செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சேவையும் என் நினைவுகளும்

(நெல்லைத் தமிழன் அவர்கள் "சேவை" செய்யும் குறிப்பை எங்கள் ப்ளாகில் "திங்க" வில் கொடுத்திருந்ததால், எங்கள் தளத்தில் இதனைக் குறித்து என் நினைவுகளைப் பதிவாக்கியது நினைவுக்கு வர அதை இங்கு மீள் பதிவாகத் தருகிறேன்

சேவை! எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய என் நினைவுகள்.

இப்போதெல்லாம், பெரும்பாலான கல்யாணங்களில், காலை உணவு அல்லது மாலையில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ஒன்றாக சேவை இடம் பெறுகிறது.  நன்றி: ரெடிமேட் சேவை ப்ரான்ட்ஸ். இது நொடியில் தயார் என்று எளிதாக்கப்பட்ட 5 நிமிடத்தில் தயாராகும் சேவை. அக்மார்க் மூல சேவையை அவ்வளவு எளிதாகப் பெரும் கூட்டத்திற்குச் செய்து விடமுடியாது. அதனுடைய நல்ல மணம், குணம் இந்த ரெடிமேட் சேவையில் இல்லவே இல்லை. அது தனிச் சுவை. அந்த ரெடிமேட் சேவையைச் சாப்பிட்ட போது எனக்கு மூலவடிவ அக்மார்க் சேவையைக் குறித்த என் இளமைக்கால நினைவுகள் மனதில் வந்தது. நிற்க,

இடியாப்பத்தையும், சேவையையும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு.  இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்யப்படுவது. பிழிந்து, ஆவியில் வேகவைப்பது,  மாறாகப் புழுங்கல் அரிசியில் செய்யப்படுவது, வேகவைத்துப் பிழியப்படுவது நான் குறிப்பிடும் சேவை.

எப்பொழுதெல்லாம் எனது தாய் வழிப் பாட்டி இதைச் செய்ய நினைத்து புழுங்கல் அரிசியை ஊறப் போடுகிறார்களோ அன்றேல்லாம் “ஏய் குட்டிகளா இன்னிக்கு டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான்.  மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே!” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்போம்.

ஆனால் அதே சமயம் பாட்டியின் “உங்கள் சேவை” என்பதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் பதுங்குவதும் நடக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில், 38 வருடங்களுக்கு முன், இந்தச் சேவையை செய்வது எவ்வளவு கஷ்டம் என்றும், செய்வதற்கு எங்களைத்தான் ஈடுபடுத்துவார்கள் என்பதும் எங்களுக்கல்லாவா தெரியும்!

அப்படியாகப்பட்டச் சேவையை எங்கள் வீட்டில் செய்யும் நாள் ஏதோ விழா எடுப்பது போல இருக்கும்!. பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம்!.

இந்த இடத்திலே எங்கள் பாட்டியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்பம் பெரிது.  நாங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக, இந்தப் பாட்டியின் (என் அம்மா வழி) அரசாட்சி,  அரசி ஆட்சியின் கீழ் இருந்தோம். உங்களுக்கே புரியும் அரசி ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று! பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”.   இரும்புப் பெண்மணி! அவரது பிடியில்தான் எங்கள் எல்லோரது குடும்பமும். எங்கள் குடும்பத்திலேயே மொத்தம் 18 பேர்.  அத்துடன் கொச்சியிலிருந்த பாட்டியின் தங்கையும், அவர்களது சில குழந்தைகளும் சேர்ந்தார்கள் என்றால் மொத்தம் 25 பேர் ஆகிவிடும். அதனால், பெரும்பாலும் 5 கிலொ புழுங்கல் அரிசியாவது - டொப்பி அரி என்று சொல்லப்படும் (IR20) – 4, 5 மணி நேரம் ஊறப் போடுவார்கள். இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும்.

பெரியோர்களில் ஆண் மக்கள் யாரும் சமையலறைக்குள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பெண்களில் வீட்டு மருமகள்கள் ஏதாவது காரணம் சொல்லி இதில் தலையிடாமல் வேறு வேலைகளுக்குப் போய் விடுவார்கள்.  இறுதியில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் தான்.  அம்மா பாத்திரம் கழுவும் வேலையிலும், பாட்டியின் தங்கை எங்களை மேய்ப்பதிலும், ஆக நாங்கள்தான் சேவை செய்வதில் “சேவை” செய்ய வேண்டும்.

“ஏய்...மாலூ இங்க வாடிக் குட்டி. அரைக்கறதுக்கு ஒரு கை கொடு.”  என் பாட்டியின் அதிகாரக் குரல் ஒலிக்கும்.  அப்போதெல்லாம் கல்லுரல்தான்.

“பாட்டி எனக்கு நாளைக்குப் பரீட்சை இருக்கு பாட்டி. படிக்கணும்”  என்று சொல்லும் போதே அவளுக்கு கால் நடுங்கிக் கொண்டிருக்கும்.

அவள் கையில் இருக்கும் புத்தகம் தலை கீழாக இருக்கும்.  அதாவது அவள் தலை கீழாகப் படிக்கிறாள் என்று அர்த்தம். அவள் விடை எழுதினால் அது அச்சு அசலாக, ஒரு வார்த்தை கூட பிசகாமல், அப்படியே புத்தகத்தில் உள்ளது போல இருக்கும். சரி அதை விடுங்கள். இப்போது எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டு காரணத்தை யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.

“கேசவா, நீ வாடா இங்க” அடுத்த அழைப்பு.  இவனுக்குக் கால் ஒருபோதும் நடுங்காது.  வாய் ஜாலத்தில் கில்லாடி!.  “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு.  அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார்த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு! அப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் வேறு யாரை மாட்டி விடலாம் என்று கணக்குப் போடத் தொடங்கி விட்டிருக்கும். அவனுக்குப் பதிலாகப் போவதற்கு வேறு ஒருவரைக் கெஞ்சுவான்.

“என்னடா, என்ன மாட்டி விடப் பாக்கறியா, அஸ்கு புஸ்கு.  போனதடவ நான் Science ல, 38 மார்க்குதான் வாங்கிருந்தேன்.  பாட்டி sign போட விடமாட்டானு தெரிஞ்சு நான் அதை 83 ஆக்கின ரகசியத்த நீ பாட்டிகிட்ட போட்டு உடைச்சைலயா!  முடியாது போ.  வேற ஆளப் பாரு” 

“ஆசை,தோசை, அப்பளம், வடை, என்னால முடியாது.  நான் தான் பாட்டிக்கு நேத்திக்கு கால் பிடிச்சு விட்டேன். அதனால வேற யாரையாவது கூப்பிட்டுக்கோ”  இது இன்னொரு நபர்.

“பாட்டி, இவங்க எல்லாரும் வந்தா நானும் வருவேன்.  இல்லனா நானும் இல்ல”  இது என்னுடைய பதில்.

அவ்வளவுதான்.  பாட்டி கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார்.  இடுப்பில் கைககளை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டி, கத்திக் கொண்டு கம்பு அல்லது விறகுக் கட்டையை எடுக்கச் செல்லும் போது, நாங்கள் எல்லோரும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்து விடுவோம்.  Unity is Strength!!  உடனே, ஒரு அவசரகாலக் கூட்டம் எங்களுக்குள் போடப்படும்.

ரகசியமாக ஒரு சில விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதாவது, யாருக்கு அதிகமான பப்படங்கள், யார் யார் அவர்களது பங்கில், எத்தனை சதவிகித சேவையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், யாருடைய உடையை யார் யார் ஒரு சில நாட்கள் அணிந்து கொள்ளலாம், ரிப்பன், குச்சி மிட்டாய், குச்சி ஐஸ், நெல்லிக்காய், பஞ்சு மிட்டாய், மாங்காய், வளையல்கள், மயில் இறகு, (புத்தகத்தின் நடுவில் வைத்து குட்டி போடும் இறகு), புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்துப் படிக்க கதை புத்தகங்கள், அந்த ரசசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சத்தியப் பிரமாணங்கள், அறிவியல் ரெக்கார்ட் நோட்டில் யார், யாருக்கு வரைந்து கொடுப்பது, இம்பொஸிஷன் எழுதுவது, வீட்டுப்பாடம் செய்து கொடுப்பது, இரவு ஒரே மின் விசிறியின் அடியில் பாட்டி நடுவிலும் எல்லோரும் அவரைச் சுற்றிதான் எல்லோருக்கும் படுக்கை என்பதால் யார் அதன் நேர் அடியில், யார் யார் எங்கு என்ற எல்லைப் பிரிவு என்று பலதும் பேசப்பட்டு, எல்லோரும் ஒத்துக்கொண்டவுடன், கையில் சத்தியம் அடித்துவிட்டுப் பாட்டிக்கு உதவச் செல்வோம். இங்குதான், இப்படித்தான் ஊழலே தொடங்குகிறதோ?!!

இதில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.  “உங்களுக்கு ஆதரவா பெரியவங்களுமா? எதற்கு” என்று கேள்வி வரலாம்.  இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா பாயாசம்” மிகவும் பிரபலம்.  அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன்? எதற்கு? பதிலாக, நள்ளிரவில், கோவிலுக்கு அருகில், திறந்த வெளி அரங்கில் சினிமா போடும்போது, பாட்டிக்குத் தெரியாமல் ரகசியமாக இவர்கள் அங்கு போவதற்கு உதவ வேண்டும்.  இதில் என்ன வேடிக்கை என்றால், பாட்டி எங்களுக்கு முன்னரே அங்கு போயிருப்பார்கள். “தில்லானா மோகனாம்பாளில்” வருவது போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஊழலிலிருந்து, இப்போது திரும்ப சேவைக்கு வருகிறேன்.

பாட்டியும் நாங்களும் அரைத்து முடித்தவுடன், பாட்டி அந்த மாவை ஒரு பெரிய பித்தளை உருளியில் போட்டு வணக்குவார்கள்.  அதிலும் எங்கள் பங்களிப்பு உண்டு.  அது திரண்டு வந்தவுடன் அதை பெரிய பெரிய கொழுக்கட்டைகளாக “ஸ்..ஸ்ஸ் ஆஅ” என்று பிடித்துக் (சூட்டோடு) கொடுக்க, பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்தக் கொழுக்கட்டைகளைப் போட்டு மூடிவிடுவார்கள்.  அவை கொதிக்கும் போது ஒரு மணம் வீடு முழுவதும் வரும் பாருங்கள்!  அது தனிதான். 

அவை வெந்ததும் கடைசிப் பருவம், பிழிவது.  அதுதான் உள்ளதிலேயே மிகவும் கஷ்டமான வேலை.  இதைப் பிழிவதற்கென்றே சேவை நாழி என்ற ஒன்று உண்டு.  அது முக்காலி போல, நடுவில் மிக, மிகச் சிறிய துவாரங்களுடன் ஒரு கிண்ணத்துடன், மேலே ஸ்க்ரூ ஜாக்கு போல (Screw Jack)  அமைப்புடன் இருக்கும்.  இரும்பினால் ஆனதாக இருக்கும்.  அந்தக் கிண்ணத்தில் வெந்தக் கொழுக்கட்டையை ஒவ்வொன்றாகச், சூடாக இருக்கும்போதே போட்டு, ஸ்க்ரூ ஜாக்கின் ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு பக்கம் இன்னொருவர் கை கொடுத்து, சுற்றி, ஒருவர் மாறி ஒருவராக, எல்லா கொழுக்கட்டைகளையும் பிழிந்தெடுப்போம்.

பிழியும்போது நூடுல்ஸ் போன்று ஆனால் மிக மிக மெலிதாக வெளியில் வரும். அப்படிப் பிழியும் போது அந்த ஆவி பறக்க ஒரு மணம் வரும் பாருங்கள் அது இன்றும் இன் நினைவில் உள்ளது.  இதைச் செய்யும் போது நாக்கு நீர் விடத் தொடங்கி விடும். பின்னர் பிழிந்ததை பாட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி அதில் தேங்காய் எண்ணையைத் தெளித்து வைப்பார்கள்.  “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த” என்று  சொல்லுவது போல, தீயாக வேலை செய்து முடிக்கும் போது, அந்த சேவையைப் பார்த்ததும், “தோள்பட்டை வலியா” போயே போச்!.  போயிந்தி! போயல்லோ!. It’s gone!  இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் எங்களில் சிலர் 5, 6 தேங்காயை உடைத்துத் துருவி புளிசேரி செய்வதற்கு உதவுவார்கள்.

என் கல்யாணத்திற்குப் பிறகு 8 வருடங்கள் திருவனந்தபுர வாழ்க்கை. கல்யாணச் சீராக இந்தச் சேவை நாழியும் என்னுடன் வந்தது. எனது புகுந்த வீட்டவர்கள் எல்லோரும் சென்னைவாசிகள். அவர்களுக்கு இந்தச் சேவை நாழியைப் பார்த்து வியப்பு.  அதனால் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எல்லாம் இந்த சேவை தவறாது இருக்கும்.  செய்வதில் எனக்குச் சிரமம் இருந்ததே இல்லை. அச்சமயத்தில் அரைப்பான் (க்ரைண்டர்) வந்து விட்டதால் அரைப்பது எளிதாகி விட்டது.  ஆனால் இவர்கள் யாராவது சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் சேவை கிடைக்காது.  அப்படி இருக்கும் சமயம்தான் அந்த நல்ல இனிய செய்தி வந்தது.

நாங்கள் குடியிருந்த கிழக்கே கோட்டைப் பகுதியில், ஆனைவால் தெருவில் இருந்த சிறு உணவகம் ஒன்றில் (மெஸ்) சேவை, புளிசேரி செய்து பப்படத்துடன் தருவதாகச் சொல்லவும், அப்புறம் என்ன? திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய்! அம்பி “சேவை மாமி”  வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும்! வேறு வழி இல்லாமல் சேவை வேண்டுமே அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி வருவேன்.

அப்போது கஷ்டப்பட்டதற்குக் காரணம் இரும்பு நாழி மற்றும் கொழுக்கட்டைகளைத் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்ததாலோ இருக்கலாம்.  எனக்கு என் அம்மா கொடுத்த நாழியில் பிழிவது எளிதாகவே இருந்தது.  நான் ஒரெ ஆளாகவே செய்ய முடியும். வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டுக் குழந்தைகள், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் வளரும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கும் “boiled rice noodles” என்றும் இடியாப்பத்தை “raw rice noodles” என்றும் அறிமுகப்படுத்தி விட்டேன். பெயர் வேண்டுமானால் அவர்களுக்கு ஏற்றார் போல மாறலாம்.  ஆனால் சேவை சேவைதான்!!.

அப்படி இருந்த சமயம், 15 வருடங்களுக்கு முன் கணவரின் வேலை நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம். சேவை நாழியை விடுவேனா?! என்னுடன் அமெரிக்கப் பயணம். செக் இன் பெட்டியில். நல்ல வேளை எந்த விமான நிலையத்திலும் இதனை ஏதோ ஒரு ஆயுதம் என்று நினைத்து என்னைச் சந்தேகப்படவோ, அதை வெளியில் தூக்கி எறியவோ இல்லை. இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட தேதிக்கு இருவாரம் முன்தான் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காலடி பதித்தோம்.

நாங்கள் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் தொட்டியின் கழிவுநீர்க் குழாயில் ஒரு சிறிய பிரச்சனை வந்தது. அதைச் சரி செய்ய வந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்.  அவர் கண்ணில் இந்த சேவை நாழி பட்டு விட்டது.  அவருக்கு இதைப் பார்த்ததும் ஒரே வியப்பு! அதைப் பற்றி விசாரித்தார்.

அவர் பேசிய ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிய கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவருக்கு ஏற்றார் போல சொல்ல எனக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு பழகியிராததால் முதலில் தயங்கினாலும், இதன் புகழைப் பரப்பும் நோக்கம் என்னைத் தூண்டி விட, இந்தியாவின் தென் கோடியில் வழக்கத்தில் இருக்கும் சேவையின் மகத்துவத்தைப் பற்றி உலகிற்கு அறிவிப்பது எனது கடமை என்று நினைத்து பெருமையுடன் “par boiled rice noodles” என்று நாமகரணம் சூட்டி (அவரிடம் string hoppers என்றும் விளக்கம் அளித்து) அவருக்கு விவரித்தேன். அவர் ஆர்வத்துடன், இடையில் எல்லாம் சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டு (மாணவர்கள் கூட இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள்) எல்லாம் முடிந்த பின் அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி

“இப்போது எனக்கு அதை டெமோ செய்து காட்ட முடியுமா” என்று!  நான் மயங்கி விழாத குறைதான்.

நான் அவரிடம் “நான் டெமோ என்ன சேவையே செய்து தருகிறேன், ஆனால், நீங்கள் டெமோ பார்க்க வேண்டும் என்றால் ஒரு பாதி நாளாவது எங்களுடன் செலவிட வேண்டி இருக்கும்” என்று சொன்னதுதான் தாமதம், அவர் மயங்கியே விழுந்து விட்டார்!

இருந்தாலும் எனக்கு நம் சேவையின் மகத்துவத்தை அமெரிக்காவில் பரப்பியதில் ஒரு மகிழ்ச்சியே! வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம்.  வந்தாயிற்று.  அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க!!.

சேவையை மிக எளிதாகச் செய்ய “சேவை மாஜிக்” என்று சேவை செய்யும் உபகரணம் ஒன்றை, கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தியிருப்பதாக, 2008 ஆம் வருடம் அறிய நேர்ந்தது. உடனே என் அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  எத்தனை பேர் அதை வாங்கினார்களோ!! அது வெற்றியடைந்ததா தெரியவில்லை. இப்போது அது பேசப்படவில்லை. இன்னும் சந்தையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்பொதே அதன் விலை ரூ 4000 - 5000 ற்குள் என்று நினைவு. அதன் சுட்டி இதோ. 


 சேவை மாஜிக் - யூட்யூபிலிருந்து

இன்று என் வீட்டில் “இன்றைய டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை”!  செய்வதற்கல்ல.  சாப்பிடுவதற்கு!!!


------கீதா




52 கருத்துகள்:

  1. ஆகா.. தாங்கள் வழங்கிய சேவையே சேவை!..
    சேவையைப் பற்றிய இனிய பதிவு.. வாழ்க சேவை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தாங்கள் முதலில் வந்துக் கருத்திட்டமைக்கும், தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  2. சேவை மகாத்மியம் படிக்கப்படிக்க
    என் சிறிய வயது நினைவு வந்து போனது
    அது ஒரு கனாக்காலம்
    சேவை மேஜிக் இதுவரை கேள்விப்பட்ட்தே இல்லை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இப்போது அந்த நினைவுகள் கனாக்காலம் ஆகிவிட்டதுதான்...

      நீக்கு
  3. நான் ஏதோ மக்கள் சேவை பற்றிய பதிவு என்று நினைத்து வந்தேன். :-@ ஆனால், இந்தச் சேவையும் மக்களுக்குப் பிடித்திருக்கிறதே! சரி, மக்கள் சேவையே மகத்தான சேவை!

    சேவையின் இன்னொரு வடிவமான இடியப்பத்துக்கு எப்பேர்ப்பட்ட வரலாறு இருக்கிறது தெரியுமா? தமிழறிஞர் இராம.கி அவர்களின் இந்தப் பதிவை நேரம் கிடைக்கும்பொழுது படித்துப் பாருங்கள்! சொக்கிப் போவீர்கள்! - http://valavu.blogspot.in/2009/07/1.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ முதலில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முதல் வரியைத்தான் எழுதியிருந்தேன். பின்னர் பதிவு நீநீநீநீள்ள்ள்ள்ள் பதிவாகியதால் பல வரிகளை எடுக்க வேண்டியதானது. இடியாப்பாம் பற்றியும் அறிவோம் சகோ. எங்கள் வீட்டில் அதுவும் உண்டு. இலங்கையில் இடியாப்பம், சொதி மிகவும் பிரபலம். அந்தச் சொதியைத்தான் எங்கள் வீட்டில் செய்வோம். நீங்கள் சுட்டியிருக்கும் சுட்டியை வாசிக்கிறோம் சகோ.

      மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கும், சுட்டிக்கும்!

      நீக்கு
  4. சேவை தேவையானதாகவே இருக்கின்றது தொடரட்டும் சேவை.
    த.ம. 1

    பதிலளிநீக்கு
  5. #“boiled rice noodles” “raw rice noodles”எப்படியெல்லாம் விளக்க வேண்டியிருக்கு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா. அப்பபையேனும் சேவை புகழ் பரவுமே.....மிக்க நன்றி பகவான் ஜி

      நீக்கு
  6. சுவையான பதிவு என்று சொல்லலாமா?!! எங்களிடமும் சேவை. உங்களிடமும் சேவை! எல்லாம் நெல்லைத்தமிழன் உபயம். எல்லோரும் சேர்ந்து செய்யா விட்டால் இது செய்வது கஷ்டம். ஆப்தே சமயம், அப்பாவின் உதவியோடு (பிழிவதற்கு) நானும் அம்மாவுமே இதைச் செய்திருக்கிறோம் - மிகச்சிறிய வயதில். அப்புறம் எல்லாம் ஞாபகமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவரினுபயம்தான்.....அப்போது இந்தப் பதிவிற்கு கருத்தே இல்லை.....புதியவர்கள்..அப்போது...இப்போது நெல்லையாரின் உபயத்தால்...மீள் பதிவு....கருத்துகள்...

      இப்போது பிழிவது எளிதாகிவிட்டது..ஸ்ரீராம்....தனியாகத்தான் செய்கிறேன்...

      நீக்கு
  7. ஏற்கனவே எங்கள் பிளாக்கில் படித்திருந்தேன். இப்போது நீங்களுமா? வேறு வழியில்லை. நாளை சேவைதான்.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மீள் பதிவு....நினைவு வந்துவிட்டதே...மிக்க நன்றி செந்தில் சகோ

      நீக்கு
  8. Blog as well as the sevai magic are soooper !
    My lap top internet is not working so not able to comment in Tamil

    பதிலளிநீக்கு
  9. சேவை குறித்து எங்களுக்கு விவரமாய் சொன்ன தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. எங்க நாட்டில் இடியப்பம் என்போம் உங்கள் சேவையை. பகிர்வு நாட்டிற்கு அழைத்துச்சென்றது கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த இறுதித்தலையில் நானும் ஒருவன்.)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனிமரம்......உங்கள் ஊர் இடியாப்பம் எங்கள் ஊரிலும் உண்டே....தமிழ் நாடு கேரளா..

      எண்கள் வீட்டில் உங்கள் ஊர் போன்று சொதியுடன் செய்வோம்

      நீக்கு
    2. நன்றி தனிமரம்......உங்கள் ஊர் இடியாப்பம் எங்கள் ஊரிலும் உண்டே....தமிழ் நாடு கேரளா..

      எண்கள் வீட்டில் உங்கள் ஊர் போன்று சொதியுடன் செய்வோம்

      நீக்கு
  11. சகோ துளசி & கீதா,

    மக்கள் சேவை என நினைத்து வந்தால் ..... சாப்பிடும் சேவையாகிவிட்டதே ! அதனாலென்ன, இதுவும் சுவையாகத்தான் இருக்கு. குட்டீஸ்களின் கலாட்டா சூப்பர், கூடவே பாட்டியும்தாண் !

    இவ்வளவையும் பயன்படுத்தி, கழுவித் துடைத்து ... அதற்கு சேவை நாழியே பரவாயில்லைன்னு விட்டுட்டாங்களோ என்னவோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சித்ரா சேவைய் நாழியே பெஸ்ட்...மிக்க நன்றி கருத்திற்கு..

      நீக்கு
  12. சேவை பதிவு அருமை. எனக்கு, 'சேவைக்காகவே', பேசாம திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகிவிடலாமா என்று தோன்றுகிறது (உண்மையிலேயே). அவ்வளவு ரசிகன் சேவைக்கு. ரொம்ப வருஷமா நாங்கள் (எங்கள் குடும்பத்தில்) மட்டும்தான் 'புளிசேரி' என்ற குழம்பைப் பண்ணுகிறோம் (எங்களின் திருவனந்தபுரத் தொடர்பால்) என்று நினைத்திருந்தேன். நீங்களும் புளிசேரி வார்த்தையை உபயோகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

    13,000 ரூ கொடுத்து மிஷின் வாங்கி, அதில் சேவை (எத்தனை முறை நல்லா வரும்னு தெரியாது. குக்கர் மாதிரி பல வருடம் உபயோகிக்கமுடியாது) எத்தனை தடவை பண்ணுவோம்னு தெரியாது. கொஞ்ச நாள்லயே, அலம்பி வைக்கற வேலைக்கு சேவை'நாழியே தேவலாம்னு ஆயிடும்.

    எனக்கு இடியாப்பம் அவ்வளவாகப் பிடிக்காது (தட்டையா பண்ணுவது). அது என்னவோ டிரையாக இருப்பதாக எண்ணம். புளிசேரியோடு நல்லாச் சேராது.

    எங்கள் வீட்டிலெல்லாம், 'மடி' என்று பசங்களை இந்த வேலைக்குக் கூப்பிடமாட்டார்கள். ஏற்கனவே சொன்னமாதிரி, எல்லோருக்கும் ஒருவரே சேவை செய்வது என்பது தண்டனைதான்.

    எப்போது காண நேர்ந்தாலும், 2 நாள் நோட்டீஸ் கொடுத்துடறோம். சேவைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத் தமிழன். எனக்கும் சேவை மிகவும் பிடிக்கும். எங்களுக்கும் கேரளத் தொடர்பு நிறையவே உண்டு. அடிப்படையில், முந்தையத் தலைமுறையினர் வழி நெல்லைக்காரர்கள், தாய்வழியினர் (அடிப்படையில் பலர் கீழநத்தம் ) நாகர்கோவிலில் செட்டிலாக அங்கும் மற்றும் என் அப்பா வழித் தாத்தா, அவரது அம்மா, சித்தி என்று ஒரு கூட்டம் (எல்லாம் நெல்லைக்கூட்டம்தான் - திருக்குறுங்குடி) திருவனந்தபுரத்தில் செட்டிலாகிப் பின்னர் குறுங்குடி வந்து என்று சுற்றிச் சுற்றி...அப்பா வழி குறுங்குடியில் செட்டிலாக, தாய் வழி திருவண்பரிசாரத்தில் செட்டிலாக, அதில் சிலர் கேரளத்தில் புகுந்துவிட என்று..போகுது தொடர்பு. அதனால் கலாச்சாரமே கேரள தமிழ்நாடு கலந்த கலவை!

      எங்கள் அப்பா வழிப் பாட்டியின் வீட்டில் குழந்தைகள் நீங்கள் சொல்லியிருக்கும் அதே காரணத்தினால் அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் வெளி வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்...அங்கும் மடி அனுசரிக்கப்படும்!! ஆனால் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் எங்களுக்கு ஒரு வயது வந்ததும் பாட்டி சற்றுத் தளர்ந்து போனதால்...அது வரை என் அம்மாவிற்குக் கூட அனுமதி கிடையாது. அத்தனை மடி! எங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அப்படித்தான் இந்த அனுபவங்கள்..

      நீங்கள் சாப்பிட்ட இடியாப்பம் அப்படியிருந்ததோ என்னவோ...இடியாப்பம் மிகவும் மென்மையாக வரும். அதுவும் அதனுடன் இலங்கைச் சொதி சேர்த்து அருமையான பதார்த்தம்.

      13,000 ஆகிவிட்டதா? அந்த குக்கர் டைப் சேவை மாஜிக்??? எப்படியிருந்தாலும் வாங்கும் ஐடியா இல்லை. சேவை நாழிக்குத்தான் எனது ஓட்டு எப்போதும்.

      வாருங்கள் நிச்சயமாக நோட்டீஸ் கொடுத்துவிடுங்கள் சேவை செய்து சேவை செய்கிறேன்.புளிசேரியுடன்..இது சும்மா வாய் வார்த்தை இல்லை. கண்டிப்பாக வாருங்கள். உறுதியான அன்பான அழைப்பு. மட்டுமல்ல இடியாப்பமும் சொதியுடன் சுவைத்துப் பாருங்கள்...

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு..

      நீக்கு
    2. பாளையங்கோட்டைக்கு 5 கி.மீ தொலைவில், திருவண்ணாதபுரத்தை அடுத்த தாமிரவருணிக் கரையோரமுள்ள கீழந்த்தம்னா, I am surprised. என் இளமைக்காலம் (14 வயது வரை) அங்குதான்.

      நீக்கு
    3. என் அம்மாவின் அம்மா-பாட்டியின் அப்பா கிருஷ்ணன், அவர் தம்பி நாராயாணன் அங்குதான் இருந்தார். மணிலா எனும் என் உறவினரின் அம்மா சிங்காராம் மாமி அவரது தங்கைய் ஜெயா அங்குதான் இருந்தார்கள். என் மாமியின் அம்மா கல்யாணிப்பாட்டி, என் மாமி மைதிலி அங்குதான் சில வகுப்புகள் படித்தார். எழுத்தாளர் வேணுகோபாலன் அந்த ஊர்க்காரர்தானே...நானும் கீழ்நத்தம் வந்திருக்கிறேன் ஆனால் பலவருடங்களுக்கு முன். நீங்களும் அந்த ஊர்க்காரர்தானா!!!! சுற்றிச் சுற்றி ஏதேனும் உறவாகக் கூட இருக்கலாம்!!!

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன்..

      நீக்கு
  13. கோவை கமலா ஸ்டோரில் கிடைக்கிறது வித விதமாய் சேவை செய்யும் இயந்திரம் (நீங்கள் சொன்ன இயந்திரம்) இப்போது பெரிய அள்வில் செய்து கோவையில் கடை கடையாக காலை கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள் கவர்களில் அடைத்து. எட்டு மணிக்குள் விற்றுவிடும். நாம அதை வாங்கி வந்து இட்லி தட்டில் பரப்பி சூடு செய்து நம் இஷ்டம் போல் கலவைகள் கலந்து உண்ணலாம். நம் வீட்டில் செய்வது போலவே ருசியாக இருக்கும். எங்கள் மாமியார் முன்னொரு காலத்தில் சேவை நாழியில் பிழிந்த கதைகளை (கஷ்டங்களை) சொல்லிக் கொண்டு இப்போது இவ்வளவு எளிதாகி விட்டது என்று சந்தோஷபட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. கோவை கமலா ஸ்டோரில் முன்பு கிடைத்த்து பற்றி அறிந்திருந்தேன். நான் அடிக்கடிக் கோவை செல்வதால். என் உறவினர் மருதமலை அருகில் இருக்கிறார்கள். இங்கு சென்னையிலும் அது போன்று தயாராகும் சேவை வருகிறது. மட்டுமல்ல இடியாப்பம் கூட சுடச் சுட சைக்கிளில் காலை வேளையில் தெரு தெருவாக விற்கிறார்கள்.

      ஆம் இப்போது மிகவும் எளிதுதான். மிக்க நன்றி அக்கா

      நீக்கு
  14. அருமையாக சேவை செய்திருக்கிறீர்கள். ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருப்பதெல்லாம் அவ்வளவு கஷ்டமா பிழிவதற்கு? என்று தான். ஏனெனில் குறைந்த பட்சமாகப் பத்துப் பேருக்குக் கூட நான் தனியாகவே பிழிந்து சேவை செய்திருக்கிறேன். ஆகையால் இப்போ எங்க ரெண்டு பேருக்குச் செய்வது எளிதாகவே தோன்றுகிறது. :) மூன்று ஈடு இட்லி வைத்தால் எங்கள் இருவருக்கும் தே.சேவை, பு.சேவை அல்லது எ.சேவை மற்றும் மூன்றாவதாகத் தயிர் சேவை ரெடியாகிடும். அரைக்கும் நேரத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒரு மணி நேரம் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கஷ்டமில்லை அக்கா பிழிவதற்கு. ஊற வைத்து, அரைத்து, நான் கொழுக்கட்டையாகச் செய்து பிழிவதால் நேரம் எடுக்கும் அவ்வளவே. நான் வெகு எளிதாக எத்தனை பேர் வந்தாலும் செய்து விடுவதுண்டு. என்ன ஒரு நாள் முன்பு தகவல் சொல்ல வேண்டும். அவ்வளவே. திடீரென்று வந்து சற்று நேரத்திலேயே போக வேண்டும் எனும் விருந்தினருக்கு எப்படிச் செய்து கொடுக்க முடியும்? அப்படி வருபவர்களுக்குத்தான் திருவனந்தபுரத்தில் மெஸ்ஸில் வாங்கியது. மட்டுமல்ல முன்பு கல்லுரலில்தானே அரைக்க வேண்டும். அப்போது 25, 30 பேருக்குச் செய்ய வேண்டும் எனும் போது இரும்பு நாழி சில சமயம் பிழிவதற்குப் படுத்தும். அதனால் கொழுக்கட்டையை நீரிலேயே கடைசி வரை சூடாக வைத்திருப்பார்கள். ஓட்டை மிக மிகச் சிறிய ஓட்டையாக இருக்கும். அப்போது அதனால் கடினமாக இருந்தது. இப்போது எல்லாம் எளிதுதான். நான் அடிக்கடிச் செய்வதுண்டு.

      மிக்க நன்றி அக்கா.

      நீக்கு
  15. நான் இந்த திடீர்த் தயாரிப்பு சேவையே வாங்கியதில்லை. என் மாமா பெண் கன்கார்ட் என்னும் பிராண்டில் நன்றாக இருப்பதாகச் சொல்வாள். இன்னும் சிலர் டிடிகே பிராண்ட் நல்லா இருக்கும் என்பார்கள். ஒரு முறை கிடைத்தால் வாங்கிப் பார்க்கணும்! :) இடியாப்ப மாவு வாங்கிப் பிழிந்திருக்கேன். அப்படி ஒண்ணும் ருசிக்கலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் வாங்குவதில்லை கீதாக்கா. நீங்கள் சொல்லியிருக்கும் ப்ராண்டும் நன்றாக உள்ளது என்ரு சொல்லுவதற்கில்லை. உறவினர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். நான் எப்போதுமே வீட்டில்தான். என் மகனுக்கும் ரெடிமேட் பிடிப்பதில்லை.

      நீக்கு
  16. சேவைக்கும் இடியாப்பத்துக்கும் வேறுபாடு இதுநாள்வரைக்கும் அறியாதிருந்தேன்.
    தங்கள் அனுபவம் எங்கள் இளமைக்காலத்தையும், எங்கள் அம்மையையும்(தாய்வழிப் பாட்டி) ஒருசேர அழைத்து வந்தது. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சிவகுமாரன்! அம்மை!!! நீங்கள் திருநெல்வேலிப்பக்கமா? செங்கோட்டை, குற்றாலம் பக்கமா??!!! உங்களுக்கும் பழைய நினைவுகள் வந்ததா மிக்க மகிழ்ச்சி! நன்றி தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
    2. நான் புதுக்கோட்டை மாவடடத்துக்காரன். எங்கள் சமூகத்தில் , தாய்வழி தாத்தா பாட்டியை அய்யா. அம்மை என்றும் தந்தைவழி தாத்தா பாட்டியை , அய்யா, அப்பத்தா என்றும் அழைப்போம்.
      நன்றி

      நீக்கு
    3. மிக்க நன்றி சிவகுமாரன். அறிந்து கொண்டோம்.

      நீக்கு
  17. இந்தச் சேவையும் மகத்தான சேவை தான்.... சேவை நினைவுகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி அப்போதைய கருத்திற்கு இப்போது நன்றி சொல்லிக் கொள்கிறேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி ஜி

      கீதா

      நீக்கு
  18. அருமையான
    சிந்திக்க வைக்கும் பதிவு

    பதிலளிநீக்கு
  19. "சேவை" எனும் பெயரில் ஒரு உணவு பொருள் இருப்பதே எனக்கு உங்கள் பதிவை படித்தபின்னரே தெரிந்தது.

    இதுபோன்ற புதிய விஷயங்களை என்னை போன்றோருக்கு அறிமுகம் செய்துவைக்கும் உங்கள் "சேவை" கண்டிப்பாக தேவை.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "சேவை" எனும் பெயரில் ஒரு உணவு பொருள் இருப்பதே எனக்கு உங்கள் பதிவை படித்தபின்னரே தெரிந்தது.//

      ஓ அப்படியா கோ?!!!

      இதுபோன்ற புதிய விஷயங்களை என்னை போன்றோருக்கு அறிமுகம் செய்துவைக்கும் உங்கள் "சேவை" கண்டிப்பாக தேவை.//

      ஹாஹாஹா மிக்க நன்றி கோ!!

      கீதா

      நீக்கு
  20. சேவை மேஜிக் வெற்றிபெற்றதில்லை.

    அரிசி மாவை உபயோகித்து, டிரெடிஷனல் சேவையைத் தயாரிக்கும் மெஷினைப் பார்த்திருக்கிறேன். அதைவைத்துத் தயாரித்து பஹ்ரைனில் கடைகளுக்கு சப்ளை பண்ணினார்கள். எனக்கு சௌகரியமா இருந்தது. பிறகு வெயில் சூட்டில் ஒரு நாள் தாங்குவதில்லை என்ற காரணம் கூறி பாக்கெட் சேவையை அங்கு தடை செய்துவிட்டார்கள். சேவை தயாரிப்பவர் ஹோட்டல்களுக்கு மட்டும் சப்ளை செய்தார். தெரிந்தவர் என்பதால் வார இறுதிகளில் நான் போய் எனக்கு ஒரு பெரிய பாக்கெட் வாங்கிவருவேன். பெங்களூரில் கடையில் கிடைப்பதால் வீட்டில் செய்வது நின்றுபோய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவை மாஜிக் வெற்றி பெறவில்லையா?!! நினைத்தேன். விலையும் கூடுதல், அதில் இருக்கும் ஒவ்வொரு பார்ட்டையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டுமே அதற்கு சேவை நாழி ரொம்ப சுலபம். சேவை செய்வது கடினமாகவே இல்லை. நிறைய பேருக்குக் கூடச் செய்ய முடிகிறது செய்திருக்கிறேன்.

      அரிசி மாவை உபயோகித்து, டிரெடிஷனல் சேவையைத் தயாரிக்கும் மெஷினைப் பார்த்திருக்கிறேன். அதைவைத்துத் தயாரித்து பஹ்ரைனில் கடைகளுக்கு சப்ளை பண்ணினார்கள். எனக்கு சௌகரியமா இருந்தது.//

      ஓஹோ! நூடுல்ஸ் மெஷின் போல இருக்கும் இல்லையா,...

      அங்கு அடிக்கும் வெயிலுக்குத் தாங்காதுதான் அதுவும் பாக்கெட்டில் மூடியிருக்கும் போது என்னதான் ஆற வைத்து பேக் செய்தாலும் கொஞ்சம் ஈரத்துளிகள் வரும்.

      பெங்களூரில் கடையில் கிடைப்பதால் வீட்டில் செய்வது நின்றுபோய்விட்டது.//

      பெங்களூர் கடையில் புழுங்கலரிசி சேவை கிடைக்கிறதா!!!??? அட!!

      எஞ்சாய் மாடி!

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  21. எங்கள் வீட்டில் சேவை எல்லோருக்கும் பிடிக்கும். என் மாமியார் எலுமிச்சை சேவை செய்து அதனுடன் சுண்டல் செய்வார். அம்மா வீட்டில் என் அம்மா சேவை செய்து தேங்காய் பால் , சர்க்கரை சேர்த்து தருவார். நாங்கள் இருவரிடமும் உங்கள் சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை என்போம். உங்கள் சேவை பதிவு படித்து சேவை சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காயத்ரி, உங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் சேவை பிடிக்கும் என்றது சந்தோஷம். எலுமிச்சை சேவை நம் வீட்டிலும் செய்வதுண்டு.

      தேங்காய் பால் நல்ல கோம்போ. சர்க்கரையும் சேர்ப்போம், சில சமயம் வெல்லம் போட்டும் தேங்காய்ப்பால்.

      //நாங்கள் இருவரிடமும் உங்கள் சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை என்போம். உங்கள் சேவை பதிவு படித்து சேவை சாப்பிடும் ஆவல் வந்துவிட்டது!//

      ஹாஹா இருவரிடமும் சொல்லிடுங்க! சேவை செய்ய!!

      மிக்க நன்றி காயத்ரி

      கீதா

      நீக்கு