செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மன்னிப்பு என்ற உயரிய சொல்லின் நிலை!

அவர் உன்னை மன்னித்தாரா?” என்று ஒரு பெண்ணிடம் கேட்டால் அதன் அர்த்தமே மாறிவிடுமோ என்ற பயம் வந்து விட்டது.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அமெரிக்காவில் சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்வதால், “த க்ரேட் அமெரிக்கன் கிரகணம்” என்று வரலாற்றுப் பதிவாக அவர்கள் கொண்டாடுகிறார்கள். 

நேற்று என் மகனுடன் பேசிய போது அவன் பேச்சில் துள்ளல், மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, ஆர்வம், உற்சாகம் என்று பல கலவையான உணர்வுகள். சிறு வயது முதல், இப்படி அவன் பேசும் நேரத்தில் ‘ம்மா, ம்மா, ம்மா’ என்று பேச்சின் இடையே நொடிக்கொரு முறை சொல்லுவது வழக்கம். இப்போது அதன் டோன் சற்று வேறு அவ்வளவே! இந்த ‘ம்மா ம்மா’ என்று அவன் பேசியதும் சிறு வயதில் அவன் உற்சாகமாக என்னுடன் பகிர்பவை எல்லாம் நினைவுக்கு வந்தது என்றாலும் அவை மற்றொரு பதிவில்.

நேற்றைய “ம்மா ம்மா”! எல்லாம் சூரியகிரகணத்தின் தாக்கம்!!! அமெரிக்காவில் மகன் இருக்கும் மாநிலமான ஆரெகனில் தான் சூரிய கிரகணத்தின் தொடக்கம் அப்படியே அமெரிக்காவின் குறுக்காகச் சென்று கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் 3 மணிக்கு முடிகிறது. ஒவ்வொரு இடத்திலும் நேரம் வித்தியாசப்படும்.

முழு கிரகணம் இரண்டு நிமிடம் என்றும் மொத்த நேரம் 2.30 மணி நேரம் என்றும் சொன்னான். 9.30 அளவில் தொடங்கி 12 அளவில் முடியும், அதாவது இவன் இருக்கும் மேற்குப் பகுதியில், 12 லிருந்து மூன்று மணி நேரம் கூட்டிக் கொண்டால் 3 மணிக்குக் கிழக்கில் இருக்கும் ஸவுத் கரோலினாவில் முடியும். இந்தக் கிரகணப் பாதையில் இருக்கும் இடங்களில் 50 கிமீ சுற்று வட்டாரத்தில் இருக்கும் இடங்களில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். வானம் மிகவும் தெளிவாக இருக்கும் என்றும் நன்றாகத் தெரிய வாய்ப்புண்டும் என்று சொல்லுவதாகச் சொன்னான். முழு கிரகணம் 10.16க்குத் தொடங்கி 2 நிமிடங்கள் நீடிக்கும் என்று கணித்திருப்பதாகச் சொன்னான்.

மகன் இருக்கும் கார்ன்வேலிஸிலும் முழு கிரகணம் தெரியும் என்றான். அதுவும் 50கிமீ சுற்றுவட்டாரம் மட்டும் தான் முழு கிரகணம் தெரியும். அதே போன்று கிரகணத்தின் பாதை தவிர பிற பகுதியில் எல்லாம் பகுதிதான் தெரியுமாம். இருந்தாலும் எல்லோருமே அதற்கான கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும் என்பதால் கல்லூரி கிளினிக்கில் அதற்கான கண்ணாடி எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். கிரகணப் பாதையில் ஒவ்வொரு இடத்திலும் காலநிலை வித்தியாசப்படுமாம்.

கிரகணத்தின் போது புதன், வெள்ளி, செவ்வாய், மற்றும் ஜுபிட்டர் கோள்களைப் பார்க்க முடியும் என்றும் அதை எப்படி அடையாளம் காணலாம் என்றும் படங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்களாம். இதற்காகப் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் இப்பகுதியில் அதாவது முழுமையாகத் தெரியும் பகுதியில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் போக்குவரத்து முதல், கார் நிறுத்தும் இடம் எல்லாம் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு, எல்லாம் ஒழுங்கு முறையாக நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதாம். 

வழக்கமாக அவன் காலை 6.30 மணிக்குள் கிளம்பிவிடுவான். இன்று 8 மணிக்கு கிளினிக்கில் இருந்தால் போதும் என்றும் 12 மணி வரை எந்த நாலுகால் நோயளிகளும் வர மாட்டார்களாம். இந்தக் கிரகணத்தின் போது சூரிய ஒளி மங்கி மாலை மயங்கும் நேரம் போன்றும் முழு கிரகணத்தின் போது இரவு போன்றும் ஆகிவிடுவதால் அந்த நேரத்தில் விலங்குகளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் சொன்னான். வீட்டில் வளர்க்கப்படும் செல்லங்களை விட இரவு நேரத்தில் சுறு சுறுப்பாக இருப்பவை, வந்த சூரியன் திடீரென்று எங்கு காணாமல் போனான் என்று குழம்புமாம். கிரகணத்தின் போது வழக்கமான வெயில் அளவிலிருந்து 10 டிகிரி குறையுமாம்.

அவர்களுக்குக் கல்லூரியில், கிளினிக்கில் எல்லாம் அரை மணி நேரம் அவர்கள் வகுப்பிலிருந்தும் ட்யூட்டியிலிருந்தும் வெளியில் வந்து பார்க்கலாம் என்றும் சொல்லியிருந்ததால் மகனும் மிகவும் ஆர்வமாக இருந்தான், எனக்குப் படம் அனுப்புவதாகவும் சொன்னான். இது அவன் அவனது இரவு நேரம் 11 மணிக்கு அதாவது நமது காலை நேரம் 11.30 க்குச் சொன்னவை. கிரகணத்திற்கு முன்.  இனி கிரகணத்திற்குப் பின்..

இதோ இப்போது முழு கிரகணத்தின் படம் அனுப்பியுள்ளான்.


கூடவே வாட்சப் மெசேஜும்…”ம்மா சூரியன் உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணரமுடிந்தது. கிரகணம் தொடங்கியதுமே கொஞ்சம் கொஞ்சமாக வெயிலின் டிகிரி குறையத் தொடங்கியது. முழு கிரகணத்தின் போது சடாரென்று செம குளு குளு என்று இருந்தது. இரண்டு நிமிடத்திற்கே இப்படி என்றால், சூரியன் ஒரு சில மணி நேரம் முழுவதும் மறைக்கப்பட்டு சூரிய ஒளியே உலகிற்கு இல்லை என்றால் பூமியே உறைந்துவிடும் இல்லையா. ‘ம்மா’ நல்ல அனுபவம் ‘ம்மா"

நமது காலை 11.30 மணி அளவில் அதாவது அவனது இரவு 11 மணி அளவில் - பெரும்பாலும் இந்த நேரம் தான் ரூமிற்கு வருகிறான் - பேசினால் ஏதேனும் சுவாரஸ்யமான தகவல் கிடைக்கும் என்பது உறுதி. 

-----கீதா

சனி, 19 ஆகஸ்ட், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 9

இன்று மாலை நான் கோடம்பாக்கத்திலிருந்து தரமணிக்குப் பேருந்தில் ஏறுவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் இன்று உலகப் புகைப்பட தினம் என்று அறிய நேர்ந்தது. வீட்டுக்குச் சென்று இன்று புகைப்படங்களைப் பகிரலாம் என்று நினைத்த சமயம், அழகான படங்கள் பகிரும் வெங்கட்ஜி, தோழி கீதாமதிவாணன், அனு, கோமதியக்கா, எங்கள்ப்ளாக் எல்லோரும் நினைவுக்கு வர, வெங்கட்ஜியின் பதிவு ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே அலைபேசியில் மெயில் பார்த்தால் வெங்கட்ஜியின் புகைப்படப் பதிவு! மிக மிக அழகான படங்கள். வெங்கட்ஜி மற்றும் தோழி கீதாமதிவாணன் அவர்களின் படங்கள் போல் இருக்காது என்றாலும் எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் இன்றைய தினத்தில் இங்குப் பகிர்கின்றேன்.  


இந்த இரு படங்களும் என்ன படங்கள் என்று சொல்ல முடிகிறதா ஊகித்துப் பாருங்களேன். பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


நடைப்பயிற்சி செல்லும் போது என் செல்லம் கண்ணழகியைப் பார்த்துக் குரைக்கத் தயராக இருக்கும் செல்லம்


மரத்தின் அடியில்தான் வேர் இருக்கும்...இங்கு பாருங்கள் மரத்தின் நடுவில் கோயிலின் கூரையில் வேர் விட்டு மரமாகப் பார்க்கவே வியப்பாக இருந்ததால் உடனே க்ளிக்கினேன்!
இவ்விரண்டு படங்களிலும் இருக்கும் பூச்சியும் ஒன்றே! முதலில் உள்ள படம் தானாகவே  ஃப்ளாஷ் இயங்கி எடுத்தது. இரண்டாவது படம் நான் ஃப்ளாஷ் பட்டனை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டு ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்த படம். 

எருக்கம்பூவில் வண்டு


  
இந்தக் காளானைப் பாருங்கள்! அடுக்கடுக்காகப் பூ போன்று!! என் மாமியார் வீட்டுத் தோட்டத்தில்..



வித்தியாசமான உருண்டை வடிவில் பூ தானே இது? இல்லை காயா?  முதன்முறையாகப் பார்க்கிறேன். ! தொட்டுப்பார்க்க முடியவில்லை. மரத்தில் உயரத்தில் இருந்தது.  ஜூம் பண்ணி எடுத்தேன். இது என்ன என்று அறிந்தவர்கள் சொல்லலாம்!




தாமதமாகிவிட்டதால், எல்லாவற்றிற்கும் வழக்கம் போல் கருத்துகள் எழுத நேரம் இல்லை....

------கீதா

புதன், 9 ஆகஸ்ட், 2017

அவள் ஒரு சாகஸ நாயகி!

அவளுக்கு, அவளை ரசித்து, ரஸனையான மெஸேஜுகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். வாட்ஸப்போ? இருக்கலாம். அவளுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாம். என்னிடம் சொன்னாள். அவள் ஃபோட்டோ கூட எங்கும் வந்ததில்லையே என்று எனக்குத் தோன்றியது.