வெள்ளி, 28 ஜூலை, 2017

கிராமங்கள் வளர்ந்துவிட்டன

ஓலைக் கூரைகளுக்கும் கொம்பு முளைத்தது

இலவச முட்டாள் பெட்டிகளினால்,
தவணை முறை திட்டத்தினால்,
டிஷ் அன்டெனா வடிவில்!
விளம்பரங்கள், தொடர்கள், பிக்பாஸ்களின் ஆட்சி!
மக்களோ மாயவலையில்!
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்குமாம்!
இல்லையில்லை! காற்றல்ல குற்றவாளி!
அம்மியும், உரல்களும் பறந்தன
மிக்சியும், க்ரைண்டரும் புகுந்ததால்!
இலவசமாய்!
சிக் ஷாம்பூ, க்ளினிக் ப்ளஸ்
கோக், பெப்சி, மிராண்டா
லேஸ், குர்குரே, நூடுல்ஸ்
ஹார்லிக்ஸ், காம்ப்ளான்,
ஹி மேன், பேட் மேன் ஸ்டிக்கர்
ஆறுகள் வற்றிய நிலையில்
பாட்டில்களில் நீர்!
அனைத்தும் புகுந்தன!
கிராமத்துப் பெட்டிக்கடையிலும்!
கிராமத்துச் சுவர்களிலும், ஃப்ளெக்ஸ் போர்டிலும்
திரை நட்சத்திர ரோமியோக்கள்!
நடிகர் சங்கங்கள்!
திரும்பிக் கூடப் பாரா
வாக்குச் சாவடி நாயகர்கள்!
கட்சிகள், கட்சிக் கொடிகள்!
கோயில் கோபுரங்களையும் விஞ்சிடும்
செல்ஃபோன் கோபுரங்கள்!
கவச குண்டலமாய்
ஸ்மார்ட் ஃபோன்கள், இயர் ஃபோன்கள்!
உலகையே இணைத்துக் கைக்குள்ளாக்கும்
இணைய வியாபாரிகள்
மூலையிலும் புகுந்துவிட்ட ஜி’யோக்கள்!
மக்கள் தவிக்கிறார்களாம்!
உடையின்றி, உணவின்றி, தண்ணீரின்றி!
ஒரு கூட்டம்
வானம் பார்த்த பாளங்களை
ஏக்கத்துடன் பார்த்திருக்க!
ஒரு கூட்டம்
டாஸ்மாக்கில் ஊறிக் கிடக்க
காத்தாயி, ராக்காயி, மூக்காயிகள்
உழைப்பின் உப்பு நீரில் ஊறிட
வில்லன்களாய்ப் புள்ளி ராசாக்கள்!
சாதி வெறி! கௌரவக் கொலைகள்!
தீண்டாமை நாட்டாமை!
வெற்றிடமாய்ப் பல
கிராமத்துக் கல்விக்கூடங்கள்!
அந்தோ பரிதாபமாய்
எட்ட நிற்கிறது
நாட்டின் கண்ணான கல்வி!
யாரப்பா சொன்னது?
இந்தியா கிராமங்களினால் ஆனது
வறுமைக் கோட்டிலென்று?


-------கீதா
(கவிதை என்பதெல்லாம் எனக்கு வராது. சும்மா ஒரு முயற்சி! அவ்வளவே!)




37 கருத்துகள்:

  1. இன்றைய அவல நிலையை அழகாக சாட்டையடி வரிகளால் கவிதையாக தந்தீர்கள் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி மிக்க நன்றி ஜி கருத்திற்கு

      நீக்கு
    2. கில்லர்ஜி இது முன்னாடியே எழுதி வைத்திருந்த ஒன்று. இப்பல்லாம் எழுத ஃப்ளோ இல்லை. வலைத்தளம் தூங்கிட்டுக் கிடக்குதேனு துளசி மீள் பதிவு ஏதேனும் போடுனு சொன்னார். நான் தேடினேன் ஏதேனும் எழுதியது இருக்கானு...இத்தனைக்கும் ஃபோல்டர் போட்டு ஆர்கனைஸ்டாக வைத்திருப்பேன்...வெளியிட்டவை, வெளியிடாதவைனு, கதைகள், இப்படி வெளியிடாதவை நிறைய இருக்க அதில் இதைக் கண்டுபிடித்து 3, 4 வரிகள் இப்போதையது சேர்த்துப் போட்டுவிட்டேன்....உங்கள் அளவிற்குக் கவிதை எல்லாம் எழுத வராது ஜி..

      நீக்கு
  2. அருமை அருமை
    கவிதை என்பது ஒட்டக் காய்ச்சிய உரை நடை
    உணர்வுக் கடத்தி என ஒரு கவிதை
    எழுதியிருந்தேன்
    அந்த வகையில் இது ஒரு அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சகோ மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...உங்கள் அளவிற்கு எல்லாம் எனக்குச் சிந்தித்துக் கவிதை எழுத வருவதில்லை சகோ. ஏதோ மனதில் தோண்றியது...

      நீக்கு
  3. >>> ஆடிக் காற்றில் அம்மியும் பறக்குமாம்!
    இல்லையில்லை! காற்றல்ல குற்றவாளி!
    அம்மியும், உரல்களும் பறந்தன <<<

    அம்மியும் உரல்களும் பறந்து போனதால்
    ஆகாத நோய்களும் கூடப் பிறந்தன..

    சீற்றம் பொங்கினாலும்
    ஒன்றும் செய்வதற்கில்லை..

    சிந்திக்கச் செய்கின்றது பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மியும் உரல்களும் பறந்து போனதால்
      ஆகாத நோய்களும் கூடப் பிறந்தன..// ஆமாம் துரை செல்வராஜு சகோ!

      சீற்றம் பொங்கினாலும்
      ஒன்றும் செய்வதற்கில்லை// ஆம் நமது இயலாமையை இப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான்..

      மிக்க நன்றி சகோ கருத்திற்கு

      நீக்கு
  4. அருமையான கவிதை! இன்றைய கிராமங்களின் நிலையை அப்பட்டமாகச் சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
  5. ரசித்தேன். சொல்ல வரும் கருத்து புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்ததற்கும் கருத்தைப் புரிந்ததற்கும்...ஹஹ்

      நீக்கு
  6. என்னைப்பொறுத்தவரை என் கவிதைகள் எல்லாம் மடக்கி மடக்கிப் போட்ட மன வரிகள்தான்! தம வாக்குப் போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் என்ன ஸ்ரீராம்?!! நீங்க எழுதுவது இதைவிடச் சிறப்பாக இருக்கும்... இங்க நான் எழுதியிருப்பது மடக்கி மடக்கித் தானே! இது கவிதையானு எனக்கு ஐயம் வந்தது உண்மைதான்...சரி வேற என்ன சொல்லுவது என்று தெரியலை ரமணி சகோ சொன்னது கூடச் சரியென்று தோன்றியது....
      த ம க்கு மிக்க நன்றி. எங்களுக்கு எங்கள் பெட்டியே கண்ணுக்குத் தெரியலையே....டிடியைத்தான் கூப்பிடணும்...

      நீக்கு
  7. பதில்கள்
    1. வசனக் கவிதை! ஆஹா! மிக்க நன்றி புலவர் ஐயா! உங்கள் அளவிற்கு எல்லாம் எதுகை மோனையுடன் பா புனைய முடியுமா ஐயா!!

      நீக்கு
  8. அருமை கீதாக்கா...


    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்....அது அன்று

    ஆனால் இன்று....

    எல்லா அவலங்களும் உண்டு எங்கள் நாட்டில்...


    சாட்டையடி பதிவு...

    ஆனால் கேட்பவர் யாரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு! உண்மைதான் உங்கள் கருத்து! நல்லது நடக்குமா என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும்....

      நீக்கு
  9. மிகவும் அருமை...

    அனைத்தும் உண்மைகள்...

    பதிலளிநீக்கு
  10. கவிதைல இறங்கின முயற்சிக்கு த ம போட்டு பாராட்டியாச்சு. கவிதையைப். படிக்கும்போது தோன்றியது, இலவச டிவி கொடுத்து, தேர்தலுக்கு முன்னால் 2ஜி காரணமா அதன் வீச்சு எல்லோரையும் சென்றடைந்த நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையா நெல்லை!!??? வசனக் கவிதைனு அழகாச் சொல்லிவிட்டார் புலவர் ஐயா! தேர்தலுக்கு முன்னாடிதான்.....ஹஹ இலவச டிவி கொடுத்தவங்களே ஆப்பு வெச்சுக்கிட்டாங்களோ?!!ஹஹஹ்

      மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு

      நீக்கு
  11. கிராமங்கள் வளர்ந்து விட்டன ..இல்லை இல்லை ...அழிந்து விட்டன :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் தான்..நான் எழுதியிருப்பது நக்கல் தானே!! மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  12. நன்று.

    கிராமங்களின் இன்றைய நிலை - வருத்தம் தரும் ஒன்று. இலவசம் என்ற பெயரில் அழிவின் சிகரம் நோக்கி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட்ஜி! நிறைய!!! மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  13. நாம என்ன சாகித்திய அகாடமி விருது வாங்கவா எழுதுறோம். நாம எழுதுறதுதான் கவிதை

    பதிலளிநீக்கு
  14. ஹஹஹஹ் அதுவும் சரிதான்!! மிக்க நன்றி ராஜி!!

    பதிலளிநீக்கு
  15. உடையின்றி, உணவின்றி, தண்ணீரின்றி!
    ஒரு கூட்டம்
    வானம் பார்த்த பாளங்களை
    ஏக்கத்துடன் பார்த்திருக்க!
    ஒரு கூட்டம்
    டாஸ்மாக்கில் ஊறிக் கிடக்க//

    இன்றைய நிலை மிகவும் மோசம்.
    உண்மை நிலையை அழகாய் சொல்லி விட்டீர்கள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....ஆம் அக்கா இன்றைய கிராமங்களின் நிலை மிகவும் மோசம் தான்...

      நீக்கு
  16. உள்ளத்தில் எழும் கருத்து உணர்வில் உறவாடும்போது சில நேரம் இப்படியெல்லாம் எழுத வைக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எம் பி சார். மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  17. உங்கள் சிந்தனை விரிவு அருமை.

    உங்கள் கவிதையிலேயே எனக்கு மிகவும் பிடித்த வரிகள், "கவிதை என்பதெல்லாம் எனக்கு வராது. சும்மா ஒரு முயற்சி! அவ்வளவே! " என்பதுதான்.
    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  18. உங்கள் சும்மா முயற்சியே நல்ல முயற்சியாகத்தான் அமைந்திருக்கிறது சகோ! ஓரளவு நன்றாகவே வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருங்கள்! இன்னும் உயரங்கள் தொடலாம்.

    "காற்றல்ல குற்றவாளி!
    அம்மியும், உரல்களும் பறந்தன
    மிக்சியும், க்ரைண்டரும் புகுந்ததால்!" என்கிற வரிகள் ரசனை! ஆனால், " கோயில் கோபுரங்களையும் விஞ்சிடும் செல்போன் கோபுரங்கள்!" என்னைப் பொறுத்த வரையில் வளர்ச்சியே இல்லையா? :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா சகோ தங்களின் ஊக்கமிகு வரிகளுக்கு!

      " கோயில் கோபுரங்களையும் விஞ்சிடும் செல்போன் கோபுரங்கள்!" // இங்கு கோபுரங்களுடன் செல்ஃபோன் கோபுரங்களை ஒப்பிட வில்லை. அதன் உயரம் மட்டுமே அப்படியான உயரம் வளர்ச்சி என்றாலும் அதனால் ஆக்கமிகு வளர்ச்சி என்பது குறைவாகவே உள்ளது என்ற ஆதங்கம். கிராமங்களுக்கும் அது வளர்ச்சி என்றாலும் கிராமங்களில் தான் பல குருவிகள் பறவைகள் இருந்து வருகின்றன. அந்த இனம் அழிந்து வருவதாகச் சமீபத்தில் என் மகனின் நண்பன் செய்த ஆராய்ச்சியின் முடிவில் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அவரது பேப்பர் ஒரு செமினாரில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. பேப்பர் வெளியாகிவிட்டதா என்று தெரியவில்லை. ஆக்கப்பூர்வமாக அது கையாளப்படவில்லை என்பதை என் சமீபத்திய ரயில் பயணத்தின் போதும் அறிய நேர்ந்தது. இளைஞர்கள் பலரும் கிராமத்தவரும் சரி நகரத்தவரும் சரி எல்லோரும் அதில் வேண்டாதவற்றைப் பார்த்துக் கொண்டு வருவதைக் காண நேர்ந்தது....வளர்ச்சி ஒரு புறம் என்றால் இப்படியானவையும் இருக்கும் தான். நேர்மறையும் எதிர்மறையும் போட்டி போட்டுக் கொண்டு வருபவைதான்...கிராமங்கள் வளர்ச்சி என்று சொல்லுகிறோம் எப்படி என்பதில் எழுந்ததன் எண்ணம் தான்...

      மிக்க நன்றி சகா

      நீக்கு
    2. ஆம் சகோ! கைப்பேசிக் கோபுரங்கள் சிற்றுயிர்களுக்கு அச்சுறுத்தலாய் இருப்பது உண்மைதான். ஏதோ நினைவில் அப்படி எழுதி விட்டேன். :-) ஆனால், வெளிநாடுகளில் கைப்பேசிக் கோபுரங்கள் ஓரடி அளவுக்குத்தான் இருக்கும் என்றும், நம் நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவும் ஒரே கோபுரத்தைப் பகிர்ந்து கொண்டு காசை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய பெரிய கோபுரங்களை நிறுவுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆம், அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றம் நன்மையும் தீமையும் கலந்ததே. இன்னும் பலபடிகள் முன்னேறினால் இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்கிறார்கள். பார்க்கலாம்.

      அதே நேரம், வேண்டாதவற்றைப் பார்க்கிறார்கள் என நீங்கள் குறிப்பிடும் அந்தச் சிக்கலுக்குக் காரணம் நம் அரசுதான். அமெரிக்கா போன்ற நாடுகளில் விரசத் (ஆபாசத்) தளங்களுக்குத் தடை உண்டு. ஆனால், நம்மவர்கள் "அமெரிக்காவா! சீச்சீ! அதெல்லாம் ஒரு பண்பாடா!" என்பார்கள். ஆனால், பண்பாட்டிலும் நாகரிகத்திலும் தொன்மை எனப் பீற்றிக் கொள்ளும் இவர்கள் நாட்டில் விரசத் தளங்களுக்கு ஒரு தடை கிடையாது. என்ன சொல்ல!...

      நீக்கு