சனி, 24 பிப்ரவரி, 2018

2 கிலோ அரிசி + 100 கிராம் மல்லிப் பொடி = மரணம்

பிஎஃப் கணக்கை முடிப்பதில் ஏற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய புதுநகரம் பள்ளிக்கு என் இருசக்கர வாகனத்தில் (பைக்கில்) சென்ற போது வழியில் தேநீர் அருந்த ஒரு தேநீர் கடையில் நிறுத்தினேன். அங்கிருந்த செய்தித் தாளில், கைகள் கட்டப்பட்டுக் கண் கலங்கி நிற்கும் மதுவின் புகைப்படத்தைக் கண்டதும் என் கண்களில் நீர் நிறைந்தது. அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளி செல்லும் வரை நிறைந்த கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

திங்கள், 12 பிப்ரவரி, 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 3

முதல் பகுதி, இரண்டாம் பகுதிகளின் சுட்டிகள் இதோ...



நண்பர்கள் முன்னே….நான் பின்னே கிளிக்கிக் கொண்டு…

1263 படிகள். ஏறும் இடத்திலிருந்து நம் மூதாதையர்களின் ஆட்டம் தொடங்குகிறது. அதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். என்று முடித்திருந்தேன். நிறையவே இடைவெளி வந்துவிட்டது இந்தப் பயணப்பதிவில். இணையம் வேறு சரியாக இல்லை. படங்களைப் பதிவேற்றம் செய்வதில் ரொம்பச் சிரமமாக இருந்தது. நினைத்த போது இணையம் வரும் போகும் என்ற நிலை. நாளை சரியாகும் என்று நினைக்கிறேன்.

படியில் ஒரு தும்பி..உடனே ஒரு க்ளிக். தெரிகிறதா?

படிகளை ஏறிக் கடக்கும் போது ஆங்காங்கே நாங்கள் 5 நிமிடம் போல சற்று ஓய்வு எடுத்துவிட்டுத் தொடர்ந்தோம். அப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில், என் கேமரா ஒத்துழைத்த தருணங்களில் நான் சில காட்சிகளைப் படம் பிடித்தேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் அடையவேண்டிய கோயில் இருக்கும் மலை உச்சியைப் பார்த்தால் அது நந்தி வடிவில் இருக்கும் என்று எங்களுடன் வந்த, ஏற்கனவே 6 முறை சென்ற அனுபவம் உள்ள நண்பர் சொல்லவும் பார்த்தால் ஆம் நந்தி வடிவம்.

தோழி நளினி எடுத்த புகைப்படம். மலையின் உச்சி நந்தி வடிவில்

இவ்வடிவம் காலப்போக்கில் மழை, காற்று, வெயில் என்று இயற்கைச் சுழலில் மாறுமோ? மாறலாம். நிச்சயமாக மாறும் என்றே நினைக்கிறேன். ஆனால், அதற்குப் பல வருடங்கள் ஆகலாமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. கிளிக்கிக் கொண்டோம்.

குழுவில், சாப்பாடு மூட்டைகளையும், கொரிக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் அடங்கிய பைகளைக் கொண்டு செல்வதை மோப்பம் பிடித்த நம் மூதாதையர்கள் அவர்களிடம் வம்பு செய்யத் தொடங்கினார்கள். வம்பு ரசிக்கும்படி இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டுமே! என் மைத்துனர், தான் சுமந்த சாப்பாட்டு முதுகுப் பையைத் தன் அருகில் வைத்து அமர்ந்திட, நாங்கள் குரங்கார்களைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க ஒரு குரங்கார் மெதுவாக வந்து மைத்துனர் வைத்திருந்த சாப்பாட்டுப் பையின் ஜிப்பை மிக லாகவமாகத் திறந்தாரே பார்க்கணும்! நான் அவரைப் படம் பிடிக்க முயற்சி செய்ததைப் பார்த்த குரங்கார் “ர்ர்ர்ர்ர்” என்றிட, நான் எங்கேனும் பிடுங்கிவிடுவாரோ என்று கேமராவை மூடி வைத்துவிட்டேன். நாம் பையை அப்புறப்படுத்த முயன்றால் குரங்காருக்கும் கோபம் வரும் என்பதால் மைத்துனர் அமைதியாக இருந்திட எங்களில் ஒருவர் கம்பைக் காட்ட குரங்கார் நகர்ந்தார். 


பாருங்கள் இந்தக் குரங்கார் உணவு கேட்டுக் கைநீட்டுகிறார்…என்ன அழகு இல்லையா? இதை அப்பவே இங்குச் சொல்ல நினைத்து விட்டேன்.

நாங்களும் நடக்கத் தொடங்கினோம். அங்கு இருந்த மரங்களில் காய்ந்த கிளைகளில் இருந்து கம்புகளை ஒடித்து எடுத்துக் கொண்டோம். மேலிருந்து கீழே இறங்கியவர்களும் எங்களிடம் கம்புகள் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். குரங்கார்கள் தண்ணீருக்கு ரொம்பவே அலைந்தார்கள் பாவம்! அங்குச் சென்ற மக்கள் சிலரிடம் வம்பு செய்திருப்பார்கள் போலும் அங்கு தண்ணீருடன் எறியப்பட்டிருந்த பாட்டில்களில் இருந்த தண்ணீரை சிலர் மூடியைத் திறந்து குடித்தார்கள். சிலர் மூடியைத் திறக்க இயலாமல் பாட்டிலின் அடியில் பல்லால் கடித்து ஓட்டை போட்டு, சொட்டும் தண்ணீரை அழகாகக் குடித்தார்கள். கண்கொள்ளாக் காட்சி!

மூதாதையர்களுக்கு ஜிப் பழகியிருப்பதால், ஜிப் என்றாலே பை என்ற நினைப்பு போலும். பேன்ட் ஜிப்பிலும் கை வைத்தார்கள்! எனவே கையில் பையிருந்தால் கம்பில்லாமல் நடப்பது உசிதமல்ல.

அழகான நீரோடை
மழை பெய்தால் ஓடும் ஆறு போலும்.

ஏறும் போது ஓர் இடத்தில் அழகான நீரோடை. உடனே ஒரு கிளிக் எடுத்துக் கொண்டேன். சற்று தூரம் ஏறியதும் வலது புறம் சல சல என்ற சத்தம் கேட்கவும் இன்னும் கொஞ்சம் ஏறித் தேடிய போது அங்கு தண்ணீர் கொஞ்சமாக ஆறு போல் ஓடுவது தெரிந்தது. மழை பெய்தால் ஓடும் ஆறு போலும். கொஞ்சம் முனைந்து இறங்கினால் அருகில் செல்ல முடியும் என்றாலும் மீண்டும் ஏறி பாதைக்கு வரும் போது சறுக்கிடலாம் என்பதாலும் நேரமும் இல்லை என்பதாலும் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். மீண்டும் ஏறத் தொடங்கினோம்.

வழியில் இப்படி ஒரு சிவலிங்கம்…கூடாரம் வைக்கப்பட்டு
ஏறும் போது எடுத்த சில காட்சிகள்…

மரத்தின் கீழே தெரிவது கடையின் கூடாரம்.. 

வழியில் கால்வாசி தூரம் கடந்த பின் கடை இருக்கிறது. மேலே கோயிலின் நுழை வாயில் வரை சற்று தூர இடைவெளியில் தோராயமாக ஒரு அரை கிலோமீட்டர் தூர இடைவெளியில் சிறிய கடைகள் இருக்கின்றன. விடுமுறை நாட்களிலும், பௌர்ணமி தினங்களிலும், விசேஷ நாட்களிலும் மட்டுமே நிறைய மக்கள் மலை ஏறுவதால் இக்கடைகள் இந்த நாட்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. கிராமத்திலிருந்து இங்கு வந்து கடையை நடத்துபவர்கள் இங்கேயே தங்கி மீண்டும் தங்கள் வீட்டிற்குச் சென்று விடுகின்றனர். கடைகள் சிறிய கூடாரம் போல் இருக்கிறது. ஸோலார் பேனலை வெளியில் வைத்து சூரிய ஒளி சேமித்து இரவு நேரங்களில் சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தால் கடைகள் சிறு வெளிச்சத்தில் இயங்குகின்றன என்று சொன்னார்கள். எப்படிப் பொருட்களைக் கொண்டு வருகின்றார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

இங்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை ரூ40. குழிப்பணியாரம், கேப்பைக் கூழ், இட்லி, வடை, டீ, காஃபி, மூலிகை சூப், சுக்கு காபி என்று கிடைக்கிறது. கிராமத்து அதுவும் மலையில் உள்ள கடைகளில் கூட இலைகள் மறைந்து பேப்பர் தட்டுகள் அவதாரம் எடுத்துப் புகுந்திருப்பது தெரிந்தது. சிறிய பேப்பர் கப்புகளில் காபி, டீ, சுக்குக் காபி. மூலிகை சூப் (காபி, டீ, சுக்குக் காபி ரூ 10. மூலிகை சூப் ரூ 20) அத்தனை தூரம் தண்ணீர் எடுத்துச் செல்வது கடினமாயிற்றே! குறிப்பாக எல்லாக் கடைகளிலும் குழிப்பணியாரம் கிடைக்கிறது. படிகளின் அருகில் இருக்கும் கடைகளில், அங்கிருக்கும் படிகளில் அமர்ந்து சாப்பிடலாம். பாறைப் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வெளியில் சம தரையுள்ள இடம் இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி பாய்கள் அல்லது ஷீட்கள் விரித்து வைத்திருக்கிறார்கள். அங்கு அமர்ந்து உண்ணலாம். ப்ளாஸ்டிக் பக்கெட்டுகளைக் குப்பைத் தொட்டிகளாக வைத்திருக்கிறார்கள். கேமரா ஒத்துழைக்க மறுத்ததால் படம் பிடிக்க முடியவில்லை.


படிகள் முடிந்ததும் பாறைக்கற்கள் பாதை தொடங்குகிறது ஏற்றமாகத்தான். ஒரு சில இடங்களில் மட்டும் காலை பாறைக் கற்களின் மீது ஊன்றி ஏற முடியும். பல இடங்களில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டி கவனமாகக் கைகளையும் ஊன்றி நடக்க வேண்டும். பாறைக் கற்களில் நடக்கும் போதும் குரங்கார்களின் விளையாட்டு தொடர்ந்தது. இதோ சில படங்கள்.


அப்புறம் கொஞ்சம் தூரம் கை பிடித்து ஏறுவதற்கு ஏற்ப கம்பி பதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இடையில் சில பகுதிகள் உடைந்திருக்கிறது. இங்கும் காலை நாம் கவனமாக ஊன்ற வேண்டும். இல்லை என்றால் இடுக்கில் கால்கள் இறங்கிவிட வாய்ப்புண்டு. கம்பிகள் இருக்கும் பகுதி முடிந்ததும் மீண்டும் பாறைகளில் கைகளை ஊன்றியும், பிடித்துக் கொண்டும் ஏற வேண்டும்.

எங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட்.

எங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட். அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்து சில வருடங்கள் ஆகின்றன. மிக மிக ஜோவியலானவர். மிகவும் “ஸ்வீட்டான” மனிதரும் கூட நாங்கள் அவர் பிரச்சனைகள் எதுவுமில்லாமல் ஏற வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்க அவரோ எங்களுக்கு முன்னர் ஏறி முதலில் மலைக் கோயிலை அடைந்தவர். மலையில் ஏற முடியுமா என்று யோசிப்பவர்கள் கூட இப்பதிவைப் பார்த்து இதோ எங்கள் நண்பரைப் பார்த்து அவரைப் போல மன உறுதியுடன், உற்சாகத்துடன் ஏறிட ஒரு ஊக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


ஒரு இடத்தில் நாங்கள் அமர்ந்த போது எங்களுடனேயே எங்கள் அருகில் நண்பர் குரங்காரும் அமர்ந்தார். நீங்களும் அவருடன் பேசி, அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருங்கள்… பாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும், கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…


ஏறுவோம்….

--------கீதா

ஊக்குக் குறிப்பு: பதிவு சிறிது என்றாலும். செல்ல முடியாத பலருக்காகவும் எடுத்த புகைப்படங்களை இங்குக் கொஞ்சம் அதிகமாகவே தந்துள்ளேன்.  




சனி, 3 பிப்ரவரி, 2018

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்து…

கடந்த தினம் கேரளா நிதியமைச்சர் திரு. தாமஸ் ஐஸக் கேரள மாநில பட்ஜெட்டை வெளியிட்டார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பணப்பற்றாக்குறையில் தள்ளாடும் கேரள அரசின் செலவுகளைக் குறைத்து வருமானத்தைக் கூட்ட ஆவன எல்லாம் செய்து, பாராட்டிப் பேச அதிகம் ஒன்றுமில்லாத பட்ஜெட்டை வெளியிட்ட அவர், புத்திசாலித்தனமாகப் பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைத்து தப்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.