தர்றேன்.  உனக்கு எத்தனை தடவை சொல்றது, தமிழ்ல பேசாத, இங்கிலிஷ்ல பேசுனு” என்று ஆங்கிலப் புத்தகங்கள், அமர்சித்திரக் கதைகள் விற்கும் ஸ்டாலிற்கு அழைத்துச் சென்றார். எனக்கு இதைப் பார்த்ததும், அந்தத் தாயிடம் நேரே சென்று குழந்தை வளர்ப்பு பற்றிச் சொல்லிவிடலாமா என்று தோன்றியது. ஆனால், நாகரீகம் கருதித் தவிர்த்தேன். தாய் மொழி கற்றால் பிற மொழிகள் கற்க முடியாது என்பது தவறான எண்ணம். தாய் மொழியில் அறிவு இருந்தால் பிற மொழிகளைக் கற்பது எளிது என்பது எங்கள் தாழ்மையான கருத்து. அச்சமயம், சீனு அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல், எனக்கு, நண்பர் கார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன்) அவர்களின் மகன் ரக்ஷித் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ரக்ஷித், அப்பா சரவணன் வலைப்பூவில் எழுதுவதைப் பார்த்துத் தானும் கதைகள் எழுதுகின்றார்.  அதைப் பற்றி ரக்ஷித் என்னிடமும், துளசியிடமும், ஆவியின் குறும்படப்பிடிப்பின் இடைவெளியில் நிறைய பேசினார். (அவர் அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம்) பெற்றோர் எவ்வழி, குழந்தையும் அவ்வழி.

      பல நடுத்தர வயதுப் பெண்கள், தங்கள் கணவர்களின் நாவிற்கு சுவை சேர்க்கவும், இளம் வயது மகன், மகளைத் திருப்ப்திப்படுத்தவும், தங்கள் ஆரோக்கியம் என்று சொல்லியோ தெரியவில்லை, கணவரின் பர்சின் கனத்தைக் குறைக்க வேண்டி, சமையல் புத்தகங்களைத் தேடிச் சென்றனர்.  குறிப்பாக, இது நாள்வரை இல்லாத விதத்தில், தற்போது அதிகமாகப் பேசப்படும், பல மருத்துவர்கள் பரிந்துரைத்து சந்தையில் புகுந்து தங்களுக்கென்று தனி இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு, ஜுர வேகத்தில், வியக்க வைக்கும் விலையில் விற்கப்படும், சிறுதானியங்களை உபயோகித்துச் செய்யப்படும் பதார்த்தங்களின் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களுக்கு ஏகக் கிராக்கி.  சிறுதானியங்களின் மவுசு கூடியுள்ளதைக் காண முடிந்தது.

      "நித்தி"க்கு (நித்தியானந்தா) எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும், அவரும் அங்கு ஒரு ஸ்டாலில் வழக்கமானச் சிரிப்பில் சிரித்துக் கொண்டிருந்தார்.  மக்களும் அவரது புத்தகங்களை வாங்கக் குழுமினர். ஆச்சரியம்தான். எத்தனை எத்தனை சாமியார்கள் எப்படிப்பட்டவர்களாகச் சமூகத்தில் வளைய வந்தாலும், நம் மக்களின் மதி மயக்கம் தெளிவதில்லை என்பது நிரூபணம் ஆவதைக் காண முடிந்தது. நித்தி சிரித்துக் கொண்டிருப்பதும் இவர்களால்தானோ? அங்கு வாங்க வந்தவர்களுக்கு, அவரது பெண் சீடர்கள் மிகவும் பய பக்தியுடனும், கர்ம சிரத்தையுடனும் புத்தகங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர். ஒரு வித விளம்பர யுக்திதான். இப்போது, நித்தியின் சிரிப்பு எனக்கு வேறு விதமாகத் தோன்றியது. வெற்றிச் சிரிப்பு?!?! இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை என்னை யாரும் நெருங்க முடியாது என்று?!

இணையத்திலிருந்து

      சர்ச்சை தொடங்கியதாலோ என்னமோ, “மாதொருபாகன்” என்று குரல்கள் அதிகமாகக் கேட்டது. “மாதொருபாகன் இங்கு” என்று டிஸ்கவரி பாலஸ் உட்பட பலர் அட்டை தொங்கவிட்டிருந்தார்கள். நேற்று, 18 ஆம் தேதி காலச்சுவடு பதிப்பகம் ஏற்பாடு செய்திருக்கும் அரங்கில், சாரு நிவேதிதா வாசகர்களைச் சந்தித்து உரையாட வந்திருந்தார். மனுஷ்யப்புத்திரனும் உடன் இருந்தார். சாரு அவர்கள் இருக்கும் இடத்தில் சர்ச்சைகள் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். நேற்றும் அதற்குக் குறை வைக்கவில்லை. நான் நிகழ்ச்சி ஆரம்பித்து சற்று தாமதித்துச் சென்றதால் அதற்கு முன் சாரு என்ன பேசினார் என்று தெரியவில்லை, ஆனால், வயதானவர் ஒருவர் திடீரென்று சாருவைப் பார்த்து “அதெப்படி நீ அதக் குப்பைனு சொல்லுவ (மாதொருபாகனை), அந்த எழுத்தாளர விமர்சிப்ப?  நீ எழுதறது மட்டும் ரொம்ப யோக்கியமா” என்றெல்லாம் வசை பாட, சாருவும் எழுந்து அந்த நபரைப் பார்த்து வசை பாட, அங்கு ஒரு தர்மசங்கடமான சூழல், முக்கியமாகப் பார்வையாளர்களுக்கு, ஏற்பட்டது.  எழுத்தாளர்கள், படித்தவர்களின் அரங்கம் போல் இல்லாமல், தெருவோரக் குழாயடிச் சண்டைக் களம் போல் மாறியது.
 
எனக்கு, இதுதான் முதல் முறை, இது போன்ற எழுத்தாளர்கள், வாசகர்களுடன் உரையாடும் நிகழ்வைக் காணுதல். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். நெடு நேரம் தொடர்ந்தது அந்த தவிர்க்கப்பட வேண்டிய, நாகரீகமற்ற சர்ச்சை.  காவல் துறையினர் வந்து சூழலை அமைதியாக்கினர்.  சாரு, பெருமாள் முருகனின் நாவலையும், தஸ்லிமா நஸ்ரினின் “லஜ்ஜாவை”யும் குப்பை என்று சொல்லி அதைப் பொது நிகழ்வில் அப்படிக் குற்றமாக விமர்சிப்பதில் தவறு இல்லை என்றும் சொல்வதைக் கேட்க நேர்ந்தது. “பெருமாளுக்குப் புக்கர் அவார்ட் கூட கிடைத்துவிடும்” என்றும் பேசினார். ஒரு எழுத்தை, எழுத்தாளரை விமர்சிப்பதில் தவறு இல்லை.  ஆனால், இப்படியும் கூட ஒரு எழுத்தாளர் தன் சக எழுத்தாளரை, பொது இடத்தில் விமர்சிப்பார்களா? என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் நீங்கவில்லை. சுஜாதாவையும் சொல்லத்தான் செய்தார். “சுஜாதா, “எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும்” அப்படின்ற என் நாவல “கங்கையில், மிதக்கும் மஞ்சள் நிறமா மிதக்குமே” என்று மலம் என்று சொல்வது கூட ஒரு கெட்ட வார்த்தையாக அவருக்குத் தோன்றியது ஏன்னா அவர் கெட்ட வார்த்தை யூஸ் பண்ண மாட்டாரு..” அதுக்காக நான் அவர் வீடு தேடிப் போய் அடித்தேனா?”. எனக்கு விமர்சிப்பதில் கூட உரிமை இல்லையா” என்றெலாம் கேட்டார். பின்னர் வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விரைவில் முடித்துக் கொண்டார் தனது சந்திப்பை.  இன்று, 19 ஆம் தேதி எழுத்தாளர் ஞானி அவர்கள் வாசகர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. என்னால் செல்ல இயலவில்லை.

இணையத்திலிருந்து

“அறிவிற்கு உணவில்லாத போது வயிற்றிற்கும் சிறிது ஈயப்படும்” என்பதற்கு மாறாகப், புத்தகக் கண்காட்சி அரங்கின் வெளியில், ஐஸ்க்ரீம், ஜூஸ், ஸ்னாக்ஸ் கடைகள், சாப்பிட வாங்க உணவகம் என்று வாய்க்கும், வயிற்றிற்கும் போரடிக்காத உணவு வகைகள். ஊட்டி மசாலாப் பொருட்கள், பொடிகள், சில பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என்று ஒரு கடை.  அதற்கும், மற்ற சாப்பாடுக் கடைகளுக்கும், அரங்கத்தின் உள்ளே இருந்த அளவிற்கு நிகராகக் கூட்டம் மொய்த்தது. பெரும்பாலோர் கைகளில் பெரிய டெல்லி அப்பளத்தைக் காண முடிந்தது. மிகப் பெரிய மைதானம் என்பதால் இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த நல்ல வசதி, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

"போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களாஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் இங்கர்சால். எளிதாகச் சொல்லிவிட்டார். சொல்லுவது போல் புதுவாழ்வைத் தேடுகின்றேன் தான் ஆனால், புதிய புத்தகம் மாதொருபங்கனை வாங்கும் சூழல் இல்லை. அந்த வருத்தமும் நம் நண்பர் மது/கஸ்தூரிரங்கன் அவர்களால் தீர்ந்து போனது.  அவரது வலைத்தளத்தில் இந்தப் புத்தகத்தைப் பகிர்ந்திருந்தார்.  நன்றி தோழரே!.

“ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசருக்கு வழிகாட்டியாக முடியவில்லை. எப்போது முடியுமோ தெரியவில்லை!  என்றாலும்,

"ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்…வாசகன் அதனை முடித்து வைக்கிறான்." ஆம்! முடித்து வைக்க முயற்சிக்கின்றேன்/ப்போம். இடையில் புத்தககப் பதிப்பகங்களுக்கோ, கடைகளுக்கோ சென்று.  இல்லையேல், அடுத்தப் புத்தகக் கண்காட்சியிலாவது! 

-கீதா

வெள்ளி, 16 ஜனவரி, 2015

கண்கள் இருந்தும் குருடர்களாய் வாழ்வோர் காணாததைக், காணும் கண் பார்வை இழந்தவர்கள்


      “எவ்வளவு அழகாக நீங்கள் எனக்காக எல்லாவற்றையும் பார்த்தீர்கள்?.  இதற்கு உரிய விதத்தில் நன்றி சொல்ல என்னால் ஒரு போதும் இயலாது”. 

      ஒருவருக்காக வேறொருவர் பார்ப்பதா...!? குழப்பமாக இருக்கிறதா? முதலாண்டு உயர் நிலைப் பள்ளியில் கடந்த வருடம் வரை கற்பிக்கப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தில் டேவிட் லாம்போனின் “LIFTING THE VEIL”, எனும் அருமையான கதையில் வரும் ஒரு கண்பார்வை இல்லாதவர், தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இடத்தில் (!?), சுற்றும் நிகழும் காட்சிகளை அவருக்கு விளக்கிச் சொன்ன ஒரு நண்பரிடம், இருவரும் பிரியும் நேரத்தில் சொன்ன வார்த்தைகள் தான் இது.

நம் கதாநாயகன் கிழக்காசிய நாடுகளில் உள்ள ஒரு நிறுவனத்தில் பம்பரமாகச் சுற்றி வேலை செய்பவர். ஒரு மாலை நேரத்தில் அவரது நிறுவன உரிமையாளர், மறுநாள், அவர் நிறுவனத்திற்கு மிகவும் உதவியாய் இருக்கும் ஒரு சீனாக்காரருடன், தாய்லாந்தில் ஒரு நாள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று சொன்னதும், வேறு வழியின்றிச் செல்ல ஒத்துக் கொண்டார். அவர் சுற்றுலாவுக்கு மகிழ்ச்சியுடன் போக முடியாததற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.  ஒன்று, அவர் செய்ய வேண்டிய வேலைகளை, அவர்தான் சுற்றுலா முடித்து வந்துச் செய்ய வேண்டும்.  இரண்டாவதாக, அவர் சீனா நண்பருடன் சுற்றுலா போகும் இடம், இது போல் பல முறை, பலருடன் நிறுவனத்திற்காகப் போன இடம். மனமில்லாமல், மறுநாள், சிரித்தபடி சீனா நண்பருடன் தாய்லாந்தில் பல இடங்களிலும் சுற்றினார்.

அது ஒரு பேக்கேஜ் டூர் ஆனதால், பிற்பகலில் அக்குழுவில் உள்ளோர் ஒரு பேருந்தில் ஏறி ஒரு விடுதிக்குப் புறப்பட்டனர்.  சீனா நண்பருக்கு வேறு சில நண்பர்கள் கிடைத்ததால், அவர் அவர்களுடன் அமர, தனியே அமர்ந்த நாயகன், முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவருடன், பேசத் தொடங்கினார். இடையே எப்போதோ அவரது கையிலிருந்த, கண்பார்வை இழந்தவர்கள் வைத்திருக்கும் ஊன்றுகோலைப் பார்த்த பின் தான் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் கண்பார்வை இழந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டார். 

படத்தில் உள்ளவருக்கும் கட்டுரையில் சொல்லப்படும் மனிதருக்கும் சம்பந்தம் இல்லை. அர்த்தம் மட்டுமே.

பெல்ஜியத்தைச் சேர்ந்த 60 வயதான அவருக்கு, அவரது 17 ஆம் வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் கண்பார்வை இழக்க நேரிட்டதாம். இருப்பினும் அவர், அவரது மற்ற நான்கு புலன்களின் உதவியுடன் உலகெங்கும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதுண்டாம். அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டே விடுதியை வந்தடைந்தனர். இறங்கும் போது அவர் நம் நாயகனிடம், தன்னுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றும், தனக்காகச் சுற்றிலும் உள்ளவற்றை விளக்கிக் கூறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதும், நம் நாயகனும் சம்மதித்து விட்டார்.  அவருடன் வந்த சீனா நண்பர் அவருக்குக் கிடைத்த புதிய நண்பர்களுடன் அமர்ந்ததால், இவ்விருவரும் அங்கிருந்த ஒரு மேடைக்கு அருகே அமர்ந்தனர்.  உணவுகள் பரிமாறப்பட்டன. கண்பார்வை இழந்தவர், உணவருந்திக் கொண்டே சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களைப் பற்றிக் கேட்க, நாயகன் ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்துச் சொல்லத் தொடங்கினார். 

அப்போதுதான் அவரும் கவனிக்கிறார், உலகின் பல நாட்டவர்கள், பல வயதினர்கள், பலவிதமான உடையணிந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பதை. இடையே மேடையிலிருந்து இசைக்கலைஞர்கள் இன்னிசை வழங்கத் தொடங்கியதும், அவர்கள் கையிலிருந்த ஒவ்வொரு இசைக் கருவியையும் விவரிக்கும் போது நம் நாயகன் உண்மையிலேயே வியந்து போனார்.  பலமுறை அங்கு வந்திருந்த அவர், இதற்கு முன், ஒரு போதும் அவர்களையோ, இசைக் கலைஞர்களையோ, இசைக் கருவிகளையோ கவனித்ததே இல்லை! அதன் பின், சில இளம் பெண்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. பார்வை அற்றவர் கேட்காமலேயே மிகச் சிறப்பாக நடனமாடுவோரின் உடை, அணிகலன்கள் மற்றும் நடனத்தைப் பற்றி மிக அருமையாக விவரித்தார் நம் நாயகன். நடனப் பெண்களின் கைகளில் பொருத்தப்பட்டிருந்த நீளமான தங்க நிறமுள்ள செயற்கை நகத்தைப் பற்றி கேட்ட பார்வை இழந்தவர்,

“எனக்கு அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. முடியுமா?” என்றதும், நம் நாயகன் மேடையின் பின்புறம் சென்று நடன இயக்குனரைக் கண்டு அனுமதி பெற்று, பார்வை இழந்தவரை அங்கு அழைத்துச் சென்று அதைத் தொட்டு உணர வைத்தார்.  நிகழ்ச்சிக்குப் பின் எல்லோரும் பிரிய வேண்டிய நேரத்தில் நம் பார்வை இல்லாத நண்பர், நம் நாயகனிடம் சொன்ன வார்த்தைகள்தான் அது.

“எவ்வளவு அழகாக நீங்கள் எனக்காக எல்லாவற்றையும் பார்த்தீர்கள்?.  இதற்கு உரிய விதத்தில் நன்றி சொல்ல என்னால் ஒரு போதும் இயலாது”. உடனே நம் நாயகன்,

 “இத்தனை நாள் கண்கள் இருந்தும் இவற்றை எல்லாம் காணாதிருந்த என் கண்களை மூடியிருந்த திரையை அகற்றி, நீங்கள் தான் என்னை அதையெல்லாம் காண உதவினீர்கள்.  எனவே, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்”.  என்று கூறி விடை பெற்றார். 

      இது போல் கடந்த வாரம், நியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்டைச் சேர்ந்த பார்வை இழந்தவர்களான பீட்முரே என்பவரும், அவரது மனைவி கேரன்ப்ளீமரும் பாலக்காடு வந்திருந்தார்கள்.  ஷொர்னூரின் அருகே உள்ள கலாமண்டலத்தைக் கண்ட (?!) பின் கொச்சி, ஆலப்புழா, திருவனந்தபுரம், கன்யாகுமரி, போன்ற இடங்களையும் கண்டு(?!) டெல்லிக்குப் போகிறார்களாம். வாசித்துக் கேட்ட இந்தியாவைக் காண, நம் பெல்ஜியம் நண்பர் தாய்லாந்து போனது போல், இங்கு வந்தவர்கள் இவர்கள்.

ஜோத்பூர் மசாலா மார்க்கெட்
இவர்களுக்கு வட நாட்டிலுள்ள ஜோத்பூர் என்றால் சாலைகளின் இருபுறமும் மசாலாப் பொடிகள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாம். அங்குள்ள ஸ்பைசஸ்/மசாலா விற்கும் மார்க்கெட்டில் ஏறத்தாழ இருநூறு விதமான மணங்களை நுகர்ந்து அனுபவித்திருக்கின்றார்கள். காசியில், நெய்யின் மணத்தை நுகர்ந்ததால், காசி என்றால் நெய் மணம் தான் நினைவுக்கு வருமாம். அது போல் கோயில்களில் இருந்து வரும் வித்தியாசமானச் சத்தங்களும் நினைவுக்கு வருமாம். பாலக்காடு வந்த அவர்கள் பலாப்பழத்தின் மணத்தை நுகர்ந்து சென்றிருக்கின்றார்கள். ஊட்டியின் குளிரை உணர்ந்து ஊட்டியை நினைவுக்குள் பூட்டி வைத்திருக்கின்றார்கள்.

கண்பார்வை இல்லாத எங்களுக்கு, “ஒவ்வொரு இடமும், நகரமும், நாடும் ஒவ்வொரு அற்புதங்களைப் பதுக்கி வைத்திருக்கின்றது. அதை நாங்கள் அங்கு சென்று எங்களது நான்கு புலன்களால் உணர்ந்து மகிழ்கின்றோம்” எனும் போது, இறைவனிடம் அவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், தேவையான பணம் மற்றும் அவர்களுக்கு உதவிக்கரங்கள் நீட்ட நல்ல மனிதர்களையும் கொடுக்க, வேண்டிக் கொள்ளத் தோன்றுகின்றது. வேண்டிக் கொள்வோம். கூடவே, கண்களின் இன்றியமையாமையையும் உணர்ந்து, எல்லாவற்றையும் கண்குளிரப் பார்த்து, மனதில் நிறைத்துக், கண்கள் இருந்தும் குருடராய் வாழாமல், அகக்கண்ணையும் திறந்து வாழ வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

படங்கள் : கூகுள்

**********************************************************************************************************************

பின் குறிப்பு : நண்பர்களுக்கு : நம் பதிவர் நண்பர் கோவை ஆவி அவர்கள் 

அறிவித்திருக்கும்  

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி 

விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.  அதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.kovaiaavee.com/2014/10/blog-post_30.html  ஐ க்ளிக் செய்யவும். விரையுங்கள்!  இறுதித் தேதி நெருங்குகின்றது. நன்றி! 

************************************************************************************************************************

இந்தக் காணொளியைக் காணுங்களேன்! நாங்கள், யானைகள் மனிதர்களைக் கொன்றதைப் பற்றிய பதிவுகள் எழுதி இருந்தோம். யானைகளின் மீது தவறே இல்லைதான்! சரி, சிறிய ஆடுகள் மனிதரை யானையிடமிருந்துக் காப்பாற்ற முடியுமா?! காணுங்கள் இந்தக் காணொளியை. யானையும் அந்த ஆடுகளையும் ஒன்றும் செய்யவில்லை. இயற்கை இயற்கைதான்! என்றுமே! நாம் தான் இயற்கையைப் பழிக்கின்றோம்! அதைப் புரிந்து கொண்டு அதனோடு ஒன்றி வாழத் தெரியாமல்!