சனி, 12 அக்டோபர், 2019

அம்மா காத்திருக்கிறாள்


அம்மா காத்திருக்கிறாள்


https://engalblog.blogspot.com/2019/02/blog-post_12.html
எபி ஸ்ரீராம் மற்றும் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.

என்றும் வரும் அம்மாவை ஏன் இன்று காணவில்லை? அம்மாவுடன் பேசவில்லை என்றால் அன்றைய தினம் ஏனோ, ஏதோ ஒரு மாதிரி இருப்பது போல் தோன்றும் எனக்கு. அம்மாவுடன் பேசினால் நேர்மறையான அறிவுரைகள், தீர்வுகள் கிடைக்கும். அம்மாஆஆஆ

'குழந்தே எப்படிம்மா இருக்க? உன்னப் பார்த்தா ரொம்பத் தவிப்பா இருக்கு. நீ பட்ட கஷ்டம் எல்லாம் போதும்மா. நீ வாழ்க்கைல படற கஷ்டம் போதாதுனு இப்ப இதுவுமா? வந்துருமா என் கூட'


ஓ! அம்மாவின் குரல். அம்மா வந்துவிட்டாள். எப்போதும் நல்ல அறிவுரை சொல்லும் அம்மா, சமீபகாலமாக என்னைத் தன்னோடு வந்துவிடும்படி அழைத்துக் கொண்டே இருக்கிறாள். ஏனோ? தெரியவில்லை. எனக்கு விருப்பமில்லையே. எனக்கு வாழ வேண்டும்.


'அம்மா! நான் உன் கூட வந்துடறேன்னு ஓரிரு தடவை, ஒரு சலிப்புல சொல்லிருக்கேன்தான். ஆனா, உன் பேரனையும், பேத்தியையும் விட்டு எப்படிமா உங்கூட வர முடியும்? வந்தேன். போய்ட்டு வரேன்னு வரக் கூடியதா? என்ன?'


'உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காம இருந்திருக்கலாமோனு தோணுது. மாப்பிள்ளை பேசற வார்த்தைகளைக் கேக்கும் போது மனம் ரொம்பக் கஷ்டப்படுதுமா..'


'ப்ச்! விடும்மா……இதுதான் வாழ்க்கை. நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. நாம வாழ்க்கைய அமைதியா ரசிச்சோம்னா சந்தோஷம் தானா வந்துரும். நான் சந்தோஷமாத்தானே இருக்கேன்! கவலைப்படாதம்மா'


'எல்லா அம்மாக்களுக்குமே தன் குழந்தைகள் கஷ்டப்பட்டா தாங்கிக்க முடியாது…….அது உனக்கும் பொருந்துமே.'


'அதேதான். எனக்கு இன்னும் வாழனும்மா….”


விசும்பும் சத்தம். அம்மாதான். 'அம்மாஆஆஆ…….'


“அறிவு கெட்ட முண்டம். கண்டத செய்ய வேண்டியது. என்னவோ இவதான் உலகத்துலயே பெரிய புடுங்கி போல……எல்லாம் செஞ்சா இப்படித்தான் வியாதி வந்து சாக வேண்டிவரும்….”


வாஹினியின் தலை அசைவதைப் பார்த்து அவள் கணவனின் வார்த்தைகள். வாஹினி ஒன்றும் கண்டதைச் செய்யவில்லை. கொஞ்சம் கஷ்டப்படும் தன் கணவனுக்கு உதவலாமே என்ற நல்ல எண்ணத்துடன் நல்ல பணிதான் செய்கிறாள்.


வலது கை கொடுக்கும். இடது கை அடிக்கும். அப்படியான ரகம் அவன். நடுவாந்திரமாகப் பேசும் டேக் இட் ஈசி ரகம் இல்லை. டென்ஷன் பார்ட்டி. சமீபகாலமாக வார்த்தைகள் தடித்துத்தான் போயிருக்கிறது. அன்பார்லமென்டரி வேர்ட்ஸ் என்று எல்லையைத் தாண்டி. அடிக்கடி எருமை மாடு என்று திட்டுவதற்கு ஏற்ப வாஹினியின் மனமும் சூடு சொரணை அற்றதுதான். இப்போது மூளையும் சொரணை அற்......இல்லை இல்லை நேராது.


வாஹினிக்கு வெகு அரிதாகத் தோன்றுவதுண்டு இப்படி வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு தேவையா எட்ஸ்ட்ரா எட்ஸட்ரா எல்லாம். ஆனால் நல்லதை மட்டுமே நினைத்துப் பார்க்கப் பழகிவிட்ட மனம். அத்தனை எளிதாகத் தவறாக எடுத்துக் கொள்ளாத மனம். விரைவில் எல்லாம் சரியாகி விடும் என்ற எண்ணம்.


“குட்மார்னிங்க் வாஹினி ஆண்டி! சுகமானோ?”


வாஹினியின் கண்கள் மெதுவாக முழுவதும் திறக்க இயலாமல் திறந்தது. எல்லாம் பசபசப்பாகத் தெரிந்தது.


“குட்மார்னிங்க் சிஸ்டர்” மெலிதாக உதடுகள் அசைந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. அந்த மயக்க நிலையில் எண்ணங்கள் தாறுமாறாக ஓடியது.


என்ன இது நான் எங்கிருக்கிறேன்? ஓ! நேற்று….நேற்றா? தெரியவில்லையே. ஏதோ செய்தது. மூச்சுத் திணறல். மயக்கம்...ஓ ஆஸ்பத்திரி. ஏதேதோ மெஷின்கள், குழாய்கள், மூக்கிலும், உடம்பிலும் செருகப்பட்டு பீப் பீப் என்று சத்தங்கள். மருந்துகள், இத்யாதி. இவர் இருக்கிறார். பசபசப்பாகத் தெரிகிறது. குழந்தைகளுக்குத் தெரியுமோ?....


“ஆஹா ஆண்டி கண்ணு தொறக்குனுண்டல்லோ! வெரி குட்! மயக்கம் எல்லாம் ஷரியாகுனுண்டு இல்லே? ஸ்வாசம் முட்டலும் போயல்லோ?” கேட்டுக் கொண்டே அருகில் வந்த கேரளத்து வடிவழகி ஐவி வழியாக ஒரு ஊசியைச் செருகினாள். தேன் குரலில் இன்னும் தேன் அப்பி பேசிக் கொண்டே ஊசியை இறக்கும் மாய்மாலக்காரி. மருந்து இறங்கிக் கொண்டு இருந்தது. புறங்கை வெயினில் வலி எடுத்தது போலும் வாஹினியின் முக அறிவிப்பைப் பார்த்து புறங்கையை அழுத்தித் தடவிக் கொடுத்தாள்.


“நேத்து ஆண்டிய போதமில்லாது இவிட கொண்டு வந்நப்ப வலிய டாக்டர் கொஞ்சம் கவலையாகிப் போச்சு. உங்க மகநுட ப்ரொஃபசர்னு அறிஞ்ஞு மகன்ட்டயும் பேசினாங்க. டாக்டர் வந்நு சொல்லுவாங்க.” என்று மல்லுதமிழில் பேசிக் கொண்டே ட்ரிப்ஸ் பேக் மாற்றினாள். யூரின் பையை காலியாக்கினாள். அளந்து கொண்டாள். வாஹினிக்கு அவள் சொன்னது எவ்வளவு தூரம் மூளைக்கு எட்டியதோ. முந்தைய தினம் வாஹினியின் நிலை கோமாவை எட்டுவதற்கு முந்தைய நிலை.


“சாரே! வேற மெடிசின் வாங்கணும். பழைய மெடிசின் உண்டெங்கில் மெடிக்கல் கவுண்டரில மாற்றாம்.”


வாஹினியின் கணவன் மருந்து வாங்கப் போய்விட்டான். கேஸ் ஷீட்டை மறுபடியும் புரட்டினாள் நர்ஸ். வாஹினி கண் விழித்துவிட்டாள் என்று டாக்டரிடம் பேசினாள். ஜோக் சொல்லி பேசிக் கொண்டே – நோயாளிகளுக்கு சைக்கலாஜி சிகிச்சையாம் - பிபி செக் செய்து ப்ளட் எல்லாம் எடுத்துக் கொண்டாள். நர்ஸ் பேசியது வாஹினியின் மூளைக்கு எட்டியதா என்று தெரியவில்லை.


டாக்டர்கள் வைத்த கெடு நேரத்தை வாஹினி கடக்கவில்லை என்றாலும் அட்மிட் ஆன நிலையிலிருந்து கொஞ்சம் மீண்டிருந்தாள் என்று சொல்லலாம்.


'இந்த நேரத்துலயும் உன்னை இப்படித் திட்டுறாரே மாப்பிள்ளை.…….' மீண்டும் அம்மா… சரி அம்மாவும் பெண்ணும் பேசிக் கொள்ளட்டும். நான் இடையில் நுழையவில்லை.


'ம்மா ப்ளீஸ்.  எனக்கு விக்னேஷையும், சாருவையும் பார்க்கணும்மா. ஏன் இன்னும் வரலை? விக்னேஷ் இப்பத்தான் ஐசிஎம்ஆர் ல ஜாயின் செஞ்சுருக்கான். சாருவுக்கு எக்ஸாம் டைம். எப்படி வராங்கனு தெரியலை. எனக்கு இன்னும் வாழணும்மா. எனக்கு ஒன்னும் ஆகாது'


‘கரெக்டுதான் குழந்தே. உன் கஷ்டம் பார்த்து உன்னை எங்கூட கூட்டிட்டுப் போயிடலாம்னுதான் வந்தேன். ஆனா, மனசு கேக்கலை. நான்தான் உங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு சீக்கிரம் போய்ட்டேன். என் பேரன் பேத்தி தவிக்க வேண்டாம். இப்ப உங்கப்பா கஷ்டப்படறாரே அது போல மாப்பிள்ளை கஷ்டப்படக் கூடாது. நீ பேரன் பேத்தி எடுத்து இன்னும் பல வருஷம் அதுகளோட சந்தோஷமா, நோய் நொடி இல்லாம இருந்துட்டு வா’


'ஆமாம்மா. எனக்கு இன்னும் இருக்கணும்மா. இப்ப வந்துருக்கறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைமா. நிச்சயமா ஒன்னும் இருக்காது. அப்புறமா சந்தோஷமா வரேன். நீயே வந்து கூட்டிட்டுப் போம்மா.'


அம்மா காத்திருக்கிறாள்…..

------------------------------
தில்லி விமான நிலையம். தவிப்புடன் விக்னேஷ் போர்டிங்கிற்காகக் காத்திருந்தான். எமர்ஜென்சி புக்கிங்க். இப்படியான சமயத்தில் ஒரு விநாடி காத்திருத்தல் கூட யுகம் போலத் தெரியும். பொறுமை ஜகா வாங்கும்.


தகவல் வந்ததுமே டாக்டருடன் பேசிவிட்டான். பார்ஷியல் ஸ்ட்யுப்பர், ஐசியு , ஈஈஜி என்றார். விவரித்தார். அந்த விவரங்கள் எல்லாம் அவர்கள் இருவருக்குமான மருத்துவ வார்த்தைகள். நமக்கு அது வேண்டாம். க்ரிட்டிக்கல்தான், சில மணிநேரக் கெடு என்று அவர் முடித்த அந்த இரு வார்த்தைகள் நமக்குப் போதும்.


டாக்டர் அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.


ஃப்ளைட் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது ஆனால் போர்டிங்க் கேட் திறக்கவில்லை. அப்போதுதான் அந்த அறிவிப்பு. ஃப்ளைட்டில் எதிர்பாராவிதமாக சில டெக்னிக்கல் பிரச்சனைகள்.. தாமதமாகும் என்று. ஆனால் நேரம் சொல்லப்படவில்லை.


விக்னேஷின் தவிப்பு கூடியது. புக் செய்ய முடிந்ததே இரவு 2 மணி ஃப்ளைட்டில். இப்போது விடிந்த பிறகுதான் பறக்கும் போல. விமானம் போல் இல்லையே மனம். அது தாறுமாறாகப் பறந்து கொண்டிருந்தது. டாக்டரிடம் இருந்து இன்னும் பாசிட்டிவாக வரவில்லை. அவன் வேண்டாத தெய்வங்கள் இல்லை.


தங்கை சாருவைக் கூப்பிட்டான். அவள் திருச்சியிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னாள். அவள் அழுகிறாள் என்று தெரிந்தது. ஒன்றும் ஆகாது என்று அவளைத் தேற்றினான். தான் அருகில் இல்லாத போதுதான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று வருந்தினாலும், அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது என்று அவன் உள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.


தில்லி குளிரும், வெயிலும் அம்மாவுக்குத் தாங்க வேண்டுமே. கொஞ்சம் அதற்கான வசதிகள் செய்து கொண்டதும் பெற்றொரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தான். அதற்குள் அம்மாவுக்கு இப்படி ஆகிவிட்டது. சரியானதும் அழைத்து வந்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.


மருத்துவ படிப்பு படிக்கும் போது சொல்லித் தரப்படும் முதல் பாடமே நம் நெருங்கிய உறவினராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படக் கூடாது என்பதே. என்னதான் மருத்துவராகக் கற்றாலும் அம்மா என்று வரும் போது மனம் அதை எல்லாம் புறக்கணித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டுத் தவிக்கத்தான் செய்கிறது.


எதுவும் சாப்பிடத் தோன்றவில்லை. எதிலும் மனம் ஈடுபட மறுத்தது. அம்மாவின் அன்பான முகம் தான் வந்து வந்து சென்றது விக்னேஷிற்கு.


விடிந்து 6 ஆகியும் இன்னும் சரியாகவில்லை ஃப்ளைட்.  8 மணி என்று அறிவிப்பு வந்தது.


போர்டிங்க் செய்யும் முன் அப்பாவைத் தொடர்பு கொண்டான். அம்மாவுக்கு நினைவு சிறிது வந்திருப்பதைத் தெரிந்து கொஞ்சம் சமாதானம் ஆனான்.


அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது டாக்டர் குழு வந்ததை அறிந்ததும், ஃபோன் கட் செய்துவிட்டு சிறிது நேரத்தில் டாக்டரிடம் பேச மீண்டும் அழைத்தான் விக்னேஷ். “மிராக்கிள்” என்றார். கெடுவை கடந்து விட்டாலும் முழுவதும் நினைவு வரவில்லை மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னார். இருந்தாலும் விக்னேஷுக்கு கொஞ்சம் சமாதானம்.


“அம்மாகிட்ட பேசு விக்னேஷ். அவங்களால பேச முடியலைனாலும் நீ வரத சொல்லி உன் குரல் அவங்க காதுல கேக்கட்டும். இன்னும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருக்கும்.

“ம்மா நீ நல்லாயிடுவம்மா. ஒன்னும் கவலையில்லை. டாக்டர் நீ நல்லாருக்கேனு சொன்னார் மா. இன்னும் கொஞ்ச மணி நேரம் தான். நானும் சாருவும் உன் கூட இருப்போம்.“


விக்னேஷ் பேசியது புரிந்ததோ இல்லையோ மகிழ்ச்சியின் அடையாளமாக அவள் உதடுகள் விரிந்தது!

அம்மா காத்திருக்கிறாள்.

------கீதா


12 கருத்துகள்:

  1. இது நான் எழுதிய ஒரு கதையின் தலைப்பிலிருந்து வந்த தொடர் இல்லையா?  நினைவுக்கு வருகிறது.  

    பாராட்டுகளும், வாழ்த்துகளும் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் அதே அதே சபாபதே!!!(இப்ப நானும் இதைப் பிடித்துக் கொண்டுவிட்டேன்!!!!! அந்தப் பாட்டு கேட்டதிலிருந்து!! செம பாட்டு செம ம்யூசிக்!! எம் எஸ் வி க்ரெட்!!!!!!!

      ஸ்ரீராம் என் மறதியை என்ன சொல்ல? இன்று ஷெட்யூல் செய்ததையும் மறந்தே போனேன்...அடடா ஸ்ரீராங்கம் அடுத்த பதிவு போட வேண்டுமே னு படம் அப்லோட் பண்ணலாம் கரன்ட் நெட் போறதுக்குள்ளனு வந்தப்பதான் தெரிஞ்சுச்சு இது வந்து நீங்களும் கீதக்காவும் கமென்ட் போட்டிருப்பதும்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. இதெல்லாம் எப்போ எழுதினீங்கனே தெரியலை. நல்லா இருக்கு. கடைசி வரைக்கும் விறுவிறுப்பு கூட! நல்ல முடிவு. விரைவில் குணம் பெற்று வரட்டும். கணவன் பொல்லாதவனாக இருந்தாலும் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கும் குணம் இருக்கே! அதுக்கே பாராட்டணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா இதுஎபியில வந்ததுதான். நீங்க அப்பவும் கமென்ட் போட்டிருந்தீங்க..இதேதான்...

      மிக்க நன்றி கீதக்க்கா..

      கீதா

      நீக்கு
  3. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    அழகான கதை. எ. பியில் படித்த நினைவு உள்ளது.அங்கு என்ன கமெண்ட் கொடுத்தேன் என்பது மறந்து விட்டது.

    அம்மாவுக்கு தன் குழந்தைகள் என்றுமே கஸ்டப்பட கூடாது. உண்மையை சொல்ல போனால், தன் மகள் துளி கூட கஸ்டப்பட்ட கூடாது.அதுதான அம்மா மகள் செண்டிமெண்ட்.! (இதை எழுதும் போது கண்கள் ஆறாக பெருக உணர்ச்சி கொந்தளிப்பில் தவித்து எழுதுகிறேன். இருப்பினும் உங்களிடம் கூறிய ஒரு திருப்தி என் மனதில் எழுகிறது.) இதை கதையாக என்னால் ஜீரணிக்க இயலவில்லை. மிகவும் ஆழமான உறவின் உணர்வோடு எழுதியிருக்கிறீர்கள்.

    அம்மாவின் மகளான அவளுக்கு தன குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம்..! கதையின் கடைசி வரை காத்திருப்பதில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இந்த மகளான அம்மாவும் தன் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் இல்லையா? நன்றாக வாழட்டும் என என் தாய் மனம் வாழ்த்துகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா விரிவான கருத்திற்கு. உங்கள் மனம் உணர்வுகள் மிக நன்றாகவே புரிகிறது கமலாக்கா...எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்றுதான் நாம் நினைக்கிறோம் ஆனால் விதி என்பது நாம் நினைக்கும் கதையை ட்விஸ்ட் அதுவும் சந்தோஷமான ட்விஸ்ட் என்றால் நல்லது சோகமான ட்விஸ்ட் வைத்து வேறு ஒரு கதையை எழுதிவிடுகிறதே பலருக்கும்...(ஹையோ நான் வேறு ஒரு கதையில் எழுதியிருக்கும் இந்த வசனம் இங்கு வந்துவிட்டதே! வைரவா....ஹா ஹா ஹா...பரவாயில்லை...இப்படி நான் கதையில் எழுதும் சில வரிகள் அவ்வப்போது வந்துவிடுகிறது சிலவற்றை கருத்தில் அடித்துவிட்ட்டு நீக்கிவிடுவதும் உண்டு. கதையில் நாம் எழுதிருக்கோமே என்று..ஹிஹிஹி..

      மிக்க நன்றி கமலாக்கா உங்கள் மனம் கதையின் நாயகியை வாழ்த்தியமைக்கு

      கீதா

      நீக்கு
  6. அருமை கீதா. கதைக்களன், சொல்லியிருக்கும் விதம் எல்லாமே அருமை. அம்மா மட்டுமல்ல, நாங்களும் காத்திருக்கிறோம் இப்படிப்பட்ட நல்ல கதைகளுக்காக. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுக்கா மிக்க நன்றி உங்களிடம் இருந்து இப்படி ஒரு கமென்ட் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருது க்கா..

      இது ஸ்ரீராம் தொடங்கி வைத்த ஒன்று. அவர் ஒரு கதை எழுதியிருந்தார் அம்மா காத்திருக்கிறாள் என்று அருமையான கதை. நீங்க வாசிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். அம்மாவின் மரணம் அதற்கு மகனின் பயணம் பயணத்தின் போது அவர்கள் செய்வது என்று மனதை மிகவும் தொட்டக் கதை. அதைத் தொடர்ந்து நம் துரை அண்ணா எழுதினார். அதுவும் அருமை. அப்போது ஸ்ரீராமின் கதையை வாசித்ததும் ஒரு மகள் அம்மாவுடன் பேசுவதாக (மேல் உலகில் இருக்கும் அம்மாவுடன்) எழுதி பாதியில் வைத்திருந்ததை அட ஸ்ரீராம் எழுதிய கதையின் தலைப்பிற்குப் பொருத்தமாக இருக்குமே என்று அதில் கூடக் கொஞ்சம் சேர்த்து எழுதியதுதான் இது...

      மிக்க நன்றி அக்கா பாராட்டிற்கு. ஹையோ இப்போது பொறுப்பு கூடுகிறதே!!!!!!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு