ஞாயிறு, 22 மே, 2016

தேர்தல் நாள் - உரிமை, அனுபவம் - நோட்டா-2

நம் உரிமையை, கடமையை நிலைநாட்டும் நாளன்று,  ஒரு சாதரண இந்திய, தமிழ்க் குடிமகளாகிய நான் எனது அடிப்படை உரிமைக்காகப் போராட வேண்டியிருந்ததை நினைத்து எழுந்த எனது எண்ண அலைகளை இந்தப் பதிவு நீண்டு வருவதால் அடுத்த பதிவில் தொடர்கின்றேன். என்று முடித்திருந்தேன். இதோ தொடர்ச்சி....

Image result for nota

நம்மில் எத்தனை பேர் சிறு உடல்நலப் பிரச்சனைகளுக்கேனும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றோம்? நம்மில் எத்தனை பேர் அரசு அலுவகங்களில் சேவைக்குண்டான பணம் தவிர கையூட்டு கொடுக்கமாட்டோம் என்ற உறுதியில் இருக்கின்றோம்? நம்மில் எத்தனை பேர் காவல் நிலையத்திற்குத் தைரியமாகச் சென்று புகார் கொடுக்கின்றோம்.

இன்னும் பல அடுக்கலாம்....மனதில் இருக்கும் எனது நெடுநாளைய கேள்வி. இங்கு நாம் அரசு வழங்கும் சேவைகளைப் பயன்படுத்தி, அதில் ஊழல்கள், குறைகள் நேரும் போது, தனியாகவும், ஒட்டு மொத்தமாககவும், குரல் கொடுத்து எதிர்த்து, ஒரு நல்ல எதிர்க்கட்சி போல செயல்பட்டிருந்தால், செயல்பட்டால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் மக்களின் சக்தி கண்டு மரியாதை வழங்கியிருப்பார்களோ? ஆனால் நாமோ, “சுயமரியாதையை அரசியல்வாதிகளிடமும், அதிகார வர்க்கத்திடமும் அடகுவைத்து விட்டதால்தான், இங்கு இவர்களின் ஆட்டம் கொடி கட்டிப் பறக்கிறது.” என்று முந்தைய பகுதிக்கு நம் நண்பர் உயிர்நேசன் கொடுத்த கருத்தை வழிமொழியத் தோன்றுகின்றது.

அதே சமயம், நமது அரசின் அடிப்படைச் சேவைகளான பள்ளி முதல், கல்லூரிவரை, நுகர்வோர் நியாய விலைக் கடைகள் முதல் மருத்துவம் வரை, நாட்டைப் பாதுக்காக்க வேண்டிய காவல் உட்பட சீராக மக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாமல், ஊழல் புரையோடிக் கிடப்பதாலும் அதை மக்கள் எந்தவிதத்திலும் எதிர்க்காத, எதிர்க்க முடியாத காரணங்களினாலும், அரசின் அடிப்படைக் கடமைகள் தனியார்களுக்குத் தாரைவார்க்கப்பட்டு அதில் அதிகாரவர்கமும், அரசியல்வாதிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கோலோச்சி நிற்கின்றனர்.

குறிப்பாகப் படித்தவர்கள், நடுத்தரவர்க்கத்தினர், குரல் கொடுக்காததன் காரணம், பொது இடத்தில் குரல் எழுப்பினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் என்று கருதுவதாலும், அரசு அதிகாரிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் குரல் கொடுத்து காவல்நிலையம் வரை செல்ல நேர்ந்தால் நமது வேலைக்கு வேட்டு வந்துவிடுமோ என்ற பயத்தினாலும்தான் என்றே தோன்றுகிறது.

அப்படியே குரல் கொடுத்துப் போராட்டங்கள் செய்தாலும் எந்தப் போராட்டமும் இங்கு வலுவாக இல்லை. எல்லாமே அந்தந்த நேரத்திற்கு மட்டுமே. பின்னர் வலுவற்றுப் போய்விடுகின்றன. ஒருவர் குரல் கொடுத்தாலும் அவருடன் சேர்ந்து ஆதரவாகக் குரல் கொடுக்க யாரும் முன்வராததால், பல விஷயங்கள் தனி மனிதப் போராட்டமாக வலுவற்றுப் போகின்றது. (வெங்கட்ஜி அவர்களும் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார் முந்தையப் பதிவில், பின்னூட்டத்தில்.)

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தேர்தலில் முதலில் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லைதான். ஏனென்றால், நமது இந்தியக் குடியுரிமை, பிறப்புரிமைக்கான உண்மையான விருப்பத்தை, அடிப்படை உரிமையை, அதாவது எங்களுக்கு நல்ல தலைவர்/ஆட்சி வேண்டும் என்ற உரிமையைப் பதிய முடியவில்லை என்பதால், 100% நல்ல தலைவர் வேண்ட முடியாதுதான் என்றாலும் இருக்கும் தலைவர்களிலேனும் நல்லவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்பதால்...

நாம் போராடினாலும் பந்தாடப்படுவதால். பல இடங்களில் பணம் கொடுத்து காரியம் சாதிக்க வேண்டிய நிலைமை இருப்பதால். அப்படிப்பட்ட ஊழலுக்குத் துணை போக வேண்டியுள்ளதே என்ற வருத்தத்தினால், நாம் நமது விருப்பப்படி ஓட்டுப் போட்டாலும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை, ஒன்று ஜெஜெ இல்லை முக, இவர்களைத் தவிர யாரும் வரப் போவதில்லை என்பதால் என்று பல காரணங்கள்.

Image result for nota

இது பொதுவாகச் சென்னையில் வாழும் நடுத்தரவர்க்கத்துச் சிந்தனைதான். எல்லோரும் மாற்றத்தை விரும்பினார்கள். குறிப்பாக வெள்ளத்திற்குப் பிறகு. கட்சிகளின் நிலைப்பாட்டினால், இரு பெரும் கட்சிகளில் ஒன்றுதான் மீண்டும் என்பது ஊகிக்க  முடிந்ததால், அட போங்கடா என்று இங்கு ஓட்டுப் பதிவு குறைந்திருக்கலாம்.

எனக்கு நோட்டா ஆர்வம் இருந்தது. நமக்கு எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்பதை இப்போதைய சூழ்நிலையில், பெரும்பான்மையோர் பதிந்தால், ஒரு வேளை இந்த நோட்டா வாக்குகள், ஓட்டு வாக்குகளை விடக் கணிசமான விகிதத்தில் அதிகமாக இருந்தால், தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான மக்களின் முடிவை ஏற்று தமிழ்நாட்டை ஆளுனரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தால், அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் பயமும், மக்களின் மீது மரியாதையும் ஏற்படாதோ, அதனால் நாம் விரும்பும் மாற்றம் படிப்படியாகவேனும் ஏற்படாதோ என்ற ஒரு நப்பாசை மனதில் எழுந்தது. ஆனால் நோட்டாவைப் பற்றிக் கூகுளில் தேடிய போது, அது எத்தனை வருடப் போராட்டத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டிய நோட்டாவிற்கு எந்தவிதப் பவரும் இல்லை, நம் வாக்கை வேறு ஒருவர் போடாமல் இருக்க மட்டுமே உதவும் என்றும் தெரிந்தது.

(நோட்டா பற்றி மூங்கில்காற்று முரளிதரன் மிக விரிவாகப் பதிவுகள் எழுதியுள்ளார்)

நோட்டா அளிக்காதீர்கள் என்று எனக்குப் பலரும் அறிவுரை வழங்கினார்கள். ஏன் பதியக் கூடாது? பின்னர் எப்படி நமக்கு வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை, நம்மை ஆளும் தலைவர்களைப் பிடிக்கவில்லை என்ற நமது உரிமையைப் பதிய முடியும்? மக்கள் நாம் தானே நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோம் எனும் போது அந்த உரிமை நமக்கு இல்லையா? அதுவும் கடமைதானே? அப்படி இல்லை என்றால் எதற்காக நோட்டா?

தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் நோட்டாவுக்கு வந்த 5 லட்சத்திற்கும் மேலான வாக்குகளைக் கண்டு எனக்குச் சற்று மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்தது. வாக்களித்தவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களுக்கு கட்சிகள், தலைவர்கள் என்பதை விட தாங்கள் நடைமுறையில் சந்திக்கும் ஊழல்களை விரும்பாததால் அதை எதிர்த்துத்தான், மாற்றம் வேண்டும் என்று நோட்டாவிற்கு வாக்கு அளித்திருப்பார்கள் என்று தோன்றுகின்றது. அழகாகத் தெரிவித்துவிட்டார்கள்.

இவ்வளவு ஏன்? இங்கு ஒரு ஓட்டுநர் உரிமம் கூட, நாம் நேரடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று, அந்தச் சேவைக்கான பணம் மட்டும் செலுத்தி நேர்மையான முறையில் வாங்க முடிகின்றதா? சொல்லுங்கள் பார்ப்போம்? ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள்/ஏஜண்டுகள் மூலம்தானே வாங்க முடிகின்றது? நான் அமெரிக்காவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய போது எந்தவித லஞ்சமும் கொடுக்கவில்லை. நேரடியாக அலுவலகம் சென்று, அதன் சட்டத்தைக் கண்டு, தேர்விற்கு உட்பட்டுப் பெற்றதைக் கண்டு வியந்து போனேன்.  

எனக்கே இப்படி இருக்கும் போது, இப்போது பல இளைஞர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதால், அவர்களும் அங்கிருக்கும் நல்ல சூழல்களை, மாற்றத்தை இங்கும் விரும்புவார்கள்தானே. அந்த உணர்வில்தான் அவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்திருக்கலாம் என்றும் தோன்றுகின்றது.

இப்போதைய நோட்டா வாக்குகளைப் பார்த்த போது, நோட்டா வாக்குகள் வேட்பாளர்களின் வாக்குகளையும் விட அதிகமாக இருக்கும் தொகுதியிலேனும் ஆட்சியாளரின் ஆட்சியின் கீழ் அந்தத் தொகுதி வந்தால், நோட்டாவிற்கு இன்னும் பவர் கூடி முக்கியத்துவம் பெறும் அல்லவா? என்ற ஆதங்கம்.

எப்படியோ, நோட்டா வாக்குகளைப் பார்க்கும் போது அதற்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று தெரியவருவதால், எதற்காக நோட்டா பல கடினமான போராட்டங்களுக்குப் பின் கொண்டுவரப்பட்டதோ, அதற்காக, நோட்டாவின் பவரை வலிமையாக்கி உறுதிப்படுத்தினால் அடுத்த தேர்தலிலேனும் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படலாமே என்று தோன்றுகின்றது.  பார்ப்போம் பொறுத்திருந்து.

-----கீதா

படங்கள் இணையத்திலிருந்து. (பி கு: இதில் எனது அறியாமை இருக்கலாம். என் மனதில் தோன்றிய எண்ணங்களைப் பதிந்துள்ளேன்..அவ்வளவே...)


27 கருத்துகள்:

  1. பொதுவாக நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் அந்த வாக்கின் பலமோ பலமின்மையோ தெட்ரியாமல்தான் வாக்களித்திருக்கிறார்கள் நமது ஜனநாயகத் தேர்தல் முறையே மிகவும் மாற வேண்டும் இப்போதும் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லவாக்களித்தவர்களில் கூட பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் அல்ல ஆகவே இருப்பவர்களில் சிறந்தவரையே தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கிறது இது தெரியாமல் எனக்கு யாரையுமே பிடிக்க வில்லை என்று கூறுவது ஒரு விதத்தில் ஈகோவின் வெளிப்பாடே . நாம் கோரவேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாக்களித்தவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேலானவர்களால் என்று இருக்கவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸாரி ஸார். அதை ஈகோ என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியாது. அது ஈகோ அல்ல. நமது உரிமை. அடிப்படை உரிமை. பிடிக்கவில்லை என்பதும் அவர்கள் மீதான தனிப்பட்ட கருத்து இல்லையே. அவர்கள் மீது வெறுப்பல்லவே. அவர்கள் ஆட்சி சரியில்லை, ஊழல் என்பதை நாம் விரும்பவில்லை என்பதுதானே அல்லாமல் வெறுப்பல்ல சார். இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் செய்யும் தவறுகள் ஒருவரை மட்டும் பாதிக்கவில்லை. ஒட்டு மொத்த சமுதாயத்தையேதான் பாதிக்கின்றது. எனவே அது நமது உரிமை.

      வீட்டில் உள்ளவர்கள் தவறு செய்யும் போது அது சரியில்லை என்று அவர்களிடம் நேரிடையாகச் சொல்லி திருத்தவும் முடியும். ஆனால் நம்மை ஆள்பவர்களிடம் தெரிவிப்பது எப்படி? தனியாகச் சென்றா சொல்ல முடியும்? திருத்தவா முடியும்?

      நன்றி சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  2. >>> அடுத்த தேர்தலிலேனும் நாம் விரும்பும் மாற்றங்கள் ஏற்படலாமே என்று தோன்றுகின்றது... பார்ப்போம் பொறுத்திருந்து...<<<

    சற்று பொறுத்திருப்போம்.. அதனால் ஒன்றும் குறையில்லை..

    பதிலளிநீக்கு
  3. அடுத்த தேர்தலுக்குள் நோட்டாவில் இன்னும் சில மாற்றங்கள் வரும் என்று தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.... பொது நல வழக்கு தொடரலாம் என்றும் சிலர் பகிர்ந்து வருகிறார்கள். அதனால் மாற்றங்கள் வரலாம்....

    பதிலளிநீக்கு
  4. நோட்டா வாக்குகள் அதிகரித்து இருப்பது மாற்றங்களை உருவாக்கும் என்றே தோன்றுகிறது பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆதங்கம். நோட்டாவுக்கு ஓட்டு போடுவதற்கு பதில், பேசாமல் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். இரண்டுமே ஒன்றுதான். அதற்காக அம்மாவுக்கோ அல்லது அய்யாவுக்கோ ஓட்டு போடுங்கள் என்று அர்த்தமில்லை.

    பதிலளிநீக்கு
  6. நோட்டோ அவசியமே ஆனால் அதில் நல்லதொரு அதிகாரம் சேர்க்கவில்லை என்பது எனது கருத்து இது பரிசீலிக்கப்படல் வேண்டும்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  7. நோட்போவிற்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றங்கள் நிகழும்,
    நோட்டாவிற்கு வலு உண்டு என்றால் வாக்களிக்கலாம்,
    மற்றபடி நோட்டாவிற்கான வாக்கு உபயோகமற்ற வாக்காகவே மாறும் என்று எண்ணுகின்றேன்

    பதிலளிநீக்கு
  8. அவ்வளவு சுலபமா அரசியல்வியாதிகள் ,நோட்டாவுக்கு அதிகாரம் கொடுக்க விடுவார்களா :)

    பதிலளிநீக்கு
  9. நல்ல அலசல்! சில இடங்களில் வெற்றி வாய்ப்பு அல்லது தோல்வி இரண்டிலக்கத்திற்குள்கூட ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்கே போடப்பட்டிருக்கும் நோட்டோ ஓட்டுக்கள் யாரேனும் நல்லவர்கள் சிலரது வெற்றிக்குக்கூட தடை விதித்திருக்கலாம் அல்லது யாரேனும் மோசமான வேட்பாளரின் வெற்றிக்குக்கூட வழி வகுத்திருக்கலாம். அதனால் அனைத்தையும் அலசிப்பார்த்து யாருக்கேனும் ஓட்டு போடுவது தான் நல்லது!

    பதிலளிநீக்கு
  10. அரசியல்வாதிகள் இனி நோட்போவிற்கு அஞ்சும் காலம் வரலாம்!

    பதிலளிநீக்கு
  11. இருபதிவுகளையும் படித்துவிட்டு இங்கு கருத்திடுகிறேன்...பேருந்தில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது..ஆனால் கேள்வி கேட்டால்,,நீ யார் கேட்பதற்கு என்ற மனநிலை தான் நிலவுகிறது..எங்கும்...எதிலும்...
    நீங்கள் சொல்லியிருப்பது போல மக்கள் சேர்ந்து குரல் கொடுப்பதில்லை, கொடுத்தாலும் சில நாட்களில் மறந்து விடுகின்றனர்...பல விசயங்களில் மனம் நொந்த அனுபவங்கள் உண்டு...
    நோட்டா பற்றிய என் கருத்தும் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறது..அதிக அளவில் நோட்டா இருந்தால் மக்களின் மனநிலையாவது சொல்லப்பட்டிருக்குமே என்று... ஆதங்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர நேர்மறை மாற்றங்கள் வருமா? எப்பொழுது வரும்? தெரியவில்லை ... :(

    பதிலளிநீக்கு
  12. நோட்டாவுக்கு வாக்களிப்பது வீண் என்று முரளிதரன் பதிவு கண்டே அறிந்தேன் நானும். இந்த இருவரையும் விட்டால் தமிழகத்துக்கு வேறு கதி இல்லை என்பது மிகமிகமிகப்பெரிய சோகம்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான அலசல்.

    பார்ப்போம் இதையும் முடிவுசெய்வது "நோட்டா" இல்லையா என்று.

    கோ

    பதிலளிநீக்கு
  14. மக்கள் நினைத்தால் மாற்றங்கள் நிகழும்.

    பதிலளிநீக்கு
  15. நோட்டா என்பது நமக்கான உரிமை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தீர்கள். பாராட்டுகள்!!!

    பதிலளிநீக்கு
  16. ஒட்டுக்கும் எனக்கும் ரெம்ப தூரம் இதில நோட்டாவும்தான் அய்யா...

    பதிலளிநீக்கு
  17. நோட்டா வினால் மாற்றம் நிகழுமோ நிகழாதோ
    எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்று
    சொல்ல ஒரு அமைப்பு வச்சாங்கல அதுவே போதும்...

    பதிலளிநீக்கு
  18. இந்த தேர்தலிலேயே நோட்டா பல இடங்களில் வேட்பாளர்களின் வேட்டாக அமைந்தது ... அருமை http://ethilumpudhumai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  19. நாட்டுக்கு வாக்கா ?
    நோட்டுக்கு வாக்கா?
    நோட்டாவுக்கு வாக்கா?

    பதிலளிநீக்கு
  20. மொத்தத்தில் நீங்கள் கூற வருவது என்னவென்றால், 'நோட்டா'வுக்கு நிறைய பேர் வாக்களித்துக் கொண்டே இருந்தால், அதற்குக் கூடி வரும் செல்வாக்குக் கருதி அதற்குண்டான உண்மையான அதிகாரத்தை வழங்க முன்வருவார்கள் என்கிறீர்கள், அப்படித்தானே? முழுக்க முழுக்கத் தவறு!

    நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை நீங்களே மறுபடியும் கொஞ்சம் சிந்தியுங்கள் சகோ! நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் தெரியுமா? அரசியலாளர்கள் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்வார்கள் என்றுதான். "இருக்கிற அரசியலாளர்கள் யாரையுமே எனக்குப் பிடிக்கவில்லை" என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால், அப்படிச் சொல்வதால் எந்தவிதப் பலனும் இல்லை எனத் தெரிந்தும் அப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால், அப்படிச் சொல்வதனால் பலன் ஏற்படும்படியான சட்டத்திருத்தத்தை அந்த அரசியலாளர்களே கொண்டு வருவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்! இது நடக்கக்கூடிய ஒன்றா? அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்! 'நோட்டா'வுக்குப் பெருவாரியான மக்கள் வாக்களித்தால் அதற்கேற்ப குடியரசுத்தலைவர் ஆட்சியோ, ஆளுநர் ஆட்சியோ கொண்டு வர இடமளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டியதே அரசியலாளர்கள்தாம். ஆனால், அப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்தால் அதனால் பாதிக்கப்படப் போவதும் அவர்கள்தாம். அப்படியிருக்க, அவர்கள் எப்படி அதைச் செய்வார்கள் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என எனக்குப் புரியவில்லை.

    'நோட்டா'வுக்கு வாக்களித்தால் எந்தப் பலனும் இல்லை என்கிற இன்றைய நிலையிலேயே நீங்கள் அதற்கு வாக்குச் செலுத்துகிறீர்கள் என்றால், உரிய ஆற்றலையும் அதற்கு அளித்து விட்டால் இன்னும் அதற்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகத்தானே செய்யும்? எனில், 'நோட்டா'வுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை கூடக் கூட உரிய ஆற்றலை அதற்கு வழங்குவதில் அரசியலாளர்களுக்கு இருக்கும் அச்சமும் கூடுவதுதானே இயல்பு? சிந்தித்துப் பாருங்கள்!

    உண்மையில், உங்களைப் போன்ற நடுநிலை வாக்காளர்கள் மாற்று அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க முன்வராமல் இப்படி எந்த விதப் பலனும் இல்லை என்று நன்கறிந்தும் 'நோட்டா'வுக்கு வாக்களிப்பதால் தி.மு.க, அ.தி.மு.க, போன்ற கட்சி சார்புடைய வாக்காளர்கள், சாதிச் சார்புடைய வாக்காளர்கள் போன்றோரின் வாக்குகள் மட்டுமே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சூழல் ஏற்படுகிறது. அதுதான் இந்த முறை மீண்டும் அ.தி.மு.க-வே ஆட்சிக்கு வரக் காரணமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  21. நோட்டோவுக்கு பாயப்படும் காலம் வரும்...அதற்காகவாவது நல்லட்சி செய்தால் நலம்

    பதிலளிநீக்கு
  22. கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. தனித்தனியாகப் பதில் அளிக்க முடியாமல் போனது இணையம் சரிவர வராததால். இப்போதுதான் கொஞ்சம் சரியாக வரத் தொடங்கியுள்ளது. எனவே மன்னித்துவிடுங்கள் பதில் கொடுக்க முடியாமைக்கு.

    இபுஞா சகோ தங்கள் கருத்திற்கு இங்கு விரிவாகப் பதில் அளிக்க முடியவில்லை ஆனால் நாம் நேரில் அதைப் பற்றிப் பேசிவிட்டோம் தாங்களும் அதற்கு விளக்கம் அளித்தீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் அக்கறை....பிரமிக்க வைக்கிறது...ஆனாலும் பாருங்க நான் வாக்களித்த யாரும் இதுவரை வென்றதில்லை....ம்ம்ம்...மாற்றம் எதிர்பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  24. நோட்டாவோ நோட்டோவோ, எப்படியோ நோட்டுக்களை வைத்தே வந்துடறாங்க! அப்புறமா என்ன! :(

    பதிலளிநீக்கு
  25. 'நோட்டாவுக்கு வாக்களிப்பது என்பது சரியல்ல. அது ஒரு எக்ஸெப்ஷன். ஒரு தொகுதியில் 20லிருந்து 50 பேர்வரை நிற்கிறார்கள். அத்தனைபேருமா அயோக்கியர்கள் (இது un parliamentary word. சரியான வார்த்தை, "யோக்கியர்கள் இல்லை'?) அந்த 20 பேரும் நம்ம தொகுதியைச் சார்ந்தவர்கள்தானே. நம்முடைய சமூகத்தின் ரெப்ரெசென்டேடிவ் தானே. அவர்களில் ஒருவரைத் தானே நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்? நிச்சயமாக 20 பேரும் யோக்கியர்கள் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தால் நோட்டாவில் பதிவது முறை. இல்லாட்டா, 'நான் தான் உலக அழகி/அழகன்', போட்டியில் இருப்பவர்கள் எல்லோரும் கிடையாது என்று எண்ணுவதற்குச் சமம்.

    இதை எப்படியும் அடுத்த எலெக்ஷனுக்கு மீள்பதிவாக வெளியிடுவீர்கள். அப்போது இந்தப் பின்னூட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு