வெள்ளி, 8 மார்ச், 2024

சிவராத்திரி

 

ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும் சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

முனிகளும் யோகிகளும் பிறப்பறுத்து மோட்சம் பெற அந்நாளை உபயோகிக்கும் போது, சாதாரண மக்கள் வருடத்தில் அந்த ஒரு நாளை அவர்கள் வழிபடும் இறையின் திருநாமத்தை, நமசிவாய மந்திரத்தை இரவெல்லாம் உச்சரித்து அவர்களுக்குள் உறையும் ஆத்மலிங்கத்துடனான தொடர்பை திடப்படுத்தும் நாள் என்று சொல்லலாம். எல்லோரையும் அதில் பக்தியுடன் பங்கெடுக்கச் செய்ய அந்நாள் சிவபெருமான் பார்வதி தேவியை மணந்த தினம் என்றும் மனித குலத்தைக் காக்க சிவபெருமான் ஆலகால விஷமருந்தி நீலகண்டனாய் மாறிய தினமென்றும் சொல்லவும் நம்பவும்படுகிறது.

எல்லா மதங்களிலும் இதுபோன்ற பல சம்பவங்களின் அடிப்படையில்தான் அவரவர்களது பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதுபோல் இந்து மதத்தில் சைவ நெறியை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை இது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கொண்டாடும் சிவராத்திரி நாட்களில் பல அதிசய சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. அவையெல்லாம் அடுத்த தலைமுறைக்கு இறை உணர்வை வளர்க்க உதவியும் இருக்கிறன.

ஒரு வேடன் புலியிடமிருந்து தப்ப ஒரு வில்வ மரமேறி மரத்திலேயே உறங்கி, விழாமல் இருக்க வில்வ இலைகளைப் பறித்து இறைவனின் நாமம் சொல்லி ஒரு கல்லில் இட அக்கல் சிவலிங்கமாய் மாறி அங்கு இறைவன் தோன்றி அவனுக்கு மோட்சம் அளித்த கதை.

இது போன்ற சம்பவங்களில் எல்லாம் வாய்மொழியாய் பல தலைமுறையைக் கடக்கும் போது அவற்றில் ஏற்படும் கோர்த்தல், களைதல் மற்றும் மாற்றங்களைத் தவிர்க்க முடியாது.

அப்படி கேரளத்தில் 135 ஆண்டுகளுக்கு முன்னும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதைப்பற்றிதான் நான் இங்கு சொல்ல இருக்கிறேன்.

1888 ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி நாள். இடம் நெய்யாற்றின் கரை அருகே உள்ள அருவிப்புரம். அன்றெல்லாம் பிற்பட்ட மற்றும் தாழ்ந்த இனமென்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்குக் கோவிலுக்குள் மட்டுமல்ல அதன் அருகே கூடப் போகக்கூடாது எனும் நிலை. அவர்களுக்கு என ஒரு கோவில் கட்டி வழிபட வசதியும் இல்லை. அனுமதியும் இல்லை.

அன்றைய இஸ்லாம் மற்றும் கிருத்தவர்களின் நம்பிக்கையை பின்பற்றி பலரும் மதம் மாறி இறையருள் பெற்றிருந்தாலும் பலருக்கும் அப்படிச் செய்யத் தயக்கம். பயம். வைகுண்ட சுவாமிகள், அய்யாவு சுவாமிகள் போன்றவர்கள் தந்த ஊக்கம், மதம் மாறாமலேயே மூதாதையர்கள் வழிபட்ட முறையில் நாமும் வழிபடலாம் என்ற சிந்தை வளர உதவியது. மருத்துவா மலையில் தியானத்திலிருந்து இறையை உணர்ந்த ஸ்ரீ நாராயண குரு எனும் இளம் சன்னியாசியிடம் முறையிட்டதன் பலனாக அவர் ஆலோசனைப்படி நெய்யாற்றின் கரையில் நமச்சிவாய மந்திரம் சொல்லி கூடியிருக்கும் மக்கள்.

இரவு 12 மணி அளவில் தன் தியானத்தை முடித்து ஆசிரமத்திற்கு வெளியே வந்த குரு, ஆற்றின் ஆழமான சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப் பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம், நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல், வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம் ஆகிறது.

பரம்பொருளான ஜோதிர்லிங்கமும் ஆத்ம லிங்கமும் உருகி வழிந்த கண்ணீரும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ நாமங்களும் அந்த சிவராத்திரியில் சிவனை சிவசைதன்யத்தை அங்கு  வரவழைத்தது.

அந்த லிங்கம் சிவலிங்கமாக்கப்பட்டு அங்கிருந்த பாறையில் அஷ்டபந்தமின்றி பிரதிஷ்டை செயப்படுகிறது. அப்படி அன்று வேத விதிப்படி அல்லாமல் பிராமணர் அல்லாத ஒருவரால் பிரதிஷ்டை நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை ஸ்ரீ நாராயண குரு சென்று வாதாடி இது முற்பட்ட வகுப்பினருக்கான சிவன் அல்ல பிற்பட்ட வகுப்பினருக்கான சிவன் என்று சொல்லி வெல்லவும் செய்கிறார்.

அப்படி, கோவிலும் இறைவனும் இல்லை என்றிருந்த அன்றைய திருவிதாங்கூர், கொச்சி, மலபார் வாழ் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதமாற்றம் செய்யாமலேயே இறைவனும் கோவிலும் கிடைக்கச் செய்ததும் இதுபோன்ற ஒரு சிவராத்திரி நாளில்தான். அது போலவே 1924 ஆம் ஆண்டில், மார்ச் 3, 4 தேதிகளில் ஒரு சிவராத்திரி நாளில்தான் ஸ்ரீ நாராயண குரு ஆலுவாவில் சர்வபத மாநாடு நடத்தி எல்லா மதங்களும் ஒரே ஒரு ரகசியமான பரம்பொருளையே மையமாகக் கொண்டு  இயங்குகின்றன. இறை உணர்வு ஆத்ம சுகம் தரும் ஒன்று. அதுவே எல்லா மதங்களும் கூறுவது. எனவே மனித குலத்திற்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் தான் என்று சொல்லி மத வேற்றுமை பாராத இறை உணர்வின் முக்கியத்துவத்தையும் இந்த சிவராத்திரி நாளில்தான் விளக்கினார்.  

எதிர்காலத்தில் இந்நிகழ்வுகளும் சிவராத்திரியின் பெருமை பற்றி பேசும்போது பேசப்படும் என்பது உறுதி.

தங்கள் வாழ்வையே சிவபாதத்தில் வைத்து சிவபோகத்தில் திளைத்து சிவலோகம் புகும் சிவனடியார்கள் போல் அல்லாமல் வருடம் ஒரு நாள் மட்டும் இரவு சிவ தலம்/தலங்கள் சென்று இயன்ற மட்டும் சிவ நாமம் சொல்லி இறைவனை வேண்டும் சாதாரண மனிதர்களுக்கும் சிவனருள் இறையருள் உண்டு. ஏனென்றால், நம்முள் உறையும் சிவனும் நாமும் ஒன்றே அதை உணரத்தான் இந்த சிவராத்திரி.

எந்நாட்டவரின் இறையே போற்றி!

தென்னாட்டவரின் சிவனே போற்றி!

சென்ற பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. துபாய் பயணத்தின் இறுதிப் பகுதி வெளியிட இருந்த போது, சிவராத்திரி வந்துவிட அதைப் பற்றி ஒரு சொற்பொழிவு கேட்டதும், உற்சாகம் தொற்றிக் கொள்ள ஒரு சின்ன பதிவு எழுதிடலாமே என இப்பதிவு. துபாய் பதிவு தள்ளி வைக்கப்பட்டது. 

பெண்கள் தினமும் கூட. அனைத்து சகோதரிகளுக்கும், நம் எல்லோரது வாழ்விலும் நமக்கு உறுதுணையாய் நிற்கும் பெண்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!


-------துளசிதரன்


36 கருத்துகள்:

  1. சிவராத்திரி என்றதும் போக்கிரி மனம் மைக்கேல் மதனகாமராஜன் பாட்டுக்கு சென்று விட்டது. எனக்கு முக்தி கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஸ்ரீராம்....என்னையும் அந்தக் கட்சில சேர்த்துக்கோங்க...முக்தி எல்லாம் கிடைக்கும்!!! அதனால இறைவன் கோச்சுக்க எல்லாம் மாட்டார்.

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் நீங்க்ள் சொன்னதும் அந்தப் பாடலைக் கேட்டேன். பாடல் அதிர்ச்சியாக இருந்தாலும் சித்ரா அவர்கள் ஜானகி அம்மாவைப் போன்று பாடியது புதுமையாக இருந்தது. கூட மனோ வேறு. சொல்லவா வேண்டும்!!

      மிக்க நன்றி ஸ்ரீராம் உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
    3. அதிர்ச்சி என்று இல்லை வேறு ஒன்றுமில்லை! சொல்லப் போனால் சிரித்துவிட்டேன். ஸ்ரீராம், சிவராத்திரி க்கு எப்படி முடிச்சுப் போட்டுப் பார்த்திருக்கிறார் என்று. சிவராத்திரி என்று தொடங்கும் இப்பாடல் போன்றே ஒரு பாடல் சகலகலா வல்லவன் படத்தில் உண்டே....மனசுதானே அது இப்படி பலதையும் இணைத்துப் பார்க்கும்தானே!. சிவராத்திரி என்று தொடங்கி இப்படி அந்தப் பாடல்! அதுதான் சட்டென்று அதிர்ச்சியாக முதல் முறை கேட்பதால் இருக்கலாம். உங்கள் கருத்து ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. சிரித்துதான் விட்டேன்.

      துளசிதரன்

      நீக்கு
  2. தகவல்கள் புதிது.  வழக்காடுமன்றத்தில் அது அவங்களுது, இது எங்களுது என்று சொல்லி வாதாடி வென்றது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறை வழிபாட்டிற்கும் கோவிலுக்கும் நீதி மன்றத்தை அணுகுவது என்பதெல்லாம் மிகவும் வேதனையான விஷயம்தான். இருந்தாலும் உண்மை. அதனால்தான் தென்னகத்தில் எங்குமில்லாதது போல் கேரளத்தில் 45 சதவிகிதத்திற்கும் மேல் மதம் மாறி பிற மதம் தழுவி இருக்கிறார்கள். மட்டுமல்ல கேரளத்தில் கம்யூனிஸம் வேரூன்றவும் இது ஒரு காரணமாக இருந்தது.

      மிக்க நன்றி ஸ்ரீராம், உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  3. ///பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதமாற்றம் செய்யாமலேயே இறைவனும் கோவிலும் கிடைக்கச் செய்ததும் இதுபோன்ற ஒரு சிவராத்திரி நாளில் தான்.///

    ஸ்ரீ நாராயண குரு திருவடிகள் போற்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மதமாற்றம் மிகுதியாக நடந்திருந்தது. அதற்கு முன் 15, 16 ஆம் நூற்றாண்டுகளிலும் நடந்தது என்று சொல்லப்படுகிறது. அதை விடக் கூடுதல் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் மாறியதால் திருவிதாங்கூர் தலைநகரத்தை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்ற வேண்டிய பலகாரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

      மிக்க நன்றி துரை செல்வராஜு ஸார், உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  4. சிவன் ராத்திரிக்கு சிறப்பான பதிவு.
    சிவன் ராத்திரி கதையும், நாரயாண குரு அவர்கள் பற்றிய செய்தியும் அருமை.

    //சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப் பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம், நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல், வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம் ஆகிறது.//

    கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யபட்ட கல் சிவலிங்கம் ஆனது. படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    கன்னியகுமரி மாவட்ட மக்கள் சிவன் ராத்திரிக்கு 110 கிமீ ஓட்டம் செய்து 12 சிவ ஆலயங்களில் சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று தொலைக்காட்சியில் அதை காட்டினார்கள்.
    மன உறுதி , பக்தியை சொல்லும் சிவாலய ஓட்டம் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்ப்து போல் கேரளத்திலும் இது போல் சிவன் கோயில் தரிசனத்திற்கு ஓடுவதுண்டு. அது இங்கு சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. கேரளத்தில் ஒரு 5 அல்லது 10 கிமீ உள்ளாக எப்படியும் ஒரு சிவ ஷேத்திரம் இருக்கும். அதனால் எப்படியும் அந்த நாட்களில் 2, 3, அல்லது 4 கோயில்களுக்குப் போகலாம். நடந்தே கூட.

      ஸ்ரீ நாராயணகுரு வைப் பற்றி வாசிக்கும் போது மனம் நெகிழ்ந்துவிடும்.

      மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  5. ஒரு பத்தி படிக்கும்போதே இது கீதா ரங்கன்(க்கா)வா இல்லை துளசிதரன் சார் பதிவான்னு தெரிஞ்சுடுது. By the by கீதா ரங்கன் ரிலீஜஸ் பதிவு போட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.....எப்படி நெல்லைய ஏமாத்தலாம்னு யோசனை போகுது.

      ஆமாம் நான் ரிலிஜஸ் பதிவு போட மாட்டேன், நெல்லை. எனக்கு அந்த அளவு ஞானமோ இல்லை விஷய அறிவோ, ஈடுபாடோ அதில் இல்லை. ஜாலியா ஊர் சுற்றுதல், படம் பிடித்தல் இயற்கையை ரசித்தல் இப்படித்தான். அதெல்லாம் பதிவுக்கு நிறைய இருக்கு நெல்லை ஆனால் இன்னும் எழுதவில்லை. நாளை எனக்குப் பிடித்த ஒரு இடத்துக்குப் போகலாம்னு சொல்லி திட்டம் போட்டா...ஹூம் நம்ம வீட்டாளுக்கு வெயில் என்று சலிப்பாகிறார். ஸோ எனக்குப் பிடித்தமான இடங்கள் போக முடிவதில்லை. இனி முன்பு போல் தனியாக மேற்கொள்ள வேண்டியதுதான்...ஆனால் வீட்டில் பொறுப்பு இருக்கே!!

      கீதா

      நீக்கு
    2. கீதா பல கோயில்களுக்குப் போயிருக்கிறாரே. அதைப் படங்களுடனும் தகவல்களுடனும் காணொளிகளுடனும் போட்டிருக்கிறாரே அதை மறந்துவிட்டீர்களா நெல்லைத்தமிழன்?

      துளசிதரன்

      நீக்கு
    3. ஹாஹாஹா துளசி, நெல்லை சொல்வதன் அர்த்தம் வேற. கோயில் என்பது ரிலிஜஸ் என்ற வகையைச் சேர்வதை விட, பார்த்த கோயில் என்பது போலதானே சுற்றுலா போன்று....

      அவர் சொல்லியிருப்பது இப்படியான விஷயங்களை நான் எழுதியதில்லைய...இரண்டிற்கும் வித்தியாசம் உண்டுல்லையா?

      கீதா

      நீக்கு
  6. இவற்றையெல்லாம் (யார் கோவிலுக்குள் வரவேண்டும், யார் கூடாது...)படிக்கும்போது, யார் செய்த மூடத்தனம் என்று தோன்றுகிறது. இறைவன் தாம் அனைவருக்குமானவன் என்று எத்தனையோ நிகழ்வின் வாயிலாகச் சொல்லியும், அதைப் படித்தும் மனம் மாறாத சுயநலமிகள்.

    ஆச்சு... போயாச்சுன்னா எல்லோரும் அவன் முன்னாலத்தான் நிக்கணும், புண்ய பாவச் செயலுக்கு தீர்ப்பை நோக்கி. அவனுக்கு ஒரே ஒரு சட்டம்தான். First come first served.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா மதங்களிலும் சடங்குகளிலும் இது போன்ற கூடாத நடைமுறைகள் நாளடைவில் வந்துவிடும்.. அது வேறு மதம் உருவாகவோ அலல்து அம்மதத்தை விட்டுப் பலரையும் வெளியேறச் செய்வதும் இது வரலாற்று உண்மைதானே! ஒரு மதமும் இதற்கு விதிவிலக்கல்லவே.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  7. கேரளக் கோயில் நடைமுறையான, யாருக்கும் எதற்கும் இறைவனுக்கு நடக்க வேண்டிய வழிபாடுகள் காத்திருக்காது, சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் போன்றவை பாராட்டத் தக்கவை. ஸ்பெஷல் டிக்கெட் இல்லை என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நீங்கள் சொல்வது போல ஸ்பெஷன் தரிசனம் என்று சொல்லப்படுவது கேரளத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் சில குடும்பங்கள் நடத்துகின்ற கோயில்களில் இது உண்டு. உதாரணத்திற்கு நம்முடைய ஸ்ரீ பத்மநாபர் கோயில். அது போன்று, குருவாயூர், திருப்ரையார் கோயில்களில் சிலருக்குப் பிரத்யேகமான தரிசனம் வழங்கப்படுவதுண்டு. மற்ற அதிகப்படியான கோயில்களில் அப்படி இல்லை.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  8. பூசை செய்பவர் மேல் படக் கூடாது, அவருக்குள்ள நியமங்கள் போன்றவற்றை நான் ஆதரிக்கிறேன். ஆனால், கையில் வாட்ச், கம்பீர நடை, பணம் முகத்தில் தெரிபவர்களுக்கு தனி கவனிப்பு, ஐம்பது ரூபாய் கொடுத்தால் கர்பக்கிரஹத்துக்கு அருகில் கூட்டிச் செல்வது போன்ற நடைமுறைகள் கேரளக் கோவில்களில் இல்லாத்து அதிசயம், பாராட்டத் தக்கது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூசை செய்பவர் மேல் படக் கூடாது, அவருக்குள்ள நியமங்கள் போன்றவற்றை நான் ஆதரிக்கிறேன். //

      ஆமாம் ஒருவேளை அப்ப்டிப் பட்டால் மீண்டும் நீராடைவிட்டுத்தான் கருவறைக்குள் செல்வார்கள். இதுநலல்துதான். இறைதிருவுருவத்திற்கு அருகே செல்கையில் தூய்மையைக் கடைப்பிடிப்பது.
      ஆனால் கேரளத்தில் பல கோயில்களிலும் புதிதாகப் பிரதிஷ்டை நடந்த கோயில்கள் பெரும்பாலும் அந்தப் பிரதிஷ்டை செய்த தந்திரி இறந்துவிட்டால் அன்று அக்கோயில் திறக்கவும் மாட்டார்கள் அன்று பூஜையோ வழிபாடுகளோ ஒன்றுமே இருக்காது. அப்படிப்பட்ட சம்பிரதாயங்களும் கேரளத்தில் உண்டு.

      துளசிதரன்

      நீக்கு
  9. ராஜீவ் காந்தி, ஜெயில்சிங் போன்றோருக்கும்கூட, சட்டை கழற்றினால்தான் உள்ளே வரலாம் எனச் சொன்னதும் போற்றத் தக்கது. ஶ்ரீரங்கம் கோவிலில் பெருமாளுக்குப் பிடிக்கவேண்டிய வெண் கொற்றக்குடையை, துர்கா ஸ்டாலினுக்கு ஒருவர் பிடித்ததையும், இறைவன் திருவடியான சடாரியை, பக்தர்கள் தாங்களே எடுத்துத் தலைக்கு வைத்துக்கொண்டதையும் பார்த்து நொந்துபோனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கேரளத்தில் மேலாடை - ஆண்களுக்கு - இல்லாமல் வருவதில் கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சில மாற்றங்கள் வந்துள்ளன. முன்பு ஆண்கள் pants அல்ல்து பெண்கள் சுடிதார் போட்டுச் செல்ல முடியாது. இப்போது அதில் சின்ன மாற்றம் வந்திருக்கிறது. ஆண்கள் pants போட்டுச் செல்லலாம் ஆனால் மேலாடை கழற்ற வேண்டும்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன், உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  10. நாராயணகுரு, மாதா அமிர்தானந்தமயீ போன்ற பலர் மக்களுக்கும் மத்த்திற்கும் பெரும் serviceஐச் செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நீங்கள் சொல்வது போல இறையை உணர்ந்து பல புண்ணியாத்மாக்கள் நம் நாட்டில் தோன்றி நம் மக்களை நல்வழிப்படுத்துதல் நம் நாட்டின் சிறப்பு.நமக்கு மட்டுமே உள்ள சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  11. சிவராத்திரி மஹிமையை விளக்கியதற்கு பாராட்டுக்கள். புகழ் பெற்ற ஆலுவா சிவராத்திரியையும் கட்டுரையில் உட்படுத்தியிருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, துளசி ஆலுவா சிவராத்திரி பற்றி ஏற்கனவே குரு பற்றி சொல்லி வாய்ஸ் அனுப்பியிருந்தார் அதைச் சேர்க்கச் சொல்லி. ஆனால் நான் இன்று காலையிலிருந்து பிஸி. வெளியில் சென்றதால் இப்பதான் வீடு வந்ததால் இப்பதான் சேர்த்தேன். சேர்த்திருக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. நீங்க்ள் சொல்லியிருப்பது போல் ஆலுவா சிவராத்திரி பற்றி விரிவாகச்சொல்லியிருக்கலாம்தான். ஓரிரு வரிகள் மட்டுமே சேர்க்க வாய்ஸ் அனுப்பி அது பதிவு வெளி வந்து கருத்துகள் வந்த பிறகுதான் சேர்க்க முடிந்திருக்கிறது கீதாவால்.

      ஆலுவா அத்வைதா ஆஸ்ரமத்தில் 1924 ஆம் ஆண்டு சர்வதேச மாநாடு நடைபெற்றதைப் பற்றி சொல்லியிருக்கிறேன் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கிறது பதிவில் கருப்பு வண்ணத்தில் இருக்கிறது.

      கேரளத்தில், நீங்கள் சொல்வது போல் சிவராத்திரி என்றாலே ஆலுவா சிவராத்திரி என்றுதான் சொல்வார்கள்.
      அதை முன்னிறுத்தி சொல்லியிருக்க வேண்டும். விட்டுப் போனது.

      மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார் உங்கள் கருத்திற்கும் ஆலுவா சிவராத்திரி பற்றி உட்படுத்தியிருக்கச் சொன்னதற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  12. சிவராத்திரி நாளில் சிறப்பான செய்திகள்...

    ஓம் நம சிவாய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஸார் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  13. சிவராத்திரியை குறித்த விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    தங்களுக்கும், இனிய சிவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் கருத்ஹ்டிற்கும் வாழ்த்திற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சிவராத்திரி பற்றிய செய்திகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. சிவராத்திரியன்று நடைப்பெற்ற சம்பவங்கள் மனதை பக்தி வெள்ளத்தில் நிறைத்தன. .

    /இரவு 12 மணி அளவில் தன் தியானத்தை முடித்து ஆசிரமத்திற்கு வெளியே வந்த குரு, ஆற்றின் ஆழமான சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப் பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம், நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல், வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம் ஆகிறது./

    மெய் சிலிர்க்க வைத்த சம்பவம். சிவனை சிந்தையில் நிறுத்திய ஸ்ரீ நாராயண குரு திருவடியை பணிவோம். இன்றைய நல்ல நாளில் நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியான பல மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள் இந்த சிவராத்திரி நன்னாளில் நடந்திருக்கின்றன.

      மிக்க் நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  15. ஸ்ரீ நாராயண குரு குறித்த இந்தக் கதை இதுவரை கேள்விப்பட்டதில்லை. SNG என்ற பெயரில் அவரை அறிந்திருக்கிறேன் - அவரது பெயரில் தில்லியில் நான் முன்பு இருந்த பகுதியில் ஒரு பக்தர் நகைக்கடை வைத்திருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவரது அருள் மொழிகள் பல அதில் ஒன்று மதம் ஏதாக இருந்தாலும் மனிதன் செம்மையாய் நல்லவனாய் வாழ்ந்தால் போதும். ஒரு சாதி, ஒரு மதம் ஒரு இறைவன், ம்னிதனுக்கு இவை எல்லாம் எக்காலத்திற்கும் இக்காலத்திற்கு ஏற்றவை. மட்டுமல்ல, அவர் தேவாரப் பதிகங்களை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஏராளமான சம்ஸ்கிருத பிரார்த்தனை கீதங்களையும் எழுதியிருக்கிறார்.

      அவரைப் பற்றி நீங்களும் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி வெங்கட்ஜி

      கருத்திற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு