வியாழன், 4 பிப்ரவரி, 2016

பார்வதி அக்கா


வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினங்களில் எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில், தொலைவில் இருந்து வரும் என் போன்ற சில ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் அதை விடுமுறையாகப் பாவித்து அதன் முந்தைய தினமே வீட்டை அடைவது வழக்கம். சிறிது குற்ற உணர்வுடன் அத்தினத்தை விடுமுறை நாள் போல் அனுபவிக்க முடியாமல் சிரமப்பட்டு அந்த நாளை நகர்த்திக் கொண்டிருக்கும் போது, “அப்ப இன்னிக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாமா?” என்று சிலர் கேட்கும் போது, இஞ்சித் தின்னக் குரங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தப்பித்தாலும், “இனி இந்நாட்களில் பள்ளிக்குப் போய்விட வேண்டும்”, என்று முடிவு எடுப்பதுண்டு. ஆனால், அம் முடிவுக்கு அற்ப ஆயுள்தான்.

அடுத்த சுதந்திர மற்றும் குடியரசு தினத்திற்கு முன்பு அம்முடிவு அகால மரணம் அடைந்துவிடுவதுண்டு. ஆனால், இவ்வருடம், ஏதோ ஒரு பொதுநலவிரும்பி கொடுத்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், அத்தினத்தை விடுமுறையாக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததும், கேரள அரசும் கல்வி இலாகாவும், அத்தினத்தில் எல்லோரும் அவரவர்களது அலுவலத்திலும், பள்ளியிலும் அத்தினங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாட வேண்டும் என ஆணை பிறப்பித்ததால், நான் கடந்த 25.01.16 அன்று நிலம்பூர் செல்லாமல் பாலக்காடில் தங்கிவிட்டேன்.

அன்று மாலை அதர்வா நடித்த ஈட்டி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது, (ஏனோ டிக்கெட் எடுக்கக் காத்திருந்த போதிலிருந்தே 46 வயதில் மறைந்த அதர்வாவின் அப்பா முரளியைப் பற்றியும், அது போல் மறைந்த பாண்டியன் போன்றவர்களையும் அவர்களதுத் திரைப்படங்களையும் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது மனது.) அலைபேசியில் நோக்கியா இசை அடித்தது.  எடுத்துப் பார்க்க, அதில், “சுரேஷ் 6 மைல்” (6 மைல் என்பது ஒர் இடத்தின் பெயர்) என்று காண்பித்தது. அலைபேசியுடன் வெளியே போய் “ஹலோ” என்றதும், நளினா சேச்சி அக்கா மகன் சுரேஷ், “பார்வதி அம்மா நம்மை விட்டுப் போய்ட்டாங்க” என்றதும் அதிர்ந்தேன்.

பார்வதி அக்காவுடனான பல நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் தோன்றி மறைந்தன. கடந்த மாதம் கிறித்துமஸ் விடுமுறையின் போது, மனைவி, குழந்தைகளுடன் நோய்வாய்ப்பட்டிருந்த பார்வதி அக்காவைக் காணச் சென்றிருந்தேன்.  ஓரிரவு அங்கு தங்கவும் செய்தேன். ஏராளமான மகன்களையும், மகள்களையும் பெற்று, சிரமப்பட்டு வளர்த்த தாய்மார்கள், அவர்களது இறுதிக் காலத்தில், அவர்களைப் பாதுகாக்கத் தவறும் அவர்களது பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் சேர்க்கும் சம்பவங்களைப் பற்றி வாசித்தும், நேரில் கண்டும் பல முறை வருந்தியுள்ள எனக்கு, குழந்தைகள் இல்லாத பார்வதி அக்காவுக்கு உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பணிவிடை செய்த அவரது தம்பி மற்றும் தங்கைகளின் மகள்கள் மற்றும் மகன்கள் அவர்களது மனைவிகளைக் கண்டதும் வியப்பு.

என் அப்பாவுக்கு 15 வயதாயிருந்த போது அவரது மூத்த அண்ணனுக்குப் பிறந்த  மூத்த மகள்தான் பார்வதி. நான்கு சித்தப்பாக்களுக்கும், ஒரு அத்தைக்கும் அன்பு முத்தங்கள் பதிக்கக் கிடைத்த ஆசைக் குழைந்தை. அடுத்தடுத்துவந்த பல அழைப்புகள், மறுநாள் மாலை மூன்று மணிக்கு உடல் தகனம் செய்யப்பட இருக்கும் செய்தியைத் தந்தது.  8 மணிநேரப்பயணம் தேவைப்படும் குமுளிக்கு எப்படிப் போவது? அதிகாலை எனது இருசக்கர வாகனத்தைப் பாலக்காட்டில் வைத்துவிட்டுப் பேருந்தில் போகலாம் என முடிவு செய்தேன். வண்டித்தாவளத்தில் இருந்து பார்வதி அக்காவின் தம்பி விஜயன் அண்ணனின் மகன் பிஜு எனை அழைத்து, “அதிகாலை 4 மணிக்கு அம்மாவுடன் கிளம்புகிறேன். எங்களுடன் வருகின்றீர்களா”, என்றதும், “சரி” என்றேன்.

பாலக்காட்டிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் பேருந்து ஏறி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் 20 நிமிடம் காத்திருந்ததும், பிஜு வர அவர்களுடன் மகிழ்வுந்தில் பயணித்தேன். வழியில் அதிகம் வாகனங்கள் இல்லை. ஆனால், பழனிக்கு, தைப்பூசத் திருநாள் பாதயாத்திரைச் செய்வோர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். வேகமாகப், பணத்திற்காகப் பாயும் உலகில் இறையருள் பெற தன் மெய் வருத்தி செல்வோரைப் பார்த்ததே புண்ணியமாகத் தோன்றியது. செம்பட்டியைத் தாண்டியதும் விசாலமான நெடுஞ்சாலையில் அதுவரைச் திக்குமுக்காடிய வண்டி விரைந்தது. வழியருகே இருந்த உணவகத்தில் காலை உணவு உண்டோம். வழியெல்லாம் பார்வதி அக்காவைப் பற்றிய பேச்சுதான்.

10 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தப் பார்வதி அக்காவுக்குப் பாடம் சொல்லித்தர வந்த இளைஞனான ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கும், அக்காவுக்கும் இடையே எப்படியோ வளர்ந்த காதல் மதக் காற்றால் நிலைகுலைந்தாலும், 20 ஆண்டுகள் பிரிக்கப்பட்டப் பின்னும் இருவரது மனதிலும் வாழ்ந்திருந்ததாம். அதன் பின் அவ்வாசிரியர் வேறு வழியின்றி அவரது பெற்றோர்கள் பார்த்த ஒரு பெண்ணை மணந்திருக்கின்றார். ஆனால், பார்வதி அக்கா, “எனக்கு மண வாழ்க்கை வேண்டவே வேண்டாம்” என்று தீர்மானித்தே விட்டார்.

இதனிடையே, அக்காவுக்கு ஆசிரியையாக குமுளி அருகே பணி கிடைக்க பெரியப்பாவும் குடும்பமும் குமுளிக்கு அருகே குடியேறிவிட்டார்கள். பெற்றோர்களும், சித்தப்பாக்களும் கட்டாயப்படுத்தி அக்காவை ஒருவழியாய் சம்மதிக்க வைத்து, வடசேரிக்கரைக்காரரான ஒருவரை மணமுடித்துவிட்டார்கள்.  அதன் பின் அவர்களுக்குப் பிறந்த ஒரு குழந்தை பிறந்ததும் இறக்காமல் இருந்திருந்தால், அக்கா அவரது இறுதி நாட்களில் தம்பி, தங்கைகளின் மக்களுடன் இது போல் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்திருக்காது. அதே போல் அவரது கணவரையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்திருக்காது. “நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. நடந்ததை எல்லாம் நினைத்து வருந்திப் பயனில்லையே!”

11 மணி அளவில் நாங்கள் குமுளி 6 ஆம் மைலை அடைந்தோம். பல இடங்களில், “மறைந்த பார்வதி டீச்சருக்கு அஞ்சலி” என்ற பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பார்வதி அக்காவின் தங்கை ஆனந்தவல்லியின் மகன் அனில்குமாரது வீட்டில்தான் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்குதான் சடங்குகளும் நடைபெற்றன. அவ்விடத்தை அடைந்த போது, முற்றத்தில் இடப்பட்டப் பந்தலில் உயிரற்ற பார்வதி அக்காவின் உடல். குருதேவ பிரார்த்தனை கீதங்களைப் பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். உடலருகே வைக்கப்பட்ட மலர்வளையங்களில், ஒன்றில், “மலநாடு மகளிர் சங்கம்” என்று எழுதியிருந்தது. பெண்கள் அவர்களுக்கென வருமானம் தேட வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்வதி அக்காவின் முயற்சியால் உருவான சங்கம் அது. தையல், ஊறுகாய், பலகாரங்கள் என்று பல வழிகளில் பெண்கள் பணம் ஈட்ட உதவிய அச்சங்கத்தின் தலைவியாக நீண்டகாலம் பணியாற்றிய அவரது நினைவுகள் என்னில் மட்டுமல்ல அங்கு கூடி இருந்த பலரது மனதிலும் அப்போது ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

அனிலின் தங்கை அனிதா, பார்வதி அக்கா இறக்கும் தருவாயில், தானும் அம்மாவும் அக்காவுக்குப் பால் கொடுத்ததை அழுதுகொண்டே சொன்ன போது, என் கண்களிலும் நீர் நிறைந்தது. ஒருமகளாக, ஒரு செவிலியாக இறுதிக்காலத்தில் அக்காவுக்குப் பணிவிடை செய்த அனிதாவின் மனதிலும் அக்காவைப் பற்றிய பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  பி.டி உஷாவைப் போல் அனிதாவை ஓட்ட வீராங்கனையாக்க பார்வதி அக்கா அவளைத் தயார்ப்படுத்த தன்னுடன் தங்க வைத்திருந்த போது, கிறித்தவ மத்ததைச் சேர்ந்த அவரது நண்பரின் மகனுக்கும், அனிதாவுக்கும் ஏற்பட்டக் காதலை எல்லோரும் எதிர்த்த போதும் அக்காதலுக்கு மரியாதை செய்து, அவர்களுக்கு மணம் முடித்து வைத்தவர் பார்வதி அக்கா.

யாரோ என் தோளில் கை வைக்கத் திரும்பினேன்.

தொடரும்......


33 கருத்துகள்:

  1. உங்கள் வருத்தத்தில் நாங்களும் பங்கு கொண்டு தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  2. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் கரந்தையாரே

      நீக்கு
  3. பார்வதி அக்காவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். துக்கத்தோடு தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் செந்தில் குமார் நண்பரே

      நீக்கு
  4. அன்பான நினைவலைகள் ....
    பார்வதி அக்காவின் ஆன்மா அமைதியில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் நினைவலைகள்தான்

      நீக்கு
  5. மிகவும் வருத்தமாக உள்ளது.நல்லவர்களின் வாழ்க்கை வேதனையிலேயே முடிவது ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  6. அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உமையாள் சகோ வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  7. பதில்கள்
    1. மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும் வலிப்போக்கன்

      நீக்கு
  8. தங்களின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன் தங்கள் சகோதரியின் ஆன்மா சாந்தியடையட்டும்
    தனது காதல் தோற்றாலும் பிறரின் காதலை வாழ வதைத்து அவர்களின் உயர்ந்த எண்ணங்களுக்கு எமது சல்யூட்.
    தொடர்கிறேன்
    த.ம + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்து என்பது வதைத்து என்றாகி விட்டது மன்னிக்கவும் - கில்லர்ஜி

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
    3. மிக்க நன்றி கில்லர்ஜி தாங்கள் என்னை அழைத்தமைக்கும் இங்கு வந்து கருத்திட்டமைக்கும்

      நீக்கு
  9. அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. பார்வதி அக்கா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம் ..வாசிக்கும்போது மனதுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது ..எப்போவுமே அன்பானவர்கள் பிறருக்கு உதவிசெய்யும் நற்குணமுள்ளவர்களுக்கு வாழ்க்கைப்பாதை முள் நிறைந்ததாயிருப்பது வேதனையான விஷயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ வருகைக்கும் கருத்திற்கும். உண்மைதான் சகோ உங்கள் கருத்து..

      நீக்கு
  11. அன்புள்ள அய்யா,

    பார்வதி அக்காவின் மரணம்... அவரின் வாழ்க்கை... மதம் தொலைத்த வாழ்க்கை... மிகுந்த துயரம்.

    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்...!

    நன்றி.

    த.ம. 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  12. பார்வதியாக இருந்தவர் இப்போது அவர் நினைவாக மாறி உங்களை எழுத வைத்திருக்கிறார் நினைவலைகள் தொடர நானும் தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் அவர் என் நினைவலைகளில்...

      நீக்கு
  13. பார்வதி அக்காவின் ஆத்மா சாந்தியடையட்டும்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  14. பார்வதி அக்காவின் ஆத்மா சாந்தியடைய‌ வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சித்ரா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. வணக்கம்

    பதிவை படித்த போது மனதில் வேதனையாக இருந்தது...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு