திங்கள், 29 அக்டோபர், 2018

ஆவின் டு நந்தினி


பல மாதங்களாகப் பல முக்கியமான பணிகள் என்று மனமும், உடலும் தொடரி ஓட்டமாய் ஓடியதால் அதுவும் ஹர்டிலிங்க் ஓட்டம், வலைப்பக்கம் வர இயலாத நிலை இருந்து வந்தது. அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே! தற்போது ஆவினிலிருந்து நந்தினிக்கு மாறியாகிவிட்டது. நம்ம எபி ஆசிரியர்களில் பெரும்பாலானோர்(??!!) மற்றும் பிரபல வலைப்பதிவர்கள் வசிக்கும் ஊருக்கு மாற்றம். நிறைய பதிவுகள் வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். என் பதிவுகளும் பல வெட்டல், ஒட்டல் வேலைகளுக்குக் கிடப்பில் காத்திருக்கின்றன. அப்படியான ஒன்றில்தான் நம்ம ஏரியாவில் சு டு கு கதை கூட வெட்டல் செய்து தட்டிக் கொட்டாமல் ஸ்ரீராமுக்கு அனுப்பி வெளிவந்தும் விட்டது.

எத்தனையோ ஊர்கள், சிறிய ஊர்கள், அந்த ஊர்களிலும் பல வீடுகள் என்று மாறி, உரல், அம்மி முதல் இண்டக்ஷன் என்று பல அனுபவங்கள் என்றாலும், கடந்த 15 வருடங்கள் சென்னையிலும் வீடுகள் மாறியிருந்தாலும் சமீப வருடங்களில் வீடு மாற்றாமல் இருந்துவிட்டு மீண்டும் ஊர் மாற்றம். மாற்றம் பழகிப் போன ஒன்றானதால் பெரிதாகத் தெரியவில்லை. பொருட்களை எல்லாம் அட்டைப்பெட்டிகளிலும், பைகளிலும் கட்டியதுதான் கொஞ்சம் உளைச்சல் எடுத்தது. ஏனென்றால் சில பொருட்களை சென்னை வீட்டில் ஓர் அறையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் எதை எடுத்துக் கொள்ள எதை விட என்ற ஒரு குழப்பம். எப்படியோ மூட்டை கட்டி வந்து சேர்ந்து இந்த வீட்டில் பொருட்களை ஒரளவு அடுக்கியாகிவிட்டது. இன்னும் சில பல வேலைகள் இருக்கின்றன. (ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றி கீதாக்காவிடம் நிறையவே அனுபவக் கதைகள் இருக்கும்!!!)

சில நாட்களாக பொருட்கள் எல்லாம் கட்டி வைக்கப்படுவதைப் பார்த்து, சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்த கண்ணழகிக்கு நன்றாகவே புரிந்துவிட்டது போலும். இவர்கள் எங்கேயோ போகப் போகின்றார்கள் என்று. ஒன்றரை வயதில் பாண்டிச்சேரியிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் சென்னைக்கு வந்தவளுக்கு இப்போது (ஒன்பதரை வயது) இதுவே முதலான மிக நீண்ட தூரப் பயணம். என்றாலும் எந்தவித பயமும் இன்றி மிக மிக நல்ல பெண்ணாக வந்தாள். நன்றாகவே பக்குவப்பட்டுவிட்டாள்.

ஊர் பிடித்திருக்கிறது. ஓ! ஊர் என்று சொல்லக் கூடாதோ! சரி ஊரு. இருப்பது முக்கிய நகரத்திலிருந்து அதாவது ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தள்ளி இருக்கும் சிறு நகரம் (டவுன்) அருகில் ஒரு கிராமம் என்று சொன்னாலும் வளர்ந்திருக்கும் ஊரில். பசுமை அழிந்துதான் வருகிறது. அருகில் சில ஏரிகள் இருப்பதாக கூகுள் சொல்கிறது. ஆனால் படங்கள் சொல்லுவது “எப்படி இருந்த நான் இப்படியானேன்” என்ற வசனத்தைதான். இன்னும் சில வருடங்களில் இந்த ஏரிகள் கூகுள் வரைபடத்தில் காணாமல் போய்விடும் அபாயம் வெட்ட வெளிச்சம். வளர்ச்சி என்ற பாசாங்குப் பெயரில் நாம் கொடுக்கும் மிகப் பெரிய விலை என்றே தோன்றுகிறது. கிராமங்களே இல்லாமல் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. நான் முன்பு கண்ட பெங்களூர் அல்ல தற்போதைய பெ(ப)ங்களூரு!

கடைகளில் மக்களுக்குத் தமிழ் புரிகிறது. கொஞ்சம் பேசவும் செய்கிறார்கள். ஹிந்தி நன்றாகவே பேசுகிறார்கள் என்பதால் தமிழ் மற்றும் ஹிந்தி பேசி சமாளிக்க முடிகிறது. என்றாலும் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிட நடையில் ஹைவே. இந்த ஐந்து நிமிட நடைக்குள் அன்றாடத் தேவைகளுக்கான கடைகள், மாவு மில், மிக்சி, க்ரைண்டர், கேஸ் அடுப்பு, மொபைல் சரி செய்யும் கடைகள், ரீ சார்ஜ் செய்யும் கடைகள், சாப்பாடு கடைகள் அத்தனையும் இருக்கின்றன.

நந்தினியும் பரவாயில்லை நன்றாகவே இருக்கிறாள். சற்றுக் கொழுப்புடன். சென்னையில் ஆவின் அவ்வப்போது வாங்கினாலும், வீட்டிற்கு அடுத்தாற் போல் கறவைகள் இருந்ததால் பால்  புதியதாகக் கிடைத்தது. இங்கு கறவைகள் அருகில் இருக்கிறார்களா என்று இனிதான் பார்க்க வேண்டும்.

இங்கு காவிரி தண்ணீர் கொஞ்சமேனும் வரும் என்று நினைத்து வந்தால் இங்கும் தண்ணீர்க் கஷ்டம் எங்கள் பகுதியில். பிற பகுதிகள் பற்றி தெரியவில்லை. ஒரு வாரத்தில் இரு நாட்கள்தான் – செவ்வாய் மற்றும் சனி – தண்ணீர் சம்பில் வருமாம். ஆனால் சென்ற வாரத்தில் வரவே இல்லை. ஏற்கனவே டாங்கில் இருந்த தண்ணீரை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்த போது வியாழன் மாலையிலிருந்து பிரச்சனை தொடங்கியது. எனவே சனிக்கிழமை தண்ணீர் வருகிறதா என்று மாலை வரை பார்த்துவிட்டு வராததால் அக்கம்பக்கம் விசாரித்து தண்ணீர் லாரிக்குச் சொல்லிட 10 நிமிடத்தில் வரும் என்றார்கள் வந்தும்விட்டது. 4500 லி 300 ரூ. அது போல பவர் ஷட் டவுன். தினமும் ஒரு மணி நேரம் கட் ஆகிறது. அது தவிர அவ்வப்போதும் போய் வருகிறது. 

குப்பைத் தொட்டிகளே இல்லை. பல தெருக்கள் சுற்றிப் பார்த்தாயிற்று. வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வண்டி வரும் என்றார்கள் ஆனால் இந்த ஒருவாரத்தில் வரவே இல்லை. எங்கு கொண்டுக் கொட்டுவது என்று தெரியவில்லை. அருகில் இருப்பவர்கள் ஆங்காங்கே காலியாக இருக்கும் மனைகளில் கொட்டிவிடுகிறார்கள். அந்த மனைகளுக்கு அடுத்தாற் போல் இருக்கும் வீடுகளில் கொசுக்கள் வருமே! துர்நாற்றமும் வருமே. நல்லதில்லையே. நமக்கு அப்படிக் கொட்டும் பழக்கம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் பல பைகள் குப்பையுடன் முழித்துக் கொண்டிருக்கின்றன. 

இத்தனை நாள் பி எஸ் என் எல் மட்டுமே பழகியிருந்த என் கணினிக்கு ஏனோ ஏர் டெல் மற்றும் மொபைல் ஜியோ ஹாட்ஸ்பாட்டை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை போலும். மறுத்தது. அப்புறம் எப்படியோ சமாதானப்படுத்தி ஒரு வழியாய் ஏற்றுக் கொள்ள வைத்தாகிவிட்டது. இதோ மீண்டும் வலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டேன்.

கூகுள் தேவதைதான் கன்னட ஆசிரியை. இப்பத்தான் சிறிய சிறிய வார்த்தைகள் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எனவே கில்லர்ஜி கன்னடத்தில் பின்னூட்டம் கொடுத்து பயமுறுத்தாமல் இருக்க புலியூர் பூஸானந்தாவையும், தேவதையையும் வேண்டிக் கொண்டு காவல் தெய்வங்களாகப் போட்டுவிட்டேன்!!!!!!!

அடுத்த பதிவுக்கு மேட்டர் வேண்டுமே! அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் மாட்டனாடறேன்!

-----கீதா





77 கருத்துகள்:

  1. நல்வரவு கீதா. மாற்றம் நல்லபடியாக ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சி.
    பங்களூரு கொஞ்சம் மசமசன்னு தான் இருக்கும்.
    பிரச்சினைகள் சீக்கிரம் தீர்ந்து கண்ணழகியின் துணையுடன்
    நல்வாழ்வு காண வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா..ஊர் பிடித்திருக்கிறது. பல ஊர்கள் மாறியிருப்பதால் வித்தியாசம் தெரியவில்லைம்மா...

      மிக்க நன்றிமா வாழ்த்துகளுக்கும்

      கீதா

      நீக்கு
  2. இடமாறுதல் பழக நமக்கே கொஞ்ச காலமாகும். ஒரு மாதிரி சமாளித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். கண்ணழகியும் சமாளித்தது சபாஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடம் மாறுதல் எல்லாம் பழகிய ஒன்றுதானே ஸ்ரீராம். பல ஊர்கள் மாறிய அனுபவம்....சமாளித்துவிடலாம். கண்ணழகி சமர்த்தாகவே இருக்கு...இங்கு வீட்டிற்குள் சுற்றி ஓடவும் சிறு இடம் இருக்கு...

      மிக்க நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. அங்கு நந்தினியா? அதில் ஆரஞ், பிங்க், பச்சை என்றெல்லாம் கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இங்கு நந்தினி. இங்கும் ஆரஞ்ச், மஞ்சள், பச்சை, டார்க் சிவப்பு எல்லாம் உண்டு. க்ரீம்/ஃபாட் பொருத்து....இங்கும் ப்ளூ இருப்பதாகத் தெரியுது 1.5 ஃபாட் ஆனால் வீட்டருகில் இருப்பதில் கிடைப்பதில்லை. பச்சை அல்லது ஆரஞ்ச்...பெரும்பாலும் பச்சை 3.5 ஃபாட்...இன்னும் ஆராய வேண்டும்...டோன்ட் மில்க் மில்க் பௌடர், பனீர் ஃப்ளேவர்ட் மில்க் ஸ்வீட்ஸ் எல்லாம் இருக்கு. நந்தினியில் ஒரு ஸ்வீட் ரொம்ப நன்றாக இருக்கும். இப்போது அது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நான் 14 வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்திருந்த போது பெரிய பாட்டிலில் ஃப்ளேவர்ட் மில்க் என்று நந்தினியில் கிடைத்தது செம டேஸ்டியா இருக்கும். ஆனால் இப்போது வேறு வடிவத்தில் ஆவின் போலதான் கிடைக்கிறது..சாப்பிட்டுப் பார்க்க வில்லை. மில்க் பௌடர் எல்லாமே இருக்கு ஸ்ரீராம். நேஷனல் லெவல்ல ஒவ்வொரு மாநிலமும் ஆனந்த் டயரி கீழத்தானே வருது. அமுல் சொல்லும் ஃபார்முலா படிதான் எல்லாமே செய்வார்கள். கேரளாவில் மில்மா....டெல்லியில் மதர்டயரி. ஆந்திராவில் விஜயா...

      கீதா

      நீக்கு
    2. ஸ்ரீராம் நார்மல் மில்க் என்று சொல்லப்படுவது ப்ளூ 3 % ஃபாட். 18 ரூ

      அடுத்து கொஞ்சம் ஃபேட் கூடுதல் 3.5 பச்சை - 20 ரூ

      அடுத்து நல்ல திக் பால் பாக்கெட் ஆரஞ்சு கலர்....22 ரூ...

      இந்த மூன்றும்தான் இங்கு எங்கள் வீட்டருகில் கிடைக்கிறது. பனீர் 200 கி 65 ரூ

      கீதா

      நீக்கு
    3. நந்தினில 'குந்தா' என்ற பால்கோவா வெரைட்டி கிடைக்கும். அவங்க கடையில் (நான் ஜெயநகர் 4வது பிளாக்கில் பார்த்து, வாங்கியிருக்கிறேன்) மில்க் ஸ்வீட் ரொம்ப சாஃப்டா ஆனால் புதிதா டிரேல வைத்திருப்பார்கள். ஒரு பீஸ் 10 ரூபாய் என்று. அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே இனிப்பாச்சே...

      நீக்கு
  4. அங்கேயே தண்ணீர் கஷ்டமா? அப்போ 'அவர்கள்' சொல்வது உண்மைதானா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பகுதியில் வாரத்தில் இரு நாட்கள்தான் வருமாம் அதுவும் சில சமயம் வருவதில்லையாம். டாங்கர்கள்...தான். இங்கும் பல ஃப்ளாட்களில் டாங்கர்தான் தண்ணி சப்ளை. நான் கூகுளில் கர்னாடகா நியூஸ் பார்த்தப்பா பவர் ஷார்ட்டேஜ் என்றும் தெரிகிறது. ஆனால் இங்கும் பல ஃப்ளாட்களில் போர் தான். எங்கள் பகுதியில் வரும் தண்ணீய்ரும் காவிரி தண்ணி கிடையாது. அது போல டாங்கரும் சப்பைத் தண்ணிதான்...நல்ல தண்ணியாக இல்லை. புறநகர் என்பதாலோ என்று தெரியலை...

      தண்ணி கஷ்டம் என்பதை விட நம்மூரைப் போல தண்ணீர் மேனேஜ்மென்ட் தான் சரியில்லை. இது எல்லா ஊருக்குமே பொருந்துமே.

      கீதா

      நீக்கு
  5. கற்றுக்கொண்ட சிறுதுளி கன்னடத்தில் முதல் வார்த்தை செலவழிந்து விட்டதா? மாடு மாடு என்று மாடி 'பேகு'வார்கள்...!!! Just for joke.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம்.... நானும் கீதா ரங்கனும் (ஏன்..குரோம்பேட்டையை மறக்காத குறும்பனும்) ஒரே ஊர்க்காரங்க... ஞாபகமிருக்கட்டும். (என்ன ஒண்ணு, என் பசங்க கன்னடிகா-அங்க பிறந்ததனால. கீதா ரங்கன் பையன் மலையாளி-ஹாஹாஹா)

      நீக்கு
    2. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஆனா என் பையன் மலையாளி இல்லை பாதி தமிழ் பாதி மலையாளி பிறந்த இடம் நாகர்கோவில்..!!

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம் ஒரு வார்த்தையை செலவழிச்சாச்சு ஆனா இதுதான் ரொம்பவே செலவழியுது இன்னொரு வார்த்தை (g)கொத்தில்லா..ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  6. மாற்றம் என்பது கடினமே
    வாழ்த்துகள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  7. நானும் இப்போது ஒரு வாரமாய் நந்தினியின் சகவாசத்துடன்..சொல்லிச் சென்றவிதம் அருமை.அதனாலேயே மீண்டும் ஒருமுறை வாசிக்கத் துவங்குகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமணி அண்ணா ரொம்ப நாளாச்சு. ஓ நீங்களும் இங்கு தானா? எங்கே இருக்கீங்க?

      மிக்க நன்றி அண்ணா..கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  8. ஆஹா..பெங்களுருக்கு வந்தாச்சா ..

    வாழ்த்துகள் கீதாக்கா..

    நாங்க பல வருசமா நந்தினி தான்..

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. ஹா ஹா ஹா...வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் டிடி...

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  10. முதலில் வாழ்த்துகள்...

    பெங்களூருவில் பல பிரபல பதிவர்கள் இருக்கிறீர்கள் இவ்வருடம் பதிவர் மாநாட்டை கப்பன் பார்க்கில் வைக்கலாமே...?

    மாட்லாடுறேன் என்பதே சரி என்று நினைக்கிறேன் (இதுவும் மிக்ஸ் கன்தமிழ்தான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாத்தாடுத்தினி என்பதுதான் சரியானவார்த்தை. (மாட்லாடுத்தினி என்று இருக்கலாம் இலக்கண ரீதியாக.. ஆனால் மாட்லாடு தெலுங்கு இல்லையா?)

      நீக்கு
    2. மன்னிக்கவும் தெலு(ங்)கை புகுத்தி விட்டேன் மறதிதான் காரணம்.
      (வயதும் பதினாறைத் தாண்டி விட்டதே)

      நீக்கு
    3. நான் கில்லர்ஜியைக் கேட்க வந்தேன் நெல்லை பதிலளித்துவிட்டார். ஸோ எனக்கு வேலை இல்லை!!

      மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      நீக்கு
  11. நான்ரெகுலரா வரவில்லை. எந்த ஊர் போய்டிங்கோ என்ன என்று யோசித்தேன். பெங்களூருவா? பழகிப்போச்சுன்னா கிளைமேட் பிடிச்சுடும். வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமாட்சிமா கருத்திற்கு. ஆமாம் பெங்களூரு தான். நன்றாக இருக்கிறது அம்மா.

      கீதா

      நீக்கு
  12. கண்ணழகி கூட இருப்பதால் நந்தினி யானால் என்ன விஜயா வானால் (ஆந்திரா) என்ன ?எல்லாம் இன்ப மயமே, ஊர் மாறியதற்கு வாழ்த்துக்கள் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா அதுவும் சரிதான் அருணா...அவள் இருப்பது நல்ல துணைதான்....மிக்க நன்றி அருணாகருத்திற்கு

      கீதா

      நீக்கு
  13. புது வீடு , புது இடம் மனது பிடித்த மாதிரி பொருந்தி போக வாழ்த்துக்கள்.
    கொத்தில்லா கொத்தில்லா என்று சொல்லாமல் கன்னடம் படித்து விடுவீர்கள்.
    ஏனென்றால் எல்லோரும் கன்னடத்தை படிக்க வைத்து விடுவார்கள்.
    அல்லி நோடு, இல்லி நோடு, நோடுதீரா, கேளிதீரா என்று பேச வேண்டியதுதான்.
    கண்ணழகி சமத்தாய் நீண்ட தூர பயணம் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி.
    தும்பசென்னாக்கி . பக்கத்து வீட்டு அக்காவிடம் கொஞ்சம் கற்றுக் கொண்டது மறந்து விட்டது.ஊட்டம் ஆகிதீரா, சாப்பிட்டு விட்டீர்களா, ரொம்ப நல்லா இருக்கிறது, அங்கே, பார், இங்கே பார் எல்லாம் கற்றுக் கொண்டது. வா எல்லாம் பா அங்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதிக்கா....புது இடம் வீடு எல்லாமே பிடித்திருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்!

      நான் கேட்ட முதல் வார்த்தை ஊட்டம் ஆகிதீரா தான். அடிக்கடி கேட்பதும் அதுதான். ஆனால் தமிழ் கலந்து வட்டார வழக்காகவும் சாப்பாடு ஆகிச்சா நும் கேட்கிறார்கள் சிலர். ஆமாம் வா என்பது பா!

      ஆனால் வருது என்று சொல்கிறார்கள். அக்கா உங்களிடமே கன்னடம் கற்றுக் கொண்டுவிடலாம் போல இருக்கே

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. சரி... ஃபீஸ் அப்புறம் அனுப்பிடுங்க.

      ஊட்டா ஆயித்தா - சாப்பிட்டாச்சா ஊட்டா ஆக்கித்தீரா - சாப்பாடு ஆயிடுச்சா.

      வா என்பது பா என்றால், பா என்பது ஹா. பால் - ஹாலூ.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஃபீஸ் அனுப்பிட்டா போச்சு...

      ஊட்டா ஆயித்தா - சாப்பிட்டாச்சா ஊட்டா ஆக்கித்தீரா - சாப்பாடு ஆயிடுச்சா.//

      ஆமா நெல்லை இந்த ரெண்டுமே கேப்பாங்க பக்கத்து வீட்டுல...பிள்ளைகள்..சோறு ஆக்கியாச்சானு தமிழ்ல கேட்பதுண்டு...ஸோ ஊட்டா ஆக்கித் தீரா புரிந்துவிட்டது...அது போல ஊட்டா ஆயித்தா...இல்லைனா சாப்பாடு ஆயித்தானும் ஆகித்தானும் கேட்கிறாங்க...(ஒரு வேளை என் காதுல ஆயித்தா ஆகித்தானு கேட்டுச்சோ என்னவோ...!!!.)

      பால் ...ஹாலு ஆமாம். அது போல மாவு இட்டு அரிசி மாவு வாங்க போனப்ப அக்கி இட்டு...அக்கி அரிசி நு ஏற்கனவே தெரியும்...ரெசிப்பிஸ் மூலம் கத்துக்கிட்டது..முன்னாடியே

      அது போல பக்கத்துவீட்டுக் குழந்தைகிட்ட என்ன சாப்பிட்ட என்றால் அன்ன சாரு என்பாள். சாம்பார் சாதம்

      சரி தினமும் எனக்கு க்ளாஸ் எடுங்க...நெல்லை...

      கீதா

      நீக்கு
    4. சாரு - சாத்துமதுன்னுதான் ஞாபகம். சாம்பார்னு தோணலை.

      நாகரத ஹாவு - நாகப் பாம்மு (பா-ஹா ஞாபகத்தில்)

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை சாரு நா ரஸம் தான். நான் தான் இங்கு அடிக்கும் போது சாம்பார் சாதம் என்று அடித்துவிட்டேன்...இது போன்ற சாப்பாடு வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சம் பல மாநிலத்து வார்த்தைகளும் தெரியும்...

      முந்தே ஓகி

      ஹிண்டே ஓகி , ஒலகே Baன்னி, எல்லி ஓகி போன்ற சின்ன சின்னதாகக் கற்று வருகிறேன்...

      அவர்கள் தினமுமே சாரு தான் செய்கிறார்கள்....

      நீக்கு
    6. பெங்களூருக்குள் நுழைந்த முகூர்த்தத்தில் பதிவுலகிலும் மீள்நுழைவு செய்திருக்கிறீர்கள். நந்தினி is the secret of my energy ! என்கிறீர்களோ, டெண்டுல்கரைப்போல ?

      வந்தவுடனே இந்த காவிரி ஆராய்ச்சி எதுக்கு? குமாரசாமி டாங்கரை அனுப்பராருல்ல? டாங்கர் (daangar) பண்ணி சாப்பிடுங்க! கரண்ட் இல்லன்னு கத்தவேண்டாம். அவசரமா அத டாங்கரில் அனுப்ப முடியாது..

      முந்தே ஓகி, ஹிண்டே ஓகி.. இதெல்லாம் என்ன? லத்தீனா, க்ரீக்கா? ஒருமண்ணும் புரியமாட்டேங்குதே? உங்கள் பாண்டித்யத்தை நினைத்தால் பயமா இருக்கு..

      என் பதிவிலும் உங்களுக்கு நேற்று சின்ன பதில் போட்டிருக்கிறேன்.

      நீக்கு
  14. தலைப்பு மிக அருமை. ஒரு வரிலயே இங்கிருந்து அங்கு சென்றதைச் சொல்லியது.

    எங்க கீசா மேடம் காவிரித் தண்ணீர் கேட்டு உங்கள்கிட்ட போராடுவாங்களோன்னு பயந்துகிட்டு உங்களுக்கே தண்ணீயில்லை என்று பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்துவிட்டீர்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லை....

      ஹா ஹா ஹா ஹா ஹா....மெய்யாலுமே இங்கும் தண்ணீர்ப் பிரச்சனையாமே!! நேஷனல் லெவல்ல தண்ணீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் முன்னிலாமே...உழவர் தற்கொலையும் இங்கு அதிகம் என்றும் சொல்லுகிறது புள்ளிவிவரம் ...அது சரியா என்று தெரியாது ஆனால் இங்கு வாரத்தில் இரு நாட்கள்தான் தண்ணீர் வரும் என்று சொல்கிறார்கள். கரன்ட் கட் வேறு இருக்கிறது. ஒரு வேளை புறநகர் என்பதால் புறக்கணிக்கப்பட்ட பகுதியோ?!!!!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா....பகுதி நன்றாகவே இருக்கிறது.

      கீதா

      நீக்கு
  15. நல்லது எங்களூருக்கு வந்து விட்டீர்கள் என் தொலை பேசியில் சார்ஜ் செய்ய முடியவில்லை சார்ஜர் பழுதாகி விட்டதுபோர் தண்ணீர் வருவதில்லையா டாங்கரில் வாங்கி கட்டுப்படியாகுமா வீடு குவர்ட்டர்சா இல்லை தனியார் வீடா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி சார். வீடு தனி வீடு சார். செவ்வாய் மற்றும் வெள்ளி அன்று வரும் என்று இப்போது சொல்கிறார்கள். சிலர் செவ்வாய் மற்றும் சனி என்று சொல்கிறார்கள். உலக அளவில் 25 நகரங்களில் அக்யூட் வாட்டர் ஷார்ட்டேஜ் என்ற புள்ளிவிவரப் பட்டியலில் பங்களூரும் இடம் பெற்றிருக்கிறதே ஸார்.

      இவர்கள் கல்லூரியிலும் தண்ணீர்ப் பிரச்சனைதானாம்.

      நாளை வருகிறதா என்று பார்ப்போம். எங்களுக்கு சனி அன்று வாங்கியிருப்பது இந்த சனிக்கிழமை வரை வந்துவிடும். செலவு குறைவுதான் சார். சென்னையில் இருந்து பழகிவிட்டது.

      கீதா

      நீக்கு
  16. புது ஊருக்கு வாழ்த்துகள்..

    எந்த இடத்தில் இருக்கோமோ! அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கிடனும். அதனால் எல்லாரும் குப்பை கொட்டும் இடத்தில் நீங்களும் கொட்டுங்க., இல்லன்னா, வண்டில சுமந்திட்டு போய் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேண்ட், ஹாஸ்பிட்டல்ன்னு தேடி அங்கிருக்கும் குப்பை தொட்டியில் போட்டுட்டு வாங்க.

    குப்பை கொட்ட இடமில்லாம வீட்டில் குப்பையை சேர்த்து வைக்கும் நீரெல்லாம் இந்தியாவுக்கே லாயக்கில்லை. யு ஆர் ஆண்டி இண்டியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி மிக்க நன்றி....பரவால்ல மீ ஆண்டி இண்டியன்னே இருந்துட்டுப்போறேன்...ஹிஹிஹிஹி....

      சரி இது கீதான்னு பார்த்தீங்கதானே??!!!!! ஹிஹிஹி ஒன்னுமில்ல நீரெல்லாம் நு போட்டுருக்கீங்களே அதான்...ஹா ஹா ஹா

      இனிதான் உங்க தளம் வரணும்...வரேன்...

      நீக்கு
  17. ஆவ் !!! வாங்க கீதா ..வெல்கம் ..

    ஒரு விஷயம் அதிர்ச்சியடைய வைத்தது அது அந்த காவிரிக்கே பஞ்சமா !!!!.எ .கொ .கீ இதுஉஉ

    கன்ணழகி நல்லபிள்ளையா டிராவல் பண்ணினதை கேட்டு மகிழ்ச்சி .நாம் ட்ராவல் பண்ணவோ இல்லை டே ட்ரிப்புக்கு பாக்ஸ் ரெடிபண்ணினாலோ ஜெசி எல்லாத்தையும் ஸ்மெல் பண்ணி பார்ப்பா .:)
    பெங்களூர் சிலிகான் சிட்டி என்றெல்லாம் சொல்றாங்க அங்கே குப்பை தொட்டி இல்லையா ???
    4/5 வயசில் பெங்களூரில் இருந்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் ஏஞ்சல் வந்தாச்சு....ஆமாம் இங்க காவிரிக்கே பஞ்சம்...பாருங்க கீதாக்கா கமென்டை....அதான் இப்ப பாருங்க காவிரிக் கரைலேயே இருக்காங்க அதுவும் கை எட்டும் தூரத்துல ஃபோட்டோ ஃபோட்டோவா எடுத்துப் போட்டு அதுவும் மொட்டைமாடி புகழ்!! அவங்க சொல்லிருக்கறது 90 லியே....

      என்னைக் கேட்டா காவிரிப் பிரச்சனை அப்படின்றத விட தண்ணீர் மேனேஜ்மென்ட் அது எந்த மாநிலமானாலும் சரி மேனேஜ்மென்ட் ஒழுங்கா செய்தா தண்ணிப் பிரச்சனை வராது...கட்டிடங்கள் எவ்வளவு பாருங்க..ரொம்பவே. கொடுமைதான் ஏஞ்சல் காவிரியயை பிறப்பிடமா கொண்டிருக்கும் மாநிலத்துக்கே இப்படி...

      ஜெசி நினைச்சு சிரிச்சுட்டேன்...க்யூட்!!!

      நாங்க புறநகர்ப் பகுதின்றதாலேயோ என்னவோ. நார்த் பெங்களூரு....குப்பைத் தொட்டி எங்குமே பொது வெளில பார்க்கல. டவுனுக்குப் போனப்பவும் கூட எங்குமே குப்பைத் தொட்டி இல்லை. கடைகள்ல மட்டுமே ஒரு அட்டைப் பெட்டி இல்லைனா ப்ளாஸ்டிக் டஸ்ட்பின் வைச்சுருக்காங்க. மத்தபடி ரோட்ல எங்கயுமே இல்லை. சிட்டிக்குள்ள தெரியலை. போய்ப்பார்த்தாதான் தெரியும். நீங்க பார்த்த பெங்களூர் இல்லை இப்ப இருக்கற பெங்களூரு.

      மிக்க நன்றி ஏஞ்சல்...

      கீதா

      நீக்கு
  18. கண்ணழகியை என்ன செய்திருப்பீங்களோனு நினைச்சேன். கேட்க நினைச்சு மறந்துட்டேன். கூடவே அழைத்து வந்ததுக்கு நன்றி. பெண்களூரு தண்ணீர் பிரச்னை உள்ள நகரம் எனக் கேள்விப் பட்டதாலேயே அங்கே நாங்க வீடு வாங்கவில்லை. நான் சொல்வது தொண்ணூறுகளில்! அப்போவே தண்ணீர்ப் பிரச்னை என்றார்கள். சில இடங்களில் தண்ணீர் கிடைக்குமாம். ஆனால் நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதோடு போக்குவரத்துப் பிரச்னை! இங்கே அரை மணியில் போகும் தூரம் அங்கே அரை நாள் எடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா கண்ணழகியும் சரி ப்ரௌனி இருந்தவரை அவளும் சரி எங்க கூடத்தான் எப்பவுமே. அவர்களை எங்கும் விட்டதுமில்லை மச்சினர் வீடு தவிர. எங்கும் விடவும் மாட்டோம் அக்கா. கூடவே அழைத்து வந்தது உங்களுக்குப் பிடித்தது அறியும் போது மகிழ்ச்சிக்கா அதுக்கு நன்றியும் சொன்னது மனது நெகிழ்ந்துவிட்டது.

      இப்பவும் சில இடங்களில் தண்ணீர் உண்டு ஆனால் போர் தான். மற்றபடி டேங்கர் என்றுதான் சொல்லுகிறார்கள். எங்கள் பகுதி புறநகர். கல்லூரியிலும் தண்ணீர் கஷ்டம்தானாம். சிட்டி பற்றி தெரியலை. சிட்டிக்குள் இருப்பவர்கள் சொன்னால் தெரியும். பானுக்காவும் நார்த் பங்களூர்தான். நான் கேட்க விட்டுப் போச்சு.

      முன்பு பிடிஎம் லே அவுட்டில் இருந்தப்ப மொட்டை மாடியில் ஒரே ரூம். தண்ணீர் வரும்...என்றாலும் அதற்குத் தனியாகச் சார்ஜ் செய்தார்கள். 15 வருடம் முன்பு அப்பவே அந்த ஒரே ஒரு ரூமுக்கு வாடகை 4000...அப்படிப் பார்த்தப்ப இப்ப இந்த வீடு பரவாயில்லை....

      ஆமாம் அக்கா ட்ராஃபிக்...கெம்பகௌடா பஸ் ஸ்டாண்டிலிருந்து 17-18 கி மீ தான் ஆனால் ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது பேருந்தில். அதுக்கு இப்ப ஸ்ரீரங்கத்தில் நிஜமாகவே நல்ல க்வாலிட்டி லைஃப் என்று சொல்லலாம். காவிரிக் கரை கோயில் என்று...

      கீதா

      நீக்கு
  19. சொந்தம், நட்புனு நிறையப் பேர் அங்கே தான் இருக்காங்க! ஆனாலும் அடிக்கடி பெண்களூருக்குப் போக முடிவதில்லை. :)

    பதிலளிநீக்கு
  20. அற்புதம். அனுபவங்களை மேலும் அறிய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  21. அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்.
    நலமா? தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
    தாங்கள் ஊர் மாற்றத்தைப் பற்றி பதிவாக விபரமாக எழுதியிருந்தது கண்டு தெரிந்து கொண்டேன். தறசமயம் இருக்குமிடம் வசதியாக உள்ளதா? நானும் என்னுடைய மன மாற்றத்திற்காக தங்கள் பதிவை படித்தேன். நானும் இப்படித்தான் வெளியில் வரவேண்டும். வேறு வழியில்லை. இல்லையென்றால் சோகம் என்ற கடல் என்னை மூழ்கடித்து விடும். தங்கள் அன்புக்கு மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலாக்கா உங்கள் வருத்தத்திற்கு இடையிலும் இங்கு வந்து வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி அக்கா. ஆமாம் அக்கா உங்கள் வருத்தம் மிக மிக ஆழமான ஒன்றுதான்...புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும்...ஆமாம் வலைக்கு வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக....எல்லோரையும் பாருங்கள் எழுதுங்கள்...கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் அக்கா...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...இது ஆறுதல் படுத்தக் கூடிய சிறு விஷயம் இல்லையே...தங்களின் அன்பிற்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. சகோதரி கமலா அவர்களின் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன். என்ன சொன்னாலும் தீராத துக்கம இது!

      நீக்கு
  22. வருகிறேன் கீதா, நேற்று வர இருந்தேன், ட்றுத்தின் முசுப்பாத்தியால எங்கேயும் எட்டிப் பார்க்கவில்லை ஹா ஹா ஹா கர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...மெதுவா வாங்க ஒன்னுமில்லை...அங்கு சொல்லியிருந்தோமே அது பொய் செய்தியாகத்தான் இருக்கும்...என்று...அது போல் அவர் நலம் என்று பதிவும் வந்துவிட்டது..மகிழ்ச்சியான விஷயம்

      நீக்கு
  23. ஓ கீதா, நீங்க பிரயாணத்தில் இருக்கிறீங்க வீடு மாற்றம் என அரசல் புரசலாக கொமெண்ட்ஸ் இல் படிச்சேன், எதுவும் கேட்கவில்லை, வந்ததும் சொல்லுவீங்க என விட்டு விட்டேன்.

    பெங்களூருக்கு மாற்றமோ? “பெங்களூர் நாட்கள்” என ஆரியா படம் வந்துதே.. அதில நல்லாத்தான் இருக்கு.

    தமிழ் நாட்டில் போர் அடிச்சுப் போச்சோ:))?:)..

    எங்கட ஸ்ரீராமை நெல்லைத்தமிழனை எல்லாம் விட்டுப்போட்டு தூர வந்திட்டீங்க கர்ர்ர்:)).. வர முந்தி.. பிரியாவிடை சொல்கிறேன் எனச் சொல்லி, அவர்களோடு ஒரு செல்பி எடுத்து இன்று போட்டிருக்களாம்.. சே..சே.. ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊ ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அடுத்த வாரம் பெங்களூரில். ஆனால் ஸ்ரீராம் தமிழகத்துக்குள்ளேயே ஏராளமாகப் பயணம் செய்கிறவர். ஹாஹா. அப்படி பெங்களூர் சென்றாலும், உடனடியாக காண முடியாதவாறு ரொம்பத் தள்ளி இருக்கிறார் கீதா ரங்கன் (இணையத்துல கொடுக்கற தொல்லை போதாது என்று நேரிலுமா என்று எண்ணியிருக்கலாம் எங்க க்கா)

      நீக்கு
    2. //எங்க க்கா)//

      ஹா ஹா ஹா இது டாப்பூஊஊஊஊ:).

      நீக்கு
    3. நினைச்சேன் என்னடா இது பூஸாரின் சத்தம் கேக்குதேனு நெல்லை க்கானு சொல்லிப் போட்டாறாம்...நெல்லை இணையத்துல இன்னா தொல்லை...நீங்க ஞானியைத்தானே தொறத்தி தொறத்தி இன்னும் ஞானியாக்கிட்டுருக்கீங்க...(அவரது காலை வாரி ஹா ஹா ஹா)

      போதும் போதும் அண்ணே...நீங்க பங்களூர் வைஸ் பார்த்தா சீனியராக்கும்...ஹிஹிஹிஹி...அதிரா இப்படி சூடுங்கோ இதைப் பாருங்கோ...

      நீக்கு
    4. ///போதும் போதும் அண்ணே.//

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழனை அப்பூடி எல்லாம் கூப்பிடக்கூடா:), அவரே ஜொள்ளிட்டார் தான் அண்ணன் அல்ல மாமா எண்டு:) ஹையோ ஹையோ:)

      நீக்கு
  24. என்ன இவ்ளோ தண்ணிப் பிரச்சனை எனச் சொல்றீங்க.. உண்மையில் தண்ணி இல்லை எனில் எப்படித்தான் வாழ்க்கை நடத்த முடியும், தண்ணித் தட்டுப்பாடில்லாத இடமாக பார்த்திருக்கலாமோ.. அங்கெல்லாம் குழாய்க் கிணறு அடிக்க முடியாதோ? யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வீடு குழாய்க் கிணறு அடித்தார்கள்.. அதனால தண்ணிப் பிரச்சனை இல்லை.

    இப்போதானே காவேரி கங்கை எல்லாம் முட்டி வழிஞ்சு இன்னமும் வற்றாமல்தானே ஓடுது.. பிறகென்ன புதுக்கதை தண்ணி இல்லை என..

    அவ்ளோ தூரம் செல்லங்களும் உங்களோடு பிரச்சனையே இல்லாமல் ரவல் பண்ணியிருக்கிறார்களே.. ஆனா பூஸ்களை இப்படிக் கொண்டு பொக முடியாது கர்ர்ர்:))).. கொஞ்சத்தூரம் கொண்டு போனாலே டெய்சி ஓவர் சத்தம் போட்டு நடுங்கிறா பயத்தில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் குழாய்க் கிணறு இருக்கு அதிரா. அவர்கள் விடும் தண்ணீரும் குழாக் கிணறு தண்ணீர்தான். இங்கே காவிரி தண்ணி எல்லாம் வரலை. வாட்டர் மேனேஜ்மென்ட் ப்ராப்ளம் அதிரா தண்ணீர் இல்லை என்று சொல்லுவதை விட...

      எங்கள் ஏரியாவுக்குத் தண்ணீர் விடுபவரைக் கண்டு பேசினோம். இப்ப தண்ணீர் பிரச்சனை இருப்பதால் ப்ரெஷர் இல்லையாம் அதனால் எங்கள் சம்ப் குழாய் உயரமாக இருப்பதால் தண்ணிர் ஏறி விழாது அதனால் கட்டியிருக்கும் பைப்பை இன்னும் தாழ வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கார். அதற்கான முயற்சிகள் நடக்க இருக்கு...ஹவுஸ் ஓனர் பெர்மிஷன் கொடுத்து அதன் பின் அந்த ஆளைப் பிடித்து வேலை நடக்க வேண்டும்...எஸ்டிமேட் கேட்டிருக்கோம்....பார்ப்போம்

      எங்கள் கண்ணழகியும் முன்பு பயப்படுவாள் இப்ப கிழவியாக்கும்...அவள் அம்மா நான் யங்கோ யங்கு!!!!! கிழவியானதால் கொஞ்சம் பக்குவப்பட்டுவிட்டாள். அப்புறம் வீட்டிலும் ஒரே துள்ளல் அவளுக்கு இங்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள் அருகில் எனவே பொழுது போகிறது...

      நீக்கு
  25. //கூகுள் தேவதைதான் கன்னட ஆசிரியை//

    கீதா நான் உங்களுக்கு கன்னடம் ஜொள்ளித் தரட்டோ? வன் மந்க்கு ஃபிறீஈஈஈஈஈ :)).

    என்னாது கில்லர்ஜிக்கு கன்னடம் தெரியுமோ? அவருக்கு உகண்டாப் பாசைதானே தெரியும் என நினைச்சேன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா அதிரா தமிழ்ல டி வாங்கினவங்களுக்குக் கன்னடம் எப்படியோ?!!!!!

      கில்லர்ஜிக்கு பல மொழிகள் தெரியுமாக்கும்....உகாண்டா பாசை உட்பட ஹா ஹா ஹா அவர் உகாண்டா பாசை பேசினால் நமக்கென்ன புரியப் போகுது...கொய்ம் மொய் நு ஏதாவது பேசுவார்..நாமளும் பேசிப்புடுவோம் என்ன சொல்றீங்க...

      நீக்கு
  26. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஊர் என்றுதான் சொல்லோணும்.. நூஊஊஊஊஉ என இழுத்துப் பேசக்கூடாதாக்கும் ஹா ஹா ஹா அங்கு நான் என்பதையும் நானூஊஉ எனத்தானே சொல்கிறார்கள்.. ஹா ஹா ஹா கேட்க நல்லா இருக்கும் ரசிப்பேன்.

    //புலியூர் பூஸானந்தாவையும், தேவதையையும் வேண்டிக் கொண்டு காவல் தெய்வங்களாகப் போட்டுவிட்டேன்!!!!!!!//

    ம்ஹூம்ம்....அல்லோஓஓஓஓ முதல்ல என் ஃபீசை... எக்கவுண்டுக்கு அனுப்பிப்போட்டு மிகுதியைக் கதையுங்கோ..:)) ஊக்கே?:)... ஒரு நாள் காவலுக்கு 100 பவுண்ட்ஸ் ஆக்கும்:)) ஜொள்ளிட்டேன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா காவல் தெய்வங்கள் எல்லாம் ஃபீஸ் வாங்குமோ?!!!! சரி சரி முதல்ல நீங்க உங்க செக் அக்கவுண்டை பெண்டிங்க் எல்லாம் க்ளியர் பண்ணுங்கோ...அப்புறம் நான் உங்க அக்கவுண்டுக்கு அனுப்பறேன்...ஹா ஹா ஹா அது இப்போதைக்கு அல்ல...ஸோ நானும் ...ஹிஹிஹிஹி..எப்பூடி தக்னிக்கி

      நீக்கு
  27. பதில்கள்
    1. ஓ வாங்க அரவிந்த்....மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு. உங்களைப் பார்க்க வரேன் வரேன்னு ஏமாத்திட்டேன் ஸாரிப்பா...அடுத்த முறை சென்னை வரும் போது கண்டிப்பா உங்களைப் பார்க்கறேன். அம்மாட்ட ரொம்ப கேட்டதா சொல்லுங்க...

      கீதா

      நீக்கு
  28. 31-ஆம் தேதி பின்னூட்டத்த படிச்ச மாதிரி தெரியலையேன்னு, 3-ஆம் தேதி வந்து சொல்றாப்புல போயிடுச்சே நெலம..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா நான் 30 ஆம் தேதி சில பதில்கள் கொடுத்திருக்கேனே...நீங்க 31 ஆம் தேதி போட்டீங்களா? கமென்ட் வரலியே....

      நன்றி அண்ணா வந்தமைக்கு

      நீக்கு
    2. மேலே, ரொம்ப மேலே, நெ.த.-வுக்கு நீங்க கொடுத்த பதிலுக்குக் (கன்னட பாஷைபற்றி) கீழேதான் என்னோடதும் அமைதியா ஒக்காந்திருக்கு- 31-ஆம் தேதிலேர்ந்து... காணாமல்லாம் போகலியே. கொஞ்சம் பெரிய மனசுபண்ணிப் பாருங்க. கோடிப் புண்ணியம்..

      நீக்கு
  29. வெல்கம் டு பங்களூரு! நாங்கள் இருக்கும் இடத்திலும் டாங்க்கர் லாரி தண்ணீர்தான். அதே போல மின்வெட்டும் இருக்கிறது. பவர் பேக் இருப்பதால் தெரிவதில்லை. எரிச்சல் தரும் ஒரு விஷயம் ட்ராஃபிக்!
    கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நானும் ஆறு மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுக்கா....பல ஏரியாக்கள் அப்படித்தான் போல.

      யெஸ் எரிச்சல் ட்ராஃபிக் மட்டுமே...மத்தபடி ஊர் பிடித்திருக்கு...கன்னடம் கணினி வழியாகவும், இங்க பக்கத்துல இருக்கற குழந்தைங்க வழியாவும் கத்துக்கலாம்னு இருக்கேன்...படிக்கறதுக்கும், பேசறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு...

      நீக்கு
  30. வருந்துகிறேன் சகோ! உடனே வர முடியவில்லை. அத்துடன் துளசிதரன் ஐயாவிடம் மன்னிப்பும் கோருகிறேன். இடையில் அவர் பல பதிவுகள் வெளியிட்டார். அவை எதையுமே எட்டிக் கூடப் பார்க்காமல், மீண்டும் நீங்கள் பதிவிடும்பொழுதுதான் நான் வருகிறேன். இது வேண்டுமென்று செய்ததில்லை; எதிர்பாராமல் நடந்ததுதான். அதற்காகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்!

    சுவையான பதிவு! வீடு மாற்றியதையே ஒரு பதிவாகத் தேற்றி விட்டீர்கள்! மகிழ்ச்சி! நீங்கள் இல்லாமல் எனக்குப் பதிவுலகமே களையிழந்தது போல், தொய்வடைந்தது போல் தோன்றியது. நானும் அவ்வளவாக ஏதும் எழுதவில்லை. இப்பொழுது நீங்கள் வந்து விட்டதால் நானும் நிறைய எழுதுவேன் என நினைக்கிறேன். பார்க்கலாம்! உங்களுக்கு அன்பான நல்வரவு!

    பதிலளிநீக்கு
  31. ஆஹா.... வருக வருக 👋

    பெண்களூருவில் புதிய அத்தியாயம் தொடக்கம்.

    சன்னாகிதிரா..... சொல்ப சொல்ப கன்னடா மாலும் ஹே..... :)

    தண்ணீர் கஷ்டம் .... பழகிவிடும்.....

    பதிலளிநீக்கு