வியாழன், 24 மே, 2018

காலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்


1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் இந்நாவலை எழுதி முடிக்கத் தைரியம் தந்தது.


அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸில் எழுதிய இடுகையின் சுட்டிதான் இது. அந்தப் பதிவும் இந்த புதினத்தில் வரும் ஒரு காதாபாத்திரத்திற்கு இணையான முக்கியமான பங்கு வகிக்கிறது. அதை, நீங்கள் இந்தப் புதினத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

பரிதாபத்திற்குரிய தாயைத் தாரமாக்கிய ஈடிபஸின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது போன்ற சம்பவங்கள் அரிதிலும் அரிதாய் நிகழ்கின்ற ஒன்றுதான். என்றாலும் எல்லோரும் அது போன்ற கசக்கும் உண்மைகளைக் கண்டும் காணாமலிருக்கத்தான் விரும்புகிறார்கள். அப்படி, காலம் செய்யும் கோலத்தால் சீரழிந்து போகின்றவர்கள் செத்துத்தான் போக வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் விருப்பம்.

அதனால்தான் பல இடங்களில் கயவர்களால் கற்பு சூறையாடப்படும் அப்பாவிப் பெண்கள் போராட பயந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். போராடும் ஒரு சிலரோ போராடி வெற்றி பெற்றாலும், அதன் பின் சாதாரண வாழ்க்கை வாழவியலாமலும் பெரும்பான்மையினரின் இகழ்வைத் தாங்க முடியாமலும் தலைமறைவாகி விடுகிறார்கள். இவ்விரண்டிலும் தங்களை நுழைத்துக் கொள்ள முடியாத பெரும்பான்மையினர் மனநோயாளிகளாய் மாறி நடைபிணமாகி நம்மிடையே வாழ்கிறார்கள்.

இப்படி, தான் இழைக்காத குற்றதிற்காக யாரும் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை என்ற கருத்தை வலியுறுத்தத்தான் இப்புதினம். பசி, , காதல், பேராசை, பொறாமை, அக்கிரமம், அநீதி , கடின உழைப்பு, தியாகம், நட்பு, நேர்மை போன்றவற்றைப் பற்றிய நல்ல புதினங்கள் எத்தனையோ இருக்கின்றன. அதனிடையே, இது போன்ற கேள்விக்குறியாய் வாழ வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்வதற்குத்தான் இப்புதினம்.

“அளவிலா விளையாட்டுடைய இறைவா! நீயின்றி ஓரணுவும் அசையாது”. எனவே, இது போன்ற சம்பவங்கள் நிகழக் காரணமாகும் காலம் செய்யும் இக்கோலங்களுக்கும் காரணம் நீயே. இது நீ செய்யும் குற்றமேதான். அதனால் தான் கவிஞரின் வரிகளை கடனெடுத்து இந்நாவலின் தலைப்பாக்கி இருக்கிறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் போது மனத்திரையில் நம் இதயத்தை நடிப்பாற்றலால் கொள்ளை கொண்ட திரு சிவகுமார், திருமதி சுமலதா, அமரர் மனோரமா, திரு அஜித், திருமதி ஊர்வசி, அமரர் முரளி போன்றவர்கள் வந்து போனதால்தான் அவர்களைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறேன்.

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. 

உரை எழுதித் தந்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, திருமதி தேனம்மை, திரு ராய செல்லப்பா ஸார் மற்றும் நூலழகு செய்த திரு பாலகணேஷ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



வரும் ஜூன் 17, ஞாயிறு அன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் (இந்தியா கேட் வடிவில் இருக்கும் கட்டிடத்தின் அருகே) மாலை 5 மணிக்கு, “காலம் செய்த கோலமடி”யின் புத்தக அறிமுக நிகழ்வு நடக்கவிருக்கிறது. திரு பாலகணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்த புத்தகத்தைப் பெறுபவர் திரு அரசன்.

திரு ராயசெல்லப்பா, திரு வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), திரு குடந்தை ஆர் வி சரவணன், திரு ஆவி, திரு கார்த்திக் சரவணன், திரு அரசன் உள்ளிட்டோர் புத்தகத்தைப் பற்றி அவர்கள் கருத்துகளைப் பகிர்வார்கள். இந்நிகழ்வு புத்தக வெளியீடு என்பதை விட புத்தக அறிமுகம், ஒரு பார்வை என்று கொள்ளலாம்.

----அன்புடன் துளசிதரன்



வியாழன், 10 மே, 2018

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே!

அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சிகள். இதோ கீழே உள்ள படத்தில் போன்றவை.

இது என் பால்கனி தோட்டமல்ல! நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் சீசனின் போது எடுத்தது. 

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுபூச்சியக்காக்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என்று கறிவேப்பிலையைச் சுற்றி சுற்றிப் பறந்திட, கறிவேப்பிலை, ஏன்? சுத்தி சுத்தி வந்தீகனு கேட்டது. வாச கறிவேப்பிலையே என்ற வண்ணத்துப் பூச்சிகள் கறிவேப்பிலையின் மீது அமர்ந்தன. வண்ணத்துப் பூச்சிகளைப் புகைப்படம் எடுக்க ஆசை இருந்தாலும் அருகில் சென்றால் அவை இலையின் மீது அமராமல் பறந்துவிடும் பாவம் என்று புகைப்படம் எடுக்கவில்லை.

சிறிது நாட்கள் கழித்துப் பார்த்தால் கறிவேப்பிலை செடியில் கரும்பச்சை நிறத்தில் புழு ஒன்று தென்பட மற்றொரு புழு இலையின் அடியில் இருந்தார். கேமரா ரிப்பேருக்குப் போயிருந்ததாலும் மொபைலில் படங்கள் சரியாக வருவதில்லை அதன் கேமராவில் ஏதோ பிரச்சனை போலும் என்று நினைத்துவந்ததாலும் படம் எடுக்காமல் இருந்த நான் இதனை வந்தது வரட்டும் என்று எடுத்தேன். நன்றாக வரவில்லை என்று தெரியும். மொபைலில் கேமராவில் என்ன பிரச்சனை? காரணம் பதிவின் முடிவில்!!! ரொம்ம்ம்ம்ப அறிவுக் கொழுந்து நான் என்பது புரியும்!! 

இதோ அம்புக் குறி இட்டுக் காட்டியிருக்கிறேன் பாருங்கள் அதுதான் முதலில் வந்த கரும்பச்சை நிறப் புழு(க்கள்.) கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான் தெரிவார். மற்றொருவர் புகைப்படத்தில் சரியாக வரவில்லை. அதனால் இங்கில்லை


தினமும் பார்த்தாலும் அத்தனை வித்தியாசம் டக்கென்று தெரியவில்லை. 4, 5 நாட்களில் பார்த்தால் அசந்துவிட்டேன் வியப்பில். கண்ணிற்கு எதுவும் புலப்படவில்லை. புழுக்கள் என்ன ஆனார்கள்? என்று பார்த்தால் கொழு கொழுவென்று பச்சையோடு பச்சையாக இலைகளில் உட்கார்ந்து கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு இலைகளைக் காணவில்லை. என்ன அழகாய் கொழு கொழுவென்று இருக்கிறார்கள் பாருங்கள்!! கேமரா என்றால் இன்னும் நன்றாக, அழகாகத் தெரிந்திருப்பார்கள். இருந்தாலும் க்ளிக்கினேன்.

அவற்றை ரசித்தேன் ரசித்தேன். அதன் அழகை ரசித்துக் கொண்டே இருந்தேன். அவை நகர்வதே தெரியவில்லை. சரி அவை சுதந்திரமாகத் தின்னட்டும் என்று படங்கள் எடுத்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன். மகனுக்கும் அனுப்பினேன். இந்தப் படங்களைத்தான்!! 

மகன் சொன்னான் பாவம் அம்மா. அதை ஒன்னும் செஞ்சிடாதே. சாப்பிட்டா சாப்பிடட்டுமே இப்ப என்ன? நீ கடைல வாங்கிக்கமா கறிவேப்பிலை எல்லாம். “அடேய்! மகனே! "ஒன்னும் செஞ்சிடாதே"?? உனக்குச் சொல்லிக் கொடுத்த எனக்கே பாடமா?”


அடுத்த 4 தினங்களில் பார்த்தால் நான் வியப்பின் உச்சியில். எல்லா இலைகளையும் நன்றாகத் தின்று செடியை மொட்டை அடித்து இருந்ததைப் பார்த்ததும், கேமராவும் ரிப்பேர் சரியாகி வந்திருந்ததால் உடனே க்ளிக்கிவிட்டேன். அப்போது இந்தக் கொழு கொழு பச்சையான புழுக்களைக் காணவில்லை. எங்கே போனார்கள்?

பாருங்கள் எப்படி சாப்பிட்டுருக்கிறார்கள் கமுக்கமாய்! ஹா ஹா ஹா

என்னாச்சு மீண்டும்? காகம் வந்து கொத்திக் கொண்டு சென்றுவிட்டதா? என்று தோன்றிட கறிவேப்பிலையை ஆராய்ந்தால் ஆஹா! அவை இலையையே கூடாரம் போல் கூடு கட்டிக் கொண்டு கருவறையாக்கிக் கொண்டுவிட்டன. இது எப்படி செய்தன என்பதைப் பார்க்க முடியவில்லை. அவை எப்போது செய்யும் என்று தெரியவில்லையே! அனிமல் ப்ளானெட் எல்லாம் செய்வது போல் அங்கே எப்போதும் ஓடும் கேமரா ஒன்றை வைக்க வேண்டும் போல!   

எப்படி இருக்கிறது பாருங்கள். புழு இருப்பது தெரிகிறதல்லவா? இலையையே கூடாரம் போல் செய்து கருவறையாக்கிக் கொண்டு!!!
இது மற்றொருவரின் கருவறை


சரி அடுத்து எப்படியும் வண்ணத்துப் பூச்சி வருமே அதைப் பார்க்க வேண்டும் என்று காத்திருந்து காத்திருந்து.....!காத்திருந்தேன். என்று எப்போது ப்ரௌன் நிறமாகியதோ? பச்சை ப்ரௌன் நிறமாகியிருந்தது. உள்ளுக்குள் இருக்கா என்றும் தெரியவில்லை. அதைத் தொட்டுப் பார்த்து அதற்குத் தொந்ததரவு கொடுக்க வேண்டாமே என்று தோன்றிட விட்டுவிட்டேன். நாள் பார்த்தால் கூடு வெற்றிடமாகத் தோல் மட்டும் இருந்தது போல் தோன்றிட தொட்டுப் பார்த்தேன். வெறும் கூடு மட்டுமே இருந்தது. வண்ணத்துப் பூச்சி பிறந்து பறந்து போய்விட்டது போலும். வண்ணத்துப் பூச்சி வெளியில் வருவதைப் பார்க்க இயலவில்லை என்று. வருத்தமாகிவிட்டது! அவள் பறந்து போனாளே! என்னை மறந்து போனாளே!! ஹா ஹா ஹா…  

கூடு மட்டும். பூச்சியைக் காணவில்லை

ஓ! பட்டர்ஃபளை பட்டர் ஃப்ளை! ஏன் விரித்தாய் சிறகை!

இந்த வருடம் சீசன் தொடங்கட்டும்! விடுவேனா? இம்முறை என் கறிவேப்பிலை பூக்கத் தொடங்கிவிட்டது! எனவே வண்ணத்துப் பூச்சிகள் நிச்சயமாக வரும். இம்முறை ஆதியிலிருந்து எடுத்திட வேண்டும். விடமாட்டேன்! விடமாட்டேனாக்கும்!! 

  மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலை. (பொத்தி வைச்ச கறிவேப்பிலை மொட்டு!!!) இரவில் எடுத்த புகைப்படம். நேற்று ஒரு சிறு குளியல் அவளுக்கு

இது பகலில் எடுத்தேன் மொட்டுவிட்டிருக்கும் கறிவேப்பிலையை. எவ்வளவு அழகாக இருக்கிறாள் இல்லையா? குளித்தும் அதற்குள் தூசி படிந்து அழுக்காகிவிட்டாள். குளிப்பாட்ட வேண்டும். பூ பூக்கும் ஓசையைக் கேட்கக் காத்திருக்கிறேன்

தற்போது என் கேமரா முழுவதும் பழுதடைந்துவிட்டது. எனவே மொபைலில் தான் எனது மூன்றாவது விழி படங்கள் எல்லாம் எடுக்கிறேன். இதோ இந்த கடைசி இரு படங்களும் மொபைலில் தான் எடுத்தேன். கேமரா இல்லாதது ஏதோ போல இருக்கு. மொபைலில் சில நன்றாக வருகின்றன. சில படங்கள் நன்றாக வருவதில்லை. என் மொபைலும் மொபைல் கேமராவும் அத்தனை ஹை டெக் இல்லை.

என் மொபைல் கேமராவில் என்ன பிரச்சனை இருந்தது? மொபைலில் கேமரா சரியில்லை படங்கள் எல்லாம் ஏதோ புகை மூடியது போல வருகிறது என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் திடீரென்று மூளையில் பல்பு எறிந்திட கேமராவை பார்த்தால்.....அதன் மேல் ஏதோ இருப்பது போல் புலப்பட.....அறிவுக் கொழுந்தே புது கேமராவின் லென்ஸ் மேல் கண்ணாடிப் பேப்பர் ஒட்டிர்யிருப்பாங்க அதுகூடவா உனக்குத் தெரியாது? தெரியலை? அதை ஒன்றரை வருஷமா அகற்றாமலேயே இருந்திட்டு மொபைல் கேமரா சரியில்லை சரியில்லை அப்படினு புலம்பிக்கிட்டு...என்னா அறிவு!! ஹிஹிஹிஹிஹி!!! பேப்பர் இருப்பதைக் கண்டுபிடிச்சு அதை அகற்றிய இந்த அறிவுக் கொழுந்தை, குழந்தையை எல்லாரும் ஜோரா கைதட்டி பாராட்டுங்கப்பா!!!

-------கீதா



வியாழன், 3 மே, 2018

மனதைக் கலங்கடித்த காணொளி


இன்று காலையில் வெங்கட்ஜி அவர்களின் பதிவாகிய மனதை விட்டு அகலாத காட்சி… யை வாசித்துவிட்டு வேதனைப்பட்டு அங்கு நான் கொடுத்திருந்த கருத்து இதுதான். மாமியார் மருமகள் சண்டை, இப்படி அடிப்பது துரத்துவது எல்லா இடங்களிலும் ப்ரவலாகக் காணப்படும் ஒன்று என்றாலும் கூட இங்கு விட வட இந்தியாவில் ரொம்பவே அதிகமாக நடக்கும் போலத் தெரிகிறது....பாவம் அக்குழந்தை. இந்த அனுபவங்கள் அக்குழந்தைக்கு நல்ல பாடங்களைப் புகட்டினால் நல்லது. வேதனைதான். 

அதை வாசித்து வேதனைப்பட்டு கருத்து அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு வீடியோ ஒன்று வந்தது. இது எங்கு நடந்த சம்பவம் என்று தெரியவில்லை என்றாலும் எங்கள் ஊரில் செய்திகளில் முதன்மையாகப் பேசப்பட்ட கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவமும் வேதனை அளித்தது. வெங்கட்ஜி எழுதியிருந்த நிகழ்வே வேதனை என்றால் இது அதைவிடக் கொடுமையானது. மனதை மிகவும் பாதித்த ஒன்று. காணொளியை இணைத்துள்ளேன். உங்களுக்குப் பார்க்கும் மன தைரியம் இருந்தால் பாருங்கள்.  

எனக்கு அந்தக் காணொளியை முழுவதும் பார்க்க இயலவில்லை. கொஞ்சம் பார்த்ததுமே மனம் வேதனை அடைந்திட கண்ணில் நீர் நிறைந்து கோபம் தலைக்கேறியது. இப்படிப்பட்டவர்கள் நாளைக்கு அவர்களின் குழந்தைகளால் அடித்துத் துன்புறுத்தப்படுவார்கள்தானே என்றும் தோன்றியது. எத்தகையக் கொடுமைக்காரியாக இருந்திருக்க வேண்டும் அப்பெண்? மனதில் கொஞ்சம் கூட ஈவு , இரக்கம் இருந்திருக்காதா? இப்படியானவர்களை என்ன செய்யலாம்? 

பாலக்காட்டில், புதுப்பரியாரம் எனும் இடத்தில் 80 வயது மூதாட்டி தன் சொத்தைத் தன் மகனின் பெயரில் மாற்றிய பின் மருமகள் அத்தாய்க்கு உணவு சரியாகக் கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்துவதை அருகில் இருந்தோர் ரகசியமாக வீடியோ எடுத்து வீடியோவை வைரலாக்கிட, செய்தி பரவியது இந்தக் காணொளி பாலக்காட்டில் நடந்த சம்பவத்தின் வீடியோ இல்லை ஆனால் வேறு எங்கோ நடந்தது என்றாலும் பாலக்காட்டிலும் கிட்டத்தட்ட இதே போன்றுதான் நடந்தது. அதுவும் செய்திகளில் வந்தது.

படுக்கையில் இருக்கும் மாமியார் கழித்த மலத்தை அவர் மகன் எடுத்துச் சுத்தம் செய்யலை என்றும் மாமியார் சொன்னபேச்சு கேட்கவில்லை என்பதற்கும் அடிக்கிறார்களாம் அப்பெண். 

நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்றும். நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்றும் தான் பிரார்த்திப்போம். ஆனால் இந்தக் காணொளியைச் சிறிது கண்டதுமே இறைவனிடம், அந்த ஜீவனுக்கு விடுதலை அளித்துவிடு. இங்கு இப்படித் துன்புறுவதை விட இக்கொடுமையிலிருந்து காப்பாற்றிவிடு என்று பிரார்த்திக்கத் தோன்றியது.  கருணைக் கொலை பற்றி இன்னும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதை மனம் ஏற்க முடியாத நிலையில் இப்படியானவற்றைப் பார்க்க நேரிடும் போது இப்படிப் பாவப்பட்ட ஜீவனாக வாழ்வதை விட மரணம் அடைவதே மேல் என்று தோன்றத்தான் செய்கிறது. நம்மால் ஏதும் செய்ய இயலாத நிலையில் இப்படியான எண்ணங்கள் தோன்றுகிறது.

எங்கள் ஊரில் நிகழ்ந்த சம்பவத்திற்கு எப்படியோ தற்போது ஊடகங்கங்களும் அதை வெளியிட இப்போது, அவ்வூர் பஞ்சாயத்து, எம் எல் ஏ, சமூக நலச் சங்கங்கள் எல்லாம் கூடி விட்டதாகத் தெரியவந்தது. நல்லதொரு வழி பிறக்கும் என்று தோன்றுகிறது. அம்மூதாட்டி இக்கொடுமையிலிருந்து விடுதலை அடைந்து நல்ல முறையில் காப்பாற்றப்பட வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.

இப்படி மருமகள் மாமியாரைக் கொடுமைப்படுத்துவதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறதாம். மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துவதையும் நாம் அவ்வப்போது கேள்விப்படத்தான் செய்கிறோம். இப்படிக் காலம் காலமாக நடந்து வரும் மாமியார் மருமகள் பிரச்சனை, கொடுமை இவற்றிற்கு முடிவே பிறக்காதா? இல்லையா என்று தோன்றுகிறது. 


பகிரப்பட்ட காணொளி வேறு ஆனால் கிட்டத்தட்ட இதே போன்ற சம்பவம்தான்...பாலக்காட்டிலும்.... மன திடம் இருந்தால் பாருங்கள்

----துளசிதரன்