சனி, 6 ஜனவரி, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்........கேட்டால் கேளுங்கள்

உங்களிடம் சில வார்த்தைகள்…..கேட்டால்கேளுங்கள் இது தான் மதுரை சகோவின் தலைப்பு. இத்தலைப்பை கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன் மதுரை உங்கள் அனுமதியுடன்…மதுரைத் தமிழனின் தொடர் பதிவு அழைப்பு ஏஞ்சல் வழி வந்தடைந்தது. 

அனுபவம் எனும் எனது மிகப் பெரிய ஆசிரியர்

Image result for அனுபவம் தத்துவம்
நன்றி தமிழ்கவிதைகள்.காம்

மதுரைத் தமிழனின் பதிவை வாசித்ததுமே ஏஞ்சல் அல்லது அதிரா விடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்ததுதான். எனவே மனம் யோசிக்கத் தொடங்கியது. எதை எழுத என்று. ஒன்றா ரெண்டா? அடித்துப் போட்டவை அத்தனை அனுபவங்கள் சிறுவயது முதல் இன்று வரை…..இந்த நிமிடம் வரை….

புடம் போட்ட பொன் என்று சொல்வது எனக்கு மிகவும் பொருந்தும். இன்னும் இன்னும் என்று ஒவ்வொரு அனுபவமும் என்னைப் புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் அனுபவமே அதுவே மிகப் பெரிய ஆசிரியராக, வழிகாட்டியாக இருக்கும். எனக்குச் சிறுவயது முதல் அப்படியே! எனது ஒவ்வொரு அனுபவமும் கற்றுக் கொடுத்த பாடத்திற்கு. கொடுத்த விலை அதிகம் தான் ஆனால், விலைமதிக்க முடியாத பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆற்றின் நீரில் பாறைத் துண்டுகள் எப்படி நீரோடு உருண்டு, உருண்டு, முட்டி மோதி பண்பட்டு அழகான கூழாங்கற்களாய் நம் கைகளில்  கிடைக்கிறதோ அப்படி நான் இன்னும் வாழ்க்கை நதியில் முட்டி மோதி உருண்டு கொண்டிருக்கிறேன். பண்படுவதற்கு இன்னும் நிறைய தூரம் உருள வேண்டும்.  

குறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ என்னை மாற்றுகிறது என்று சொல்வதை விட. எல்லாமே கலந்து கட்டி என்னைச் சுழற்றி அடித்த அனுபவங்கள்தான் என்னைச் சிந்திக்க வைத்துப் புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் நான் கற்ற பாடம் நாம் பிறரை மாற்றுவதை விட நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன் நம் அணுகும் முறையையும் மாற்றிக் கொள்ளலாம் என்பதே. அத்துடன் கூடியவரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன் கண்டிஷனல் லவ். கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதும். எனது எம் ஏ வகுப்பில் பாடம் எடுத்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்லியது, “டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” என் மனதில் ஆழப் பதிந்த ஒன்று அனுபவத்தினால்.

என்னைச் சுற்றியிருந்த, சுற்றியிருக்கும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் பல பாடங்களைக் கற்கிறேன். அது யாசிப்பவராகக் கூட இருக்கலாம். ஒரு சிலரிடமிருந்து நாம் எப்படி இருக்கக் கூடாது என்று ஒரு சிலரிடமிருந்தும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சிலரிடமிருந்தும் வீட்டனுபவமும், வெளியுலக அனுபவமும் கற்றுக் கொடுத்தது. 

நான் விளையாடிய பாம்புக்கட்டத்தைக் கூட நல்ல படிப்பினையாகப் பார்த்தேன். வாழ்க்கை என்பது அவ்வளவுதான் என்ற மிக உயரிய பாடம். ஏணி ஏற்றிவிட்டாலும், பாம்பின் வாயில் அகப்பட்டால் கீழே மட்டுமில்லை, நடுத்தெருவிற்குக் கூட வரலாம் என்ற பாடம். பிஸினஸ்/ட்ரேட் விளையாட்டிலிருந்தும்! தாயக்கட்டம் மற்றும் ஆடு புலி ஆட்டம் இவற்றிலிருந்தும் கற்றுக் கொண்ட பாடம் வாழ்வில் தோல்விகள் வரலாம் ஆனால் மனம் தளர்ந்திடாமல் நேர்மறையாகக் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். தோல்விகளும் சரி வெற்றிகளும் சரி நிரந்தரமானவை அல்ல. தற்காலிகமானவையே என்ற பாடம். அது இன்றும் கை கொடுக்கிறது. கற்றதை அப்படியே என் மகனுடன் இவற்றை விளையாடும் போது அவனுக்கும் விளையாட்டாய்க் கடத்தினேன்..

சிறு வயதில் மிகவும் ஏழ்மையில், நெருங்கிய உறவினர்களைச் சார்ந்து அவர்களுடன் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததாலோ என்னவோ ஏற்பட்ட அனுபவங்கள் அப்போதிருந்தே வாழ்க்கையை மிகவும் எளிமையாக, பொருட்களின் மீது பற்றில்லாமல், ஆனால் மனதை மட்டும் எந்தச் சூழலிலும் மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது.

சில வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் “நீங்கள் இருப்பது உங்கள் சொந்த ஃப்ளாட் தானே?” என்று கேட்டதும், :”எங்களுடையது என்று சொல்லுவதற்கில்லை. இன்று எங்களிடம். நாளை யாரிடமோ” என்றுதான் என் மனதிலிருந்து பதில் வந்தது. எனது என்று சொந்தம் கொண்டாட இவ்வுலகில் எதுவும் இல்லை என்ற பாடத்தையும் நான் என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டாலும் இன்னும் மனம் பண்பட வேண்டும். 

சிறு வயதில் நம் மனதில் ஒரு சில நல்ல விஷயங்கள் மிக மிக ஆழமாக பசுமரத்தாணி போன்று பதிந்துவிடும். அவை நம் இறப்பு வரை கூட வரும். என் வீட்டுச் சூழலினால் இழந்த நட்புகள் அதிகம் என்பதால் சாதி, மதம், ஏழ்மை, பணக்காரர் பார்க்கக் கூடாது உண்மையான அன்பை, நட்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற உயரிய பாடத்தையும் கற்றேன்.

நான் பிறந்ததிலிருந்தே என்னைத் தன் மகளாக வளர்த்த என் இரு அத்தைகளிலும் பெரிய அத்தை தனது 27 வது வயதில் மரணம் அடைந்த போது மரணம் என்றால் என்ன என்று தெரியாத வயதில் நிகழ்ந்த அந்த நிகழ்வு மனதில் ஆழப் பதிந்ததால் வளர்ந்த பின் மரணங்கள் கற்பித்த பாடம், குறிப்பாக யாருடைய மனதையும் வேதனைப்படுத்தக் கூடாது. ஒரு வேளை வேதனைப் படுத்தியிருந்தால் உடனே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் இல்லையேல் சில சமயம் அவர்களிடம் மன்னிப்பு கேட்கக் கூடமுடியாமல் அதன் முன்னரே அவர்கள் மரணம் அடைந்திடவும் நேரிடலாம் என்ற பாடம். 

என் கல்லூரிக் காலத்தில் இரண்டாவது அத்தை தன் இளம் வயதிலேயே கணவரை இழந்த போது நடத்தப்பட்ட சில சடங்குகளும் அதன் பின் அத்தை எந்த நிகழ்விலும் பங்கு கொள்ளாமல் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதும் என் மனதை நொறுக்கியது. நான் என் கல்யாணத்தில் முதலில் ஆசி வாங்கியது அவரிடமும் என் தாத்தாவை இழந்திருந்த என் பாட்டியிடமும்தான். அப்படியான பெண்களிடம் அவர்களை ஒதுக்காமல் முன்னிலைப்படுத்துவது இப்போதும் அது என்னிடம் தொடர்ந்து வருகிறது.

திருமணத்திற்கு முன்னான வாழ்க்கை தந்த பாடமான எந்தவித எதிர்பார்ப்புமின்றி வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன தைரியம் திருமணத்திற்குப் பின்னும் ஏற்பட்ட அனுபவங்களையும் எதிர்கொள்ள உதவியது மட்டுமின்றி பாடங்களும் கற்பிக்கிறது. அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கை முறை ஏற்கனவே மனதில் பதிந்த எளிய வாழ்க்கையை  மேலும் அழுத்தமாகப் பதிய உதவியது. அவரது வாழ்க்கை முறைகள் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும் அவரிடம் கற்ற “இருப்பது போதும். மகிழ்ச்சி” இப்போதும் கை கொடுக்கிறது. 

பயணங்கள் தந்த பாடங்கள் ஒருபுறம். விதண்டாவாதம், வாக்குவாதம் செய்யக் கூடாது, ஒரு சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனமே சிறந்த தீர்வு என்று இன்னும் நிறைய சொல்லலாம். சில என் கதைகளில் வரலாம்.

ஆனால் ஒன்று……..என்னதான் அனுபவங்களும், பொன்மொழிகளும், அறிவுரைகளும் நமக்குக் கிடைத்தாலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் மனம் நினைத்து உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நம்மை அவை மாற்றும் அல்லது திருத்தும். இல்லையேல் விழலுக்கு இரைத்த நீர்தான். இதுவும் எனக்கு அனுபவப் பாடம்! இன்னும் கற்றுக் கொண்டே  இருக்கிறேன். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. பொறுமையாக நம் அனுபவப்பாடத்தினைக் கூர்ந்து நோக்கிக் கற்றால்.....வாய்ப்பு தந்த ஏஞ்சல் மற்றும் மதுரைத்தமிழனுக்கு மிக்க நன்றி.

இத்தொடர் பதிவுக்கு...




இவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

--------கீதா...

(துளசி அரையாண்டுத் தேர்வு விடைகளைத் திருத்தல், கேரளா யூத்ஃபெஸ்டிவல் என்று கொஞ்சம் நேரப் பளுவினால் எழுத இயலவில்லை என்பதைத் தெரிவிக்கச் சொன்னார்.)

111 கருத்துகள்:

  1. அனுபவப் பாடம் அருமை. தொடர் பதிவுக்கு தொடர்ந்து அழைக்க நண்பர்கள் கிடைப்பது சிரமம் என்றே நினைக்கிறேன். கில்லர்ஜி என்னை இதில் சிக்க வைத்துவிட்டாரே.

    பதிலளிநீக்கு
  2. ஹை வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா!! முதலில் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

    ஹா ஹா ஹா ஆமாம் நண்பர்கள் கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான். இப்போது எழுதுபவர்கள் மிகவும் குறைவாகிவிட்டது...இது அப்படி உறங்கிக் கிடக்கும் வலையுலகை எழுப்பத்தான்...மதுரை தொடங்கியிருக்கிறார்...கில்லர்ஜி உங்களையும் சிக்க வைத்துவிட்டார் ஆம் கண்டேன்...நான் உங்களை சிக்க வைகக் நினைத்திருந்தேன் அப்புறம் கில்லர்ஜியும் நானும் நேற்று பேசிக் கொண்டபடி யாரை அழைக்கலாம் என்பதை இருவரும் தீர்மானித்துக் கொள்வோம் ஒரே நபர்களை அழைக்காமல் தவிர்க்கலாம் என்று...மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வாங்க மதுரை....வாங்க...தொடர் பதிவைத் தொடங்கி வைச்சுட்டீங்க/...இனி எழுதப் போறவங்களுக்கு அழைக்க நண்பர்கள் கிடைப்பது சிரமம் என்பதால் மூன்று பேர் என்று கில்லர்ஜியும் நானும் நேற்று பேசிக் கொண்டோம்...அப்படி 3 அழைப்புகள்...

      மிக்க நன்றி சகோ வாய்ப்பு கொடுத்தமைக்கு

      நீக்கு
  4. ///டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” ///


    சரியாகத்தான் சொல்லி இருக்கிறார் அந்த ஆசிரியர்... அது போலத்தான் வோட்டுக்கு பணம் வாங்குவது தப்பு என்று மிக மிக கஷ்டப்படும் ஏழைகளிடம் சொல்லவதும் அப்படி அவர்களிடம் சொல்லுவதற்கு பதிலாக வாங்குங்கள் ஆனால் வாங்கிவர்களுக்கு வோட்டு போடுவதற்கு பதிலாக யார் நல்லவர் என்று படுகிறதோ அவர்களுக்கு போடுங்கள் என்று சொல்லாம்

    பதிலளிநீக்கு
  5. ம்... ஆஜர் நான் படிக்கப்போறேன்ன்ன்ன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான உளவியளான தத்துவங்கள் நிறைந்த கட்டுரை நான் இரண்டு முறை படித்தேன் புரியாமல் அல்ல!

      விரும்பிய வார்த்தைகள் நிறைந்து கிடந்தன.... வாழ்த்துகள் தொடரை
      விரைவில் நிறைவு செய்து பிறரையும் அழைத்தமைக்கு....

      நீக்கு
    2. கில்லர்ஜி வரேன் கருத்திட...விருந்து அழைப்பு....உறவினர் எல்லாம் நாளை இரவு ஊருக்குப் போயிடறாங்க வெளிநாடு...அதான்...

      நீக்கு
    3. மிக்க நன்றி கில்லர்ஜி உங்களை மீண்டும் வாசிக்க வைத்த கட்டுரையாக வந்தமைக்கு...மிக்க நன்றி

      நீக்கு

  6. ///எங்களுடையது என்று சொல்லுவதற்கில்லை. இன்று எங்களிடம். நாளை யாரிடமோ” என்றுதான் என் மனதிலிருந்து பதில் வந்தது///


    மிக பக்குவப்பட்ட ஆத்மாவாகிவிட்டீர்கள் போல இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தனை அனுபவங்கள் மதுரை மிகச் சிறுவயதிலிருந்தே....இப்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...அந்த அனுபவங்கள்...

      எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கூட அவரது தொடர் கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார்...கடையில் விற்பதற்கு பல பழைய பொருட்கள் இருந்ததாம்...அப்போது அவர் சிந்தனை நேற்று வரை ஒரு வீட்டில் இப்போது கடையில் நாளை யாரிடமோ...நிரந்தம் இல்லை எதுவும் என்று...

      பின்னர் வருகிறேன் பிற கருத்துகளுக்கு......விருந்து அழைப்பு...செல்ல வேண்டும்....அதனால்...

      நீக்கு

  7. ///எங்களுடையது என்று சொல்லுவதற்கில்லை. இன்று எங்களிடம். நாளை யாரிடமோ” என்றுதான் என் மனதிலிருந்து பதில் வந்தது///

    தேம்ஸ் நதிக்கரையில் உள்ளவரிடம் நெக்லஸ் பற்றி கேட்டால் இப்படிதான் பதில் சொல்லுவாரா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அந்த நெக்லஸ் ப்ரேஸ்லெட் வடிவில் என் கையில் இருக்கிறது அவரது செக்ரட்டரி எனக்குப் பரிசளித்தார். நானோ நகைகள் போடுவதில்லை..அன்பான பரிசு எனவே வைத்திருக்கேன்...நாளையே அது யாருக்கேனும் போகும் சுழல் கோப்பை போல..ஹா ஹா ஹா ஹா

      நீக்கு
  8. //இளம் வயதிலேயே கணவரை இழந்த போது நடத்தப்பட்ட சில சடங்குகளும்//

    மனதை நொறுக்கி போடும் இந்த போலிஸ் சடங்குகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மதுரை சகோ எனக்கும் இப்படிப் பல தோன்றும்...மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  9. //இளம் வயதிலேயே கணவரை இழந்த போது நடத்தப்பட்ட சில சடங்குகளும்//

    மனதை நொறுக்கி போடும் இந்த போலிஸ் சடங்குகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ எனக்கும் இப்படிப் பல சமயங்களில் தோன்றும்....மிக்க நன்றி சகோ கருத்திற்கு

      நீக்கு
  10. என் மாமியாருக்கு என் வீட்டுக்கார் சேர்த்து ஐந்து மகன்கள், ஒரு மகள். எல்லாத்துக்கும் எங்க வீட்டு விசேசத்துக்கு அவங்கதான் முன்னுக்கு நிக்கனும். நிப்பாங்க. சில வருசங்களுக்கு முன் அவங்க வீட்டுக்கார் இறந்துட்டார். எங்க வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு எத்தனை கெஞ்சியும் சபைக்கு வரல. அப்புறம் நிகழ்ச்சி முடிஞ்சதும் அவங்க காலில் விழுந்து ஆசி பெற்றோம். இப்ப நினைச்சாலும் மாமா அழுவாரு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை நெகிழ வைத்தது ராஜி உங்கள் கருத்து. எனக்கே அப்படித் தோன்றியது என்றால் உங்கள் மாமாவுக்கு எப்படி இருக்கும்...

      நன்றி ராஜி கருத்திற்கு

      நீக்கு
  11. அருமையான பதிவு..

    நல்ல விஷயங்களை - நம்மிடம் ஈர்த்துக் கொள்வதற்கும் நாம் தவம் செய்திருக்கவேண்டும்..
    இப்படியான நண்பர்களால் மகிழ்ச்சி எல்லை மீறுகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை செல்வராஜு சகோ...நல்ல விஷயங்கள் நம்முள் செல்வதற்கும் நமக்குக் கொடுப்பினை வேண்டும்..ஆம் நல்ல நண்பர்கள் வட்டம் இங்கு சகோ...இல்லையா எனக்கும் அந்த மகிழ்ச்சி உண்டு. தினமும் எல்லோருக்காகவும் பிரார்த்தனையும் செய்வதுண்டு...எல்லோரும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று...மிக்க நன்றி சகோ தாங்களும் மகிழ்ச்சி அடைவதற்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. அருமையான பதிவு . என்னுடைய தாழ்மையான கருது , ஏழ்மை இந்தியாவில் நிறைய விஷயங்களை கற்று தருகிறது, நல்ல படிப்பு வருகிறது , உழைக்கும் மனப்பான்மை வருகிறது , ஓரளவுக்கு வம்பு தும்புக்குள் செல்லாமல் வாழ்க்கையை சீராக்குகிறது . நானும் என் வலைப்பதிவில் நினைவுகளாக நிறைய எழுதி இருக்கிறேன் ..நன்றி

    http://trichisundar.blogspot.com/2009/07/8.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ. தங்களது பதிவுகளையும் வாசிக்கிறேன். மிக்க நன்றி தாங்கள் முதல் தடவையாக எங்கள் அத்ளத்திற்கு வந்தமைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  13. நின்று நிதானமாகப் படித்தேன். ஒவ்வொரு அனுபவமும் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைந்து விடுகின்றன. அபார்ட்மெண்டில் மேலே இருப்பவர் தன்னுடையது என்கிறார். அதே போல கீழே இருப்பவரும், பக்கவாட்டில் இருப்பவர்களும் தங்களுடையது என்னும் போது எனக்கெது சொந்தம் என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் இளங்கோ சார்... நமக்கு வாசல்தான் சொந்தம். எந்தச் சமயத்திலும் உலகைவிட்டு கிளம்பத் தயாரா இருக்கணும்.

      நீக்கு
    2. மிக்க நன்றி தமிழ் இளங்கோ சகோ...ஆம் ஒவ்வொரு அனுபவமும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப அமைந்துவிடும்தான்...

      நீக்கு
  14. நல்ல ஒரு மெசேஜ் தரும் படத்துடன் தொடங்கி இருக்கிறீர்கள். சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும், அவர் தரும் அனுபவமும் பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் நிறையவே கற்கலாம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும்..மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  15. //பண்படுவதற்கு இன்னும் நிறைய தூரம் உருள வேண்டும். //

    அவையடக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நிஜம்மாவே ...இன்னும் நிறைய பண்பட்ட்டுக் கற்க வேண்டும்...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  16. //நாம் பிறரை மாற்றுவதை விட நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன் நம் அணுகும் முறையையும் மாற்றிக் கொள்ளலாம் என்பதே.//

    நல்ல விஷயம். சுலபமும் கூட.

    பதிலளிநீக்கு
  17. //அத்துடன் கூடியவரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன் கண்டிஷனல் லவ். கொஞ்சம் கஷ்டம்தான். மனிதர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதும்.//

    இதுதான் என் கொள்கையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் உங்கள் கொள்கைய்ம் அதுதான் என்று...மிக்க நன்றி

      நீக்கு
  18. பொதுவாக நீண்ட பதிவுகள் எழுதும் நீங்கள் அழகாக, பொதுவாக, சுவாரஸ்யமாக, சுருக்கமாக எழுதி விட்டிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா...மிக்க நன்றி ஸ்ரீராம்..நிறைய கட் செய்துட்டேன் முதல் காப்பியிலிருந்து

      நீக்கு
    2. ஸ்ரீராம் நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்ல நினைச்சேன் ஒரு வேளை நான் சொன்னதும் அய்யயோ நாம் சின்ன பதிவாக போட்டுவிட்டோமோ அதனால் அடுத்த பதிவை பெரிய பதிவாக போட்டுவிடுனும் என்று கீதா நினைத்துவிடுவார்கள் என்பதால் நான் சொல்லாமல் சென்று விட்டேன் ஹீஹீ

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா மதுரை.............உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...அப்ப கண்டிப்பா அடுத்த பதிவு பெரிசுதான்!!!!!!! ஹா ஹா ஹா ஹா...


      நீக்கு
    4. இப்படி சொல்லி என்னைபயமுறுத்தி இணையத்தில் இருந்து கட்டாய ஒய்வு கொடுத்து அனுப்பும் சதியாக அல்லவா தெரிகிறது

      நீக்கு
  19. //உங்களிடம் சில வார்த்தைகள்........கேட்டால் கேளுங்கள்//

    ஹா ஹா ஹா அவ்வ்வ்வ்வ்.. இப்போ எங்கு பார்த்தாலும் ஒரே தலைப்பு..
    உண்மைதான் கீதா.. அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்கள் கொஞ்சமல்ல.. நீங்க சொல்லியிருப்பதைப்போல, அதை நாம் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும்போது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா..முதல்ல நான் மாற்றிய தலைப்பு வந்திருச்சு அப்புறம்தான் இந்தத் தலைப்பை வைச்சுட்டு மாற்றிய தலைப்பை உள்ள கொடுத்திட்டேன்...ஆமாம் அனுபவங்கள் நிறையகற்றுத் தரும் ஆனால் அதை உணர்ந்து ஏற்றால் தான் அது நம்முள் நுழைந்து மாற்றும் இல்லைனா சும்மா வேஸ்ட்..

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  20. //எதை எழுத என்று. ஒன்றா ரெண்டா? அடித்துப் போட்டவை அத்தனை அனுபவங்கள் சிறுவயது முதல் இன்று வரை…..இந்த நிமிடம் வரை…//

    அதேதான், இந்த விசயத்தில் நம் வயதளவுக்கு அனுபவமும் உண்டெல்லோ:) ஹா ஹா ஹா எழுதி முடிச்சிட முடியாது..

    ///குறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ என்னை மாற்றுகிறது என்று சொல்வதை விட. எல்லாமே கலந்து கட்டி என்னைச் சுழற்றி அடித்த அனுபவங்கள்தான் என்னைச் சிந்திக்க வைத்துப் புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. //

    உண்மை, எனக்கும் அப்படித்தான், ஆனா எனக்கென்னமோ கண்ணதாசன் அங்கிளின் அர்த்த முள்ள இந்துமதம் பல தடவைகள் படிச்சுப் படிச்சு.. இப்போ கூட மனதில் கொஞ்சம் சங்கடம் வந்தால் அதை எடுத்துப் படிப்பேன்.. எல்லாம் பறந்திடும்... அவரால்தான் நான் சின்ன வயதிலிருந்தே நிறைய மாறி வருகிறேன்... உலகம் எப்படிப்பட்டது.. வாழ்க்கை எப்படிப்பட்டது.. எது நிலையானது இப்படிப் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதேதான், இந்த விசயத்தில் நம் வயதளவுக்கு அனுபவமும் உண்டெல்லோ:) ஹா ஹா ஹா எழுதி முடிச்சிட முடியாது..//மியாவ் :) அதென்னமோ அப்பப்போ உண்மையான வயசை 61 கட்டிக்கொடுக்குது உங்க கருத்துக்கள்

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் அண்ட் அதிரா ஆமாம் இன்னும் நிறைய இருக்கு கத்துக்கிட்டது......

      அதிரா நல்ல அனுபவம் இல்லையா கண்ணதாசன் அங்கிளின் புத்தகம் உங்களுக்கு உதவுவதும்...

      நீக்கு
  21. //அத்துடன் கூடியவரை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன் கண்டிஷனல் லவ். கொஞ்சம் கஷ்டம்தான்.//

    உண்மைதான் , நான் விரும்புவோரை.. படுபயங்கராக லவ் பண்ணுவேன்.. ஆனா அதே நேரம் கொஞ்சம் எதிர்பார்ப்பும் இருக்கும் ஹா ஹா ஹா:)).. அதாவது என்னைப்போல கொஞ்சமாவது அவர்களும் இருக்கோணும் என எதிர்பார்ப்பேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் போல இருக்கணும்னு நினைக்காட்டாலும் வேறு வேறு விதங்களில் கூட சில சமயம் கடினமாக இருக்கும்...என்றாலும் கூடியவரை ப்ராக்ட்டிஸ் செய்ய முனையலாமெனு நினைப்பேன்..அவ்வளவுதான்...மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  22. //என் வீட்டுச் சூழலினால் இழந்த நட்புகள் அதிகம் என்பதால் சாதி, மதம், ஏழ்மை, பணக்காரர் பார்க்கக் கூடாது உண்மையான அன்பை, நட்பை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற உயரிய பாடத்தையும் கற்றேன்.//

    அழகு... நானும் இப்படித்தான்.. மனிதரை மனிதராக மட்டுமே பார்ப்பேன்.. பணக்காரராக பெரீஈஈய சாதியாக(அது எதுவென்றே எனக்குத் தெரியல்ல ஹா ஹா ஹா).. என்னவாக இருப்பினும் அவர்களிடம் அன்பு இல்லை சிரிக்கத் தெரியவில்லை எனில் அவர்களை என் லிஸ்ட்டிலிருந்து தூக்கி விடுவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான் அதிரா அன்பு இல்லை எனில் நம்மால் ஏற்பது கடினம் தான் அங்குதானே இந்த எதிர்பார்ப்பில்லாத அன்பு வருகிறது எனவே கூடுதலாக ஒட்டி உறவாடவில்லை எனினும் வெறுப்பு வராமல் தாமரை இலை தண்ணீர் போல இருந்துவிட்டுப் போலாம்..அதைத்தானே எல்லா மதமும் போதிக்கிறது இல்லையா...நாம் மனிதர்கள் கொஞ்சம் கஷ்டம்தான்..

      நீக்கு
    2. நான் ஏழை பணக்காரன் சாதி மதம் பார்ப்பதில்லை நான் பார்ப்பதெல்லாம் ஏழையோ பணக்காரானோ குளித்து சுத்தமாக இல்லையென்றால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது பாடி நாத்தம் எனக்கு ஆகாது பெண்கள் காலையில் எழுந்ததும் தலையை வாராமல் மற்றவர்கள் முன்னால் வந்தால் எனக்கு பிடிக்காது

      நீக்கு
  23. //திருமணத்திற்கு முன்னான வாழ்க்கை தந்த பாடமான//

    உண்மை, நானும் திருமணத்துக்கு முன்னமே.. கணவரை எப்படிக் கவனிக்கோணும், சந்தேகப்படக்கூடாது, குழந்தைகளை எப்படி நடத்தோணும் என்றெல்லாம், ஊரில் உள்ளோரைப் பார்த்து நல்லதை எடுத்து கெட்டதைக் கழிச்சு என்னை ரெடியாக்கி வச்சிருந்தேன் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அதிரா நல்லாவே நினைச்சுருக்கீங்க...

      ஆனா எனது அனுபவம் தந்த பாடம் வேறு அதிரா அதாவது திருமணத்திற்கு முன்னரே கிடைத்த பல அனுஅப்வங்கள் வாழ்க்கையை எதிர்நீச்சல் போட என்னைத் தயார்படுத்தி இருந்தது அதுதான் தி முன் கிடைத்தது...வாழ்க்கையை அணுகும் முறை...குறிப்பாக பள்ளி கல்லூரியில் கிடைத்த நல்ல விஷயங்கள்...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
    2. எங்க வூட்டுகாரம்ம திருமந்த்திற்கு முன்னால் ஆனந்தவிகடன் ஜோக்குகளை நிறைய படித்து தயார் பண்ணி இருப்பார்கள் என நினைக்கிறேன் அதனால்தான் கணவரை பூரிக்கட்டையால் நன்றாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்

      நீக்கு
  24. அருமையாக சொல்லி முடிச்சிட்டீங்க கீதா, துளசி அண்ணனுக்கும் நிறைய பள்ளிக்கூட அனுபவங்கள் இருக்கும்.. நேரம் கிடைக்கும்போது எழுதச்சொல்லுங்கோ அவசரமில்லை..

    ஹா ஹா ஹா என் லிஸ்ட்டில் இருக்கும் இரு லாப் எலிகள் இங்கும் வந்து விட்டனர் ஹா ஹா ஹா...

    எழுதும்வரை விரட்டுவோம் திரும்ப திரும்ப அழைத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசியிடம் அப்புறமேனும் எழுதச் சொல்லியிருக்கேன்...பார்ப்போம்...

      ஆமாம் தெரியும் நீங்களும் நான் சொன்ன இருவரை அழைத்திருப்பது...பரவாயில்லை ..

      விரட்ட முடிகிறதானு பார்ப்போம் ஹா ஹா ஹா

      நீக்கு
    2. //துளசி அண்ணனுக்கும் நிறைய பள்ளிக்கூட அனுபவங்கள் இருக்கும்.. நேரம் கிடைக்கும்போது எழுதச்சொல்லுங்கோ அவசரமில்லை//

      பள்ளிகூட அனுபவமா ? ச்சே அவர் மதுரைத்தமிழன் மாதிரி மோசமான ஆள் கிடையாது அதுமட்டுமல்ல அதையெல்லாம் அவர் எழுத மாட்டாரு

      நீக்கு
  25. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையிலும், "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பதற்கேற்ப நெருங்கிய உறவோ, நட்போ மனதைக் காயப்படுத்தினாலும் கண்டு கொள்ளாமல் போவது தான்! கூடியவரை நானும் பின்பற்றுகிறேன். மற்றபடி திருமணத்துக்கு முன்னர் கனவுகள் எதுவும் இல்லை! திருமண வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா....ஆமா குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை அதே உங்கள் க்ருத்தேதான் நானும் கண்டு கொள்ளாமல் போய்விடுவேன்...நானும் கூடியவரை...

      எனக்கும் திருமணத்திற்கு முன் கனவுகள் எதுவும் கிடையாது அக்கா. ஆனால் வாழ்க்கையை எப்படி அணுகணும் எதிர்கொள்ளனும் என்று நிறைய அனுபவப்பாடங்கள் கிடைத்தன...அது இன்று வரை உதவிவருகிறது..

      நீக்கு
  26. இதில் எழுத வருபவர்கள் அதிராவுக்கு லாப் எலிகள்........?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் அதிரா அப்படி எல்லாம் சொல்லவில்லை....சும்மா தமாஷ் பண்ணியிருக்கார் அவர்...

      நீக்கு
  27. வாவ் ! அதுக்குள்ள எழுதியாச்சா சூப்பர்ப் கீதா .
    எனக்கும் பொன்மொழிகள் புத்தகங்கள் இதெல்லாம் பெரிசா படிச்சி அனுபவப்பாடம் பெறவில்லை .எப்பவும் சில கொள்கைகளில் மிக ஸ்ட்ராங்கா இருக்கேன் .பொண்ணு எக்ஸாம் டைம் படிக்க நைசா லீவ் போட கேப்பா .ஸ்கூலில் போன் பண்ணி சொல்லும்போது சிக் என்று பொய் சொல்லவேண்டிவரும்னு அவளுக்கு ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிடுவேன் ,இதை அவளுக்கு அலோவ் செஞ்சா நாளைக்கு அவளே தானே பொய் சொல்ல கூடும் .எனக்கு முன்மாதிரியா இல்லைனாலும் நானே அவளை கெடுத்துடக்கூடாது என்பதில் மிக கவனமுடன் இருப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவப் பதிவு இல்லையா...டக்குனு வந்துருச்சு..உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்யறேன் நானும் என் பையன லீவ் எடுக்க அதாவது பொய் சொல்லி லீவ் எடுக்க விட்டதில்லை...ஆமாம் சரியான கருத்து ஏஞ்சல்...ஹைஃபைவ் நிறைய நம்ம தாட்ஸ் அப்படியே...

      மிக்க நன்றி

      நீக்கு

    2. மோசமான அம்மாக்கள் பேட் பேட்

      நீக்கு
    3. யாரையும் பாதிக்காத வகையில் பொய் சொல்ல பழக்கணும்


      என்னது நீங்க பொய் சொல்லுறதில்லையா அப்ப என்பதிவை படித்துவிட்டு அருமை என்று சொன்னது எல்லாம் எந்த வகையில் சாரும்... அதிரா சோ ஸ்வீட் என்று நீங்க அடிக்கடி பொய் சொல்லுவதில்லையா

      நீக்கு
  28. உண்மைதான் அனுபவங்கள் மிக சிறந்த பாடம் .நாம் பட்ட அடிகளும் வேதனைகளுமே பிறருக்கு அதை தரக்கூடாது என்ற உணர்வை தந்திடும் .உயிர் போற பசியில் ருப்பவரிடம் தத்துவம் பேசுவது விட ஒரு வாய் சாப்பாடு வாங்கி கொடுப்பது மேல், அன் கண்டிஷ்னல் லவ் மிக கடினமே ஆனாலும் சிலரை பார்த்து கற்றுக்கொள்கிறேன் .நட்புக்களை நிறைகுறையுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது .
    பிளாட் விஷயம் ..ஹ்ம்ம் இப்போல்லாம் வீடு கார் நகை இவற்றைவைத்தே நம்மை எடைபோடுகிறார்கள் .நம்ம உயிரே நம் கையில் இல்லை .நாம் ஒழுங்கா சாலைவிதிகளை பாலோ செஞ்சி போனாலும் முன்னாடி பின்னாடி வரவங்களும் ஒழுங்கா போகணுமே :) அதனால் கீதையில் சொன்னதைப்போல இன்று நமது நாளை யாருடையதோ ..சில நேரம் எனக்கு சிலர் கேப்பார்கள் ஏன் பயணம் போகலை ஹாலிடேஸ் போகலை .எனக்கு உண்மையில் பிளேன் ட்ராவல் பிடிக்காது காரில் செல்ல மட்டுமே கொள்ளை ஆனந்தம் இதையெல்லாம் சொல்லி விளக்கவேண்டிய அவசியமில்லையே அதனால் ஒரு குட்டி ஸ்மைல் உடன் கடப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் யார்தான் ஃபெர்ஃபெக்ட் இல்லையா....நம்மை மத்தவங்க ஏத்துக்கும் போது அவங்களை நாம ஏத்துக்கறது நல்லதுதானே...

      நிஜம்மா ஸ்டேட்டஸ் பார்க்கறவங்க கிட்ட நான் ஜஸ்ட் ஹை பையோடு நிறுத்திக் கொள்வேன்...கீதையின் பாடம் ரொம்ப யதார்த்தப்பாடம்..

      ஆமாம் நம்மால் பதில் சொல்ல வேண்டாம் என்பதை ஜஸ்ட் ஸ்மைல் பண்ணிக் கடந்துவிடலாம்..நானும் அப்படியே...பல சமயங்கள்ல அது மாதிரியான சிச்சுவேஷன்ல கேரளத்து பாணியில தோளைக் குலுக்கி..ஹேய் என்று கண்ணை மூடித் திறந்து அப்படியே பழகிப் போச்சு...ஹா ஹா ஹா

      நீக்கு
  29. ஹாஹா கீதா நான் ஸ்னேக்ஸ் லாடர்ஸ் விளையாடறதில்லை :) எனக்கு மகளும் கணவரும் பாம்பு வாயில் போனா துக்கமாகிடும் .இன்னொன்று க்ரெடிட் கார்ட் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி நாங்கள் எப்பவோ வைத்திருந்தோம் அதை நீக்கி விட்டோம் பல வருஷமா ..எதை வாங்கினாலும் பணம் முழுசா செலுத்தி தான் வாங்குவோம் இப்படி சில கொள்கைகள் வைச்சிருக்கேன் .எப்படி இந்த ஞானம் வந்தது என்றால் நண்பரின் வயதான தந்தை மூன்று வீடு உழைப்பால் கட்டியவர் இங்கே வந்தப்போ சொன்னார் .ஏன் இங்கே எல்லாத்துக்கும் கார்டில் கடனில் things வாங்கறாங்க .அதன் பாதகங்களை சொன்னார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொன்று க்ரெடிட் கார்ட் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதி நாங்கள் எப்பவோ வைத்திருந்தோம் அதை நீக்கி விட்டோம் பல வருஷமா ..எதை வாங்கினாலும் பணம் முழுசா செலுத்தி தான் வாங்குவோம் இப்படி சில கொள்கைகள் வைச்சிருக்கேன்//

      ரொம்ப நல்ல கொள்கை...ஏஞ்சல் ஹைஃபைவ் எனக்கும் இதே தான்...அதை மகனுக்கும் சொல்லிவிட்டேன்...அவனும் அதில் மிகவும் ஸ்டராங்கா இருக்கான். மிக மிக நல்ல விஷயம் ஏஞ்சல்..எனக்கும் பிடித்த விஷயம்..என் அப்பாவும் சொல்லுவார்..இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்யணும் எதுக்கு அப்படி வாங்கித்தான் ஆகணுமா என்பார்..எனக்கும் அதேதான் அதனால் அப்படியே மகனுக்கும் சொல்லிக் கொடுத்துவிட்டேன்... உங்களுக்கும் பாராட்டுகள் ஏஞ்சல்...சூப்பர்ப்!!!

      நீக்கு
    2. அமெரிக்காவில் நம்மிடம் பணம் இருந்தாலும் கிரடிட்கார்ட் அதிக அளவு உபயோகித்தால்தான் நமது கிரடிட் ஹிஸ்டரி பில்ட் ஆகும் அப்படி செய்தால்தான் வீடு வாங்க லோன் மற்றும் பிஸினஸ் பண்ண லோன் கிடைக்கும்.... இப்போது ஆன்லைனில் ஷாப்பிங்க் செய்யும் காலம் பணத்தை வைத்து ஆன்லைனில் ஷாப்பிங்க பண்ண முடியாது அது போல விமான டிக்கெட் பஸ் ரயில் மற்றும் பல ஷோக்காளுக்கு போவதென்றால் க டிக்கெட் புக் பண்ண கிரெடிட் கார்ட் தேவை அதுமட்டுமல்லாமல் கிரெடிட் கார்ட் உபயோகிப்பதனால் அதிக அளவு சேமிக்க முடியும்


      கிரெடிட் கார்ட் உபயோகித்து நாம் செலவழிக்கும் போது செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு பாயிண்ட்ஸ் கிடைக்கும் அதை பணத்திற்கு ஈக்குவலாக உபயோக்க முடியும்...

      உதாரணமாக whole sale storeல் மெம்பர் அதற்காக நான் ஆண்டு தோறும் மெம்பராக120 டாலர் பீஸ்ஸாக செலுத்துகிறேன் அந்த ஷாப்பில் ஒரு குறிப்பிட்ட கார்டை பயன்படுத்தினால் நாம் செலவழிக்கும் தொகைக்கு சமமாக 2 சதவிகத்திற்கு கேஸ் வேல்யூ பாயிண்ட் கிடைக்கும் ஆண்டு இறுதியில் அதை கவனித்தால் நான் கொடுக்கும் மெம்பர் சிப் பீஸை விட 3 மடங்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் இதே நேரத்தில் நான் பணமாக கொடுத்தால் மெம்பர் சீப் பணம் வேஸ்ட் அது போல இன்னொரு கார்ட்டை பல இடங்களில் பயன்படுத்துவதால் எனக்கு 1000 டாலர் இந்த வருடம் கிடைத்திருக்கிறது ஆனால் பணத்தை உபயோகித்தால் அது நமக்கு லாஸ்


      என்ன நாம் கிரெடிட் கார்ட்டுக்கான பணத்தை மாதம் மாதம் ஒழுங்காக கட்டி விடனும் அவ்வளவுதான் அப்படி செய்யாவிட்டால் நாம் அவர்கலுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும் சில தினங்கள் மறந்து போனாலும் லேட் பீஸ் கட்டியாக வேண்டும் அத்னால்தான் நான் ஆட்டோ பேமெண்ட் முறையில் செட் பண்ணி வைத்திருப்பதால் ட்யூ தேதிக்கு முன்பே அது அக்கவுண்டிற்கு போய்விடும் அதனால் இது வரை பிரச்சனை இல்லை...


      ஒரு வேளை நீங்க மிகவும் வசதியானவர் என்பதால் உங்களுக்கு கிரெடிட் ஹிஸ்டரி எல்லாம் தேவையில்லை போல.. அதுனாலதான் எல்லா இடங்களிலும் பணத்தையே கொடுக்கிறீர்கள்... அல்லது எனக்கு ஒரு சந்தேகம் பணம் ப்ரின்ட் செய்யும் இடத்திற்கு அருகில் நீங்கள் வசிக்கிறீர்களோ என்னவோ

      நீக்கு

    3. இங்கே உள்ள கிரெடிட் கார்ட் கம்பெனிகளுக்கு எல்லாம் இந்தியர்களை கண்டாலே வெறுப்பு காரணம் அவர்கள் ட்யூ டேட் வருவதற்கு முன்பே பணத்தை கட்டிவிடுவார்கள் அதனால் கிரெட்டி கம்பெணிகளுக்கு லாபமே இல்லை லேட்டாக கட்டினால்தன் லேட் பீஸ் அதற்கான வட்டி எல்லாம் வசூலிக்க முடியும் அப்பதான் அவர்கள் லாபம் பார்க்க முடியும்

      நீக்கு
    4. மதுரை சகோ ஆமாம் அமெரிக்காவில் க்ரெடிட் கார்ட் ஹிஸ்டரி பத்தி கேட்டுருக்கேன்......இருந்தாலும் க்ரெடிட் கார்ட் என்றாலே கொஞ்சம் பயம்...எனக்குத் தனிப்பட்ட முறையில் நேரடியான அனுபவம் இல்லை என்றாலும்,,,,,அதனனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய அனுபவம் அறிந்ததால்

      பின்னர் வரேன்...இன்னிக்கு பெரிய் கெட்டுதெதர் இன்று இரவு அமெரிக்கா காரங்க எல்லாம் பறந்துடுவாங்க...பாட்லக் விருந்து...ஸோ பிஸி..

      நீக்கு
  30. //யாருடைய மனதையும் வேதனைப்படுத்தக் கூடாது. ஒரு வேளை வேதனைப் படுத்தியிருந்தால் உடனே மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்//

    எஸ் ஹை 5 .நானும் அப்படித்தான் .உங்களோட குணமும் என்னோட குணமும் நிறைய விஷயங்களில் சேம் .
    //
    சாதி, மதம், ஏழ்மை, பணக்காரர் பார்க்கக் கூடாது உண்மையான அன்பை, //
    இதை புரியவைத்தவர் அப்பா .. ஆனால் என்னைவிட மகள் இந்த விஷயத்தில் 100 % பெர்பெக்ட் சாதி பற்றி அவளுக்கு தெரியாதது அனல் ஏழ்மை அழுக்கு இதெல்லாம் பார்க்க கூடாதது என்பதை அவளிடம் நிரைய கவனித்திருக்கேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஹைஃபைவ் ஏஞ்சல் நானும் நிறைய சமயங்களில் நோட் பண்ணியிருக்கேன் நம் குணங்கள் சேம் என்பதையும்....

      ஆமாம் என் மகனும் சேம் சேம்...ஷெரன் நல்ல மனதுடையவர்...அவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் சொல்லிடுங்க...

      நீக்கு
    2. /எஸ் ஹை 5 .நானும் அப்படித்தான் .உங்களோட குணமும் என்னோட குணமும் நிறைய விஷயங்களில் சேம் .///

      இப்படி ரெண்டு பேரும் நிறையவிஷயங்களில் shame காக நடந்து கொண்டு இதிலே வேற ஹை 5 யா shame shame


      நீக்கு
  31. உங்கள் அத்தைக்கு நடந்ததுபோல் கிறிஸ்தவர்களிலும் நடக்குது எவ்ளோ வேதனையில்லையா .பாவம் .இங்கே பிரிட்டிஷ் லேடி கணவர் இறந்தும் தந்து ரிங்கை கழட்டவில்லை .அதற்கு சொன்னார் இப்போ அவருக்கு 67 வயது அந்த ரிங் அவரது 18 வயதில் இருந்து கையில் இருக்காம் நான் எப்படி கழட்டுவேன் என்றார் .சிலர் ரிங்கை பார்த்து வெர் இஸ் யுவர் ஹஸ்பேண்ட் என்று கேட்டு ஒருமாதிரி பார்ப்பார்களாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! கிறித்தவர்களிலும் இருக்கா...பாவம் இல்லையா அந்த ப்ரிட்டிஷ் லேடி...போங்கப்பா என்ன சமூகமோ..குழந்தை இல்லாதவங்களை சில சடங்குகளில் அனுமதிக்காம இருக்கறது இதெல்லாம் ரொம்ப வேதனை..இன்னும் நிறைய இருக்கு..ஏஞ்சல்

      நீக்கு

    2. மேலைநாடுகளில் கையில மோதிரம் இல்லாதது மிகவும் செளரியமாக இருக்கிறது என்னா பொண்ணுங்க தைரியாம வந்து நம்மகிட்டே பேசுவாங்க இதை போய் என் மனைவிகிட்டே சொல்லிடாதீங்க

      நீக்கு
  32. மன்னிப்பு .ஆமாம்ம் அதை கேட்டுவிடுவது மிக நல்லது நாளை நாமே இருப்போமான்னு தெரியாதது அதனால் உடனே கேட்பது நல்லதே .எனக்கு ஒரு அனுபவம் இன்னும் குற்றவுணர்வு யாரிடம் கேட்கணும்னு நினைத்தவர் இப்போ இல்லை இருக்கு வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன் அதை கதையாய் எழுத ஆசை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட!! ஆமாம் கரெக்ட்!! நாம் இருப்பமானும் தெரியாது!!! பாருங்க இது எனக்கு ஸ்ட்ரைக் ஆகாம போச்சு..எழுதும் போது...தாங்க்ஸ் ஏஞ்சல்..

      கதையாவே எழுதுங்க ஏஞ்சல்...

      நான் சில அனுபவங்களை நேரடியா எழுதறது வேண்டாம்னு கதையா எழுதிடுவேன்...ஏன்னா அது அவங்க கண்ணுல பட்டுச்சுனா?? அதனால கதையா மாத்திடுவேன்...உங்க பதிவுக்கு வெயிட்டிங்க்...ஐ மீன் கதைக்கு...கே வா போ க க்கு கூட கொடுக்கலாமே!! முயற்சி பண்ணுங்க ஏஞ்சல்

      நீக்கு
  33. மிகவும் அழகாக எழுதி இருக்கீங்க உள்ளத்தை கொள்ளைகொண்டது உங்கள் எழுத்து வாழ்க்கை பலவிஷயங்களை கற்றுக்கொடுக்கிறது அனுபவப்பாடங்கள்தான் சிறந்தவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல்...எல்லாம் அனுபவப் பாடங்கள் இல்லையா ஏஞ்சல் அதான்..இன்னும் நிறைய இருக்கு அப்புறம் பதிவு பெரிசாயிடும்...பாருங்க மதுரை கமென்ட் இப்ப வந்துச்சு...வீட்டுல் பூரிக்கட்டை கிடைக்கலை போல...நாம பூரிக்கட்டைய தூக்கிருவோம் ஹா ஹா ஹா ஹா ஹா

      நீக்கு
  34. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ கருத்திற்கு

    பதிலளிநீக்கு
  35. மிக அழகாக எழுதப்பட்டிருக்கும் பதிவு. உண்மையின் அழகு இது.

    பதிலளிநீக்கு
  36. ஒரு சின்ன சந்தேகம், தொடர் பதிவு என்றால் நமக்கு முன் பதிவிட்டவர் நமது பெயரை முன் மொழிந்தால்தான் கருத்து கூற வேண்டுமா? என்னை யாரும் முன் மொழியவில்லை நானாக கருத்திட்டு விட்டேன்.. தவறில்லையே..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாப்பா இவங்களை மாதிரி உள்ள ஆட்களை கூப்பிட மறந்துவிட வேண்டாம் அதுமட்டுமில்லை இவங்க எப்படி நம்ம கும்மி அடை குருப்பில் இது வரை சேர்ரவில்லை இவங்களையும் நம்ம கும்மி அடி குருப்பில் சேர்க்கவும் ஸ்ரீராம் கீதா அதிரா ஏஞ்சல் இவங்களை இழுது வந்து நம்ம குருப்பில் சேருங்கள்

      நீக்கு
    2. ஹையோ பானுக்கா அதெல்லாம் ஒன்னுமில்லை யார் வேணுமானாலும் கருத்து சொல்லலாம்...மதுரை சேர்த்துரலாம்...அவங்க அப்பப்பதான் வராங்க ஆனாலும் எ பில சில சமயம் கும்மி அடிச்சதுண்டு..

      சேர்த்தாச்!!! அது நான் கூப்பிட்டுட்டா ஸ்ரீராம் கூப்பிட ஆள் வேணுமேனு பானுக்காவ நான் கூப்பிடலை...

      பானுக்கா ரெடியா இருங்க தொடர் பதிவு எழுத...ஸ்ரீராம கூப்பிட்டுருவார்...நான் துரை சகோவைக் கூப்பிட நினைச்சேன் கில்லர்ஜி கூப்பிடப் போறேன்னு சொன்னதால விட்டுட்டேன்...ஸோ நீங்க ரெடியா இருங்க அக்கா ஹா ஹா ஹா

      நீக்கு
  37. நேர்மையாக வாழ வேண்டும் என்பவர்களுக்கு அனுபவம் ஒரு சிறந்த teacher. ஆனால் மற்றவர்களுக்கு அனுபவம் ஒரு cheater என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக சூதாடி வெல்ல நினைப்பவனுக்கு அவனுடைய அனுபவம் அவனை ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கும்.
    உங்கள் பதிவு எப்படிப்பட்டது தெரியுமா? ஆங்கிலத்தில் eye opener என்பார்களே அப்படிப்பட்டது. இன்னும் நிறைய சொல்லலாம்.
    ஆனால் அமெரிக்கா குளிரில் தொடர்ந்து தட்டச்சு செய்ய இயலவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோவிந்தராஜு ஐயா..மிக்க நன்றி ஐயா தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்..நமக்கு நேரும் அனுபவங்களைப் பாடமாக எடுத்துக் கொண்டால் நமக்கு நல்லது இல்லையேல் ஏமாந்து கொண்டேதான் இருப்போம்...

      நீக்கு
    2. கோவிந்தராஜு ஐயா தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...அனுபவத்திலிருந்து கற்று உள்வாங்கினால் மட்டுமே நல்லது இல்லைனா நமக்கு அத்னால் எந்த பயனும் இல்லைதான் ஏமாற்றும் தான் .ஒரு பழக்கத்திற்கு.அடிமயாவதும் அதுவும் அப்படித்தான்

      மிக்க நன்றி ஐயா தங்களின் பாராட்டிற்கு...குளிர் உங்களை வாட்டுகிறதோ ஐயா..பரவாயில்லை ஐயா நீங்களும் பதிவாக எழுதலாம் அதுவும் உளவியலும் அறிந்தவர் ஆயிற்றே...மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  38. அனுபவ அறிவு போல வேற ஏதும் வழிகாட்டி அல்ல அழகான கருத்துப்பகிர்வுகள்.நிச்சயம் பின்பற்றக்கூடிய விடயங்களில் அத்தையிடம் ஆசீர்வாதம் வாங்கிய உங்களின் முன்மாதிரி பாராட்ட வேண்டிய விடயம்.வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனிமரம் நேசன் உண்மையே நம் அனுஅப்வம் நமக்கு நிறையத் தருகிறது...மிக்க நன்றி நேசன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  39. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு

  40. மனதை மட்டும் எந்தச் சூழலிலும் மகிழ்வாக வைத்துக் கொள்ள வேண்டும் ....

    “இருப்பது போதும். மகிழ்ச்சி” ....

    வார்த்தைகளை விட மௌனமே சிறந்த தீர்வு.....





    மிக அரிய வார்த்தைகள் கீதாக்கா..... அனுபவம் இருந்ததால் மட்டும் போதாது....அது மனத்தில் பதிய வேண்டும்....நிஜ வார்த்தைகள்...


    ரசித்து வாசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு ரசித்து வாசித்தமைக்கும் வரிகளைக் கோட் செய்து சொன்னதுக்கும்...மிக்க நன்றி

      நீக்கு
  41. அனுபவப் பாடம்தான் நல்லது. வெறும் அட்வைஸ், நம் மனதில் செல்லுவது சுலபமல்ல. பதின்ம வயதில் அட்வைஸ் என்றாலே நமக்குக் கசக்கும். திருமணம் ஆனபின்பு, மனைவி சொன்னாலும், பெரும்பாலும், 'இவள் என்ன சொல்றது' என்றுதான் தோன்றும்.

    எல்லா தினங்களும், சந்திக்கும் மனிதர்களும், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்'கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் நெல்லை....உங்கள் கடைசி வரி ரொம்பச் சரி...மற்ற கருத்துகளும்...மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  42. நல்லதொரு கட்டுரை புத்தாண்டில். பொறிந்து தள்ளியிருக்கிறீர்கள். இருந்தும் நீ..ள..வில்லை. Pleasant surprise!

    அனுபவம் கற்றுக்கொடுக்கிறது என்பதை விட, ’அனுபவம் கொடுக்கிறது’ என்பதே சரி என நான் நினைக்கிறேன். என்ன என்கிறீர்கள்? அது அவ்வப்போது சிலதைக் கொடுக்கிறது..அதிலிருந்து நீங்கள் கற்றீர்களா, எதையாவது உங்களுக்கெனப் பெற்றீர்களா என்பது உங்களைப் பொறுத்தது முற்றிலும்.

    On the flip side, எத்தனை பட்டாலும் புரியாத ஜென்மங்கள் உலகிலுண்டு. நிறையவே உண்டு. அவர்களுக்கும் வாழ்க்கை இம்மண்ணிலுண்டு. வஞ்சனை செய்வதில்லை இந்த பூமி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா மிக்க நன்றி ஏகாந்தன் சகோ!!

      உங்கள் கருத்து சிந்திக்க வைத்தது...உண்மைதான் கொடுக்கிறது....அதிலிருந்து நாம் உள்வாங்கிக் கற்றுக் கொள்கிறோமா அதுவும் சரியாக என்பது ரொம்பமுக்கியம்....இதைத்தான் கிட்டத்தட்ட கடைசி பத்தியில் சொல்லியிருக்கேனோ...

      எத்தனைப் பட்டாலும் புரியாத ஜென்மங்கள்// ரொம்பச் சரிய்தான் அதான் கிடைப்பதை நாம் உள்வாங்கணுமே அந்த உள்வாங்கல் சக்தி இல்லைனா எத்தனைப் பட்டாலும் விழலுக்கு இரைத்த நீர் தான்..அதென்னவோ உண்மை அவர்களும் இப்பூமியில் வாழ்கின்றார்கள்..பூமி வஞ்சனை செய்வதில்லை...மிகவும் சரிதான்...உங்க கருத்து

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  43. குறிப்பிட்ட புத்தகவரிகளோ, பொன்மொழிகளோ, அறிவுரைகளோ என்னை மாற்றுகிறது என்று சொல்வதை விட. எல்லாமே கலந்து கட்டி என்னைச் சுழற்றி அடித்த அனுபவங்கள்தான் என்னைச் சிந்திக்க வைத்துப் புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

    இந்த வரிகள் பிடித்தன .அவரவர் அனுபவமே வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகிறது.
    அது சரி பதிவு நீங்கள் மட்டும். கருத்துக்கள் நீங்களும் மதுரைத்தமிழனும்
    ஜாயிண்ட் வெஞ்சரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அபயா அருணா வரிகள் பிடித்தமைக்கு...ஹா ஹா கருத்துகள் மதுரை தொடங்கி வைத்த பதிவு தொடர் பதிவு அதில் அழைக்கப்பட்ட ஏஞ்சல் என்னை அழைத்திருந்தாங்க....

      உங்களையும் அழைக்கலாம்னு நினைச்சேன்...அப்புறம் உங்களுக்கு நேரம் இருக்கானு கேட்க நினைச்சேன் க்டைசில விட்டுப் போச்சு...ஹா ஹா ஜாயின்ட் வெஞ்சர் என்னோடு மட்டுமில்லை..நிறைய பேர் வருவாங்க...

      ரொம்ப நன்றி அபயா அருணா

      நீக்கு
  44. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது - ஆனாலும் அப்பாடங்களை நாம் மறந்து விடுகிறோம்.

    என்னையும் அழைத்தமைக்கு நன்றி. இரண்டு பேர் அழைத்து விட்டீர்கள்... எழுத வேண்டும். விரைவில் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  45. கடைசியில் நான் பதிவு எழுதும் போது யாரை அழைப்பது என தெரியாமல் அவர்கள் உண்மையையே அழைத்து திரும்ப ஒரு சுற்று வாங்கொ என சொல்லி விடும் ஐடியாவில் இருக்கின்றேனாக்கும்.

    கீதா! இந்த அனுபவம் இருக்கில்லையா? அதுஅருமையான ஆசான் தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதை அனுபவித்த மற்றவர்கள் சொல்லும் போது தான் நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள் கருத்தை நம் மேல் திணிப்பது போல தோன்றுதே? இருபதில் நமக்கு கிடைத்த அனுபவத்தை வைத்து நாற்பது கடந்த நம் பெற்றோர் சொல்வதை அப்படியேவா ஏற்றுக்கொள்கின்றோம்? நம் அனுபவம் , நம் வயதை கெட்டியாக்கி பக்தி முக்தி சிக்தியடைய வைக்கின்றதென்னமோ உண்மை. அனுபவம் ஆசானாயிருந்தாலும் ஐந்தில் கிடைக்கும் அனுபவத்தை ஐம்பதில் தான் புரிந்தே கொள்கின்றோம்.

    பற்றில்லாரெல்லாம் பற்றற்றவராயல்ல. பற்றுவோம் என சொல்வோரோ பற்றற்று போகின்றார் என்பதும் என் அனுபவம் தான். மொத்தத்தில் எதையுமே பாசிடிவ்வாக பார்த்தால் அது பாஅசிடிவ். நெகடிவ்வாக பார்த்தால் நெகடிவ் இல்லையா?

    அம்மாடி வாழும் காலம் கொஞ்சம் என புரியாமல் ஐந்தடி உடலுக்கும் இருக்கும் இந்த உசிர் என்னல்லாம் பாடு படுத்துது தெரியுமா கீதா? எதுவும் நிரந்தரமல்ல என நீங்க புரிந்து கொண்டீர்கள். இந்த பூமி என்ன அண்ட சாகரமே தங்களுக்கு சொந்தமும் நிரந்தரமும் என நினைத்து அட்டகாசம் செய்யும் கூட்டமும் இங்குண்டு.

    சுவிஸ்ல் சூறாவளி.புயல் நாங்கள் இருக்கும் பகுதி கடுமையான பாதிப்பு வலயத்தில் தான் சிவப்பு மார்க்கில் வருகின்றதாம். . காற்றுடன் மழையும் பனிச்சரிவு, மலைச்சரிவு, மண் சரிவு என எல்லா சரிவிலும் நிற்பதனால் மதுரையார் என்னை அழைச்சதுக்கு இன்னும் பதிவு எழுத வில்லை. எழுத வேண்டும். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஷா வாங்க!! முதலில் உங்க பகுதி நிலைமை எப்படி இருக்கு சொல்லுங்க...பிரார்த்திக்கிறோம்...உங்களுகும் அங்கிருக்கும் மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது...இயற்கைச் சீற்றத்தை நம்மா எதுவும் செய்யமுடியாதே இல்லையா..

      உங்க கருத்துகள் சரியே...தத்துவார்த்தக் கருத்துகள்...

      யெஸ் மிகவும் சரியானது ...எதையும் பாஸிட்டிவாகப் பார்த்தால் அது பாஸிட்டிவ், நெகட்டிவாகப் பார்த்தால் நெகட்டிவ்...இது நாம் பெறும் அனுபவத்திற்கும் பொருந்தும் தான்..நாம் நல்ல மாணவர்களாக இருப்போம் அனுபவ ஆசிரியதின் கருத்துகளை உள்வாங்கி...

      மிக்க நன்றி நிஷா

      நீக்கு
  46. வணக்கம் கீதா!

    மிகமிகத் தாமதமாக வந்துள்ளேன் இம்முறையும்...:(
    உங்களின் அனுபவப் படிப்பினைப் பதிவு மனதைத் தொட்டது. எனது எண்னங்களும் பெரும்பாலும் உங்களது போலவேதான்.
    எங்கென்றாலும் சிறியோரோ பெரியவரோ தவறாக என் அணுகுமுறை, கருத்து இருந்துவிட்டதாக எனக்குத் தோன்றினால் முதலில் மன்னிப்புக்கேட்டிடுவேன். தொடர்ந்து நான் ஏன் அப்படிச்சொன்னேன், நடந்தேன் என்று என் சார்பாக விளக்கம் சொல்லவும் தவறுவதில்லை.

    அழகாக எழுதியுள்ளீர்கள்! அனுபவம் அட்வைஸ் ஆகிறது.. பெற்றுக்கொள்கிறேன் இதோ இங்கிருந்தும்..:)
    நன்றியுடன் வாழ்த்துக்கள் கீதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி வாங்க...அதெல்லாம் ஒன்றுமில்லை...தாமதம் எல்லாம் இல்லை...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு. //எங்கென்றாலும் சிறியோரோ பெரியவரோ தவறாக என் அணுகுமுறை, கருத்து இருந்துவிட்டதாக எனக்குத் தோன்றினால் முதலில் மன்னிப்புக்கேட்டிடுவேன். தொடர்ந்து நான் ஏன் அப்படிச்சொன்னேன், நடந்தேன் என்று என் சார்பாக விளக்கம் சொல்லவும் தவறுவதில்லை.//

      மிகவும் சரியே...முதலில் உங்களை அழைக்க நினைத்தேன்...அப்புறம் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தப் போது அதிரா அழைச்சுருக்காங்க...உங்க பதிவையும் எதிர்பார்க்கிறோம்..

      மிக்க நன்றி இளமதி..

      நீக்கு
  47. அருமை ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவம் மின்னுகிறது . என்னையும் எழுத அழைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  48. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவுவதில்லை என்பார்கள். அதுபோல் அனுபவங்கள் அடித்துக் கற்றுத்தருவது போல அன்பான அறிவுரைகள் கூட கற்றுத்தருவதில்லை.

    நிபந்தனையற்ற அன்பு சாத்தியமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். என் வரையில் அது சாத்தியப்படவே இல்லை. அன்புக்கு பதில் அன்பை மனம் எதிர்பார்த்து ஏங்குகிறது. ஆனால் உங்களுக்கு அது சாத்தியமாகியிருப்பது வியப்போடு உங்கள் மீதான மதிப்பையும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது தோழி.

    சடங்கு சம்பிரதாயம் என்ற பேரில் மனிதர்களின் மன உணர்வுகளைக் காயப்படுத்தும் நிகழ்வுகள் எனக்கும் வேதனைதரும். உங்களது அணுகுமுறையும் அபாரம். மனமார்ந்த பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  49. சிறு வயதிலிருந்தே கஷ்ட,ஸுகங்களைப் பார்த்தும்,அனுபவித்தும்,கேட்டும் இருப்பவர்களுக்கு மனது பண்படும் விதமே அலாதி. தனக்கு அமையும் வாழ்வில் ஓரளவிற்குப் பண்பாடுடன் அது எந்த விதமென்று யூகிக்க முடியாவிட்டாலும், ஒரு முடிவு ஏற்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். இம்மாதிரிதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. நான் கட்டுரையைப்படித்தும் உடனே பின்னூட்டமிடவில்லை. சில அஸௌகரியங்களே காரணம் மன்னிக்கவும்.. அர்த்தமுள்ள கட்டுரை. . அன்புடன்

    பதிலளிநீக்கு