திங்கள், 3 ஜூலை, 2017

காலம் தவறிய உணர்வுகள்

எங்கள் ப்ளாகின் மற்றொரு தளமான https://engalcreations.blogspot.in இல் கேஜிஜி - கௌதம் அண்ணா அவர்கள் க க க போ தெரியுமா? என்று அறிவித்திட....அதென்னா கககபோ என்று கேட்பவர்களுக்கு....கண்டிஷனல் கருவிற்குக் கதை போடத் தெரியுமா?!!! அதாவது ஒரு கரு கொடுத்து கதை எழுதச் சொல்லி அறிவித்திருந்தார். கடைசி வரி பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள் என்று முடியவேண்டும் என்ற விதியும் விதித்திருந்தார்!!!!! முதலில் சட்டென்று கதை போட்டார் நம் நண்பர் நெல்லைத் தமிழன் அதுவும் தான் வரைந்த கதைக்கான அழகான படத்துடன்  https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_19.html 
அதே கருவில் குரோம்பேட்டை குறும்பனின் கதையின் லிங்க் இதோ
https://engalcreations.blogspot.in/2017/06/blog-post_22.html
கககபோ 2 ற்கு நெல்லைத் தமிழனின் கதையின் லிங்க் இதோ https://engalcreations.blogspot.in/2017/06/2.html
கககபோ 2 ற்கு சகோ துரை செல்வராஜு அவர்களின் கதையின் லிங்க்  https://engalcreations.blogspot.in/2017/07/blog-post.html

நான் எழுதிய கதைதான் இதோ இங்கு. அங்கும் வெளியானது. அதன் லிங்க் இதோ...இப்போது இரண்டாவது கருவும் வந்துவிட்டது. நான் இனிதான் எழுத வேண்டும். நீங்களும் நம்ம ஏரியாவுக்கு விசிட் செய்து அங்கு தரப்படும் கருவிற்குக் கதை எழுதலாம். கதையை அங்கு வெளியிட்ட பின்னர் உங்கள் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளலாம். நீங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் kggouthaman@gmail.com, sri.esi89@gmail.com


மிக்க நன்றி கௌதம் அண்ணா மற்றும் ஸ்ரீராம். இப்படி என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும்  கதைகள் எழுத ஊக்குவித்து, வெளியிட்டுக் கௌரவிப்பதற்கு. மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றியும், வணக்கங்களும்! உங்கள் இருவரின் முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகளும்!

பொற்காசுகள் உண்டா என்பதை ஸ்ரீராமிடமும், கௌதம் அண்ணாவிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளூங்கள் ஹிஹிஹி...
சரி இதோ கதைக்குப் போகலாம் வாங்க.....


“கெட்டி மேளம் கெட்டி மேளம்”…..என்று ஐயர் சொல்லிட, கல்யாண மண்டபத்தின் இரைச்சலில், ஐயரின் மாங்கல்யம் தந்துனானே அமிழ்ந்துவிட, இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னைக் காப்பாற்றுவேன் என்று யாரோ பாடிட, குமார், தாரிணியின் கரம் பிடித்து அவள் கழுத்தில், அக்னி சாட்சியாக மூன்று முடிச்சுகளைக் கட்டினான். இப்பிறவியிலேயே கல்யாணம் நிலைப்பதில்லை எனும் போது ஏழேழ் பிறவி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவரோ? 10 வருடங்கள் கடந்தன.

திருவனந்தபுரம் ரயில் நிலையம். 

முதுகுப் பையுடன் வலது கையால் பெட்டியை இழுத்துக் கொண்டு கூட்டத்தின் இடையில் தள்ளப்பட்டு, அர்ச்சனையாக வந்த பல கெட்ட வார்த்தை நாமாவளியையும் புறம்தள்ளி வேகமாக ஓடினான் குமார்.

“யாத்ரகார் தயவாய் ஷ்ரத்திக்குக. ட்ரெயின் நம்பர் ஒன்னு ரண்டு ஆறு ரண்டு நாலு, திருவனந்தபுரத்திநின்னு சென்னை வர செல்லுன்ன சென்னை மெயில் மூணாமுத்த ப்ளாட்ஃபார்மிலினின்னு புறப்படுகையானு…….பாஸஞ்சர்ஸ் யுவர் அட்டென்ஷன்….ப்ளீஸ்…..

விசில் ஊதவும், பச்சை சிக்னல் விழவும், ரயில் மெதுவாகப் புறப்படத் தொடங்கியது. குமார் பதிவு செய்திருந்த பெட்டியை நெருங்கியதும். வாயிலின் கம்பியைப் பிடித்துக் கொண்டு கையிலிருந்த பெட்டியை உள்ளே வைக்க முயன்றவாறே ஏற முற்பட்ட போது, ஒரு கை நீண்டு அவனது பெட்டியை வாங்கி வைத்துவிட்டு அவன் கையைப் பிடித்து உள்ளே ஏற்றியது.

மூச்சு வாங்கியவாறே, “தாங்க் யு ஸார்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஏறியதும் நின்று உஃப் உஃப் என்று பெருமூச்சு விட்டவாறே சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். உதவிய நபருக்கு இவனை ஏற்கனவே எங்கோ பார்த்திருந்த நினைவு. ரயிலும் வேகமெடுத்தது. மீண்டும் அவனுக்கு உதவிய அந்த நபருக்கு நன்றி சொல்லி விட்டு தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இருக்கையைத் தேடிச் சென்றான். அங்கு ஒரு பெண் மட்டுமே ஜன்னல் அருகில் இருந்தாள். தனது பெர்த்/இருக்கை அப்பெண்ணிற்கு எதிர்புற ஜன்னல் இருக்கை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு அருகில் சென்று பெட்டியை இருக்கையின் அடியில் வைக்கும் போது எதிரே இருந்த ஜன்னல் இருக்கையில் உட்கார்ந்திருந்தவளைக் கண்டதும் திகைத்துவிட்டான். தாரிணி! அவள் அவனை கவனிக்கவில்லை. ஜன்னலில் தலை வைத்துச் சாய்ந்து கொண்டு கண்ணை மூடியவாறு உட்கார்ந்திருந்தாள். இவள் எப்படி இங்கு? அதுவும் தனியாக! என்று அவளைப் பார்த்த திகைப்பில் அவன் மனதில் எண்ண அலைகள் 10 வருடங்களுக்கு முன்னான வாழ்க்கைக்குப் பின்னோக்கிச் செல்லும் கடல் அலைகளைப் போல் இழுத்த நேரத்தில்... 

“ஓ ஒங்க பெர்த்தும் இங்க தானா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான், அவனுக்கு உதவிய அந்த நடுத்தர வயது இளைஞன். குரலைக் கேட்டதும் சட்டென்று தன் கண்களின் ஃப்ரேமை அவனிடம் மாற்றினான் குமார்.  “ஆமா ஸார்” என்று சொல்லிக் கொண்டே, “37 வயது இருக்குமோ? இருக்கலாம். என் வயதும் அதுதானே! ஒரு வேளை தாரிணியின்…. என்று நினைத்த குமார், தன் எண்ணங்களுக்கு ‘கட்’ சொல்லிவிட்டு, தன் பெட்டியையையும் முதுகுப் பையையும் சீட்டின் அடியில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். மற்ற மூன்று பெர்த்துகளும் காலியாக இருந்தன. அடுத்த ஸ்டேஷன்களில் ஏறலாமாக இருக்கும் என்று குமார் நினைத்த வேளையில், அந்த இளைஞன் கை குலுக்கக் கையை நீட்டிக் கொண்டே,

“ந்யான் சிவா, நீங்க?” என்றான்.

“ஐயாம் குமார்”

“ஸார் சென்னை அல்லே. ஸாரினை கண்டதும்….நம்மள் எங்கேயோ கண்டது போல ஓர்த்து. ஓர்மை கிட்டி...நம்ம ரண்டு பேரும் ஒரு 7, 8 கொல்லம் முன்பு ந்யான் மும்பையிலின்னு சென்னைக்கு ஃப்ளைட்டுல வரும் போழ் என்னோட ஸீட்டுக்கு அடுத்து ஸீட்ல ஸார். நாம கொஞ்சம் பேசினோம். ஸார் எந்தோ வாயிச்சுட்டு வந்தீங்க….” என்று சிவா சொன்னதும் குமார் நினைவுகளைச் சேமிப்புக் கிடங்கில் போட்டுவிட்டு சிவாவை செவிமடுத்தான்.

“ஆமா, சென்னைதான். ம்ம்ம் ஃப்ளைட்லயா? ம்ம்ம்ம்ம்.” ஓ! யெஸ் யெஸ்! நான் உங்கள அன்னிக்கு அதிகம் கவனிக்கலையா…..ஸோ….ஸாரி ஸாரி!!....இப்ப நினைவுக்கு வருது. அப்ப ரொம்ப ஒல்லியா இருந்தீங்க போல…இப்ப நீங்க கொஞ்சம் அதிகமா வெயிட் போட்டுட்டீங்க போல….” வைஃப் சாப்பாடோ என்று கேட்க வந்ததை அடக்கிக் கொண்டான். தாரிணிக்குக் கிச்சன், சமையல் பிடிக்காதே.

“ஆம ஸார். இப்போ தடி கூடிப் போச்சு…”

“சாய்ய்ய்ய், காப்பிஈயீயீய்” என்ற குரலைக் கேட்டதும், சிவா, அவளைத் தட்டி,

“சாயாவோ? காப்பியோ?” என்று அவளிடம் கேட்டுவிட்டு, குமாரிடம்

“இவ என்னோட வைஃப்.” என்று சொன்னான். குமாருக்குத் தான் கட் சொன்ன இடம் தொடர்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த போது, கண்ணை மூடிக் கொண்டிருந்தவள் சிவாவை நோக்கித் திரும்பவும், முதலில் அவள் கண்ணின் ஃப்ரேமுக்குள் க்ளோசப்பில் சிக்கியது குமார். அவள் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. கரைக்கு வந்து சுழன்று பாறையில் மோதிச் சிதறும் கடல் அலைகளைப் போல பல எண்ணக்கலவைகள் அவள் முகத்தில் பளிச்சிட்டன.

“ந்யான் கேட்டுக்கிட்டுருக்கேன்…,நல்ல உறக்கமோ? என்ன பாக்குற? ஹோ இது குமார் என்று குமார் வண்டியில் ஏறியதைப் பற்றி அவளுக்குச் சொன்னான்…”

குமார் “ஹாய்” என்றான்.

சின்ன ஜெர்க்குடன், “இல்ல எனக்கு சாயா வேண்டா” என்று சிவாவுக்குப் பதில் சொல்லுவது போல் குமாருக்கும் பதில் சொல்லிவிட்டு, இவர் எப்படி இங்கு? அப்போது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறாரோ’ என்று நினைத்துக் கொண்டே குமாரை நேரடியாகப் பார்க்கும் சக்தி இல்லாமல் மீண்டும் ஜன்னலின் பக்கம் திரும்பிக் கொண்டாள். குமாருக்கு அவள் சற்று வெயிட் போட்டிருப்பது போல் தோன்றியது. அவளுக்குப் பிடிக்காதே! அப்படியென்றால் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான். டைவோர்ஸான கணவனும் மனைவியும் திடீரென்று இப்படி நேருக்கு நேர், அதுவும் மாஜி மனைவியின் கணவனும் இருக்க, எதிரெதிரே அமர்ந்து கொண்டு பல மணி நேரம் பயணிப்பது என்பது தர்மசங்கடமான நிலைதான்’ .என்று நினைத்துக் கொண்டிருந்த குமாரின் அந்த தர்மசங்கடமான நிலையைச் சற்று தளர்த்தியது சிவாவின் குரல்.

“ஸாருக்குச் சாயாவோ? காப்பியோ?”

“நான் இப்பத்தான் வரதுக்கு முன்னாடி லஞ் சாப்டுட்டு வந்தேன் இப்ப வேண்டாம் ஸார்.”

“ஓ! எனிக்கி எப்போழ்தும் லஞ்சு சாப்பிட்டதும், 10, 15 மினிட்டுல காப்பி குடிக்கணும்.” தமிழும், மலயாளமும் கலந்து பேசினான் சிவா.

இனி சிவா என்றே கூப்பிடலாமோ? சிவா நெருங்கிவிட்டானே என்று குமார் நினைத்தான். “சாப்பிட்டதும் சாய் குடிப்பது நல்லதில்லையே” என்று நா வரை வந்த சொற்களை விழுங்கினான். சேமிப்பில் இருந்த நினைவுகள் மூளையின் கரைக்கு வந்து மோதியது.

‘தாரிணியும் அப்படித்தானே! சாப்பிட்டதும் 10 நிமிடத்தில் சாயா வேண்டும் என்பாள். சாப்பிட்டதும் சாயா குடிப்பது நல்லதல்ல, உடலுக்குத் தீங்கு என்று நான் சொன்னதை அவள் கேட்டதில்லையே. அவளுக்கு டீ குடித்துக் கொண்டே இருக்க வேண்டுமே! ஆனால், இன்று வேண்டாம் என்று சொல்லுகிறாளே. மாறிவிட்டாளோ அல்லது என்னைக் கண்டதால் இருக்குமோ?’

சிவா தமிழும், மலயாளமும் கலந்து பேசியதாலும், லொட லொட பேர்வழியாக இருந்ததாலும் தாரிணிக்கு இவன் ஏற்றவன்தான் என்றும் குமாருக்குத் தோன்றியது. குமார் கொஞ்சம் அமைதிதான். சிவாவிடம் எதுவும் கேட்கவே வேண்டாம் போல. அவனே எல்லாம் சொல்லிவிடுவான் என்று தோன்றியதால், தாரிணியைப் பற்றி அறியும் ஆர்வம் மேலிட்டதை குமார் ஏனோ தடுக்க முயற்சி செய்யவில்லை.

“நாங்க தாமசம் இங்கதான். சென்னைக்கு ஒரு ஃபங்க்ஷனுக்கு வேண்டி போறோம். வைஃபுக்கு ஃப்ளைட்டுதான் இஷ்டம். அல்லெங்கில் ரயிலில ஏசி கோச். பக்ஷே ஏசி டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிட்டில்ல. இ ஸ்லீப்பர் கன்ஃபார்ம் ஆச்சு. அவளுக்கு தேஷ்யம். அதானு பேசாம அங்கேயே பார்த்துட்டு இருக்கா”

தாரிணி திரும்பிப் பார்த்தாள். சிவா மேலும் என்ன சொல்லப் போகிறானோ என்றக் கோபமாக இருக்கலாம். குமாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வெளியில் பார்வையைச் செலுத்தி ஜன்னலில் சாய்ந்து கொண்டாள். என்றாலும் அவளது கவனம் எல்லாம் இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்தான் இருந்தது என்பதும் தெரிந்தது.

“ஹாங்க் எனக்கும் அதேதான். புக் பண்ணும் போதே இது கன்ஃபார்ம்டா இருந்ததுனால ஏசி தட்காலும் ட்ரை பண்ணலை.”

வண்டி கொல்லத்தில் நின்றது. இருவர் இவர்கள் இருந்த பகுதியில் வந்து தங்கள் பெர்த்துகளை உறுதிப் படுத்திக் கொண்டு உட்கார்ந்தனர். வண்டி புறப்பட்டது.

“ஸார் தமிழ் அல்லே?!” – சிவா

“ஆமா. நீங்க தமிழ் கொஞ்சம் பேசுறீங்களே”

“நாங்க தமிழ்தான். பக்ஷே என்னோட பேரன்ட்ஸ் கேரளத்துல செட்டில் ஆனதுகொண்டு வெளிய மலையாளம், வீட்டுல மலையாளத் தமிழ். ரண்டும் மிக்ஸ் ஆயி போச்சு. தமிழ் வாயிக்க கொஞ்சம் தெரியும்”

“ஓ! ஓகே”. வேறு என்ன பேச என்பது தோன்றாததால், குமார் இடப்புறம் இருந்த சைட் சீட்டுகளின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினான்.

“லொட லோடனு வாஜகம் வேண்டா. அவர்க்கு இஷ்டம் கிடையாது” என்று வாய் வரை வந்ததை டக்கென்று நாக்கைக் கடித்துக் கொண்டு அடக்கிக் கொண்டாள் தாரிணி. வெளியே அஷ்டமுடி காயலின் நீர்ப்பரப்பினைக் காண, இப்புறம் ஜன்னல் பக்கம் திரும்பிய குமாருக்கு தாரிணியின் செய்கை ஏதோ உணர்த்தியது. மனம் மீண்டும் சேமிப்புக் கிடங்கைத் தோண்ட முயற்சிக்க, சிவா விடுவதாக இல்லை.

“ஸார் டயர்டா? உறக்கம் வருதா?”

“அதெல்லாம் இல்ல.” என்று புன்சிரிப்புடன் சொல்லிவிட்டு மீண்டும் தாரிணியின் பக்கம் இருந்த ஜன்னல் வழியாக வெளியில் பார்ப்பது போன்று தாரிணியைக் கவனித்தான். அவள் மனதிலும் பழைய வாழ்க்கையின் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

‘தாரிணிக்கு இந்த வாழ்க்கை நன்றாகவே பொருந்தியிருக்கும். பிறந்ததிலிருந்து கேரளத்துக் கலாச்சாரத்தில் வளர்ந்த, அதுவும் மிகவும் செல்லமாக ஹைஃபையாக வளர்ந்தவள் கல்யாணமாகி சென்னையில் எங்கள் வாழ்க்கை முறையுடன் அட்ஜஸ்ட் செய்வதற்குச் சிரமப்பட்டாள் என்பதைவிட 25 வயதிலும் கொஞ்சமேனும் மெச்சூரிட்டி இல்லாமல் போகுமா என்று நாங்கள் நினைக்கும் அளவிற்கு நடந்து கொண்டாள். அவளுக்குச் சென்னை பிடிக்கவில்லை’. குமாரின் மனதில் ஓடிக் கொண்டிருந்த நினைவுகள் சிவாவுக்கு எப்படித் தெரிந்ததோ….

“சென்னை பயங்கர சூடு இல்லே? ஸார்?. எந்நாலும், சாருக்குச் சென்னை இஷ்டமாகியிருக்கும். ஸ்வந்தம் நாடல்லே! படித்தம் எல்லாம் சென்னையிலதானா? எனிக்கும் சென்னை இஷ்டம். ஒருவாடு ஓப்பர்சுனிட்டிஸ் உண்டு அல்லே! பக்ஷே என்னோட வைஃபுக்கு சென்னை இஷ்டம் இல்ல.”

“ஓ! அப்படியா. ம்ம்ம்ம் ஸ்கூல் படிப்பு சென்னைலதான். ஆனால் காலேஜ் படிப்பு மும்பை ஐஐடி….பிஎச்டியு…..” குமார் முடிப்பதற்குள்

“ஹோ! ஸார் பயங்கர புத்தி இல்லே” என்றான் சிவா.

குமார் கூச்சப்பட்டான். ஐஐடி பற்றி சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. எல்லாம் ஓர் ஆர்வம்தான். தாரிணி என்ன சொல்கிறாள் என்று அறிய. அவர்களின் பேச்சு ஜெனரலாகவும் தொடர்ந்தது. பின்னர் கொஞ்சம் சிவா மௌனம் காத்தான். குமாரின் நினைவுகள் அவனை பின்னுக்கு இழுத்த நேரம், ரயில் குலுங்கி நின்று நினைவுகளுக்கு ஒரு ப்ரேக் போட்டது. கோட்டயம் ஸ்டேஷன்.

ஜன்னல் அருகில் பழம் பொரி, பழம் பொரி என்ற குரல் கேட்டதும்,

“ஸார்! கேரளத்து பழம் பொரி சாப்பிட்டுண்டோ?” என்று கேட்டான் சிவா.

“இல்லை. அப்படினா?”

“நேந்திரன் பழ பஜ்ஜி தன்னே. பஷே கொஞ்சம் ஸ்வீட்டாயிட்டு இருக்கும். மைதேயில செய்யறது. சாப்பிட்டுப் பாருங்க. உங்களுக்கு இஷ்டமாகிடும்” என்று அவனாகவே சொல்லிவிட்டு, விற்பனையாளரிடம் மூன்று பழம் பொரி வாங்கினான் சிவா. குமார் உடனே தன் பர்சிலிருந்து பணம் எடுத்து, சிவா மறுத்தும் கேட்காமல் பழம் பொரிக்கான பணத்தைக் கொடுத்தான்.

ஓ இதைத்தான் தாரிணி அப்போது சொன்னாளோ? அப்போது இது புரியவில்லை. குமார் குடும்பத்திற்கு இதைப் பற்றித் தெரியவில்லை என்றதும் அவள் கேலி செய்து நகைத்த சம்பவத்தை அசை போட்டுக் கொண்டிருந்த போது

“வைஃபுக்கு இது ரெம்ப இஷ்டம்” என்று சொல்லிக் கொண்டே தாரிணியிடம் ஒரு பழம் பொரியைக் கொடுத்தான். அவள் வாங்கிக் கொண்டு குமாரைப் பார்த்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். ‘இதைத்தான் நான் அன்று சொன்னேன் என்ற அர்த்தமோ அந்தப் பார்வைக்கு? என்று குமார் பழம் பொரியை சுவைத்துக் கொண்டே எண்ணங்களையும் அசை போட்டான். பழம் பொரி நன்றாகவே இருக்கிறது. தெரிந்து கொள்ள அன்று முயற்சி செய்திருக்கலாமோ சின்னச் சின்ன விஷயம்தானே! என்றும் நினைத்துக் கொண்டான். சிவாவின் கேள்வி அவனது நினைவைக் கலைத்தது. வண்டியும் புறப்பட்டது.

“சாருக்கு எதுல ஜோலி?”

“என்ன கேட்டீங்க? ஜோலி? ம்ம்…வேலை?..…நான் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறேன்.”

“ந்யான் குக்!” என்று சிவா நீளமான புன்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுத் தொடர்ந்தான். ந்யான் கேட்டரிங்க் டிப்ளமா படிச்சிட்டு கெல்ஃபில் பெரிய ஹோஆட்டலில் ஜோலி செஞ்சேன். வைஃபுக்கு கெல்ஃப் இஷ்டமில்ல. அமெரிக்கே தன்னே இஷ்டம். அதுகாரணம் இப்போ திருவனந்தபுரத்துல செல்ஃபோயிட்டு ஓர்டர் எடுத்துச் செய்யிறேன்.”

இவன் அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறானே! அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் போவானோ? காரணம்? அவள் மீது அன்பு? அல்லது வாழ்க்கைனா அப்படித்தான் என்று அவன் நினைத்திருப்பானோ? இவள் கொஞ்சமேனும் அவனுக்கு விட்டுக் கொடுக்கிறாளோ? என்று மனதுள் நினைத்துக் கொண்டான்.

“ஓ! சூப்பர்! கேட்டரிங்க் ரொம்ப நல்ல தொழில். அதுவும் இப்ப நிறைய டிமான்ட் தான் இல்லையா?” இதைச் சொல்லிவிட்டு குமார் தாரிணியின் பக்கம் இருந்த ஜன்னலைப் பார்ப்பது போல் தாரிணியைப் பார்த்தான். தாரிணியைப் பொருத்தவரை இது கேவலமான தொழில்! அவள் எப்படி இவனை மணந்து கொண்டாள்? என்று நினைத்துக் கொண்டிருந்த போதே, அவளுக்கு வந்தது கோபம். உடனே அவள் சிவாவிடம்,

“இப்ப எதுக்கு அதைக் குறிச்சு பேசணும்?”

“ஸார் அவளை மைன்ட் செய்யண்டா. அவளுக்கு என் ஜோலி பிடிக்கல. பக்ஷே என்னோட சாப்பாடு ரெம்ப இஷ்டம்” என்று சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தான்.

தாரிணி மிகவும் கடுப்பானாள். சிவாவைப் பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள். கோபம் கலந்த கண்ணீர் அவள் கண்களில் எட்டிப் பார்த்தது.

ஓ அப்போ இவன் தான் வீட்டில் சமைக்கிறான் போலும். அவள் மாறவில்லை. அல்லது பிடிக்காத திருமணமோ அதனால் தன்னை மாற்றிக் கொள்ளவில்லையாகவும் இருக்கலாம். ஆனால் நல்லகாலம். சிவாவைப் பிடிக்கவில்லை என்று சொல்லி வீட்டை விட்டு இறங்கவில்லையே’ என்று குமார் நினைத்துக் கொண்டு தனது இயல்பிற்கு மாறாகத் தன்னையும் மீறி சிவாவிடம்,

“லைஃப் இஸ் ஃபுல் ஆஃப் காம்ப்ரமைஸஸ்தான்! தெரியும். சிவா! நீங்க உங்க வைஃபுக்காக எல்லாமே விட்டுக் கொடுக்கறீங்க போல! பரவாயில்லையே! உங்க வைஃப் ரொம்ப லக்கிதான்!” என்று சொல்லிவிட்டு தாரிணியையும் ஆராய்ந்தான் குமார். அவள் முகம் இறுக்கமாக இருந்தது!

சிவா கொஞ்சம் வெட்கம் கலந்த சிரிப்பை சிரித்துவிட்டு, “யெஸ்! ஷெரியானு! ஜீவிதத்துல ஆரெங்கிலும் ஒரு ஆள் இப்படி ஆகுன்னது உண்டல்லோ ஸாரே!” என்று சொல்லிவிட்டு அவனாகவே தொடர்ந்தான். 

"ந்யங்கள்ட வீடு ரெம்ப பெரிசு ஸார். தோட்டம் கூடுதல் உண்டு.  எல்லா ஜோலிக்கும் ஆட்கார் உண்டு. குக்கிங்க் மாத்திரம் நாங்க செய்வோம். வைஃபினு கூடுதல் ஜோலி ஒன்னும் இல்ல. பின்னே வைஃபிண்ட பேரன்ட்ஸும் பெரிய வீடு வைச்சு கொடுத்தாங்க. வைஃபுக்கு ஒரு சகோதரி மாத்திரம். அவளு அமேரிக்கையிலு. அது காரணம் மற்ற எல்லா ப்ராப்பர்டீஸும் வைஃபுக்கு கொடுத்தாங்க. ஸார் அடுத்த ப்ராவஸ்யம் இங்க வரும் போழ் ந்யங்கள்ட வீட்டுக்கு வரணும்” குமார் புன்சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“இது இப்ப ரெம்ப ஆவஸ்ச்யம்” என்று தாரிணி முணு முணுத்தாள். சிவா அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

‘அன்று நான் தாரிணியின் பிரச்சனையைச் சொன்ன போது, தாரிணியின் பெற்றோர் என்னிடமும், என் குடும்பத்தாரிடமும், இப்போது சிவா சொன்னது போல் பேரம் பேசினார்களே! ஆனால் நானோ என் குடும்பத்தாரோ பணத்திற்கு மயங்குபவர்கள் இல்லையே! என்று குமார் அன்று நடந்ததை நினைத்துக் கொண்டான்.

“ஸார் என்ன யோஜன?”

“ஒன்னும் இல்லை சிவா.”

“ந்யங்கள் எங்க போனாலும் சேர்ந்நுதான் போறதுண்டு. சாரோட ஃபேமிலி? அவங்க ஒங்க கூட வரலியா.”

“ஓ!………. இல்லை. இது அஃபிசியல் டூர்.”

“வைஃபுக்கும் ஜோலி உண்டோ?”

“வைஃப் இல்ல.”

“அது ஷெரி! அப்ப கல்யாணம் செய்தில்லையா? இல்ல…….”

“ம்ம்ம் நான் டிவோர்ஸி” என்று சொல்லி விட்டு தாரிணியைப் பார்த்தான். குமாருக்கு முதலில் இதைச் சொல்ல விருப்பமில்லைதான். ஆனால் தாரிணியின் மன நிலையை அறியவே சொன்னான்.  அவள் இவனைப் பார்க்கவில்லை என்றாலும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது.

“ஹோ! கஷ்டமாயல்லோ! ஸார் பின்னே அடுத்து கல்யாணம் செய்தில்லையா? அப்ப ஸார் தனிச்சா இருக்கீங்க”

“ஏனோ, அப்புறம் அடுத்த கல்யாணத்துல ஆர்வம் இல்ல. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை. எல்லோரும் சேர்ந்து இருக்கோம். சிவா, ஸார் ஸார்னு…வேண்டாமே. குமார்னே கூப்பிடலாம்.”

“ஹோ! எனிக்கு அப்படி சீலமாயிப் போச்சு..சார்.” என்று சொல்லி சிறிது நேரம் மௌனம் காத்தான். “எனிக்கும் ஃபர்ஸ்ட் கல்யாணம் டிவோர்ஸ் ஆகிப் போச்சு. ஆ குட்டி கல்யாணத்துக்கு முன்பே அவள்ட ப்ரேமம் குறிச்சு என்னோடு சொல்லியிருந்தா பிரஸ்ச்னமே இல்லாதாகியிருக்கும். பக்ஷே ஆ குட்டி கல்யாணம் கழிஞ்சு வீட்டுக்குள்ள வந்நு விளக்கு வைக்கும் போழ்தானு சொல்லியது. ஆகப் பிரஸ்ச்னம் ஆகி…பின்ன டிவோர்ஸ். ஆ குட்டியிண்ட வீட்டுல டிவொர்ஸ் கேஸ் கன்டெஸ்ட் செய்ததுனால பெட்டெனு டிவொர்ஸ் கிடைக்கல. தாமஸமாகிப் போச்சு.”

“ஓ! கஷ்டந்தான் இல்லையா?”

“என் வைஃப் கிட்ட ஆ குட்டியோட ஃபோட்டோ காட்டிட்டுண்டு. அல்லேடி?” என்று தாரிணியைப் பார்த்தான். அவளோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்தான் சிவா, ”இவள்ட ஆ ஹஸ்பண்ட ஃபோட்டோ ந்யான் காணனும்னு ஆக்ரஹிச்சேன். பக்ஷே இவர் ஆரும் காட்டலை. அது வேண்டானு.”

சிவா கொஞ்சம் அப்பாவிதான் போல. தாரிணியின் பெற்றோர் நல்ல சாமர்த்தியசாலிகள்தான். முதல் கல்யாணம் ஃபெயிலியர் ஆனதால், இந்த இரண்டாவது கல்யாணத்தைக் குறைகள் இருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பான் போலும். ஆனால் எனக்கு முதல் கல்யாணத்தின் தழும்பு இன்னும் போகலையே.’  என்று குமார் நினைத்துக் கொண்டான்.

சிவா தொடர்ந்தான். “ஸார் உங்க கேஸ் கன்டெஸ்ட் கேஸா இல்ல ம்யூச்சுவலா? பாக்க நல்லாயிருக்கீங்க. நல்ல ஜோலி உண்டு. பின்னே எப்படி டிவோர்ஸ் ஆயி?”

“என் கேஸ் முதல்ல கன்டெஸ்ட்னு ஆகி அப்புறம் ம்யூச்சுவல்….ம்ம்ம்ம்ம் எப்படி டிவோர்ஸ் ஆச்சு?...ம்ம்ம்ம்ம்” என்று இழுத்து வெளியே பார்வையைச் செலுத்தினான்.

குமாருக்கு அதைப் பற்றிச் சொல்வது சரியா என்று மனதுடன் விவாதம் நடத்தினான். என்னதான் சிவாவிற்கு, தான் தான் தாரிணியின் முதல் கணவன் என்பது தெரியாது என்றாலும், தாரிணியின் முன் அவளைப் பற்றி அவள் கணவனிடமே சொல்வது நாகரீகம் இல்லையே. அவள் மனம் வேதனைப் படாதோ? என்று நினைத்து என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தான். தாரிணியைப் பார்த்தான்.

தாரிணிக்குக் கொஞ்சம் பயம் வந்தது போல் தோன்றியது. குமார். காட்டிக் கொடுத்து விடுவானோ? அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற எதிர்பார்ப்பில் கடைக் கண்ணால் குமாரைப் பார்த்தாள்,

“சாருக்குச் சொல்ல இஷ்டம் இல்லைனா வேண்டா. பழம் பொரி இஷ்டமாச்சா ஸார்?” என்று சிவா கேட்டதும்

“தாங்க்ஸ் சிவா! அப்படியில்ல… இப்ப வேண்டாம்னு தோணுது. ஹான் பழம் பொரி நல்லாருந்துச்சு. புதுசா ஒன்னை டேஸ்ட் பண்ண வைச்சதுக்கும் தாங்க்ஸ்! சிவா நீங்க தப்பா நினைக்கலைனா, கொஞ்சம் நான் ரிலாக்ஸ் பண்ணிக்கவா?”

“ஹோ! ஸோரி ஸார்! ந்யான் ஒங்க பழைய லைஃப் பத்தி கேட்டு ஹேர்ட் செய்தோ?”

“ஹேய்! நோ! நாட் அட் ஆல்! ஜஸ்ட் கொஞ்ச நேரம்” என்று சொல்லி விட்டு, தாரிணி என்ன செய்கிறாள் என்று ஜன்னல் வழி வெளியே பார்ப்பது போல் ஒரு நோட்டம் விட்டான். அவளுக்கு இப்போது நிம்மதியாக இருந்திருக்கும். சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். ஆனால், அவள் மூடிய கண்கள் அங்குமிங்கும் வேகமாக அசைந்ததைப் பார்த்த போது அவள் மனதிலும் எண்ணங்கள் ஓடுவது போல் குமாருக்குத் தெரிந்தது.  குமாரின் மனம் சேமிப்புக் கிடங்கில், பாதாளக் கரண்டியை வீசி அள்ளி எடுத்துப் போட்டது. சிவாவிடம் சொல்லுவது போல் மனம் பேசியது.

'10 வருடங்களுக்கு முன் ஒரு சுப தினமோ, அசுப தினமோ? தாரிணி எங்கள் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள். மூட் இருந்தால் 7 மணிக்கு எழுவாள். இல்லை என்றால் 9, 10 மணிக்குத்தான் எழுவாள். இல்லை எழுந்திருக்கவே மாட்டாள். அம்மாவுக்கு உதவியாக இருப்பதற்குப் பதிலாக அம்மாவே அவளுக்கும் சேர்த்து எல்லாமும் செய்ய வேண்டியதாக இருந்தது. எங்கள் வீட்டுச் சமையல் கேரளத்துச் சமையல் போல இல்லை, பிடிக்கவில்லை. என்றாள். நான் ஸ்டாப்பாக அர்த்தமே இல்லாமல் படபடவெனப் பேசுவாள். அல்லது பேசாமல் ரூமிற்குள்ளேயே அதுவும் எப்போதும் ஏசி போட்டுக் கொண்டு இருப்பாள்.

வெளியில் செல்வது மிகவும் பிடிக்கும். தன்னை அலங்கரித்துக் கொள்ளவே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வாள். வெளியில் செல்லவில்லை என்றால் சில சமயம் குளிக்கக் கூட மாட்டாள். வெளியில் சாப்பிடுவதுதான் பிடிக்கும். வீட்டிலென்றால் சில சமயம் சாப்பிடுவாள்…சில சமயம் சாப்பிட மாட்டாள். எப்போதும் வெளியில் சுற்ற வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சினிமாவில் வரும் காதல் ஜோடி போல இருக்க வேண்டும் என கற்பனை உலகில் எப்போதுமே. ஏதோ ஒரு ஆர்ட் ஃபில்மில் நடித்திருப்பதாகக் கூடச் சொன்னாள்.

மணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை, உடனே திருவனந்தபுரம் செல்ல வேண்டும் என்றாள். காரணம் எங்கள் வீடு பிடிக்கவில்லை. அவளுக்கு அவள் வீட்டில் பொறுப்பு கிடையாது. ஊர் சுற்றுவாள். எங்களிடம் அனுமதி கூடக் கேட்காமல், உன்னை பிடிக்கவில்லை, குட்பை என்று சொல்லிவிட்டு தன் அப்பாவை அழைத்து உடனே ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து சென்றுவிட்டாள். எங்கள் சொல் எதுவும் எடுபடவில்லை. எங்கள் அனைவருக்கும் ஷாக்…

ஸாரி என்று சொல்லிக் கொண்டு வந்தாள். ஏற்றுக் கொண்டோம். என் அம்மா அவளுக்குச் சமைப்பதற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்தார். அம்மா பொறுமைசாலி. அதே சமயம் கண்டிப்பானவர். தாரிணிக்கு அது பிடிக்கவில்லை. சீரியல் பார்க்க வேண்டும் என்பாள். எல்லா சினிமாக்களும் பார்க்க வேண்டும் என்பாள். அதுவும் ரிலீஸ் ஆகும் முதல் நாளே! நாங்கள் ஹனிமூன் கூட சென்று வந்தோம் என்றாலும் அவள் எதிர்பார்த்த அளவிற்கு என்னால் எப்போதும் அவளை வெளியில் அழைத்துச் செல்லவோ அல்லது அவளைத் திருப்திப்படுத்தவோ முடியவில்லை. என் பணியும் அப்படி. மூட் அவுட் ஆனாள். கோபப்பட்டாள். உன்னைப் பிடிக்கவில்லை என்று தாலியைக் கழட்டி ஸ்வாமி படத்தின் முன் வைத்துவிட்டாள். அம்மாவும் அப்பாவும் பதறிப் போனார்கள். நான் உட்பட வீட்டில் உள்ள அனைவருமே. அவள் யாரையாவது விரும்புகிறாளா? என்றும் கேட்டோம். இல்லை என்று சொல்லிவிட்டாள். அப்படி இறங்கியது இரண்டாம் முறை. அவளது அம்மா வந்து அவளை அழைத்துப் போனார்.

தாரிணிக்கு ஏதோ பிரச்சனை இருப்பது தெரிந்தது. கல்யாணத்திற்கு முன்பும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அவளது பெற்றொரிடம் சொன்ன போது, அவளிடம் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூலாகச் சொன்னார்கள். நாங்கள் அன்பாக இருக்கவில்லையா என்ன? புரியவில்லை. மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும், மீண்டும் அவள் ஸாரி என்று சொல்லிக் கொண்டு வந்த போது மனம் இளகியது. அவளை ஏற்றுக் கொண்டேன். கொண்டோம். அவளை நல்வழியில் திருத்த முயன்றோம்.

ஒரு மாதம் அப்படியும் இப்படியுமாக ஓடியது. நாங்களும் சரியாகிவிடுவாள் என்று நம்பினோம். அவளது வேவ்லெங்க்தைப் புரிந்து கொண்ட, அவளை மகிழ்வாக வைத்துக் கொள்ளும் பையன் என்று ஒருவனைப் பற்றிச் சொன்னாள். நாங்கள் விசாரித்தோம். ஆனால் அந்தப் பையன் ஜஸ்ட் ஒரு நண்பன் என்று தெரிய வந்தது. வேலைக்குப் போனால் நல்ல சேஞ்ச் இருக்கும், உலகைப் புரிந்துகொள்வாள் என்று அவளை வேலைக்குப் போகச் சொன்னோம். அவளும் சென்றாள். 10 நாட்கள் தான். அங்கு வேலைப்பளு, டென்ஷன் என்று விட்டுவிட்டாள்.

அவளுக்குத் தான் நினைத்தது உடனே நடக்க வேண்டும். அவளது தோழிக்குக் கல்யாணம் வந்தது. கல்யாணத்திற்கு முன் தோழியர் பார்ட்டி என்று ஏதோ ரிஸார்ட் புக் செய்திருப்பதாக அவளை அழைத்தாளாம். அதற்கு ஒரு மாதம் முன்பே போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து உடனே தன் வீட்டிற்குப் போக வேண்டும் என்று அடம் பிடித்தாள். நாங்களும் இது நல்லதல்ல என்று அவளை உட்கார்த்தி அட்வைஸ் செய்தோம். அவளுக்குக் கோபம் வந்துவிட குட்பை ஃபார் எவர் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டாள். அவளுக்குத் தாம்பத்தியத்தில் பயம் இருந்ததால், எங்களுக்குள் ஒன்றும் பெரிதாக நடந்திருக்கவில்லை. ஜஸ்ட் 8 மாத மண வாழ்க்கை. அதில் பெரும்பாலும் அவள் பிறந்த வீட்டில்தான் இருந்தாள்.

என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பினேன்…' வண்டி பெரிய ப்ரேக் சத்தத்துடன் சிக்னலுக்காக நின்று குமாரைத் தட்டி இவ்வுலகிற்குக் கொண்டு வந்தது. பெருமூச்சொன்றை உதிர்த்த குமார் பாத்ரூம் வரை சென்று முகம் கழுவி வந்தான்.

“ஸார் இப்ப ஓகேயா?” என்றான் சிவா.

“ம்.. பெட்டர் நௌ”

“சாய்ய்ய்ய்ய்ய்ய” என்று வரவும் குமார் சிவாவிடம் கேட்டுவிட்டு, தாரிணிக்கு வேண்டுமா என்பது போல் அவளைப் பார்த்தான். சிவா அவளுக்கும் வாங்கச் சொல்லவே குமார் மூன்று ‘சாயா’ வாங்கிட,. சிவா அதனை தாரிணியிடம் கொடுத்தான். சிக்னல் கிடைத்ததும் வண்டி மெதுவாகப் புறப்பட்டது. இப்போது தாரிணியின் மனம் வேகமெடுத்தது.

“நான் தானே இறங்கி வந்தேன். குமார் வீட்டில் எல்லோரும் அன்பாகத்தானே இருந்தார்கள். குமாரும் அன்பாகத்தானே இருந்தார். அப்போது எனக்கு என்னாயிற்று? நான் குமாரை என் விருப்பப்படி இல்லை என்று சொல்லி வேண்டாம் என்று வந்தது தவறுதான். அந்த ரணத்தில்தான், நான் மீண்டும் என்னை ஏற்றுக் கொள்ளக் கெஞ்சிய போது அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். என்றாலும் என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாமே! குமார் மறுபடியும் திருமணம் கூட செய்துகொள்ளவில்லையே! ஏனோ? என் நினைவாக இருக்குமோ? ஆனால் அவர் தானே டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பினார். என்னால் தனியாக இருக்க முடியாது என்று எனக்கு மீண்டும் மறுமணம்…இதோ இவர். என் மனம் இதையும் ஏனோ ஒப்பவில்லையே. பழைய வாழ்க்கையையே நினைக்கிறதே.” என்று நினைத்த தாரிணியின் கண்ணில் நீர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது…

பக்கத்துத் தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாகக் க்ராஸ் செய்தது. குமாரின் மனதிலும்….

“அவள் கெஞ்சினாளே! எனக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் கொடுங்கள். நான் மாறுகிறேன்….என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று. ஆனால், மூன்று முறை ஏற்பட்ட ரணத்தில் நான் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். அவள் அப்படிச் செய்தது சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் தெரிந்து எல்லோரும் கேள்வி கேட்க, என் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு வேதனைப்பட்டார்கள். ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியம் அப்போது என் மனதில் இல்லையே!” என்று காஃபியைக் குடித்தவாறே நினைவில் மூழ்கியிருந்தவன் டக்கென்று,

“சிவா! நீங்க எப்படி டிவோர்ஸ் ஆச்சுனு கேட்டதுக்குச் சுருக்கமா சொல்றேன். என் மாஜி மனைவியை என்னாலயும் சரி, எங்க குடும்பத்தாலயும் சரி அவங்க எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தி மகிழ்ச்சியா வைச்சுக்க முடியலை. உங்களை மாதிரி எல்லாம் என்னால மூழுசா காம்ப்ரமைஸ் பண்ண முடியலை. ஸோ அவங்களுக்குப் பிடிக்காம போனது நியாயம் தானே! இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு…”

“ஸார்! அதே! காம்ப்ரமைஸஸ்! பக்ஷே…….போட்டு அது வேண்டா”. சிவா, எதையோ அடக்கிக் கொண்டது போல் தோன்றியது குமாருக்கு. “உங்க சைட் மாத்திரம் சொன்னீங்க. சாரமில்ல. ந்யான் ஒன்னு கேட்கட்டா….கலியாணத்தினு ஜாதகம் எல்லாம் பாக்குறாங்க. மேச்சுனு சொல்லி கலியாணமும் நடக்குது. பின்னே எங்ஙன டிவோர்ஸ் ஆகுது?”

“ஹ்யூமன் எரர் இன் கேல்குலேஷன்ஸ் ஆக இருக்கலாம். எனக்கு ஜோஸ்யத்துல நம்பிக்கை இல்லை. மேன் ப்ரொப்போஸஸ் காட் டிஸ்போஸஸ். கல்யாணம் நடக்கும்னு ஜோசியர் சொல்லிடுவாங்க. ஆனா, மனப்பொருத்தம் பத்தி எல்லாம் மோஸ்ட் ஆஃப் த ஜோசியர் சரியா சொல்லறது இல்லை. மனுஷங்க தானே! இதெல்லாத்துக்கும் மேல இறைவன் இருக்கார் இல்லையா அவர் கேல்குலேஷன்ஸ் யாராலும் கணிக்க முடியாதே! போன பிறப்பில் விட்ட குறை தொட்ட குறையா இருக்கலாம் இப்படியான வாழ்க்கைனு சொல்லி நாம ஜஸ்ட் சமாதானம் செய்துக்க வேண்டியதுதான்” இதைக் கேட்டதும் தாரிணியின் மனம் வெம்பியது.

“ம்ம்ம்ம் அப்படித்தான் இருக்கணும்! அப்படி நோக்கியால், என்னோட முதல் வைஃப்? ஆ குட்டி சில மணிக்கூர் என்னோடு இரிக்கணும்னு விதிச்சதாயிருக்கும். அல்லே ஸார்?”

“ம்ம்ம். அப்படி நினைச்சு ஒரு மனச் சமாதானம். இல்லைனா மனசை அடக்க முடியாதே! அக்னி சாட்சியா தாலி கட்டுறோம்….ஆனா அந்த அக்னி டிவோர்ஸுக்குச் சாட்சியா வரதில்லையே!!....அன்னிக்குத் தாலி கட்டினதும் பல பெண்கள், எனக்கு அப்ப வைஃபா வந்தவளை அதிர்ஷ்டக்காரி, இந்த ரெண்டாங்க்கெட்டான் அசட்டுப் பெண்ணுக்குப் பாரு அதிர்ஷ்ட லைஃப் அப்படினு எல்லாம் கமென்ட் அடிச்சதா காதுல விழுந்துச்சு. முடிவு? இப்போது அதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.” என்று சொல்லி குமார் தன் கண்களில் எட்டிப் பார்த்த நீரை அடக்க வெளியில் வேடிக்கை பார்த்தான்.

பாலக்காடு ஸ்டேஷனில் நின்ற ரயில் திடீரென்று சற்று பின்னோக்கிச் சென்றது.

“ரயில் பின்னோட்டு செல்லுனது போல லைஃபும் பின்னோட்டு போகாதே ஸார்!?”

“நெவர் டர்ன் பேக்! அதுலருந்து பாடம் மட்டும் எடுத்துக்கணும். அதுதான் நல்லது சிவா! எதையும் சரி செய்ய முடியாதே! நம்ம வாழ்க்கைப் பயணமும் ரயில் பயணம் மாதிரிதான்” என்று குமார் தத்துவம் சொன்னாலும், கண்கள் மின்னியது கண்ணீரினால். தூசியைத் துடைப்பது போல் துடைத்துக் கொண்டான். சிவாவைத் தவிர மற்ற இருவரின் மனதிலும் உணர்வுடன் ஆன டெலிட் செய்யக் கஷ்டப்படும் நினைவுகள், திணறல்கள். அதன் பின் அங்கு மௌனம் நிலவியது.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக நுழைந்தது. குமார் தன் பெட்டி மற்றும் முதுகுப் பையை எடுத்துக் கொண்டான். நைஸ் டு மீட் யு சிவா! இதுதான் ரயில் ஸ்னேகமோ? பை மிஸஸ் சிவா! டேக் கேர்!” என்று சொல்லி தாரிணியை நேருக்கு நேர் பார்த்துவிட்டு. சிவாவின் கையைக் குலுக்கிவிட்டு குமார் இறங்கினான். சிவா தனது விசிட்டிங்க் கார்டை குமாரின் கையில் கொடுத்தான். இறங்கி யாருமில்லாத இடம் சென்றதும், அதுவரை கட்டுப்படுத்திய உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் முகத்தைக் கர்சீஃபால் மூடிக் கொண்டு பொங்கி அழுதான். தாரிணியும் பொங்கிய அழுகையைக் கட்டுபடுத்த முடியாமல் யாருக்கும் தெரியாமல் அழ வேண்டி பாத்ரூமை நோக்கிச் சென்றாள்.


--------கீதா






62 கருத்துகள்:

  1. "என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும்" - அப்போ நாங்கள்லாம் என்ன சொல்லிக்கறது?

    கதையில் எனக்குப் பிடித்தது மொழியும் நடையும்தான். என்ன, கொஞ்சம் நல்ல படத்தையும் தேர்ந்தெடுத்துச் சேர்த்திருக்கலாம்.(அங்க). இடுகை பெரிசு என்பதால் (கதை நீளம்) எழுத்துருவைச் சின்னதாக்கிட்டீங்க போலிருக்கு. அது கதையைப் படிக்க இன்னும் கஷ்டமாக்கிரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும்" - அப்போ நாங்கள்லாம் என்ன சொல்லிக்கறது?//

      நெல்லை இது சத்தியமான வார்த்தைகள்! நீங்கள் எல்லாம் எவ்வளவு அழகா எழுதறீங்கப்பா..அதுவும் பல ஜெர்னர்களில் கலக்குகிறீர்கள்!!!.இதுவும் சத்தியமான வார்த்தைகள்...

      கதையில் எனக்குப் பிடித்தது மொழியும் நடையும்தான்.// மிக்க நன்றி நெல்லைத்தமிழன்!! தங்களின் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு..

      என்ன, கொஞ்சம் நல்ல படத்தையும் தேர்ந்தெடுத்துச் சேர்த்திருக்கலாம்.(அங்க).// ஹிஹிஹிஹி...

      இடுகை பெரிசு என்பதால் (கதை நீளம்) எழுத்துருவைச் சின்னதாக்கிட்டீங்க போலிருக்கு.// இல்லைப்பா அந்தக் கதைய ஏன் கேக்கறீங்க நெல்லை...ப்ளாகரில் போடும் போது சரியாக இருந்துச்சு...இங்க பப்ளிஷ் ஆனதும் இப்படி ஆகிப் போச்சு. அப்புறம் கரெக்ட் பண்ணி பண்ணி அப்டேட் பண்ணிப் பண்ணி எல்லாம் தாருமாறா போக...சோர்ந்து போய்....போனா போகுதுனு விட்டுட்டேன்....

      சரி மீண்டும் முயற்சி பண்ணிப் பார்க்கறேன்....காப்பி பண்ணி வேர்டில் போட்டு ஃபான்ட் செட் செய்துட்டு போட்டுப் பார்க்கறேன்....
      மிக்க நன்றி நெல்லைத் தமிழன்...

      நீக்கு
    2. இந்த கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு பிளஸ் (+) கீயை ஒரு முறை அழுத்துங்கள்... சரியாக தெரியவில்லையா...? மறுபடியும் பிளஸ் (+) கீயை ஒரு முறை அழுத்துங்கள்... இன்னும் சரியாக தெரியவில்லையா...? மறுபடியும் பிளஸ் (+) கீயை ஒரு முறை அழுத்துங்கள்...

      இதற்கு மேல் கண் மருத்துவரை அணுகுவது நல்லது... ஹிஹி...

      நன்றி...

      நீக்கு
    3. ஹஹஹஹ் ஜி முயற்சி செய்கிறேன். ரொம்ப தாமதமாக முயற்சி செய்கிறேன்....ஹஹஹ சொல்லுகிறேன் கண் மருத்துவரை அணுகணுமானு... மிக்க நன்றி டிடி

      நீக்கு
    4. டிடி ப்ளாக் தான் பெரிசாகுது...பொட்டி தெரியலையே!!! ஹஹஹ் அப்ப கண் மருத்துவர்தானா? ஹாஹ்

      நீக்கு
    5. ஓ டிடி இது ப்ளாகில் படிப்பதற்கா...ஓ ஸாரி ஸாரி நான் தமிழ்மண பெட்டி தெரிவதற்கு என்று நினைத்துவிட்டேன்....ஹஹஹஹ

      நன்றி டிடி..

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. அஅங்கும் படித்து கருத்துரை இட்டேன் அருமை.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. பரவால்ல கில்லர்ஜி! இல்லைனாலும் எங்களுக்கெல்லாம் ஓட்டு விழாதுப்பா...

      நீக்கு
    2. நான் போட்ட ஓட்டு விழுந்ததே.

      நீக்கு
    3. கில்லர்ஜிக்குக் கொடுத்தது சும்மா... நெல்லைத்தமிழன் எங்களுக்கு எங்க ஓட்டுப் பெட்டியே கண்ணுக்குத் தெரியறது இல்லை..ஹஹஹஹ்

      நீங்க கில்லர்ஜி, ஸ்ரீராம், அதிரா, ஏஞ்சல் உங்களைப் போன்று சிலர் போட்டுருவாங்க....மிஞ்சி மிஞ்சிப் போனா 6 க்குள்ள வரும்...இது ஓட்டுப்பெட்டி தெரிந்த காலத்துல சொல்லறேன்...

      அதனால ரொமப் எல்லாம் ஓட்டு பற்றி நாங்கள் யோசித்தது இல்லை. கருத்துகள் தான் வேணும். உங்கள் ஓட்டுக்கு மிக்க நன்றி நெத...

      நீக்கு
  6. கூடிக் குலவி கலைந்து செல்லும் மேகங்களைப் போல மனித மனங்களுக்குள் தான் எத்தனை எத்தனை எண்ணக் கலவைகள்..

    எங்கிருந்தாலும் இதயங்கள் அமைதியில் வாழட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு சகோ தங்களின் அழகான கருத்திற்கு...

      நீக்கு
  7. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  8. அருமையான கதை. ஒவ்வொருவர் குணநலங்களும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம் அருமை.
    சில பிரிவுகள் நல்லது. சில பிரிவுகள் வேதனை தரும்.

    //“ரயில் பின்னோட்டு செல்லுனது போல லைஃபும் பின்னோட்டு போகாதே ஸார்!?”


    “நெவர் டர்ன் பேக்! அதுலருந்து பாடம் மட்டும் எடுத்துக்கணும். அதுதான் நல்லது சிவா! எதையும் சரி செய்ய முடியாதே! நம்ம வாழ்க்கைப் பயணமும் ரயில் பயணம் மாதிரிதான்”//

    சிவா, குமார் சொல்வது சரிதான்.

    நம்ம ஏரியாவில் சொன்ன கருத்து தான் கீதா.



    //"என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும்"//

    கீதா , நீங்களே இப்படி சொன்னால் எப்படி?

    பன்முக திறமை உடையவர் இல்லையா நீங்கள்.


    இதற்கு முன் எழுதிய (சம்யுக்தா.)

    //ஆண்டுகள் பல கடந்தாலும் மாறாத அன்பு ஒன்று சேர்த்து விட்டது.
    கார்த்தியின் அம்மாவின் புரிதல் அருமை.
    சம்யுக்தாவின் அடையாளம் இழக்கவில்லை அதை மீண்டும் பெறலாம் என்ற கார்த்தியின் அன்பும் ஆதரவும் அருமை. இப்படி புரிதல் இருந்தால பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கும்.

    கீதாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அடுத்த கதை எப்போது என்ற ஆவலுடன்.//



    கதையை படித்து விட்டு அடுத்த கதை எப்போது என்று கேட்டேன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா உங்களது பாராட்டிற்கும் ஊக்கமிகு வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி!! ஆமாம் நீங்கள் கேட்டிருந்தீர்கள் அடுத்த கதை எப்போது என்று....இதோ கௌதம் அண்ணா, ஸ்ரீராம் இவர்களின் உபயத்தால், ஆதரவினால் கொடுத்துவிட்டேன்...இல்லை என்றால் இந்தக் கதை உருவாகியிருக்காது!

      பன்முகத்திறமை??!!! எனக்கா? யோசிக்கிறேன் அக்கா அப்படியா என்று....என்றாலும் உங்களது அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அக்கா.

      நீக்கு
  9. தமிழ்மண வாக்கு அளித்துவிட்டேன் கீதா

    பதிலளிநீக்கு
  10. அங்கே பின்னூட்டம் மட்டும் போட்டு ஆதரிச்சேன். இங்கே தம வாக்கும் போட்டு ஆதரித்துள்ளேன்! வித்தியாசமான மொழி நடையில், வித்தியாசமான பாத்திரங்களை படைத்து சிறந்த ஒரு சிறுகதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் உங்க ஓட்டுக்கு மிக்க நன்றி!!ஆதரவிற்கும் சேர்த்துத்தான்!!! பாராட்டிற்கு மிக்க நன்றி...

      நீக்கு
  11. நல்ல கதை! இன்றைக்குப் பெரும்பாலான பெண்கள் இப்படி தாரிணி போலத்தான் இருக்கிறார்கள். (இப்படிச் சொல்வதற்காகப் பெண் பதிவர்கள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது!). ஆனால், ஆண்கள் எத்தனை பேர் குமார் போல் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். நான் பார்த்த வரை, ஆண்களோ பெண்களோ, இன்றைய தலைமுறையினர் யாருக்கும் விட்டுக் கொடுக்கும் பக்குவம் இல்லை. "நான் ஏன் நடிக்க வேண்டும்? நான் ஏன் மற்றவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்? நான் ஏன் என் தனித்தன்மையை விட்டுக் கொடுக்க வேண்டும்?" எனக் கேட்கிறார்கள். தனித்தன்மை என்பது அவரவர் திறமையில்தான் இருக்கிறதே தவிர நடை, உடை, பாவனை எனச் சின்னஞ்சிறு விதயங்களைக் கூடத் தன்னுடைய தனித்தன்மை என நினைத்துக் கொண்டு எதையுமே யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பது தனக்கெனத் தனித்திறமையும் அது சார்ந்த தனித்தன்மையும் இல்லாதவர்களின் வெற்று வீராப்பு என நினைக்கிறேன்.

    ஒரு காலத்தில் இப்படிக் கதைகள் மூலம் நல்லவற்றை எடுத்துச் சொல்லுதல் என்பதில் ஒரு பயன் இருந்தது. காரணம், அன்று பலருக்கும் படிக்கும் பழக்கம் இருந்தது. நல்லவற்றை எடுத்துரைக்கும் படைப்புகள் மக்களின் மனதில் உள்ள கசடுகளை, பண்பில் உள்ள அழுக்குகளை நீக்கி அவர்களை மெருகேற்ற உதவின. ஆனால், படிக்கும் பழக்கமே பெரிதும் குறைந்து விட்ட இந்நாளில் இத்தகைய கதைகளை நாம் யாருக்காக எழுதுகிறோம் என்பதுதான் புரியவில்லை. இருக்கட்டும், விதைகள் தூவுவது மட்டுமே நம் வேலை. முளைப்பதும் தழைப்பதும் பூப்பதும் காய்ப்பதும் பழுப்பதும் மீண்டும் விதைபடுவதும் காலத்தின் கையில்.

    நல்ல கதைக்கு நன்றி! ஓரளவுக்கு நன்கு எழுதும் திறமை உங்களுக்கு வந்து விட்டதால் இனி கொஞ்சம் கொஞ்சமாக அச்சு இதழ்களின் பக்கமும் திரும்ப வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா சகா விரிவான கருத்துரைக்கு...

      பெண் பதிவர்கள் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் சகா! உண்மைதான் விட்டுக் கொடுக்கும் பழக்கம் இல்லைதான். சிறிய சிறிய விதயங்களில் கூட விட்டுக் கொடுத்தல் இல்லை என்பது வேதனைக்குரியது. அதற்குப் பெயர் நீங்கள் சொல்லுவது போல் தனித்தன்மை என்று சொல்லிவிடுவார்கள். இதுதான் நான் என்று!!

      கதைகள் என்றில்லை. இப்போது யாரேனும் அறிவுரை சொன்னாலும் கூட கேட்டுக் கொள்வதில்லை.

      நல்ல கதை என்று சொன்னமைக்கும் மிக்க நன்றி சகா. அச்சு இதழ்களின் பக்கமும் திரும்ப ஊக்கப்படுத்துவதற்கு மிக்க மிக்க நன்றி. அத்தனைக்கு நான் எழுதுகிறேனா தெரியவில்லை...

      மிக்க நன்றி இபுஞா சகோ...

      நீக்கு
  12. உண்மையில் நல்ல ஹெவியான கதைக்கருவினை கையாண்டிருக்கும் விதம் அருமை கீதா. டிவோஸியான இருவரும் மீண்டும் சந்திக்கும் போது தோன்றும் உண்ர்வுகள் இப்படியும் இருக்கலாம் என சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள்? தாரணி போல பலர் இப்போது இருக்கின்றார்கள், குமார் போல் சிலர் உண்டெனினும் டிவோஸ் ஆன பின் தனித்து இருக்க முடியாது என தாரணி மறு திருமணமும் குமார் இன்னும் தனித்தே வாழ்வதும் தேடினால் கிடைப்பார்களோ என்னமோ? இப்போதெல்லாம் பிள்ளைகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாது மறு திருமணம் குறித்து சிந்திப்போரே அனேகம். சின்னசீன்ன பிரச்சனைகளும் பெரிதாகி பிரிவில் கொண்டு விடுகின்றதல்லவா?

    உங்கள் கதையின் கருவும் கதை நடையும் அருமைப்பா. உங்களை எழுத வைத்து கற்பனைக்குதிரைய தட்டி எழுப்ப வைத்த எங்கள் பிளாக் குழுவுக்கு பெரிய ஓ போட்டு பாராட்டி விடுவோம். எங்கள் பிளாக் தளமும் அதனோடினைந்த நண்பர்களும் குழுவாக இணைந்து செயல்படுவதும் மற்றவர்களை ஊக்குவிப்பதும் பாராட்டுதலுக்குரியது. இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் கீதா. படிக்க கருத்திட நாங்கள் காத்திருக்கின்றோம்.

    தமிழ் மண ஒட்டு போட்டு விட்டு இங்கேயும் பகிர்ந்தால் தான் அது செல்லுபடியாகுமோ? பதிவிடாமல் ஒட்டு போட்டு சென்றால் கண்டுகொள்ள மாட்டார்களோ? நான் படித்து கருத்திடா விட்டாலும் ஒட்டுப்போட்டு செல்வதுண்டு. ஆனல ஒட்டை எதிர்ப்பார்த்து ஒட்டு போடாதமையால் நான் இடும் ஒட்டுக்குறித்து எங்கும் பதிந்து சொல்வதில்லையாக்கும். ஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனல் இல்லை ஆனால் என திருத்தி வாசிக்கவும்,

      நீக்கு
    2. ஆம் நிஷா முதல் பத்தியில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் சரியே!

      பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ...நீங்கள் சொல்லியிருப்பது போல் க்ரெடிட்ஸ் கோஸ் டு என்னை ஊக்குவிக்கும் எங்கள் தள நண்பர் துளசி, எங்கள் ப்ளாக்/க்ரியேஷன்ஸ் குழு..ஸ்ரீராம் மற்றும் கௌதம் அண்ணா....எழுத ஆசைதான் பார்ப்போம் முடிகிறதா என்று..

      ஹஹஹ நிஷா தமிழ்மண ஓட்டுப் பெட்டி எங்கள் தளத்தில் எங்களுக்குக் கண்ணுக்கே தெரிவதில்லை. அப்புறம் இல்லையா ஓட்டு பற்றிச் சிந்திப்பது...ஓட்டைப் பார்ப்பது எல்லாம்...சும்மா நான் தமாஷுக்குச் சொன்னது....நீங்கள் போட்டுச் செல்லுவது குறித்து மகிழ்ச்சி நிஷா. பகிர எல்லாம் வேண்டாம் நிஷா...அது முக்கியமல்ல...கருத்து தான் முக்கியம் உங்களுக்கு நேரம் இருக்கும் போது போடுங்கள் அது போதும்...மிக்க நன்றிபா விரிவான கருத்திற்கு...

      நீக்கு
  13. நம்ம ஏரியாவில் ...வாசித்து ரசித்த கதை...

    மீண்டும் வாழ்த்துக்கள் கீதாக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு அங்கேயும் உங்கள் கமென்டைப் பார்த்தேன் ரசித்தமைக்கும் மிக்க நன்றி...

      கீதா

      நீக்கு
  14. அசத்தல்... வாழ்த்துகள்...

    அப்புறம் இதை வைத்து குறும்படத்தை எடுப்பீர்களா...? அடியேனையும் அழைக்கவும்...(!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹஹஹ் டிடி குறும்படம் எடுக்கும் ஐடியா எல்லாம் இல்லை....எடுத்தால் உங்களுக்குக் கண்டிப்பா ரோல் உண்டு என்ன ரோல்னு நீங்களே சொல்லிடுங்க...ஹிஹிஹி இந்தக் கதைல 3 கேரக்டர்தானே ஹிஹிஹி...

      கருத்திற்கு மிக்க நன்றி டிடி...

      நீக்கு
  15. முழுதும் படிக்க இயலாமை! மன்னிக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை புலவர் ஐயா...பெரிய கதை இல்லையா...மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  16. பொறுத்தார் பூமி ..இல்லையில்லை ... தரணி ஆளலாம் ,இது தாரணி போன்ற பெண்கள் புரிந்துக் கொள்வார்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் ஜி ஆனால் யாரையும் குற்றம் சொல்லுவதற்கில்லையே...ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி...வளர்ப்பும் உள்ளது என்றாலும்...மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  17. இந்த ஐடியா நல்லாயிருக்கே நம் தளத்துக்கு நாமே எழுதாமல் பிறரை எழுத வைக்கும் உத்தி நன்றாகவே செயல் படுகிறதைப் பார்க்கிறேன் நான் எந்தளத்தில் கதைகளுக்குகாக போட்டி அறிவித்து சில நன்றாக வந்தன. ஆனால் பதிவர்கள் லேசில் எழுதுவதில்லை எழுது எழுதுஎன்று மன்றாட வேண்டி இருந்தது இடியாப்பசிக்கல் என்று ஒரு உண்மை நிகழ்வை கதை போல் எழுதி அதை முடிக்கக் கேட்டுக் கொண்டேன் யாரும் முன்வரவில்லை. இப்போதும் அது என் தளத்தில் இருக்கிறது ஏறத்தாழ இதே கருத்தில் முன்பே ஒரு கதை படித்த நினைவு ஒரு வேளை கதையின் கருத்து அதுவாக இருக்க வேண்டும் என்பது கண்டிஷனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எம் பி சார். நினைவிருக்கிறது சார். இடியாப்பச் சிக்கல்....நான் அப்போது ஏதோ சில காரணங்களால் எழுத முடியாமல் போனது. இப்போது மீண்டும் முயற்சி செய்கிறேன் சார். கதையின் சுட்டி எடுக்கிறேன் உங்கள் தளத்திலிருந்து....

      நீங்கள் இதே போன்ற கதையை எங்கள் தளத்தில் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ...ஆம் சார் கதைக் கரு கௌதம் அண்ணா நம்ம ஏரியாவில் கொடுத்திருந்தார். கண்டிஷனல் கதைதான்...
      மிக்க நன்றி ஜி எம் பி சார்...

      கீதா

      நீக்கு
  18. அழுத்தமான கதைக்களம்....

    உளவியல்ரீதியான அணுகுமுறைன்னு அருமையான கதை..


    என்னோடு சேர்ந்து இப்படி லெந்தியா பதிவு எழுத ஆரம்பிச்சுட்டீகளோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ ராஜி நானும் கட்டுரை கூட லெங்க்தியாதான் எழுதுவேன்...அதை ஏன் க்கேக்கறீங்க....எனக்குச் சுருக்கி எழுதத் தெரியலையேப்பா. ஒரு வேளை பொருளாதாரத்துல சிக்கனமா இருக்கணும்னு சொல்லித் தருவாங்க ஆனால் பொருளாதாரப் படிப்புல கதை கதையா எழுதி எழுதி...அஹஹ்ஹ் அப்படியாகிப் போச்சு..!!!

      மிக்க நன்றி ராஜி உங்க பாராட்டுக்கும்...கருத்துக்கும்

      நீக்கு
  19. உங்களைப்போல கட்டுப்பாட்டுக்குள் நின்று கதை எழுத எனக்குதெரியவில்லை கீதா)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் இல்லை தனிமரம்....நேசன்...நீங்களும் மிக அழகாக உங்கள் இலங்கைத் தமிழில் எழுதி வந்தீர்களே! மீண்டும் எழுதுங்கள்! உங்கள் ப்ளோக் எங்களுக்கு அப்டேட் ஆவதில்லை. பெட்டிக்கும் வருவதில்லை...ஏன் என்று தெரியவில்லை..

      நீக்கு
    2. தமிழ்மணம் கைவிட்டு விட்டது மின்னஞ்சல் முறையினை வைத்து இருக்கின்றேன் மீண்டும் உங்கள் மின்னஞ்சல் உள்ளீடு செய்தால் என் தொடர்கள் உங்கள் கையில் சேரும்))) நட்புடன் தனிமரம்.

      நீக்கு
  20. பருவ அகவை (வயசு) உள்ளங்களைத் தொட்டுப் பாரத்துத் தொடுத்த கதை போலத் தெரிகிறது.
    அருமையான கதை

    பதிலளிநீக்கு
  21. சொல்லிச் சென்றவிதம் அருமை
    அதனால் நீளம் ஒரு பொருட்டாய் இல்லை
    இயல்பாக சொல்லப்பட்ட அருமையான கதை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சகோ தங்களின் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும்

      நீக்கு
  22. பதில்கள்
    1. மிக்க நன்றி RPKN தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  23. நண்பர்களே,

    அருமையான கதை போக்கும் வளமான சொற்பயணமும் ,தொடங்கியபின் முடியும்வரை இடைவேளை இல்லாமல், "மைதேயில" செய்த கேரளத்து பழம்பொரி போன்ற சுவையுணர்த்தி படிக்க கொடுத்த இந்த "ஒப்பர்ச்சுனிடிக்கு" மிக்க நன்றிகள்.
    குமார் வாங்கி வந்த சாயா , காபியாக(??) மாறியதுபோல்தான் வாழ்க்கை. தொடங்கும்போது எப்படியிருக்கவேண்டும் என்று நினைத்த வாழ்க்கை தொடரும்போது மாறும் என்பதை சிம்பாலிக்காக(!!) சொன்ன விதமும் அருமை.

    தொடரியில் துவங்கியுய கதை(சொல்லும் புதிய பரிமாணம்) தொடர வேண்டும்.

    கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    (சிறிது மலையாளம் கற்றுக்கொள்ளவும் இந்த கதை உதவுகிறது. அடுத்த கதையை ரேணி குண்டாவில் தொடங்குங்கள்)

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ! ஹஹ்ஹ உங்கள் கருத்தும் ரசிக்க வைக்கிறது வழக்கம் போல்!! குமார் வாங்கி வந்த சாயா , காபியாக(??) ஹஹஹ்ஹ் நானும் இப்போதுதான் கவனித்தேன்....அங்கு ஒரு சில வரிகள் விடுபட்டுவிட்டது...எடிட் செய்யும் போது...கவனிக்கவில்லை. உங்கள் கருத்தை ஒத்த வ்ரிகள்தான் அது...நீங்களே சொல்லிவிட்டீர்கள்!! சாயா 3 வாங்க நினைத்தவன் 2 தான் கிடைத்து...அடுத்து காபி வரவும் காபி வாங்கி..என்று...அதை இதே அர்த்தத்தில் எழுதிட நீளம் கருதி நிறைய வெட்டினேன் அதில் இப்படியானது...மிக்க் நன்றி கோ..தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்...

      மலையாளம் கற்றுக் கொள்ள உதவியதற்கும் நன்றி கோ..அஹ்ஹ

      நீக்கு
  24. பதில்கள்
    1. மிக்க நன்றி அப்பாவி தங்கமணி..முதல் வருகைக்கும் கருத்திற்கும்..
      .எனது மற்றொரு கதையில் கேரக்டரின் பெயர் தங்கமணிதான்...ஹேரோ அப்பாவி என்றும் வரும்...அதை வாசிக்க நேர்ந்தால் தயவாய் தவறாக எடுத்துக் கொண்டுவிடாதீர்கள் அஹஹ்ஹஹ்

      நீக்கு
  25. பதில்கள்
    1. வாங்க கஸ்தூரி எப்போ நேரம் கிடைக்குதோ வாசிங்க! மிக்க நன்றி

      நீக்கு
  26. அழகான நடை. நிதானமான வேகம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு