வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ஆவியுலக அனுபவம்

Image result for real ghostsImage result for ouija board
படங்கள் இணையத்திலிருந்து

ஆவிகளின் உலகம் பற்றி பல ஆராய்ச்சிகளும், ஆவிகளுடன் பேசியதாகப் பல அனுபவக் கட்டுரைகளும், கதைகளும் நீங்கள் கேட்டிருக்க, வாசித்திருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் எங்கள் ப்ளாகில் ஒய்ஜா போர்ட் பற்றி நண்பர் ஸ்ரீராம் எழுதியதை வாசித்ததும் அதுவரை எனது நினைவலையில் எட்டிப் பார்த்து பதிய வேண்டும் என்று தோன்றாமல் என் மூளைப் பெட்டகத்தின் பரணில் இருந்த என் அனுபவத்தைக் கொஞ்சம் கஷ்டப்பட்டு மேலெடுத்து பதியலாமே என்று தோன்ற இதோ இங்கே.

நாங்கள் 8 பேர் – மாமா, அத்தை குழந்தைகள் என்று, ஒரே வீட்டில் எங்கள் பாட்டியின் (இந்திராகாந்தி) ஆட்சி – மஹாராணியார் ஆட்சியின் கீழ் வளர்ந்தோம். இந்த ஆவிகளுடன் பேசுவது பற்றி எங்கள் நண்பர்கள் பல கதைகள் விட, அந்த வயதிற்கே உரிய, எல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது.  நான் அப்போது 9 ஆம் வகுப்பு.

அதில் நாங்கள் நான்கு பேர் மட்டும் இந்த ஆவியுடன் பேசுவது பற்றி ஒரு விவாத கூட்டம் நடத்தி, வெளியில் சொல்லக் கூடாது, முக்கியமாக இந்திராகாந்தி பாட்டிக்குத் தெரியக்கூடாது என்று எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் கடன்களாகிய குச்சி மிட்டாய், பஞ்சு மிட்டாய், கலர்பென்சில், ரப்பர், ரிப்பன், வளையல், குச்சி ஐஸ், ரெக்கார்ட் படம் வரைந்து தருதல் போன்ற சில்லறை லஞ்சக் கணக்குகள், கமிஷன் எல்லாம் தீர்த்து தீர்மானித்துக் கொண்டோம். மீஷ, மேன லக்னம் பார்த்து நாள் குறித்து, எல்லோரும் உறங்கிய பின், ஆவிகள் உலா வரும் நேரமாகிய நடு இரவு 12 மணி என்று முடிவு செய்யப்பட்டது.

ஒய்ஜா அட்டை எல்லாம் என்ன என்றே தெரியாத அந்தக் காலகட்டத்தில், நண்பர்கள் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில், ஒரு அட்டையின் நடுவில் ஒரு வட்டம் வரைந்து இரு மூலைகளில் ஆம், இல்லை என்று மட்டும் எழுதினோம். அதன் நடுவில் சில கட்டங்கள் அதில் எண்கள். ஒரு டம்ளரில் தண்ணீர்.  அதுதான் மீடியம். (என்ன ஈரம் படம் நினைவுக்கு வருதா? நாங்க கதை எங்களோடதுனு எல்லாம் பிரச்சனை கிளப்ப மாட்டோம்) அறை என்றெல்லாம் இல்லாததால், திண்ணையை ஒட்டிய “நடை” எனப்படும் அறையில் விளக்கை அணைத்து விட்டு, இந்த அட்டையை வைத்து, இருட்டில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தோம். ஒரு 20 பைசா நாணயம்.  அதன் மீதுதான் விரல் வைக்க வேண்டும்.

அப்போதுதான் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது. அந்தக் கேள்வி எழுந்தது. எங்களுள், யார் ஆவியை அழைத்து,  ஆவியுடன் பேசப்போகிறார்கள்? எந்த ஆவியை அழைப்பது என்று. நான் மட்டுமே தைரியசாலி. எனவே நான் 2 ஆம் வகுப்பு படித்த போது இறந்து போன எனது அத்தையை, அத்தையின் செல்லம் நான், அழைப்பதாகச் சொன்னேன். (எங்கள் நால்வரில் இருவர் என் அத்தையின் குழந்தைகள்).

நான் கண்மூடி அத்தையை நினைத்துக் கொண்டு தியானித்து, அத்தை ஆவியை அழைத்தேன்.  டம்ளரில் இருந்த தண்ணீர் அதிர்ந்ததாகச் சொன்னார்கள் மற்ற மூவரும். அத்தை ஆவியுடன் பேசினேன்.

நாங்கள் ஏற்கனவே என்ன கேட்க வெண்டும் என்று தீர்மானித்திருந்ததால் – என்ன கேட்டிருப்போம்? - பாசாவோமா, ஃபெயிலாவோமா, நல்ல மார்க் கிடைக்குமா? நாங்கள் விரும்பியது கிடைக்குமா? இத்யாதி இத்யாதி கேள்விகள் தான். நான் அத்தை ஆவியுடன் பேசிக் கேட்க கேட்க, பைசாவின் மேல் இருந்த என் கைவிரல் அசைய பைசா நகர்ந்தது என்று மற்ற மூவரும் சொன்னார்கள். அப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பைசா நகர்ந்து எதைத் தொட்டதோ அதுதான் பதில்.

என் அத்தை மகள், “பாருடா நோ சொல்லுது அம்மா. ஆவி. அப்போ நான் ஃபெயிலா” என்று அழத்தொடங்கிவிட்டாள். பின்னர் கேள்விகளின் சரக்கும் தீர்ந்துவிட, அழைத்த ஆவியை போ என்றெல்லாம் சொல்லவில்லை. நன்றி கூட உரைத்த நினைவு இல்லை. நான் கண்ணைத் திறந்தேன். என் கைவிரல் பைசாவுடன் அட்டையை விட்டு வெளியே வந்து பௌன்ட்ரி அடித்திருந்தது. ஆவியின் உலகத்தில் இதற்கு என்ன பதில் என்று தெரியவில்லை. சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. பின்னர் கல்லூரி வந்த பிறகு இதைக் குறித்து அறிந்து கொள்ள விழைந்து வாசித்த போது...

நான் அறிந்தது, ஆவிக்கும் பேய்க்கும் வித்தியாசம் உண்டு எப்படி என்றால் ஆவி என்பது நல்லவை என்றும் பேய் என்பது கெட்ட சக்தி என்றும் சொல்லப்படுகின்றது. அப்போ பிசாசு? மிஷ்கின்தான் சொல்லிட்டாரே. ஆவிகள் ஆப்ஜெக்டிவ் பதில்கள் தான் சுருக்கமாக கொடுக்கும் போல. விரிவான விடை எல்லாம் கொடுக்காது போலும். சே! அப்போ என் கட்சி இல்லை. என் மகன் கட்சி.

ஆவி உலகத்தில் ஒளி மிகுந்த பகுதியில் இருப்பவை நல்ல ஆவி என்றும், இருள் பகுதியில் இருப்பவை பேய்கள், தீய ஆவிகள் என்றும், நல்ல ஆவிகள் மட்டுமே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் (அட அங்கும் ஜோசியர்கள் இருக்கின்றார்கள்!!) தீய ஆவிகள் சொல்வது சரியாக இருக்காது, மட்டுமல்ல குழப்பமும் விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

விலங்குகளின் ஆவிக்கு என்று தனி உலகமாம். (ஓ அங்கும் விலங்கியல் பூங்கா இருக்கு போல!!) ஆவி உலகிலும் சட்டங்கள் எல்லாம் உண்டாம். தவறு செய்தால் தண்டனை உண்டாம்! அட! ஆவிகளுக்கே தண்டனையா?!! அங்கு நல்ல ஆவிகள்தான் ஆட்சி நடத்துகின்றனவாம். அப்ப அங்கயும் தமிழ் படம் மாதிரி ஹீரோ வில்லன் எல்லாம் உண்டு போல. இந்த ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவிகள் இப்படிச் சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. 

அட!  அந்த நல்ல ஆட்சியப் பார்த்துட்டு ஆவி உலகத்தை ஒரு சுத்து சுத்திட்டு, பயணக் கட்டுரையாக ஒரு பதிவு எழுதலாமோ! +++ என்பது இருந்தால் அங்கு நிச்சயமாக –-- ம் இருக்கும் என்பதுதானே உலக நியதி! உலகமும் இரண்டும் கலந்துதானே இயங்குகின்றது! ஒன்று மட்டும் இருந்தால் இயக்கம் இருக்காது! அதனால் தான் ஆவி உலகிலும் நேர்மறை, எதிர்மறை எல்லாம் இருக்கின்றது போலும். ஒரு வேளை இதைத்தான் நம்மவர்கள், நல்லவர்கள் சொர்கத்திற்கும், கெட்டவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்று சொல்லுகின்றார்களோ?

இது அப்போதே, தெரிந்திருந்தால், நான் அன்றே எனது அத்தை ஆவியிடம் -நல்ல ஆவிங்க- இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்டிருப்பேனே! இந்த போர்டை உபயோகித்து ஆவியை அழைப்பதில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அபாயகரமானதாம்.  எப்படியோ நாங்கள் தப்பித்தோம்.  இல்லை என்றால் அத்தை ஆவி வரவில்லை போலும். நகர்ந்தது எல்லாம் எங்கள் கற்பனையாகவும் இருக்கலாம்.

இந்த ஒய்ஜா என்பது மிகவும் பிரபலமாக இருக்கின்றது. பெரிய புள்ளிகள் எல்லாரும் கூட இதை உபயோகித்திருக்கின்றார்கள். மிகப் பிரபலமான மேலை நாட்டு கவிதாயினி, எழுத்தாளர் சில்வியா ப்ளீத் ஆவிகள் உலகில் மிக மிக ஆர்வமுடன் ஒய்ஜா போர்ட் உபயோகித்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆவி உலகில் ஆர்வமுடையவராக இருந்த இவர் தற்கொலை செய்துகொண்டார். இவரது ஆவி?

நம்மூரில் சில வருடங்களுக்கு முன் ஆவி அமுதா என்பவர் ஆவிகளுடன் மீடியேட்டராகச் செயல்பட்டு நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தருவதாகச் சொல்லப்பட்டார்.. பல பேட்டிகள். பல பெரிய புள்ளிகள் அவரைத் தொடர்பு கொண்டதாகச் சொல்லப்பட்டு பரபரப்பாகப் பேசப்பட்டார். இப்போது அவர் யோகா கற்பிப்பதாக எங்கேயோ வாசித்ததாக நினைவு.

நேற்று நான் ஆவியுடன் பேசினேன். ஆவியிடமிருந்து அழைப்பு! அட! இது நம்ம நண்பர் ஆவிங்க! (கோவை)

பின் குறிப்பு: ஆவிகள் உலா வரும் இடங்களில் உங்களுக்கும் உலா வர ஆசை என்றால் ராஜஸ்தானில் உள்ள பங்கார்ஹ் கோட்டை, குல்தாரா, மீரட்டில் உள்ள ஜிபி ப்ளாக், தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடி, குஜராத்தில் உள்ள துமாஸ் பீச், அஸ்ஸாமில் உள்ள ஜடிங்கா இன்னும் பல இடங்கள் உள்ளன நம் நாட்டில். இதே போல வெளிநாட்டில் ஆவிகள் உலா வரும் நகரில் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டால் இதோ நண்பர் கூட்டான்சோறு செந்தில்சுட்டியுள்ளார்.

---கீதா


37 கருத்துகள்:

  1. தொடக்கம் முதலே நான் நினைத்தேன் எங்கே நமது கோவை ஆவி வரவில்லையே என்று வந்துட்டார்... ம்ம் இனிமேல் உங்களிடம் கொஞ்சம் கவனமாகத்தான் பேசனும் ஆத்தாடி பயமாவுல இருக்கு இப்படி நடுச்சாமத்துலயா இந்த மா3 பதிவு போடுறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்....அனுபவம் உண்மைதான் ஜி! பயப்பட எல்லாம் வேண்டா. இது மிஷ்கின் சொல்லும் பிசாசுதான் நல்ல பிசாசு ...அஹஹ

      நீக்கு
  2. சகோ துளசி & கீதா,

    பகல் நேரமென்பதால் பதிவைப் படிக்க தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வந்தால், பிறகுதான் தெரிந்தது இது 'ஒருமணி நேரம்'னு. அதனால் ஒரு அரைமணி நேரம் ஆறப் போட்டுத்தான் படித்தேன்.

    இன்றிரவு கனவுல பேய் வந்து நடுங்கினால் நீங்கதான் பொறுப்பு. நடுங்கப் போவது யாருன்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருக்கணுமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் அட! இந்தப் பதிவும் நீண்டுவிட்டதா...சே என்ன முயற்சித்தாலும் முடியலப்பா ...அது சரி நாங்கலாம் நடுங்க மாட்டோம்ல.....

      சித்ரா மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  3. ஆவி அமுதாவுக்கு முன்பிருந்தே ரவிச்சந்திரன் பிரபலம். 'ஆவியுலக அனுபவங்கள்' என்று பத்திரிகை கூட நடத்தினார்.

    திண்ணையில் அமர்ந்து ஒய்ஜா போர்ட் உபயோகித்ததால் போற ஆவி, வர்ற ஆவி, ஸெகன்ட் ஷோவில் சினிமா பார்த்துத் திரும்பி பொண்டிருந்த ஆவியெல்லாம் ஆளுக்கொரு பதில் சொல்லியிருக்குமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ ஸ்ரீராம்....ஓ அதுதான் காரணமா...அந்த ஆவிங்க எங்கள ஏமாத்திருச்சு பாருங்க....எங்க அத்தை ஆவிய வர விடாம....திண்ணைக்குப் பக்கத்து ரூம்லதானே அதான் திண்ணைல உக்காந்துருச்சுங்க போல..

      ரவிச்சந்திரன் நேற்று நினைவுக்கு வரவில்லை....உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் நினைவுக்கு வந்தார். ஆனால் பத்திரிகை பற்றி எல்லாம் தெரியாது....சே இதான் பாருங்க யாராவது ஏதாவது பதிவு போட்டாத்தான் என் அனுபவம் நினைவுக்கு வந்து தூசி தட்டி எடுக்க வேண்டியிருக்கு..இதுக்குத்தான் மத்த ப்ளாக் வாசிக்கணும்..நமக்கு ஒரு பதிவ தேத்திடலாம்ல...

      நன்றி ஸ்ரீராம் எனக்கு/எங்களுக்கு இந்தப் பதிவ எழுதுவதற்குத் தூண்டுகோலாய் இருந்ததற்கு.

      கீதா

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும்..

      நீக்கு
  5. வாவ் சின்ன வயசுல எனக்கும் பேய/ஆவிய பார்க்க ரொம்ப ஆசை மேடம்.
    அதைச் சுற்றி இருக்கும் பல கதைகள் நம்பி இருக்கேன்.
    உங்கலது இந்த பதிவும் அந்த
    நினைவுகலை மீண்டும் அசைப்போட வைத்தது நன்றி.



    ஆனா இப்போ...


    மனப்பேய்களையும்
    மனிதப்பேய்களையும் தவிர,
    மனிதப் பிரபஞ்சத்தில் வேறு
    பேய்கள் இல்லை. (நன்றி கவிஞர் வைரமுத்து-தண்ணீர் தேசம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வரிகளைப் பின்னூட்டமாகத் தந்தமைக்கு மிக்க நன்றி மகேஷ்...

      கீதா

      நீக்கு
  6. என்னுடைய தேநீர் கோப்பையிலிருந்து இப்பொழுது ஆவி கிளம்ப்பிக்கொண்டிருக்கிறது... ஒருவேளை அவை அங்கே வந்துவிடலாம் ஜாக்கிரதை.... நல்ல பதிவு அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ...மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்...

      கீதா

      நீக்கு
  7. நானும் ஒரு முறை இவ்வாறு பேசியுள்ளேன்.. ஆனால் - அது பகலில்!..

    தவிர - மீண்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என உத்தரவு போட்டார் - தியானமூர்த்தி..
    அவ்வப்போது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் உபயம் - தியானமூர்த்தி தான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கு!

      கீதா

      நீக்கு
  8. இந்தப் பதிவைப் படித்ததும் நான் எழுதி இருந்த ஒரு கதை நினைவுக்கு வந்தது நீங்களும் படித்துப் பாருங்களேன்
    http://gmbat1649.blogspot.in/2013/12/blog-post_13.html கதையில் ஆவியின் குரல் கூடப் பதிவு செய்திருக்கிறேன் ஆவிகளும் கடவுள் போன்றவை. நம்புபவர்கள் அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார். படித்துப் பார்க்கின்றோம். ஆம் சார் கடவுள் உண்டு என்றால் ஆவியும் உண்டு என்று நம்புபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதே போல் கடவுள் இல்லை என்றால் ஆவியும் இல்லை. ஆனால் இதில் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் ஆவிகளை நம்புவார்கள். அதே சமயம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவியை நம்பாமலும் இருக்கின்றார்கள்..

      என்னிடம் என் மகனின் நண்பர் கேட்டார்..."அம்மா நீங்க கடவுளை நம்புறீங்க...ஆனா ஆவிய நம்ப மாட்டேன்றீங்க...." என்று. என்னிடம் இதற்கு பதில் இருந்தாலும், நான் தர்க்கங்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை. அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு என்று விட்டுவிடுவதால்.

      கீதா

      நீக்கு
  9. எனக்கும் தெரிந்த ஒரே ஆவி ,கோவை ஆவிதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ்ஹ் எல்லோருக்கும் தெரிந்த ஆவி அவர்!!!

      மிக்க நன்றி பகவான் ஜி

      கீதா

      நீக்கு
  10. நல்ல அனுபவமாக இருக்குமோ என எதிர்பார்த்துப் படித்துக்கொண்டே வரும்போது கடைசியில் கோவை ஆவி என்று நண்பரை சுட்டிக்காட்டிவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே எனது அனுபவம் தான் முனைவர் ஐயா. அந்த அனுபவம் அத்தோடு நின்று போனது. பின்னர் வாசிப்பு மட்டுமே. சும்மா இறுதியில் நண்பர் ஆவியை வைத்து முடித்திருந்தோம் ....அவ்வளவே

      மிக்க நன்றி முனைவர் ஐயா..

      கீதா

      நீக்கு
  11. ஆவிய பார்க்க எதுக்கும் கொடுத்து வைத்திருக்காதினால் ....தற்போது.. சன்டீவியில காட்டப்படும் “ஆதிரா”வில்தான் அவ்வப்போது ஆவியை பார்த்து வருகிறேன். அய்யா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அது ஆவி தொடரா? தொடர்கள் பார்ப்பது இல்லையாதலால் தெரியவில்லை வலிப்போக்கன் நண்பரே..எப்படியும் ஆவியைப் பார்த்துவிட்டீர்களே...
      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  12. எனக்குத் தெரிஞ்ச ஒரே ஆவி இட்லி, வெந்நீர் கொதிக்கும்போது வரும் ஆவி ஆகிய சமையலறை ஆவிகள் தான்! அப்புறமா தநுஷ்கோடி இப்போ நெரிசலில் மாட்டிட்டு இருக்கு. ஆகவே அங்கெல்லாம் ஆவி சஞ்சாரம் சாத்தியம் இல்லை. மற்ற இடங்கள் பற்றித் தெரியலை. புனேயில் உள்ள ஒரு பாழடைந்த ஓட்டல் கட்டிடமும், இங்கே சென்னையில் ஓர் காலனியும் (சினிமா கூட வந்தது) ஆவிகளுக்குப் பெயர் போன இடம்னு சொல்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹஹ் எங்களுக்கும் அதே! ஆமாம் புனேவில் ஒரு கட்டடம் உண்டு...சென்னை தெரியாது....ம்ம்ம் தனுஷ் கோடி ம்ம்ம் சும்மா இந்த மாதிரி சொல்லுவது எல்லாம்...

      மிக்க நன்றி சகோதரி...கீதா

      கீதா

      நீக்கு
  13. எத்தனை பேர் எழுதி எத்தனை முறை படிச்சாலும் ஆவிகள் பற்றின ஆர்வம் என்னமோ குறையவில்லை. இன்னும் இன்னும்னு தேடுது மனம்.

    பதிலளிநீக்கு
  14. ஆவி அனுபவம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது! ஒய்ஜா போர்டில் பேசிய அனுபவம் நானும் பகிர்ந்து இருக்கிறேன்! கிராமத்து பக்கம் இன்னும் ஆவிகள் நிறைய உண்டு!

    பதிலளிநீக்கு
  15. எனக்கும் கிட்டத்தட்ட அதே வயதில் பிளாஞ்சட் வைத்து விளையாடிய அனுபவம் உண்டு
    சுவாரஸ்யமான பகிர்வு
    மீண்டும் முயன்று பார்க்கலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது!

    பதிலளிநீக்கு
  16. மிக மிகச் சுவையான பதிவு! இப்படியெல்லாம் செய்து பார்க்க ஆழ்மன விருப்பம் இருந்தாலும் பகுத்தறிவு, அச்சம் என இருதுருவ உணர்வுகள் தயங்க வைக்கின்றன.

    நிறைவேறா விருப்பங்களுடன் இறந்தவர்கள், அகாலச் சாவை அடைந்தவர்கள் போன்றோரின் உயிர்கள்தாம் ஆவிகளாக உலவும் எனக் கூறப்படுகிறது. அப்படியானால், ஈழத்தில் அவ்வளவு கொடூரமாகக் கொல்லப்பட்ட நம் உறவுகள் எங்கே? ஆவிகளுக்கு என ஆற்றல் கிஞ்சித்தேனும் இருக்குமானால், உலக மகாப் பெருங்கொடுமையைப் புரிந்த அந்த, இந்த மனித விலங்குகளை இறந்து போனவர்களின் ஆவிகள் ஏன் தண்டிக்கவில்லை? மனித ஆவிகள், விலங்கு ஆவிகள் உண்டு எனப் பல கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், செடி, கொடி போன்றவற்றின் ஆவிகள் பற்றி யாருமே பேசுவதில்லையே ஏன்? அப்படியானால், செடி கொடிகளுக்கு உயிர் உண்டு என்பதை அந்தக் கால மனிதர்கள் அறியததால்தான் அவற்றைப் பற்றி யாரும் எதுவும் கூறவில்லை என்பதாகத்தானே ஆகிறது. அப்படியானால், இவையெல்லாமே மனித மனத்தின் கற்பனை என்பதாகத்தானே பொருள்படுகிறது?

    இப்படிப் பல கேள்விகள் ஆவிகள் இருப்பதை நம்ப விடாமல் செய்கின்றன என்றால், ஒருவேளை இருந்துவிட்டால் இத்தகைய ஆராய்ச்சிகளைச் செய்து பார்க்கும்பொழுது அந்த அனுபவம் தரும் திகைப்பை திகிலைத் தாள இயலுமா எனும் அச்சம் ஒருபுறம்.

    எது எப்படியோ! உங்கள் அனுபவம் சுவையானது!

    //அங்கு நல்ல ஆவிகள்தான் ஆட்சி நடத்துகின்றனவாம்// - அந்த "அங்கு" என்கிற சொல்லை நீங்கள் கொட்டை எழுத்தில் போட்டு மேற்கோள் குறிகள் இட்டிருக்க வேண்டும்! :-P

    பதிலளிநீக்கு
  17. ஆவியுடன் பேசுவது என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்!
    அனுபவம் இல்லை! சில மனிதர்களுடனும் பேசுகையில் ஆவியுடன்
    பேசுவதுபோல நான் நினைப்பதுண்டு! அப்படியிருக்கும் அவர்கள் பதில்!
    ஒற்றைச் சொல்லாக அல்லது மிகக் குறைந்த சொற்களாய்!

    அருமை! வாழ்த்துக்கள்!

    த ம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதி,

      "சில மனிதர்களுடனும் பேசுகையில் ஆவியுடன் பேசுவதுபோல நான் நினைப்பதுண்டு" ______ உண்மைதான். :))))))

      நீக்கு
  18. ஹா ஹா ஹா :))))) கீதா, பதிவின் நீளத்தை சொல்லலை. பேயைப் பற்றியது என்றால் எவ்வளவு நீளமான பதிவாக இருந்தாலும் ஒரே மூச்சில்(நடுங்கிகிட்டேதான்) தைரியமா படிச்சு முடிச்சிடுவேன்.

    நான் சொன்னது ஒருமணி நேர பேய். அதன் நடமாட்டம் மதியம் 12 டூ 1 வரைக்கும் இருக்கும்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. சின்ன வயசுல மறந்துபோய்கூட அந்த நேரத்துல தோட்டத்துப் பக்கம் எட்டிப் பார்க்கமாட்டேன்.

    இங்க மதியம் 12 மணிக்குத்தான் உங்க பதிவு கண்ணுல பட்டுச்சு. படிக்கலாம்னு எடுத்தால் லன்சுக்கு ஆள்(??) வந்தாச்சு. :)))))

    பதிலளிநீக்கு
  19. அருமை... ஆவி அனுபவம் வித்தியாசமானவை...
    எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் சில விஷயங்கள் இருக்கலாமோ என சிந்திக்க வைத்தது.
    பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  20. ஆனந்த விகடன் பத்திரிகையைக் கூட,
    நாங்கள்
    'ஆவி' எனக் குறிப்பிடுவதுண்டு...

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்,
    ஆவி பற்றிய கதை அருமை,,,,,, ஆனால் சின்ன வயதில் உங்க ஊரில் பேய் பிடித்து உள்ளது என்று சிலருக்கு ஆட்டுவார்கள். பார்த்துள்ளேன்,,,,,,, என்னே ஆட்டம்,,,,,,
    என்னால் அப்படித்தாப்பா சொல்ல முடியும்,
    சிந்திக்க வைக்கும் பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ள சகோதரி,

    ஆவியுலக அனுபவம் பெரிய குடும்பத்தில் சிறிய வயதில் நடந்த ஆவிபற்றிய பயம் கலந்த விளையாட்டைப் படித்து மகிழ்ந்தோம். நல்லவேளை இறுதில் கோவை ஆவி வந்து காப்பாற்றியது.

    நன்றி.
    த.ம.11

    பதிலளிநீக்கு
  23. நல்ல அனுபவம். எங்கள் வீட்டிலும் இம்மாதிரி ஓய்ஜா போர்டு வைத்து முயற்சித்தது உண்டு. அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்!

    பதிலளிநீக்கு
  24. பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு
    இது அழகான ஒரு த்ரில்லர் சிறுகதைக்கான நல்ல கருவாக தோன்றவில்லையா ?
    முயற்சிக்கலாமே

    பதிலளிநீக்கு