ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ம்மா...ம்மா...அம்மா என்றால் அன்பு

அன்று காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி. என் செல்லம் கண்ணழகியுடன். அவளுக்குத் தினமும் புதிது புதிதாக இடம் வேண்டும். சிறிது தூரம் நடக்கும் கண்ணழகி அவளது இயற்கை உபாதைகளைக் கழிக்க ஆங்காங்கே முகர்ந்துத் தனக்கான இடம் திருப்தி அளித்தபின்னும் பலமுறை அங்குமிங்கும் சுற்றிப் பல சமயங்களில் போகாமலேயே மனம் ஏதேனும் ஒரு காரணத்தால் திசை திரும்பி இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கிவிடுவாள், அடுத்த இடம் தேடிக் கொண்டு.

அப்படித்தான் அன்றும். சரி இதுதான் அவள் வழக்கம் என்று நினைத்துக் கொண்டு அவளையும் பிடித்துக் கொண்டு நடந்தேன். என் கண்ணழகி மிகவும் சமர்த்து. மிகவும் ஓரமாக, குப்பைகள், செடிகள் இருக்கும் இடம் பார்த்துதான் ஒதுங்குவாள். இதுவரை நடுத்தெருவில் போனாள் என்ற சங்கதியே கிடையாது.

அவளைக் கண்டதும் ஒரே ஒருவன் மட்டும் வழக்கம் போல் பல்லைக் காட்டிக் குரைத்துக் கொண்டு ஆவேசமாக வந்தான். அவனை அடக்குவது எளிது. குச்சி. அல்லது பிஸ்கட். லஞ்சம்??!! அவன் பாவம். ஆனால், விவகாரமான மனிதர்களில் சிலர் செய்வது இரண்டாவதை. எதைக் கொடுத்தால் வேலை நடக்கும் என்று!

சிறிது தூரத்தில்  திடீரென்று பின்னோக்கித் திரும்பி உறுமத் தொடங்கினாள்.  பார்த்தால் அங்கு ஒரு கன்றுக் குட்டி வந்து கொண்டிருந்தது.

சரி அதற்கென்ன என்று நான் கண்ணழகியிடம் பேசிக் கொண்டே வா என்று சொல்லவும் என்னுடன் நல்ல பெண் போன்று, திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள். கன்றுக்குட்டியும் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

 லட்சுமியோ, காமாட்சியோ, மீனாட்சியோ என்ன பெயரோ தெரியவில்லை. அதன் சொந்தக்காரரோ இல்லை “கோமாதா” பக்தரோ யாரோ அதன் நெற்றியில் குங்குமப் பொட்டெல்லாம் வைத்திருந்தார்கள். அதற்குள் பொங்கல் வந்துவிட்டதா என்ன? சரி எப்படியோ. “அது” என்று சொல்லுவதை விட “கோமாதா” என்ற பெயரைச் சுருக்கிக் “கோமு” என்று பெயரிடலாமா? உங்களுக்குப் பிடித்திருக்கிறதுதானே! சரி கோமு.

நானும், கண்ணழகியும் நடந்தோம். கோமுவும் தொடர்ந்தாள். “து” என்பது “ள்” இனி. (நல்லகாலம் “தூ” இல்லை!)
ஒரு சில இடங்களைக் கடந்த போது “ம்மா” என்றுக் குரலெழுப்பிக் கொண்டே வந்தாள். நீங்கள் யாரையோ நினைத்தால் அதற்கு நானோ, கோமுவோ பொறுப்பல்ல.

வழக்கமாகச் சாலையைக் கடக்க இருக்கும் மேல் பாலத்தில் ஏறி மறுபுறம் எனது தோழி பக்கிங்ஹேம் கால்வாயை ஒட்டி நடப்போம். இன்று கோமு எங்களுடன் தொடர்ந்ததால் பழைய மகாபலிபுரம் சாலையின் கீழே ஓரமாக இருக்கும் சர்வீஸ் லேனில் நடைபாதையில் திரும்பினோம்.

நடைபாதை முழுவதும் அதிசயமாக ப்ளீச்சிங்க் பௌடர் போடப்பட்டிருந்தது. கண்ணழகிக்குப் பெரும்பாடு. அவளது இயற்கை உபாதை அடங்கிவிடும். கோமுவும் எங்களை நெருங்கி, திரும்பும் சமயம் பெருங்குரலெடுத்து “ம்மா” என்று கத்தினாள்.

எதிரே தாரகை மின்னிக் கொண்டிருந்தார்!! சமீபத்திய புகழ்வாய்ந்த வசனத்துடன். கோமுவுக்கு எப்படித் தெரிந்ததோ! அதானால்தான், கோமுவும் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் கேட்டுத்தான் “ம்மா” என்று பெருங்குரலில் கத்தினாளோ? மனு நீதிச் சோழனின் அரண்மனை மணியை, நீதி கேட்டு அடித்த பசுவின் கதை நினைவுக்கு வந்தது. இப்படித்தான் தேவையே இல்லாமல் சில நினைவுகள் படுத்தும்.

வெளியில் வராதவர் அன்று வந்தார். 3 நாட்களாக இந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாகி இருந்தது! கால் கிலோமீட்டர் கூட தொலைவு இல்லாத தூரத்திற்குள் 100 பதாகைகள். அப்படியென்றால் எண்ணிக் கொள்ளுங்கள் தொடக்கத்திலிருந்து நிகழ்வு நடந்த பகுதி வரை எத்தனை பதாகைகள் இருந்திருக்கும் என்று. தமிழ் அகராதியில் இருக்கும், இல்லாத, தமிழ் சான்றோர்கள் கூட அறியாத அத்தனை அடைமொழிகளுடன். வெள்ளம் வந்த சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை என்பதும் தேவையில்லாமல் நினைவில் முட்டியது.

சென்னையிலுள்ள அத்தனைக் காவல்காரர்களும் சுறு சுறுப்பாக இங்கு குவிந்திருதார்கள். நாங்கள் நடைப்பயிற்ச்சி செய்யும் பாதை, பழைய மாகபலிபுரம் சாலை எல்லாம் துப்புரவு பணியாளர்கள் சிறு தாளைக் கூடப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். பாதை எல்லாம் வெள்ளை மயம்! தூய்மை??!??! மற்ற நாட்கள்? மூச்! நோ க்வெஸ்டின்ஸ்.

கோமுவைக் காணவில்லை.  பார்த்தீர்களா, தேவையில்லாததை உங்களுக்குச் சொல்ல அவளைக் கண்டுகொள்ளாமல் போய்விட்டேன். எங்கு திரும்பியிருப்பாள்? ஒருவேளை தர்பாருக்கே போய்விட்டாளோ? வேண்டாம் மீண்டும் அதற்குள் புகவில்லை. அவளைப் பார்க்க நினைத்த போது அவளது குரல் காட்டிக் கொடுத்துவிட, அவள் நடந்த சாலைக்குள் இப்போது நாங்கள் அவளைப் பின் தொடர்ந்தோம். ஹப்பா. ப்ளீச்சிங்க் இல்லை. கண்ணழகிக்குச் சந்தோஷம். தனது இயற்கை உபாதையை முள்ளுச் செடிகளுக்கிடையில் முடித்துக் கொண்டாள்.

கோமு குரல் கொடுத்தாள்.  அவளைப் பிடிக்க ஒருவன் வந்தான். அவன் தான் அவளது சொந்தக்காரரோ என்று நினைத்தால், அவளோ அவனிடமிருந்து விலகி மீண்டும் குரல் கொடுத்துக் கொண்டே ஓட முயற்சி செய்தாள். அப்படி என்றால் அவன் ஆட்டையைப் போடுபவன் என்று புரிந்தது. எனவே, நான் சற்று வேகமாக கோமுவைத் தொடர்ந்தேன்.  கண்ணழகியும் எனது வேகத்தைப் புரிந்து கொண்டு அவனைப் பார்த்துக் குரைத்துத் தள்ளிவிட்டாள்.  கோமுவிற்குப் பாதுகாப்பு!!!

இப்போது கோமுவின் நடை துரிதமாகி அடுத்தடுத்துக் குரல் கொடுத்தாள். ஓ! அவள் அவளதுக் குழுவைப் பிரிந்திருக்கின்றாள். அவள் தாய் சமீபத்தில் இருப்பது தெரிந்துவிட்டது போலும்.  பதில் குரல் வந்தது. கோமு துள்ளிக் கொண்டு வேகமாக நடந்தாள். மீண்டும் அவள் தாய் குரல் வந்தது ஒரு வளாகத்திலிருந்து. கோமு ஓடிச் சென்று தனது தாய், மற்றும் குழுவினருடன் சென்று சேர்ந்தாள். தாய் அவளை நாவால் வருட, கோமு அவளை உரச அங்கு பாச மழை! காணக் கண்கொள்ளாக் காட்சி!

இப்படியானதைப் பார்த்துதான் நம் இயக்குநர்கள் திரைப்படங்களில் பிரிந்தவர்கள் பாடிக் கொண்டே கண்டுபிடிப்பது போல் காட்சி வைக்கத் தொடங்கினார்களோ?!!!! நாம் இப்படித்தான், விலங்குகள், இயற்கையிடமிருந்துதான் எல்லாமே கற்றுக் கொள்கின்றோம்!!!!. (பொருத்தமான பாடல் டக்கென்றுக் கிடைக்கவில்லை.)

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு - காவியத் தலைவி


 அம்மா என்றழைக்காத உயிரில்லையே -  மன்னன் (வேறு அர்த்தம் இல்லை என்னை நம்புங்கள்!!!!)

---கீதா

காணொளிகள் - யுட்யூப்


35 கருத்துகள்:

  1. துளசி & கீதா இருவருக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பொதுவாகவே செல்லப் பிராணிகளுக்கு, கூப்பிட வசதியாக, சுருக்கமாக, ஆங்கிலப் பெயர்கள்தான் வைப்பார்கள். கண்ணழகியை எப்படி அழைப்பீர்கள்? நானும் உங்களைப் பின்தொடர்ந்து வந்தேன். ‘அம்மா என்றால் அன்பு’. - மேடம் அம்மு பாடியது பொருத்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இளங்கோ ஐயா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும். கண்ணழகி என்றுதான் அழைப்போம். சிலர் மட்டும் செல்லமாகக் கண்ணி என்று அழைப்பார்கள். ஆமாம் அந்தப் பாட்டின் தலைப்புதானே!! பாடல் ஒளி மட்டும் போடவில்லை.

      நீக்கு
  3. அம்மா என்று சொன்னாலே அரசியல் ஆகும் காலம்! கோமுவைப் பாதுகாத்தது சந்தோஷம். அழகாகப் பெயர் சூட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் உண்மைதான். அம்மா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது..சரி விடுங்கள்..அதற்குள் நுழையவில்லை...நன்றி கருத்திற்கு

      நீக்கு
  4. அன்புள்ள சகோதரி,

    கண்ணழகியுடன் காலை நடைபயிற்சி
    கன்றுக்குட்டியின் தாய்த் தேடல்
    கள்ளர்களிடம் அதை மீட்டல்
    ஆவினம்கூட ‘அம்மா’என
    அன்பாய்த் தமிழ் பேசுதே!
    தமிழா தமிழில் பேசு!
    தாய்மொழியில் பேசு!

    “அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்... பத்துத் திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள் பத்தியம் இருந்து காப்பாள் தன் ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுப்பாள்...” -‘அடிமைப் பெண்’ பாடவைத்தவர்...பாட்டெழுதியவர்...போய்விட்டார்... பாடியவர் மட்டும் ‘உங்களுக்காக நான்... உங்களுக்காகவே நான்...எனக்கென்று யாரும் கிடையாது...’ பாசமுடன் அம்மாவாக அயராது அல்லும் பகலும் உழைத்துக் கொண்டு இருக்குகிறார்...அம்மா என்றால் அன்பு...!

    நன்றி.
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் ஆமாம் மணவையாரே! அதற்குத்தானே அந்தத் தலைப்பும்! கோமுவும் கத்திப் பார்த்தது அதற்குத்தானே!!!!! ஹஹாஹ்

      மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. ஆகா தோழி! தாய் பாசத்தை அழகாக புரியவைதுள்ளீர்கள் சிறு கதை மூலம் சுவாரஸ்யமாக. முதலில் உங்கள் பெண் ஏன்றே நினைத்தேன் பின்னர் முகர்ந்து என்றவுடன் புரிந்து விட்டது. முதலில் அம்மா பாரி எழுதி யுள்ளீர்கள் என்று பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஹா ஹா பின்னர் புரிந்து கொண்டேன். காவியத் தலைவி அழகான பாடல் ஒன்று என் நெஞ்சை அன்றும் கரைத்தது இன்றும். என் விருப்பப் பாடல் என் நினைவில் நின்று நீங்காத பாடல் இது. நீண்ட நாட்களின் பின் மீண்டும் உங்களால் கேட்டமைக்கு மிகவும் நன்றி! மற்றப் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

    அட என்ன ஒரு ஒற்றுமை நானும் என் தாயார் பற்றிய கவிதை பதிவிட்டுள்ளேன்மா.
    அருமையான பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இனியா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். என் செல்லத்தை அப்படித்தான் அழைப்போம்...ஆம் நீங்களும் அம்மா பற்றித்தான் பதிவு. அது உங்கள் அம்மா...நான் எழுதியிருப்பது......எல்லோருக்கும் அம்மா..ஹிஹி

      நீக்கு
  6. பாசப் போராட்டம் என் கண் முன்னே விரிகிறது :)

    தமிழ் மணத்தில் இன்னும் ஏன் இணைக்கவில்லை ?ஏதும் பிரச்சினையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மணம் இணைய மறுக்கின்றது! போனால் போகின்றது! நன்றி பகவான் ஜி! தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. கண்ணழகிக்குப் பெயரே இதானா? அருமையான பார்வை! கோமுவைக் குழுவுடன் சேர்க்கும்வரை பாதுகாப்பாகச் சென்றது நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ கீதா சாம்பசிவம். கண்ணழகியின் பெயரே அதுதான்...மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  8. கண்ணழகி, கோமு - அழகிய பெயர்கள்.....

    நல்ல வேளை கோமு அம்மாவுடன் சேர்ந்தாளே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  9. நானும், கண்ணழகியும் நடந்தோம். கோமுவும் தொடர்ந்தாள். “து” என்பது “ள்” இனி. (நல்லகாலம் “தூ” இல்லை!) ரசித்தேன்.
    விலங்காயினும் பறவையாயினும் மனிதனாயினும் தாய்ப் பாசம் என்பது ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அபயா அருணா வருகைக்கும் கருத்திற்கும் ரசித்தமைக்கும்.

      நீக்கு
  10. விலங்குகளுக்கும் தாய்ப் பாசம் உண்டு. குஞ்சைப் பருந்து தூக்க வரும்போது காக்கும் கோழியும் தாய்மைப் பாசத்துக்கு அடையாளம் சில தினங்களுக்கு முன் ஒரு காணொளிப் பகிர்ந்திருந்தேன் ஒரு தாய்க்கரடி ஒரு சிறுத்தையை விரட்டிய காட்சி. அன்னையின் அன்பு தொப்புள் கொடி உறவல்லவா எங்கள் ப்லாகில் ஒரு பதிவு ஒரு பெண்(அலிஷா)தன் கணவனையே முன்னிலைப் படுத்துகிறாள் . அப்போது அன்னை அன்பு எல்லாம் ஆளாளுக்கு மாறுபடும் என்று தோன்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். சரிதான். எல்லா விலங்குகளுக்கும் உண்டு. உங்கள் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன். பார்க்கின்றேன் சார். மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  11. தாய்ப்பாசத்தை தாயமாக்கி
    அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இராஜேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  12. செல்லப் பிராணிகளுக்கும் தமிழில் பெயர்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  13. பொருத்தமாய் கொண்டு வந்து முடிச்சுப் போட்டீர்கள் இடையில் யாரையோ.. தூ’’வென்று தூப்பியதூ போலிருந்ததூ

    அம்மா என்பது புனிதமான வார்த்தை அது சமீபகாலமாக கேவலப்படுத்தப்பட்டு விட்டது என்பது எனது கருத்து என்ன செய்வது இனி மீட்டெடுப்பது நடவாத காரியமே...
    தமிழ் மணம் என்னவாயிற்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் கில்லர்ஜி! தலைப்பே அப்படித்தானே!!! உண்மையே அந்தப் புனிதமான வார்த்தையே மோசமாகிவிட்டது!!

      நீக்கு
  14. கோமு தன் தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  15. கீதா மேடம்...
    கோமு தாயிடம் சேர்ந்ததில் மகிழ்ச்சி... நான் கோமுவை கோமளவல்லி என்று நினைத்தேன்.. (நீங்க வேறு யாரையாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல)

    பதாதைகள், ரோடு சுத்தம் என அரசியலும் (அம்மா அரசியல்ன்னு சொல்லலை) கலந்து கலக்கிட்டீங்க....

    தூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க்க்க்க்க்கலான அப்படின்னு எழுத வந்ததுதான்... மத்தபடி எங்க விஜயகாந்த் சொன்னது அல்ல...)

    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூ....க்கலான சூ....ப்பர் (நல்லாப் பாருங்க..._தூக்க்க்க்க்க்கலான அப்படின்னு எழுத வந்ததுதான்... மத்தபடி எங்க விஜயகாந்த் சொன்னது அல்ல...)// ஹஹ்ஹ்ஹஹ... நன்றி குமார். மறைமுகமாகத்தான் சொல்ல முடிந்தது. உங்களைப் போலெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் தயக்கமாக இருக்கின்றது.

      நீக்கு
  16. அருமையான பதிவு! கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடைபயணத்தில் இணைந்து கொண்டதுபோல் தோன்றியது.
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  17. கண்ணழகியுடனும் கோமுவுடனும் நடந்து கொண்டே...
    அம்மா என்றழைக்காத உயிரில்லையே என
    நினைவூட்டியமை சிறப்பு
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    அண்ணா.

    அருமையான பதிவு.. படித்த போது இணைந்து கொண்டது போல ஒரு உணர்வு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. கண்ணழகி !பேர் ஸ்வீட்டா இருக்கு விவரமான பொண்ணுதான் ..கோமுவை களவாட வந்தவனை இனங்கண்டிருக்கே !.மாதாவுடன் சேய் பத்திரமா சேர்ந்தது சந்தோஷம் .இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ட் துளசி அண்ணா

    பதிலளிநீக்கு