வியாழன், 13 அக்டோபர், 2016

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 2

மெரினா மெரினா ......சொக்க வைக்கும் மெரினா......

சமீபத்திய ஒரு மழை நாளில், அந்தி மயங்கும் மாலைப்பொழுதில். உறவினர் பெண்ணுடன் மெரினாவிற்குச் சென்றிருந்தேன். மாலை 5.30 மணி. உலக உருண்டையின் இப்பகுதியில், தற்காலிகத் தாழ்வுமண்டல அழுத்தத்தின் காரணமாக, மழை நாளாகிப் போனதால், பகலவன் சற்றுச் சோர்வாகத் தனது கடமையை ஆற்றி, தனது நாளை முடித்துக் கொண்டு நிலவிற்கும், இருளிற்கும் கொடுத்துவிட்டு, உலகின் மறு பகுதிக்குக் கடமையாற்றச் செல்வதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தாலும், கார்முகில் வானை நிறைத்திருந்ததால், பகலவனுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஓய்வு கிடைத்த மகிழ்வில் விலகிட அந்த அந்தி மயங்கும் நேரத்தைக் கடல் அலையின் ஓசையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன். 

மெரினா நங்கை அழகுதான் என்றாலும், தன்னை, தனக்குப் பிடித்த கார் முகில் சூழ்ந்திருந்தக் காரணத்தால் அன்று சற்றுக் கூடுதலாக ஒய்யாரமாக இருந்தாளோ என்று தோன்றியது. மிகவும் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள்.  வாருங்கள் குழந்தைகளே! என்னோடு விளையாட வாருங்கள்! என்று மீண்டும் மீண்டும் குதித்து வந்து அதிக தூரம் வந்துக் கரையின் மணல் மேட்டைத் தொட்டுவிட்டுச் சென்றாள். கபடிக் கபடிக் கபடி வாருங்கள்... உங்களால் என்னைக் கட்டிப் பிடித்துத் தள்ள முடியுமா? இதோ பாருங்கள் நான் உங்கள் அனைவரையும் அணைத்துச் செல்ல முடியும் என்று அவள் வந்து அனைவரையும் தழுவிச் சென்றது, அவள் கபடி விளையாடுவது போல் தோன்றியது. தினமுமே கபடிதானே!!!! 

இப்படி ரசித்துக் கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தால் என்னுடன் வந்த பெண்ணைக் காணவில்லை. எங்கே போயிருக்கக் கூடும்? என்று எண்ணிக் கண்ணைச் சுழற்றினால், அப்பெண் அங்கு இருக்கும்  தின்பண்டங்கள் கடையை மேயச் சென்றிருந்தது தெரிந்தது. என்னையும் அழைத்தாள். எனக்கோ இந்த ஒய்யார நங்கையை விட்டுச் செல்ல மனதில்லை. எனவே, அவள் அவளது வேலையைத் தொடரட்டும், நாம் நமது பணியைத் தொடர்வோம் என்று நினைத்து, வரவில்லை என்று கையசைத்துக் காட்டிவிட்டு, மெரினா நங்கையின் அழகை மனத்திரையில் சேமித்தால் நான் மட்டும்தானே ரசிக்க முடியும்? எனது மூன்றாவது விழியில் சேமித்தால் எல்லோரும் ரசிக்க  முடியுமே! யாம் பெற்ற இன்பம் பெறுக நம் வலையுலக நண்பர்கள் என்று சேமிக்கத் தொடங்கினேன். தொழில்நுட்பம் அவ்வளவு இல்லாத சாதாரணமான எனது நிழற்படக் கருவியில் இருக்கும் சில ஆப்ஷன்ஸை - விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்வது வழக்கம். அப்படி எடுத்தவைதான் இவை. இதோ...

இப்படம் "ஃப்ளாஷ்" உபயோகித்து "சீன்" மோடில் எடுத்த போது வந்தது. இது இப்படித்தான் வருமா என்று தெரியவில்லை. ஆனால் வந்த படம் பிடித்திருந்தது. இதோ போன்று ஒரு பாடல் காட்சி பாக்கியராஜ் இயக்கி, அவரது மகள் நடித்த பாரிஜாதம் எனும் படத்தில் வந்த நினைவு. ஆனால் அது மிக மிக உயர்தரமான ஒளிப்படக் கருவி என்பது வேறு!! எடுத்த விதமும் வேறு என்பதும் தெரிகிறது! அந்தக் காட்சியிலும் இதே கிட்டத்தட்ட இதே வண்ணம்தான் வரும் என்று நினைவு!


இனி வருபவை வேறு! ஃப்ளாஷ் இல்லாமல் நங்கையின் ஒவ்வொரு துள்ளல் மற்றும் தழுவலை அடுத்தடுத்து எடுத்தேன்.






கீழே இருக்கும்  அனைத்துப் படங்களும் "ஸாஃப்ட் மோட்" ல் எடுக்க முயற்சி செய்தேன்.  ஏதோ, திரைப்படங்களில் வரும் தேவலோகத்துக் காட்சி போல எனக்குத் தோன்றியது! இதுவும் எனக்குப் பிடித்திருந்ததால் இங்குப் பகிர்கின்றேன்.






படங்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். புகைப்படம் எடுப்பதில் நிபுணத்துவம் உள்ளவர்கள் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும்.  மீண்டும் அடுத்த, எனது மூன்றாவது விழியின் பார்வையில் சந்திப்போம்!! 

(பதிவுகள் பல பகுதி எழுதப்பட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், எழுத முடியாத அளவிற்கு வேலைப்பளு மற்றும் மூளையும் அயர்ச்சி அடைந்துள்ளது. எனவே இதைப் பகிர்ந்துள்ளேன்!)

-----கீதா

27 கருத்துகள்:

  1. >>> ஏதோ, திரைப்படங்களில் வரும் தேவலோகத்துக் காட்சி போல எனக்குத் தோன்றியது!.. <<<

    அப்படித்தான் எனக்கும் தோன்றுகின்றது..

    சில்லென்ற பதிவு.. அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா! தங்களின் "சில்" என்ற பின்னூட்டத்திற்கு!!!

      நீக்கு
  2. நான் மெரீனா சென்று பல வருடங்களாகி விட்டன! உங்கள் சார்பில் மறுபடி பார்த்து விட்டேன். ஷேக் ஆனா படங்களைக் கூட தைரியமாக போட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ ஸ்ரீராம் அது ஷேக் ஆன படங்களா?? ஓ அப்படியா? ஆனால் கை ஷேக் ஆகவே இல்லை. ஆனால் அது வேறு மாதிரி இருக்கும். நான் ஒவ்வொரு முறை ஃப்ளாஷ் போட்டு எடுத்த போதும் மெரினா அப்படியேதான் வந்தது முதல் படம். அதில் ஒன்றைத்தான் இங்கு பகிர்ந்துள்ளேன். ஷேக் ஆகவில்லை.

      கீழே உள்ளவை சாஃப்ட் மோட் என்று ஒன்று இருக்கிறது அதில் போட்டால் இப்படித்தான் வருகிறது. பல முறை சோதனை செய்துதான் வெளியிட்டேன் ஸ்ரீராம். ஒரு வேளை கேமராவில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

      அதனால்தான் இங்கு பல புகைப்பட நிபுணர்கள் இருக்கிறார்களே அவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றுதான் கருத்து கேட்டிருக்கிறேன். அதில் பயன் இல்லை என்பது தெரியும். இருந்தாலும் யாரேனும் சொல்லமாட்டார்களா என்றுதான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. யக்கா 1 சந்தேகம், நீங்க தங்கர்பச்சான் தங்கச்சியா. இல்ல PC ஸ்ரீராமோட சகோதரியா சொல்லுங்கக்கா

      நீக்கு
  3. படங்களும் பதிவும் அருமை!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ! மெய்யாகவேயா??!! படங்கள் நன்றாக வந்துள்ளனவா?? நான் சில ஆப்ஷன்ஸ் முயற்சி செய்தேன் அதன் விளைவுதான் இவை. சரியா என்று தெரியவில்லை.

      மிக்க நன்றி செந்தில் சகோ...

      நீக்கு
  4. படங்கள் எல்லாமே அழகு. கடற்கரையில் இருப்பது போன்றதோர் உணர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. கடல், யானை, இரவு நேரத்து வானம் - இதைப் பார்க்கப் பார்க்கச் சலிக்காது. சில படங்கள் நன்றாக வந்துள்ளன. நீங்கள் வேறு, படங்கள் ஷேக் ஆகவில்லை என்று சொல்லுகிறீர்கள். மெரினா கடற்கரையில், கொஞ்சம் ghostகள் எனக்குத் தென்படுகின்றன (சும்மா ஜோக்குக்குத்தான்.. உங்கள் முயற்சி அருமை)

    ஸ்ரீராம்... கே.ஜி மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதைச் சமீபத்தில் பதிவிட்டிருந்தீர்கள். நீங்களானா, அங்க போயே பலவருடங்களாகிவிட்டது என்று சொல்லுகிறீர்கள். ஒரு ஞாயிறு குடும்பத்தோடு சென்றுவாருங்கள். கோவில் எல்லாம் முடித்துவிட்டு, கடைசியில், கொஞ்சம் மீன் வாடையோடு, முருகன் இட்லியில் சாப்பிட்டு நிறைவுசெய்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க நெல்லைத் தமிழன். உண்மைதான் ஷேக் ஆகவில்லை. நான் பல ஆப்ஷன்களில் முயற்சி செய்தேன். அதில் ஒன்று சாஃப்ட் மோட். அதில் இட்ட போது இப்படி வந்ததும் எனக்கு ஒரு வித வித்தியாசமானப் படமாக இருந்ததும் அப்படியே எடுத்துத் தள்ளினேன். அதில்தான் அந்தக் குதிரையில் வந்தவர்கள் பீச் காவலர்கள். எல்லோரையும் கடலிலிருந்துக் கரைக்குச் செல்ல விசில் அடித்துக் கொண்டே சென்றார்கள். அவர்களையும் எடுத்தேன்.அதே சாஃப்ட் மோடில். இப்படி வந்ததும் எனக்கு ஏனோ மிகவும் பிடித்தது ஏதோ கேன்வாசில் வரைந்தது போல. சாஃப்ட் மோட் எல்லாமே அப்படித்தான்வ் அந்தது வரைந்தது போல. அதான் அப்படியே அதைப் பகிர்ந்து விட்டேன். இந்த சாஃப்ட் மோட் எஃபெக்ட்ஸ் எனும் ஆப்ஷனில் வருகிறது. இந்த எஃபெக்ட்ஸ் ஆப்ஷன் தேர்ந்தெடுத்தால் செப்பியா, டார்கர் ஷேட், லைட்டர் ஷேட், கலர் அட்ஜஸ்டிங்க் என்று நிறைய இருக்கிறது. அதில் சாஃப்ட் எடுத்து அப்படியே முயற்சி செய்தேன் அதனுள் சென்று வேறு எடுக்கவில்லை.

    மற்றவை சீன் மோட், ஆட்டோ மோட், சீன் மோட் மற்றோரு பிரிவில் என்று எடுத்தேன்....முயற்சி செய்து பார்த்தேன்.

    ஒருவேளை காமெராவில் எரர் எதேனும் இருக்குமோ தெரியவில்லை. பார்க்க வேண்டும்.
    அது சரி மெரினாவில் ஏது முருகன் இட்லி கடை? அது பெசன்ட்நகர் பீச் ரோடில்!!

    மிக்க நன்றி நெல்லைத் தமிழன்

    பதிலளிநீக்கு
  7. அருமையான வண்ணம்! அதிலும் அந்த அடர் நீலம், கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கிறது. குதிரை வீரர்கள் படம் ஷேக் ஆகிவிட்டதாய்த் தான் நானும் நினைச்சேன். கோஸ்ட்டுங்களா? ஹாஹாஹஹாஹாஹாஹாஹா! தைரியமாப் பிடிச்சுப் போட்டுட்டீங்களே! :)))))

    பதிலளிநீக்கு
  8. புகைப்படங்கள் அனைத்தும் இரசித்தேன் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கின்றது தொடரட்டும் கலை வண்ணம்.

    சரி மெரினாவை அவள் என்றுதான் அழைக்க வேண்டுமா ? அவன் என்று அழைக்க கூடாதா ? நதிகளுக்குத்தான் பெண்பால் கடலையாவது ஆண்பால் ஆக்ககூடாதா ? (பொட்டுக்கடலை அல்ல)
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரேவா! கில்லர்ஜியின் ஆலோசனையை கோபித்து (மன்னிக்க) Aகோபித்து வரவேற்கிறேன்.

      நீக்கு
  9. கண்கள் குளிர்ச்சியாக உள்ளது.கடற்கரையில் அமர்ந்திருக்கும் உணர்வு..மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  10. தொழில் ரீதியான புகைப் பட நிபுணர் இல்லை என்று சொல்லமுடியாத அளவு அழகான போட்டோக்கள் . சூப்பர் . கலக்குங்க .

    பதிலளிநீக்கு
  11. அழகான படங்கள். பாராட்டுகள்.

    அசையும் உருவங்களைப் படம் எடுக்கையில் இப்படி இரண்டிரண்டாக - ஷேக் ஆனது போல ஆகிவிடுவதுண்டு.

    என்னதான் கைகள் ஸ்டடியாக இருப்பதாக நாம் நினைத்தாலும், கொஞ்சம் ஷேக் ஆகவும் வாய்ப்புண்டு - அது நமக்குத் தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  12. சகோ துளசி & கீதா,

    அழகான எழுத்து நடை ! ரசித்தேன், படங்களையும்தான் !

    சரியான வெளிச்சம் இல்லாததால்தான் இப்படி வந்திருக்குனு நினைக்கிறேன். எதுக்கும் நாளைக்கே, நல்ல வெளிச்சம் இருக்கும்போதே மீண்டும் மெரினாவை படம் புடிச்சி பாருங்க, எதுக்கும் ஆட்டோ மோட்ல வச்சி எடுங்க. நாம‌ காமிராவை ஆட்டாம எடுக்கறதாதான் நினைப்போம், நல்லா கவனிச்சீங்கன்னா தெரியும் கீதா, கை லேஸா ஷேக் ஆவதை. அது இல்லாம இருந்தாலே சூப்பரா வந்திடும். வாழ்த்துக்கள் !

    பகல்நேர மெரினாவுக்காக வெயிட்டிங் :)

    பதிலளிநீக்கு
  13. நீலக்கடல் அருமை.
    படங்கள் எல்லாம் அழகுதான்.

    பதிலளிநீக்கு
  14. உங்கள் எழுத்துக்களை ரசித்தேன் வித்தியாசமாக இருப்பது போல் தெரிகிறது புகைப்பட நிபுணர்கள் கருத்து கூறட்டும் கடலும் யானையும் பார்க்கத் தெவிட்டாதது

    பதிலளிநீக்கு
  15. தங்கள் பதிவில்
    சிறந்த ஒளிபடக் கலையைக் காண முடிகிறது.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. படங்களை பார்த்ததும் மனது துள்ளி மகிழ்ந்து பாடிய பாடல் ...நீல நிறம்.வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் :)

    பதிலளிநீக்கு