வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு

நாம் மேற்கொள்ளும் பயணங்கள் பலவாக இருந்தாலும், சுற்றுலாப் பயணம்தான் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனுபவித்துக் களிப்பது. சுற்றுலா நம் வழமையான பரபரப்பான வாழ்வியலுக்குச் சற்று ஓய்வு கொடுத்து, மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்வு ஊட்டி, மீண்டும் வழமையான வாழ்வியலுக்கு மீட்டெடுக்கும் திறனுடையது.

உலகிலேயே மிகப்பெரிய துறை என்றால் சுற்றுலாத் துறையே. அனுபவங்களும், கலாச்சாரப் பரிமாறல்களும், படிப்பினையும் மட்டுமின்றி ஒரு நாட்டின் மிகப் பெரிய வருவாய்த் துறையாக அமைந்திருப்பதும் சுற்றுலாத் துறை என்றால் அது மிகையல்ல.

அண்டை நாடுகளாகிய, இலங்கை, பர்மா, மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளின் மிகப் பெரிய வருவாய் இத்துறையிலிருந்துதான்.

நாம் நாட்டின் வருவாய்க்கும் சுற்றுலாத் துறையின் பங்கு அளப்பரியது. ஆயினும், ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் அடிப்படை வசதிகளையும், இருக்கும் வசதிகளையும் பயணிகளுக்கு ஏற்றாற் போல் மகிழ்வுதரும் வகையில் சுற்றுலாத் துறை மேம்படுத்தினால் வெளிநாட்டுப் ப்யணிகளையும் ஈர்த்து சுற்றுலா வருவாய் மேலும் பெருகிடும்.

நம் அண்டை மாநிலமான கேரளா சுற்றுலாத்துறையை மிக அழகாகக் கையாண்டு வருவாய் பெருக்கி வருகின்றார்கள். தமிழ்நாட்டில் திருமிகு இறையன்பு அவர்கள் சுற்றுலாத்துறைச் செயலராக இருந்த போது அதை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டார். இப்போதும் அவர் தனது உரைகளில் அதை வலியுறுத்தியும் வருகின்றார். வருவாய் பெருகினால் அந்தத் துறையே இன்னும் வளமாகி, பயணிகளை ஈருக்கும் அல்லவா? அதற்கு உதவும் வகையில் ஹாலிடே நியூஸ்...

இணையத்திலிருந்து

துளசி: “கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக் கண்டு பிடிச்சுக் கொண்டா ஒரு தீவு...”

கீதா: ஹேய்! என்னாச்சு துளசி? பாட்டெல்லாம் பாடுகிறாய்?

துளசி: யப்பா உன் பேச்சை நிறுத்த வேறு வழி தெரியவில்லை..... சரி அதை விடு. பிள்ளைகளுக்கு லீவு விட்டாயிற்று. எங்கேனும் செல்ல வேண்டும் என்று ஒரே நச்சரிப்பு. எங்கு செல்லலாம் என்று தலைமுடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றேன்.

கீதா: “சனி ஞாயிறு..... காதில் சொன்னது என்னது”

துளசி : சனி ஞாயிறு காதில் சொல்லியதா? என்னது அது?

கீதா: அது என் காதில் என்ன சொல்லியது என்றால்.... சுற்றுலாவுக்கு உதவும் வகையில் மக்களாகிய உங்களை நம்பி ஹாலிடே நியூஸ்  என்று அழகான, வண்ண மயமான, வழவழவென்ற தாள்களுடன், மனதையும், கண்ணையும் கொள்ளை கொள்ளும் படங்களுடன், தகவல்களுடன் சுற்றுலாவுக்கென்றே ஒரு பத்திரிகை வெளியாகும் போது?” என்று சொல்லியது. “தீவு தானே கேட்கின்றாய் இதோ பார்” என்று அந்த இதழ் காட்டுவதைப் பார்..
நண்பர் வெங்கட்ஜியின் தளத்திலிருந்து

துளசி : ஆஹா! அழகாக இருக்கிறதே! அதுவும் தமிழிலா? சுற்றுலாவைப் பற்றி பத்திரிகையா? ட்ராவலாக் என்று ஆங்கிலத்தில் பல வாசித்ததுண்டு. மேலே சொல்லு.

கீதா: உன்னைப் போன்றோர்க்கும் உபயோகமாக இருக்கும்தான்.  வெங்கட்ஜி, என்னைப் போன்று சுற்றுலாவை ரசிப்பவர்களுக்கும் ரொம்பவே உபயோகமாக இருக்கும். சுற்றப்பிடிக்கும் என்பதால்...

துளசி : சரி இப்ப நீ சுற்றிவளைக்காதே. விஷயத்திற்கு வா.

சகோ செந்தில் எனக்கு அளித்த இதழ்.

கீதா: இதை வெளியிடுபவர்கள் மதுரையைச் சேர்ந்த வளர்தமிழ் பப்ளிகேஷன்ஸ். நம் நண்பர் கூட்டாஞ்சோறு செந்தில்குமார் இருக்கிறார் இல்லையா, அவர்தான் இந்தப் பத்திரிகையின் இணையாசிரியர். இந்த இதழ் முன்பே அதாவது அக்டோபர் 2012லிருந்து வெளிவந்ததுதான்.  நான் அவரைச் சந்தித்த போது எனக்கு அவர் முன்பு வெளியான இதழ் ஒன்றைக் கொடுத்தார். அதன்பின் சில மாதங்களுக்கு முன் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், மீண்டும் வெளிவர இருக்கிறதாகவும் அப்போது தெரிவித்தார்.  இதோ மீண்டும் புத்துணர்வுடன் இந்த மாதம் முதல் வெளிவரத் தொடங்கிவிட்டது.

துளசி: சுற்றுலா இதழுக்கும் நெருக்கடியா? ஆச்சரியம்தான்..

கீதா: அதை ஏன் கேட்கின்றாய்...மூன்று வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்த இதழ் போட்டியில், பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குவதில்லையா அது போல விழுங்கப்பட்டது. ஏஜண்டுகளும் ஏமாற்ற பல இன்னல்களுக்கு உட்பட நிறுத்த வேண்டிய சூழல்.

துளசி: வேதனைதான். இப்படிப்பட்ட நல்ல இதழ்களுக்கு ஏற்படும் நிலைமையைப் பார்..

கீதா: நம் வலைப்பதிவர் “கடல் பயணங்கள்” சுரேஷ் தெரியுமல்லவா? உன்னுடன் ஓரிரு முறை கூடப் பேசியிருக்கிறார்.  ஆவியின் நண்பர். அவரும் இந்த இதழில் பயணக் கட்டுரைகள் எழுதிவருகிறார். "ஆஸ்திரேலியா சின்னப் பெங்குயின்களின் செல்ல நடை”. 


பார் இந்தப் படத்தை! அந்தச் சின்ன அழகு ராணிகள், ராஜாக்கள் என்ன அழகாக நடை போடுகிறார்கள். உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா?



நம் வெங்கட்ஜியின் பதிவு வாசித்தோம் இல்லையா “முதுகுச் சுமையோடு ஒரு பயணம்” ஏப்ரல் மாத இதழில் வெளியாகியிருக்கிறது. – பக்கம் 54-55. படம் வெங்கட்ஜி தளம்.   

துளசி: அட! நம் பதிவர்களும் கலக்குகின்றார்கள் என்று சொல்லு....

இணையத்திலிருந்து

கீதா: ஆம்! இது மட்டுமல்ல. பாபம் போக்கும் தலங்கள் – பாபநாசம், நம் தளத்தின் பெயருக்குக் காரணமான தங்க நகரம் சிதம்பரத்தையும், வடக்கே உள்ள பொற்கோயில் பற்றியும், கலைக்கோயில்கள் பற்றியும் ஒரு புறம் ஆன்மீகத் தலங்கள் என்றால், காதலர் சுற்றுலா என்று மறுபுறம், தெற்கேகொல்லிமலை, வடக்கே குலு மணாலி என்றும், நம் வெங்கட்ஜி வடகிழக்கு மாநிலப்பயணத் தொடர் எழுதுவது போல்

நன்றி  - செந்தில் குமார் சகோ

நம் செந்தில் சகோவும் நார்த் ஈஸ்ட் சலிக்காத இயற்கைப் பயணம் என்று தொடர் எழுத, இயற்கை விரும்பிகளுக்கும் தீனி போடுகின்றது இந்த இதழ். உள்நாடு முதல் வெளிநாட்டில் உள்ள இடங்கள் பற்றியும் நம் மனதைக் கட்டிப் போடும் வகையில்...

 நம்மூரிலுள்ள வட்டக்கோட்டையும் வந்திருக்கிறது - படம் இணையம்.

துளசி: அருமையாக உள்ளதே. இப்படி ஒரு நல்ல இதழ் தமிழில் வெளிவருவது எவ்வளவு பெருமை! இப்படிப்பட்ட நல்ல இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால் நாமெல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் இல்லையா?! உடனே செந்தில் சகோக்கு ஒரு மின் அஞ்சல் தட்டு. நாமும் சந்தா செலுத்திப் பெற்றுவிடுவோம்.

கீதா: அதற்குத் தேவையே இல்லை.  இங்கு சென்னையில் ஹிக்கின்ஸ்பாதம் புத்தக கடைகளில் கிடைக்கும். சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையுள்ள எல்லா ரயில் நிலைய புத்தக கடைகளிலும் கிடைக்கும். இதுபோக மேலும் 20 இடங்களில் கிடைக்கிறதாம். அதைப் பற்றி அடுத்த இதழில் வெளியிட இருக்கிறார்கள்.  ஆங்க் அப்புறம் ஒன்று இந்த இதழ் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வெளிவருமாம்.  மாத இதழ் ரூ 50 மட்டுமே.

துளசி: கீதா என்ன பண்ணனும், என்பதையும், பிற விபரங்களையும் எல்லோருக்கும் சொல்லு..

கீதா: நம் வைகோ சார், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, சுபாஷினி டெர்மல் ஆகியோரும் பங்களிக்க உள்ளனராம்.  விரும்புவோர், நீங்களும் உங்கள் பயணக் கட்டுரைகளை senthil.msp@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பிக் கொடுக்கலாம். 

நன்றி செந்தில்குமார் சகோ

எழுதத் தெரியவில்லை என்றோ, தயக்கமோ இருந்தால் நீங்கள் சென்றுவந்த இடங்களின் நல்ல, தெளிவான புகைப்படங்கள் இருந்தால் அதையும், மேலே காண்பது போல் myholidayphoto@gmail.com அனுப்பலாம். அவர்களுக்கென்று ஒரு பக்கம் இருக்கிறதாம். இதழை உங்கள் அகத்திற்குப் பெற விழைபவர்கள் 9443571391 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

துளசி: மேலும் விபரங்கள் தெரிய வேண்டும் என்றால் நண்பர் செந்தில்குமார் அவர்களின் தளத்தில் இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள். http://senthilmsp.blogspot.com/2016/03/blog-post_25.html

http://venkatnagaraj.blogspot.com/2016/04/blog-post_6.html  - வெங்கட்ஜியின் தளத்தில் ஹாலிடே நியூஸ் பற்றிய பதிவின் சுட்டி


---கீதா






36 கருத்துகள்:

  1. செந்தில் குமார் சார் உதவி ஆசிரியராய் கலக்கும் அறியாத புத்தகம் பற்றி அறியத் தந்தீர்கள் துளசி சார்... கீதா மேடம்...
    நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமார் நீங்களும் நீங்கள் இப்போது இருக்கும் ஊர் பற்றியும், அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும், எந்த வகையான விசா, விதிமுறைகள் என்று பல தகவல்களையும் செந்தில் சகோக்குப் புகைப்படங்களுடன் அனுப்பலாமே. சென்ற முறை கூட நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அங்கு சில இடங்கள் சென்றதாகச் சொல்லியிருந்தீர்களே உங்கள் பதிவில். அதை எல்லாம் நீங்கள் கொடுக்கலாமே இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் உபயோகமாக இருக்குமே இல்லையா...நீங்கள்தான் ஏற்கனவே பத்திரிகையாளராக இருந்தவர் அழகாக எழுதுபவர் எனவே....செந்தில் சகோவுக்கு மின் அஞ்சல் தட்டிவிடுங்கள்...

      செந்தில் சகோவும் அவரது தளத்தில் எழுதியிருந்தார், வெங்கட்ஜியும் அவர் தளத்தில் எழுதியிருந்தார் குமார்...அங்கும் நீங்கள் பார்க்கலாம் விவரங்களுக்கு...

      மிக்க நன்றி குமார் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. சரி சிறந்த முயற்சி . காதலிக்க ஏற்ற இடங்கள் என்று இளைய சமுதாயத்தை கெடுக்கும் தலைப்பு தேவையா? அவங்களா போவாங்க. நீங்க வேற தூண்டனுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேதுரராமன் சார்,
      நாங்கள் காதல் ஸ்பெஷல் மட்டும் சிறப்பிதழ் போடவில்லை. ஆன்மிக ஸ்பெஷல், குடியரசு தின ஸ்பெஷல், ரயில் ஸ்பெஷல், வரலாறு ஸ்பெஷல், சுதந்திரதின ஸ்பெஷல், பாரம்பரிய ஸ்பெஷல், ரிலாக்ஸ் ஸ்பெஷல், கோடை ஸ்பெஷல், ஹனிமூன் ஸ்பெஷல், சரணாலயங்கள் ஸ்பெஷல், கடற்கரை ஸ்பெஷல் என்று பலதரப்பட்ட சிறப்பிதழ்களை அந்தந்த காலத்திற்கேற்ப வெளியிட்டிருக்கிறோம்.

      ஒரு பத்திரிக்கை என்பது எல்லாதரப்பினரையும் கவரும் விதமாக தான் அமைக்கப்பட வேண்டும். ஆன்மிகம் பற்றியே எழுதினால் இளைஞர்கள் படிக்க மாட்டார்கள், வெறும் கொண்டாட்டமாக எழுதினால் பெரியவர்கள் வாசிக்க மாட்டார்கள். அப்போது இருவருக்கும் சேர்த்துதான் எழுதவேண்டும். நமது இந்தியாவில் 65 சதவீதம் ஆன்மிக சுற்றுலாவாகத்தான் இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் வருவது ஹனிமூன் சுற்றுலா, இந்த ஹனிமூன் சுற்றுலாவில்தான் காதலும் வருகிறது. காதலர் தினம் என்பதால் அதற்கென்று ஒரு ஸ்பெஷல் வெளியிட்டோம். காதல் ஒன்றும் அத்தனைப் பெரிய குற்றமில்லையே!

      நீக்கு
    2. சேதுராமர் சார், நாங்கள் சொல்ல நினைத்த கருத்தை சகோ செந்தில் சொல்லிவிட்டார். ஒரு பத்திரிகை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி.

      காதல் என்பதும் அன்புதானே சார். அந்த அன்பிற்குக் காதல் என்ற பெயர் இருக்கலாம். அது தவறான சொல் அல்லவே. சமூகத்தால் பல காரணங்களுக்காக அது தவறான அர்த்தம் பெற்றுவிட்டது. தவறான வழிகள் என்றால் அதற்குக் காதல் என்று சொல்ல முடியாது.

      மட்டுமல்ல காதல் என்பது திருமணத்திற்கு முன் தான் வரவேண்டும் என்று இல்லையே. திருமணத்திற்குப் பின்னும் அது தொடரலாம், வரலாம் இல்லையா? திருமணம் ஆனவர்களுக்கும் காதல்வரும் காதலிக்க ஏற்ற இடங்கள் என்றும் கொள்ளலாம் இல்லையா? அதுவும் ஒரு அன்பு எனும் உணர்வுதானே. அப்படியும் நேர்மறையாகப் பார்க்கலாம் இல்லையா...

      தமிழின் மீது காதல், கவிதையின் மீது காதல் என்பது போல்தானே ...அது தவறான உணர்வு இல்லையே.

      மிக்க நன்றி சார் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  3. பார் இந்தப் படத்தை! அந்தச் சின்ன அழகு ராணிகள் என்ன அழகாக நடை போடுகிறார்கள். உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா?

    இது உண்மைதான் பெங்குயின்கள் நடந்து வருவது
    கண்கொள்ளா காட்சிதான்...


    அருமையான உரையாடல் பதிவு....
    வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து
    பதிவுகள் தாருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. பார் இந்தப் படத்தை! அந்தச் சின்ன அழகு ராணிகள் என்ன அழகாக நடை போடுகிறார்கள். உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா?

    ஆம் சகோ இது உங்களுக்கு மட்டும் அல்ல
    எங்கள் கண்களையும் கவர்கிறது...

    அருமையாக உரையாடல் முலம்
    அழகான பதிவு தந்தீர்கள் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அஜய் தங்கள் கருத்துகளுக்கு. ஆமாம் எல்லொரையும் கவர்கிறதுதான்...

      நீக்கு
  5. அற்புதமாக சொல்லிவிட்டீர்கள். என்னிடம் இரண்டு படங்கள் மட்டும் வேண்டும் என்று நீங்கள் கேட்டபோது இப்படியொரு பதிவெழுதத்தான் கேட்கிறீர்கள் என்று தெரியாது. நீங்கள் இணையத்தில் இருந்து வேறு பல படங்களை எடுத்து அசத்தி விட்டீர்கள். நீங்களும் துளசி சாரும் உரையாடுவதுபோல் வித்தியாசமான பதிவாக தந்ததற்கு தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ. என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். !!!

      சுற்றுலாப் பிரியையான நான் எங்கள் தளத்தில் சொல்லாமல் இருப்போமா!!! உங்கள் தளத்தில் பின்னூட்டத்தில் இந்தத் தலைப்பைத்தான் மறைமுகமாகச் சொல்லியிருந்தோம்..ஹிஹிஹி...

      நல்லதொரு இதழ் அனைவருக்கும் பயனளிக்கும் இதழ். சுற்றுலாத் தளங்களாக இருக்கும் இடங்களைப் பற்றி எழுதுவதோடு, ஒரு நாள் பயணம்/சில நாள் பயணம் என்பது போல் அருகில் இருக்கும் சில நல்ல அதிகம் பேசப்படாத இடங்களைப் பற்றியும் எழுதலாம் இல்லையா சகோ.

      மிக்க நன்றி சகோ

      நீக்கு
  6. நல்ல செய்தி. சுற்றுலா செல்பவர்களுக்கு இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், உபயோகமாகவும் இருக்கும். வாழ்த்துகள் நண்பர் செந்தில். வெங்கட், கடல் பயணங்கள் சுரேஷுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. நண்பர் செந்தில் குமார் அவர்களின் தளத்தில் ஹாலிடே நியூஸ் இதழின் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தார்.
    ஒரு பத்திரிக்கை அதுவும் பிரபலமான பத்திரிக்கைக்கே இவ்வளவு சிரமங்கள் எனில் மற்ற இதழ்களின் நிலை என்னாவது?
    அருமையான பதிவு நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கரந்தை சகோ. பத்திரிகை நடத்துவது என்பது மிகப் பெரிய சவாலான ஒன்றுதான். மக்களின் ஆதரவு இருந்தும் இப்படி என்றால் இல்லையெனில் பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் கஷ்டம்...

      மிக்க நன்றி கருத்திற்கு சகோ

      நீக்கு
  8. அழகிய உரையாடல் போல அருமையான விசயத்தை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு சென்றீர்கள் வாழ்த்துகள்
    நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள்
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி! நீங்களும் உங்கள் ஊரில் இருக்கும் சுற்றுலா இடங்கள் அருகில் என்று உங்கள் நாட்டு விதிமுறைகள் உட்பட, விசா போன்ற பல தகவல்களுடன் எழுதலாமே செந்தில் சகோவிடம் கேளுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும். வெளிநாட்டுச் சுற்றுலாவும் வருகிறது இதழில்..

      நீக்கு
  9. அருமையான புத்தக விமர்சனம்.
    இயற்கையை காதலிப்பவர்கள், இயற்கையை நேசிப்பவர்களுக்கு சிறந்த புத்தகம்.
    சுற்றுலா செல்லும் விடுமுறைக்காலத்தில் புத்தகம் பற்றி பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    உங்கள் இருவருக்கும், செந்தில்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ. உண்மைதான் இயற்கையை நேசிப்பவர்களுக்கு இந்த இதழ் பயன்படும். மட்டுமல்ல ஆன்மீகத் தலங்கள் பற்றியும் எழுதுகிறார்கள்.

      நீக்கு
  10. அறிஞர் செந்தில்குமார் அவர்களின் தளத்தில் ஹாலிடே நியூஸ் பற்றிப் படித்ததும் நானும் எனது தளத்தில் அறிமுகம் செய்ய இருந்தேன். தாங்கள் முந்திவிட்டீர்கள்.
    சிறப்பான திறனாய்வுக் கண்ணோட்டத்தினத் தந்தமைக்குப் பாராட்டுகள்.
    பயனுள்ள பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன். தங்களின் கருத்திற்கு. உங்கள் தளத்தில் இப்போதும் அறிமுகம் செய்யலாமே. அப்படிப் பார்த்தால் வெங்கட்ஜி எங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்திவிட்டார். நீங்களும் அறிமுகப்படுத்தலாம்...

      நீக்கு
  11. கலகலப்பான உரையாடலின் மூலமாக -
    சுற்றுலா இதழை அறிமுகம் செய்திருக்கின்றீர்கள்..

    பயனுள்ள செய்திகள் பாரெல்லாம் பரவட்டும்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
    2. துரை செல்வராஜு ஐயா தாங்கள் அழகு தமிழில் எழுதுவதால் ஆன்மீகத் தலங்கள் பற்றியும், தாங்கள் இருக்கும் ஊரில் சுற்றிப்பார்க்கும் இடங்கள் பற்றியும், விசா தகவல்கள், விதிமுறைகள், தங்கும் இடங்கள், ஆகும் செலவு பற்றியும் எழுதாலாம் எல்லோருக்கும் உதவும் இல்லையா ஐயா? செந்தில் சகோவுடன் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா.

      நீக்கு
  12. நானும் காசு போட்டு வாங்கி படித்து ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசித்தீர்கள்தானே...

      நீக்கு
  13. இப்படி ஒரு பத்திரிக்கை வெளிவருவது பற்றி
    இது வரை கேள்விப்பட்டதில்லை தெரியவைத்ததிற்கு நன்றி .கடைகளில் கிடைக்கிறதா?
    நான் கூட ஏப்ரல் முதல் வாரம் ஷீரடி அஜந்தா எல்லோர எல்லாம் சென்று வந்தேன் விபரங்கள் தருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அபயா அருணா. கடைகளில் கிடைக்கிறது எங்கு என்பதைச் சொல்லியிருக்கின்றோமே பதிவில். ஹிக்கின்ஸ்பாதம், சென்னைக் கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள ரயில் நிலையங்களில் உள்ள புத்தகக் கடைகளில்.

      நீங்களும் உங்கள் பயணம் பற்றி எழுதலாம் நல்ல புகைப்படங்களுடன். சகோவிடம் தொடர்பு கொள்ளுங்கள். பதிவில் கொடுத்திருக்கிறோம்.

      நீக்கு
  14. ஹாலிடே ஸ்பெஷல் பதிவோ?!
    இந்த முறை எமது பிளான் - மேகமலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ ஆமாம் மலர். அப்படியும் வைத்துக் கொள்ளலாம். மேகமலை அருமையான இடம். அது பற்றியும் செந்தில் அவர்கள் அவர் தளத்தில் எழுதியிருக்கிறார். எஞ்சாய் அண்ட் ஹவ் எ நைஸ் ட்ரிப் மலர். பயணத்திற்கு வாழ்த்துகள்!

      நீக்கு
  15. தகவல்களுக்கு நன்றி!

    'டிஜிட்டல் வீக்லி' என்று இரு படங்களில் இருக்கின்றது.

    வார இதழா, மாத இதழா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு சில படங்கள் பழையவை அதாவது நிறுத்தப்படும் முன். இப்போது மீண்டும் வரத்தொட்ங்கியிருக்கிறது நிஜாமுத்தீன் சகோ. மாத இதழ். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வரும். ரூ 50. ப்திவில் கொடுத்திருக்கின்றோமே.

      மிக்க நன்றி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  17. உரைநடை பாணியில் வித்தியாசமாக பதிவை வெளியிட்டது மிக அருமை.... நண்பர் வெங்க்ட் ஜியின் அனைத்து பயணப்பதிவுகளையும் இதில் தொடராக வெளியிடலாம்.. தமிழ் தெரிந்த பயணம் செய்ய விரும்பும் அல்லது பயணம் பற்றிய பதிவுகளை படிக்க நான் அறிமுகப்படுத்துவது வெங்க்ட்ஜியின் தளத்தைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழா. ஆமாம் வெங்கட்ஜியின் பயணப்பதிவுகள் அருமை. செந்தில் சகோ சொன்னது என்னவென்றால், வலைத்தளத்தில் வராத பதிவுகளை முதலில் இதழில் வெளியிட்டு, பின்னர் வலைத்தளத்திலும் வெளியிடலாம் என்பது அவரது கருத்து. அதுவும் சரிதானே!

      வெங்கட்ஜி இனி செய்யும் பயணங்களை அப்படிச் செய்யலாம். இதுவரை வெளியிடாத குறிப்புகள் இருந்தாலும் அவர் இதழில் வெளியிடலாம். செந்தில் சகோவும் அவரும் தொடர்பில் இருப்பதால் பேசி முடிவு செய்வார்கள் என்று நினைக்கின்றேன்.

      நீக்கு
  18. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு