செவ்வாய், 12 மார்ச், 2024

துபாய் நாட்கள் – ஐந்தாம் நாள் – 30-10-2023 மற்றும் துபாய்க்கு விடை சொல்லும் நாள் – 31-10-2023

 

முந்தைய பதிவுகளை வாசித்தவர்கள், கருத்திட்ட அனைத்து நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. என் துபாய் பயணத்தின் ஐந்தாவது நாள் சென்ற இடங்கள் மற்றும் கடைசி நாள். 

துபாய் நாட்கள் – ஐந்தாம் நாள் – 30-10-2023

அன்று நாங்கள் தனியாக மெட்ரோ மற்றும் பஸ் ஏறி மிராக்கிள் கார்டன்  - Miracle Garden – அதிசயப் பூங்கா சென்று பார்க்க வேண்டும். காலை வழக்கம் போல் Baniyas Square லிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி Mall of Emirates – மால் ஆஃப் எமிரெட்ஸ் நிலையத்திற்குப் பயணித்தோம். போகும் வழியில் துபாய் ஃப்ரேமை – Dubai Frame ஐ மிகவும் அருகில் பார்த்தோம். 1 (காணொளியில்)

Mall of the Emirates ரயில் நிலையம்

ரயில் நிலையத்தில் இறங்கி Mall of Emirates – மால் ஆஃப் எமிரெட்ஸ் பேருந்து நிலையத்திற்கு லிஃப்ட் வசதி இருந்ததால் அதன் வழி பேருந்து நிலையத்தை அடைந்தோம். 2

மிராக்கிள் கார்டனுக்குச் செல்லும் பேருந்து - பேருந்தில் பயணம்

 -பேருந்து நிறுத்தம்

தகவல் அறியும் இடத்தில் கேட்ட போது மிராக்கிள் கார்டனுக்குச் செல்லும் பேருந்து நிறுத்தம் 105 என்றதும், அந்த நிறுத்தத்தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கு காத்திருந்தோம். தாமதமின்றி துபாய் பேருந்து, மிராக்கிள் கார்டன் என்ற டிஸ்ப்ளே போர்டுடன் வந்தது. 3

அங்கிருந்து Global Village – க்ளோபல் வில்லேஜ்  உட்பட பல சுற்றுலா மையங்களுக்குப் பேருந்துகள் இருக்கின்றன. மெட்ரோ ரயிலுக்குப் பயன்படுத்தும் கார்டையே துபாய் பேருந்திலும் பயன்படுத்தலாம் என்பது மிகவும் வசதியாக இருந்தது. 30 நிமிடத்தில் மிராக்கிள் கார்டன் நிறுத்தத்தில் இறங்கினோம். 4


உள்ளே நடக்க சிரமம் உள்ளவர்களுக்கு வாகன வசதி 

இணைய வழி நுழைவுச் சீட்டு பதிவு செய்து

எங்களுக்கு, ஜமாலுதீன் அவர்கள் ஏற்கனவே இணைய வழி நுழைவுச் சீட்டு பதிவு செய்து தந்திருந்தார். ஒரு நபருக்கு 85 AED – அமீரக திர்ஹாம் ஆனது. நேரடியாகவும் எடுக்கலாமாம். ஆனால் 95 AED – அமீரக திர்ஹாம் ஆகுமாம். இணைய வழி நுழைவுச் சீட்டு பதிவு செய்திருந்ததால் அந்த வழி உள்ளே சென்றோம். உள்ளே உணவுப் பொருகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. நாம் கொண்டு சென்றால் நுழைவு வாயிலில் உள்ள லாக்கரில் வைத்துவிட்டுச் செல்லலாம். உள்ளே நடக்க சிரமம் உள்ளவர்களுக்கு வாகன வசதி உண்டு. 9



Miracle Garden - மிராக்கிள் கார்டனின் சில படங்கள் 

2013, ஃபெப்ருவரி மாதம், 14 ஆம் தேதி வாலண்டைன்ஸ் தினத்தில் துவங்கப்பட்ட மிராக்கிள் கார்டன், அதன் பின் ஒவ்வொரு வருடமும், குளிர்காலம் தொடங்கும் சமயத்தில் அதன் கதவுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் பூத்துக் குலுங்கும், இந்த 72,000-ச.மீ பரப்பளவு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இப்பருவத்தில் மட்டும் இப்பகுதியின் மிக அழகிய, இனிமையான வாசனையுள்ள அதிசயமான சொர்கமாக மாறிவிடுகிறது. இப்பூந்தோட்டத்தின் பராமரிப்பும் அதிகம் தான். 5

ஒரு நாளைக்கு சராசரியாக 757,082 லிட்டர்கள், துபாய் முனிசிபாலிட்டி நகரத்தின் கழிவு நீரை வாங்கி பூந்தோட்டத்திற்கு நேரடியாக அனுப்புகிறதாம். தோட்டத்தில் அந்த நீரை வடிகட்டி சுத்திகரித்து நல்ல நீராக்கி சொட்டு நீர்ப் பாசன முறையில் பூச்செடிகளுக்குப் பாய்ச்சி பராமரிப்பதாக துபாய் மிராக்கிள் கார்டனின் அதிகாரிகளின் தகவல். 6

துபாய் மிராக்கிள் கார்டன் மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது. 2013 இல், இது உலகின் மிகப்பெரிய Vertical வெர்ட்டிக்கல் தோட்டமாக அறிவிக்கப்பட்டது. தற்போது தோட்டத்தில் உள்ள ஏர்பஸ் ஏ380 மலர் அமைப்பு உலகின் மிகப்பெரிய மலர் அமைப்பாக கின்னஸ் உலக சாதனைகளால் பட்டியலிடப்பட்டுள்ளது. 7

எல்லா வருடமும் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் வரைதான் இதைக் கண்டு களிக்க முடியும். கோடை வெயிலில் இப்பூந்தோட்டத்தைப் பராமரிப்பது கடினம் என்பதால்தான். அப்படி ஒரு செயல்பாடு. நாங்கள் சென்றது அக்டோபர் மாதம் என்பதால் கண்டு களிக்க முடிந்தது. 8

பச்சை செடிகளாலான யானை, குதிரைகள்,

அரபிப் பெண்

கூஜாவிலிருந்து கொட்டும் பூக்கள்

பூக்களாலான கடிகாரம்

எமிரெட் விமானம் 

கண்கவரும் நீரூற்று, ஜயன்ட் வீல் (காணொளியில்), பச்சை செடிகளாலான யானை, குதிரைகள், அரபிப் பெண், கூஜாவிலிருந்து கொட்டும் பூக்கள், அலாவுதீன் பூதம் (காணொளியில்), இசையோடு ஆடும் பொம்மைகள் (காணொளியில்), பூமரங்கள், பூக்களாலான கடிகாரம், எமிரெட் விமானம் என்று காணுமிடமெல்லாம் பூக்களாலான மாயாஜாலங்கள். 10 (மிராக்கிள் கார்டன் பூக்கள் படங்கள் காணொளிகள் எல்லாமும் கீழே உள்ள காணொளித் தொகுப்பில் காணலாம்)



தின்பண்டங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள் வாங்க கடைகள்

உள்ளே தின்பண்டங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள் வாங்க கடைகள் உள்ளன. 11

இதன் அருகே வண்ணத்துப் பூச்சிப் பூங்காவும் உண்டு. அதற்கும் தனியாக நுழைவுக் கட்டணம் தேவை. ஆனால் நேரமில்லாததால் அங்கு செல்லவில்லை. 8

மூன்று மணி நேரம் அந்த அற்புத தோட்டத்தில் பட்டாம் பூச்சியாய் பறந்தோம். மூன்று மணி நேரம் அங்கு கடந்து போனதை பசி வந்த போதுதான் உணர்ந்தோம். முதல் நுழைவு வாயில் அருகே ஒரு நல்ல மலபார் உணவகம் இருப்பதாக அங்கிருந்த பாதுகாப்பாளர் சொன்னார். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தோம். பேருந்து வந்தது. ஏறி மெட்ரோ ரயில் நிலையம் வந்து மெட்ரோ ரயிலில் துபாய் மாலில் இறங்கினோம். 12

புர்ஜ் கலிஃபா இரவில் வண்ண விளக்குகளுடன் - Burj Kalifa

கதிரவன் மறைந்ததால் Furj Khalifa – ஃபுர்ஜ் கலிஃபா மின் விளக்கு ஆடை அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. (காணொளியில் விளக்குகள் மின்னும் முழு காட்சியையும், நீரூற்றும் காணலாம்) சிறிது நேரம் அங்கு நின்று அதன் அழகை ரசித்த பின் மெட்ரோ ஏறி அறையை அடைந்தோம். 13

“Day to Day” க்குச் சென்று கடைசி நாள் ஷாப்பிங்க்

பொருட்கள் சிலது வாங்க வேண்டியவை இருந்ததால், “Day to Day” க்கு மீண்டும் சென்றோம். தேவையான பொருட்களை வாங்கி பெட்டிகளில் அடுக்கி வைத்தோம். மறுநாள் காலை 9.30க்கு விமான நிலையம் செல்ல வேண்டும். மறு நாள் மதியம் 12.55 ற்கு துபாய்க்கு விடை சொல்லியே ஆக வேண்டுமே. அந்த அனுபவங்களை அடுத்த இறுதிப் பகுதியில் சொல்கிறேன். 14

துபாய்க்கு விடை சொல்லும் நாள் – 31-10-23

லாட்ஜ் ஊழியர்களிடமும் பசியாற்றியவர்களிடமும் நன்றி கூறி விடை பெற்றோம்

துபாய் நாட்களில் துபாய்க்கு விடை சொல்லும் நாள் அன்று காலை, கடந்த ஐந்து நாட்களாக உணவு மற்றும் தின்பண்டங்கள் கிடைத்த இடங்களுக்குச் சென்று பசியாற்றியவர்களிடம் விடை பெற்றோம். லாட்ஜ் ஊழியர்களிடமும் விடை பெற்று எங்கள் பயணப் பெட்டிகளுடன் தயாரானோம். 15

க்ளோபல் வில்லேஜ்

பால்ம் ஜுமைரா - பார்க்க முடியாமல் போன இடங்கள் - இப்படங்கள் 3ம் இணையத்திலிருந்து

பார்க்க முடியாமல் போன இடங்கள் நிறைய. இன்னும் இரண்டு நாட்கள் கூடுதலாகத் தங்க முடிந்திருந்தால் Global Village  க்ளோபல் வில்லேஜ், Dubai Gate – துபாய் கேட், Palm Jumeirah-பால்ம் ஜுமெய்ரா, Fish Market – மீன் சந்தை, போன்றவற்றைக் கண்டு மகிழ்ந்திருக்கலாம். 



ஜமாலுதீன் அவர்களுடன் 

என்ன செய்ய? இன்று மதியம் 12.55 ற்கு துபாய்க்கு விடை சொல்லியே ஆக வேண்டுமே. Spice Jet டெர்மினல் 1 லிருந்து என்பதால் மெட்ரோ ரயிலில் செல்லலாம். எனவே எங்கள் பயணப்பெட்டிகளுடன் மெட்ரோவில் ஏறி விமான நிலைய நிறுத்தத்தில் இறங்கினோம். ஜமாலுதீன் அவர்கள் காத்திருந்தார். 16

ஜமாலுதீன் அவர்களின் மருமகள் விமாநிலையத்தில் எமிகிரேஷன்

10 மணிக்கு அவர் மருத்துவமனைப் பணிக்குச் செல்ல வேண்டும். அவரது மருமகள் விமாநிலையத்தில் எமிகிரேஷன் – Emigration பிரிவில்தான் பணி புரிகிறார் அதுவும் டெர்மினல் 1 ல் என்பது மிகவும் உதவியாய் இருந்தது. கூடவே வந்து பெட்டிகளை செக்கின் செய்ய சிரமமின்றி நடத்தித் தந்தார். அவருக்கு நன்றி கூறிக் காத்திருப்பு அறையில் காத்திருந்தோம். 17

விமானத்தில்

விமானத்தில் ஏற அழைப்பு வந்ததும் விமானம் ஏறினோம். எங்கள் பெட்டிகளும் ஏற்றப்பட்டன. விமானம் நகர்ந்தது. வேகம் கூடியது. துபாய்க்கு விடை சொல்லி பறந்து உயர்ந்தது. அழகான துபாயின் காட்சிகளை ஆகாயத்திலிருந்து பார்த்தோம். நன்றி துபாய்! எங்களுக்கு 6 நாட்கள் அடைக்கலம் தந்து மகிழ்வித்ததற்கு!...18

துபாய் பயணக் கட்டுரை நிறைவு பெறுகிறது. விரைவில் அடுத்து ஒரு பதிவில் சந்திப்போம். என்னோடு பயணித்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல! காணொளியை முடிந்தால் பாருங்கள்! விமானம் மேலே உயரும் போது எடுத்த துபாய் காட்சிகள், மிராக்கிள் கார்டன் எல்லாம் பார்க்கலாம்.

https://youtu.be/Jz7lz0Cauj0

--------துளசிதரன்


31 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    இவ்வளவு காலமாகி விட்டது இதுவரை மெட்ரோ ரயிலில் போகும் வாய்ப்பு அமையவில்லை.

    தங்களது பயணம் இனிதே நிறைவு பெற்றது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி ஏன் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. இப்போது கூட நீங்கள் செய்யலாம். கார் வைத்திருந்தீர்கள் இல்லையா முன்பு அங்கிருந்த போது அதனால் இருக்கலாம்.

      ஆமாம் இனிதே முடிந்தது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
    2. நம் ஊரில் அடுத்திருக்கும் இடங்களுக்கு நாம் செல்லாமல் புறக்கணிப்பது போல் நீங்களும் மெட்ரோவை புறக்கணித்துவிட்டீர்களோ. எங்களுக்கு அது பேருதவியாய் இருந்தது துபாயில். அது இல்லை என்றால் எங்களுக்கு யாரையாவது அலல்து , ஜமால் நண்பர. இடையிடையே கூப்பிட்டு தொந்தரவு செய்ய வேண்டியிருந்திருக்கும். துபாயில் மெட்ரோ இருப்பதால் அதைப் புரிந்து கொண்டு அதில் பயணித்து அது வழியாகப் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்

      துளசிதரன்

      நீக்கு
  2. பதில்கள்
    1. மிக்க நன்றி முதல் வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டதற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  3. மிரகிள் கார்டன் நான் சென்றதில்லை (நேரமில்லாததுதான் காரணம். அதுவும் வண்ணத்துப்பூச்சி பூங்காவும்). படங்கள் எல்லாம் மிக அழகு. இவற்றைச் சுற்றிப்பார்கணும்னா மார்ச்-செப்டம்பர் சரிப்படாது. வெயில் உடலை உருக்கிவிடும்.

    க்ளோபல் வில்லேஜ் - நிறைய நாடுகளின் பொருட்களைப் பார்த்து வாங்கலாம். மிக அருமையான இடம். நான் இங்கு நிறைய வாங்கியிருக்கிறேன்.

    Palm Jumeirahவில் செலவு அதிகமாகும், ரொம்பவே காணும் விஷயங்கள் இல்லை. நான் பலமுறை சென்றிருக்கிறேன் (டிபார்ட்மெண்ட் பார்ட்டி கொடுக்க மற்றும் வியாபார மீட்டிங்குக்கும்)

    டிராகன் மால் மிக முக்கியமான இடம், அழகான பொருட்களை வாங்க நினைத்தால் (மணியினால் ஆன, முத்தினால் ஆன மாலைகள் மற்றும் பல எலெக்டிரானிக் பொருட்கள், வீட்டுக்குத் தேவையானவை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! நீங்கள் செல்லவில்லை இல்லையா? நீங்கள் அங்கிருந்த போது இது தொடங்கியிருக்கவில்லையோ? ஆமாம் கோடைகாலத்தில் மூடிவிடுவார்கள் செப்டம்பரில்தான் மீண்டும் திறப்பார்கள்.

      ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போல் டிராகன் மாலுக்கும் போக முடியவில்லை. போயிருக்க வேண்டிய ஒரு இடம் இல்லையா?

      அது போல் துபாயில் ஒரு கோவிலைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள் அங்கும் செல்ல முடியவில்லை.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    2. துபாய் கோவிலுக்குச் செல்லாத்து (பார்க்க வேண்டியிடம் என்ற அளவில்) பெரிய மிஸ்டேக்தான் துளசிதரன் சார். அங்கு மூன்று சிறு கோவில்கள் உண்டு, குருத்வாரா உட்பட

      நீக்கு
    3. 2018 ஃபெப்ருவரி, மே மாத்த்தில்தான் அங்கிருந்து திரும்பினேன். பார்க்க சந்தர்ப்பம் இல்லை

      நீக்கு
    4. கூட இருந்தவர்கள் பலர். தனியாகப் போயிருந்தால் நாம் நினைக்கும் இடங்களுக்கு எல்லாம் போயிருந்திருக்கலாம். எல்லோருக்கும் பிடித்தமான இடம் என்று தீர்மானித்துச் செல்ல வேண்டி இருந்ததால் பல இடங்களுக்கும் போக முடியாமல் போனது. அப்படித்தான் அந்தக் கோயில்கள் மிஸ் ஆனது.

      துளசிதரன்

      நீக்கு
    5. ஓ 2018 ஃபெப்ருவரி வரை இருந்தீர்கள் இல்லையா! Future of the museum அதன் பிறகுதான் வந்ததோ?

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன், மீண்டும் உங்கள் கருத்துகளுக்கு

      துளசிதரன்

      நீக்கு
  4. சென்றதும் தெரியாது, கிளம்பியதும் தெரியாது என்று வேக வேகமாக நாட்கள் நகர்ந்துவிடும். அவற்றைக் கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் 5 நாட்கள் உண்மையிலேயே போதாதுதான். வாழ்வில் அரிதாய் கிடைக்கும் தருணங்கள். புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் எடுத்து வைத்துக் கொண்டு இடையிடையே பார்த்துக் கொள்ளலாம். நன்றி பாராட்டுகளுக்கு.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  5. Day to Day போன்று பல கடைகள் (5-10 திர்ஹாம் கடைகள் என்பது போல) நிறைய உண்டு. பொருட்கள் கொஞ்சம் சீப் (inexpensive என்ற அர்த்தத்தில் எழுதலை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் 5 முதல் 10 அல்லது 8 திர்ஹாம் தான் அதற்கேற்ற தரம் தான். வாங்கிய பல பொருட்களும் தரமற்றவைதான்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் எப்போதும் போல வெகு சிறப்பாக உள்ளது.

    மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து என பயணித்து சென்று பார்வையிட்ட மிராக்கிள் கார்டன் மிக நன்றாக உள்ளது. ஒவ்வொரு இடங்களும் அத்தனை சுத்தமாக உள்ளது. கார்டனில் பூத்துக் குலுங்கிய விதவிதமான வண்ண மலர்களை பார்க்கும் போது மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி வருகிறது. நேரடியாக பார்த்து ரசித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் அங்கு நேரம் போனதே தெரிந்திருக்காது என்பது உண்மை.

    யானை, குதிரை போன்ற மிருகங்களின் வடிவமைப்பில் செதுக்கிய பச்சை மரங்களும், பூக்களை வைத்து பலவிதமான வேலைப்பாடுகளுடன் செய்திருந்த விதமும் கண்களை கவர்கிறது. பூக்களை வைத்து செய்த எமிரேட்ஸ் விமான தயாரிப்பும் மிக அருமையாக உள்ளது.

    காணொளியும் கண்டேன். உயர்ந்த கட்டிடங்கள், மின் விளக்குகளில் ஜொலிக்கும் புர்ஜ் கலிஃபா என்ற உங்கள் விளக்கமான பதிவின் தயவில் உங்களுடனேயே பயணித்து நாங்களும் துபாயில் சுற்றிய ஒரு மகிழ்வு வருகிறது. அங்கு அத்தனைப்படங்களையும் அருமையாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    துபாய் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, எங்களுக்கும் தெளிவாகவும், விளக்கமாகவும் சொல்லி கூடவே எங்களை அழைத்துச்சென்றதைப் போன்ற உணர்வை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.மறக்க முடியாத இந்தப் பயணம் பயணமாக உங்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் அமைந்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி கமலா ஹரிஹரன், நீங்கள் சொல்வது போல் நேரமும் நாட்களும் போனதே தெரியவில்லை. காணொளி கண்டீர்கள் இல்லையா? அப்போதுதான் பூக்களின் அழகை ரசிக்க முடியும்.

      மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன், மகிழ்ந்ததற்கும் பாராட்டியதற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  7. பயணம் இனிதாக முடிந்தது. இன்றைய பதிவையும், அதைவிட காணொளியையும் நிறைய ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவில் காணொளி கண்டால் மட்டுமே அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியும், ஸ்ரீராம். வார்த்தைகளும் படங்களும் மட்டுமே நிறைவைத் தராது. மிக்க நன்றி காணொளியையும் ரசித்தத்ற்கு

      கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்.

      துளசிதரன்

      நீக்கு
  8. மிராக்கிள் கார்டனில்  ஏதாவது மாயாஜாலக் காட்சிகள் இருக்குமாக்கும் என்றும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஸ்ரீராம். மிராக்கிள் கார்டன் என்ற பெயரைக் கேட்டதுமே நானும் நீங்கள் நினைத்தது போலவே ஏதோ மாயாஜாலங்கள் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன். சென்ற பின் தான் பூக்களேதான் மிராக்கிள் என்று புரிந்து கொண்டேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    2. ஸ்ரீராம் எனக்கு என்ன தோன்றியது என்றால், துபாய் பாலைவனம். அங்கு தண்ணீர் என்பது அரிதுதான். அவர்கள் எப்படியோ தொழில்நுட்பத்தினால் கடல் நீரைப் பயன்படுத்தி நன்றாக சமாளிக்கிறார்கள். ஆனால் பூந்தோட்டம் என்பதெல்லாம் அங்கு அரிதுதான் அப்படியான ஓரிடத்தில் இப்படி இத்தனை பரப்பளவில் பராமரித்துக் காப்பது என்பது அதிசயம் தான் அதுவும் அத்தனை அழகாக இருக்கிறது. அதான் மிராக்கிள்னு சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

      வெயிலில் போனால் பூக்கள் வாடுகிறதோ இல்லையோ நாம அவ்வளவுதான்....

      கீதா

      நீக்கு
    3. நீங்கள் சொல்லி இருப்பது சரிதான் கீதா.  ஒத்துக்கொள்கிறேன்.

      நீக்கு
  9. பயணச்செய்திகள் படங்கள், விவரங்கள் எல்லாம் பொருந்தி துபாய்க்கு சுற்றிப் பார்க்கும் நோக்கத்தில் செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். அங்கேயே இருக்கும் பல மலையாளிகளும் இது போன்று டஅனுபவித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேலையும் விடுமுறையும் என்பது ஒரு யந்திரத்தன்மையை கொடுத்திருக்கும். மேலும் சம்பாத்தியத்தில் பெரும்பங்கை சேமிப்பது அவர்கள் நோக்கமாக இருக்கும்.

    கட்டுரை, காணொளி, படங்கள் நன்று.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சுற்றுலா செல்பவர்களுக்குச் சுற்றிப் பார்ப்பதுதான் முக்கிய நோக்கம். பணிபுரிபவர்களுக்கு அது மிகவும் சிரமம்தான்.
      அங்கு எங்களை வரவேற்று உடனிருந்து பல இடங்களுக்கு வந்ததோடு மட்டுமல்ல எங்களை வழியனுப்பிய நண்பர் ஜமால் அவர்கள் அங்கு 30 ஆண்டுகலாக இருந்தும் இந்த மிராக்கிள் கார்டனுக்கும், ம்யூஸியம் ஆஃப் ஃப்யூச்சருக்கும் போனதில்லை என்று சொன்னார். இப்படித்தான் அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாகவும் நேரமின்மையாலும் இது போன்ற பல இடங்களைப் பார்க்க முடியாத சூழல்கள் வந்து போகும்.

      பதிவையும் காணொளியையும் ரசித்ததற்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

      துளசிதரன்

      நீக்கு
  10. நான் இரண்டு முறை துபாய் சென்றுள்ளேன்..

    இந்தப் பூங்கா புதியது..

    சிறப்பான பதிவு..
    மீண்டும் ஒருமுறை அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி போகும் போது வாய்ப்பு கிடைத்தால் போனால் பாருங்கள், துரை செல்வராஜு ஸார்.

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  11. மிராக்கிள் கார்டன் மிக அழகாய் இருக்கிறது. நீங்கள் பகிர்ந்த படங்கள் எல்லாம் அழகு. யானை, குதிரை, மலர் கொட்டும் படம் எல்லாம் அருமை.
    காணொளியும் நன்றாக இருக்கிறது.
    நாங்களும் பூங்காவை சுற்றி பார்த்தது போல இருக்கிறது.
    துபாய் பயணம் செய்ய போகிறவர்களுக்கு நல்ல பயனுள்ள கையேடாக பயன்படும.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும், பதிவின் படங்கள் காணொளியையும் கண்டு ரசித்ததற்கு மிக்க நன்றி. பூங்காவை நீங்களும் சுற்றி வந்தது போன்ற உணர்வோடு வாசித்துப் ப்பார்த்தத்ற்கும் மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.

      துளசிதரன்

      நீக்கு
  12. உங்கள் மூலம் நாங்களும் துபாய் வரை பயணித்து திரும்பினோம். பூங்கா படங்கள் அனைத்தும் அழகு. மற்ற படங்களும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

      துளசிதரன்

      நீக்கு