செவ்வாய், 21 ஜூலை, 2015

கண்டெனன் பதிவர்கள் போற்றும் ஜிஎம்பியைக் கண்களால்

      பதிவர்களாகிய நாமெல்லாம் பழகிய மிகக் குறைந்த கால அளவில்,  ஏதோ முன் ஜென்ம பந்தம் இருப்பது போல் நெருங்கிவிடக் காரணம்தான் என்ன என்று பலமுறை நான் வியந்ததுண்டு. நம்மிடையே நிலவும் ஒத்த சிந்தனைகள் இதற்கு ஒருவேளை காரணமாகலாம். மென்மேலும் நம் ஒவ்வொருவரையும் எழுதத் தூண்டும் பின்னூட்டங்களாம் அகமகிழ்ந்த பாராட்டுகளும், நம்மைச் செம்மைப் படுத்த உதவும் கருத்துகளும் ஒரு வேளை காரணமாகலாம். வரிகளுக்கிடையிலும், வரிகள் வந்த வழியாகவும், எழுதியவரின் மனதுக்குள் நுழையும் வித்தை கற்ற வித்தகர்களாம் பதிவர்கள், ஒவ்வொருவரது பதிவின் வழியாக எல்லா பதிவர்களின் உள்ளம் நுழைந்தும், நுழைந்த உள்ளத்தவர்களை தம் மனதுள்ளும் நுழைய வைத்ததும் ஒரு வேளை இதற்குக் காரணமாகலாம். 

அப்படி, பதிவர்கள் ஆகிய நாமெல்லோரும் நம் பதிவுகளின் உதவியால் நம் பதிவர் நண்பர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தவர்கள்தான்.  அதே போல் நம் பதிவர் நண்பர்களின் பதிவுகளின் தாக்கத்தால் அவர்கள் ஒவ்வொருவரையும் நம் மனதில் பதியச் செய்தவர்களும்தான். 

அப்படிப்பட நம் பதிவுலக நண்பர்களுடன் தொலை பேசியில் பேச வாய்ப்புக் கிடைக்கும் போது நாம் பெறும் இன்பம் அலாதிதான்.  அவர்களை நேரில் கண்டு பேசும் போது உண்டாகும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அதை அனுபவித்துத்தான் அறிய வேண்டும்.  அம்மகிழ்ச்சியை இடையிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் அசை போட்டு இன்ப வெள்ளத்தில் நீராடும் பாக்கியம் பதிவர் நண்பர்களான நமக்கு மட்டுமே சாதிக்கின்ற ஒன்றுதானே. 

அப்படி, நினைத்தாலே இனிக்கும் நேரங்கள் தான் கவியாழி, குடந்தையூரார், இமயத்தலைவன், வாத்தியார், அரசன், சீனு, ஆவி, டிடி, கார்த்திக் சரவணன், ரூபக் ராம், மெட்ராஸ்பவன் ஏஜி சிவக்குமார், செல்வின், விசு, அன்பேசிவம் சக்தி, முத்துநிலவன் ஐயா, மதுரைத் தமிழன், மூங்கில்காற்று முரளிதரன், திருப்பதி மகேஷ், பேராசிரியர் தருமி, வேலூர் ராமன், திவான் போன்றவர்களைச் சந்தித்த நேரங்கள்.

ஆனால், கடந்த ஆண்டு மதுரையில் நடந்த பதிவர் விழாவில் பங்கெடுக்கவிருந்த அனைவரையும் காண ஆவலுடன் காத்திருந்தும், இறைவன் ஏனோ இறுதி நேரத்தில் செல்லவியலாத சூழலை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத் தந்தார். விழாவின் போது சந்திக்க முடியாமல் போன சிலரது பெயர்களைக் குறிப்பிட்ட ஜிஎம்பி சார் எங்கள் பெயரையும் குறிப்பிட்ட போது, மனது ஒரே நேரத்தில் துள்ளிக் குதிக்கவும், துவண்டு போகவும் செய்தது. 

அதற்கு முன்பே பங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் எங்களது ஒரு குறும்படம் இட்டு மாணவ, மாணவியருடன் ஆங்கிலத்தில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார்.  அதுவும் நடக்கவில்லை.

அப்படி, இரண்டு முறை அவரைச் சந்திக்க முடியாத சூழலை முறியடித்து, அவரைக் கடந்த கோடை விடுமுறையின் போது பங்களூர் சென்று சந்திக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தேன். அதுவும் நடக்காமல் போகவே, வருந்தி இருந்த போது ஒருநாள் காதில் தேனாய் பாய்ந்த செய்தி கீதா மூலம் வந்தது.  ஜிஎம்பி சார் பாலக்காடு வருகிறார்! ஜூலை 15, 16 தேதிகளில்!! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ஒரு வாய்ப்பு!

முன்பு ஒரு பின்னூட்டத்தில், நினைவலைகள் தப்பியவர்களுக்கு பணிவிடை செய்யும் ஒரு நண்பரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஜிஎம்பி சார் பாலக்காடு வருகையின் போது அவரைச் சந்திக்கப் போவதாகவும் அப்போது அவருடன் நானும் செல்ல வேண்டும் என்று சொன்ன போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

16.07.2015 மாலை 5.15. பாலக்காடு கபிலவஸ்து தங்கும் விடுதி. ரிசெப்ஷனிஸ்டிடம் பங்களூரிலிருந்து வந்திருக்கும் ஜிஎம் பாலசுப்ரமணியம் சாரை பார்க்க வேண்டும் என்றதும், “ரும் நம்பர் 207, இரண்டாவது தளம் என்றார்”.  உடனே இன்டெர்காமில் ஜிஎம்பி சாரைக் கூப்பிட்டு என் கையில் தர, “ஜிஎம்பி சார், நான் 207 ஆம் அறைக்கு உங்களைப் பார்க்க வந்து கொண்டிருக்கின்றேன்” என்றேன்.

“மின் ஏணி இரண்டாவது தளத்தில் நின்றதும், வெளியில் வந்து அறை எண்களைப் பார்த்துக் கொண்டே நடக்கையில் என் எதிரே ஜிஎம்பி சார்.  நேருவை நேரில் கண்டவர்; இந்திய சீனப் போருக்கு முன் சூயன் லாயின் செல்லத் தட்டைக் கன்னத்தில் பெற்றவர்; போரின் போது அதே கன்னத்தை ஆத்திரத்துடன் அடித்துக் கொண்டவர்; எத்தனையோ நாடகங்களை எழுதி இயக்கி, நடிக்கவும் செய்தவர்.  “வாழ்வின் விளிம்பில்”, எனும் அருமையான சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தின் ஆசிரியர். என்பால் அன்பும், பாசமும் கொண்டவர்; என் அன்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். 

கண்ட நொடியில் என்னை அறியாமல் அவரது கால்களில் தொட்டு கண்களில் ஒற்றி அவரது ஆசியைப் பெற்றுக் கொண்டேன். என்னை 207 அறைக்கு அழைத்துச் செல்ல அங்கு அவரது துணைவியார்,  அவருடன் பங்களூரிலிருந்து வந்த அவரது மைத்துனர், அவரது துணைவியார், ஜிஎம்பி சாரின் நண்பரான திரு சுந்தரேசன், அவரது துணைவியார். எல்லோருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார் ஜிஎம்பி சார்.


ஜிஎம்ப் சார்


திரு சுந்தரேசன், ஜிஎம்பி சார்


திரு மதுசூதனன்

திரு சுந்தரேசனைப் பார்த்ததும், எனக்கு, எங்கள் பள்ளிக்கு, மூன்று வகுப்பறைகள் உள்ளிட்ட ஒரு கட்டிடம், பள்ளி தொடங்கப்பட்ட 1982ல் கட்டித் தந்த திரு மது சூதனன் அவர்களின் முகம் நினைவிற்கு வர, அதைப் பற்றி அவரிடம் கேட்க, அவர் தான் அவரது தம்பி என்றதும், ஜிஎம்பி சார் சொன்ன நினைவலைகள் தவறியவர்களுக்காக (ALZHEIMERS) தொண்டு செய்யும் அவரது நண்பர் வேறு யாருமல்ல திரு மதுசூதனன் அவர்கள்தான் என்று உறுதியானது.  இப்படிப்பட்ட, தன்நலம் பாரா பொதுநல விரும்பிகளின் புகழ் எண் திசையும் பரவும் என்பது எவ்வளவு உண்மை! இறைவன் தன் தேவைக்கு அகிதமாகத் தரும் செல்வம், பிறரது தேவைகளுக்காகச் செலவிடப்படவேண்டியது என்பதை உணர்ந்த திரு மது அவர்களைப் போன்ற செல்வந்தர்கள் எத்தனை பேர் நம்மிடையே வாழ்கின்றார்கள்? 
Karunya Geriatric Care Centre is a unit of “ Palakkad Alzheimers’ Charitable Trust  http://www.karunyagcc.org/

பேசிக் கொண்டிருந்த போது திரு சுந்தரேசன் அவர்கள் திரு மது அவர்களைப் பற்றிச் சொன்ன ஒரு நிகழ்வு என்னை மிகவும் வியப்படைய வைத்தது. திரு மது அவர்கள் எப்போதுமே தன்னால் இயன்ற மட்டும் எல்லோருக்கும் உதவி செய்யும் பழக்கம் உடையவர்.  தன் அரபு நாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு இந்தியா வந்து பொதுத் தொண்டாற்றி வாழ முடிவு செய்ததால், தன் பென்ஸ் காரை போகும் முன் சர்வீஸ் செய்ய கொண்டு போன போது, சர்வீசுக்கு வரும் பென்ஸ் கார் உரிமையாளர்களுக்கு மட்டும் ஏதோ ஒரு பரிசு குலுக்கல் உண்டென்றும், வெற்றி பெற்றால் இருபது லட்சம் விலை உள்ள ஒரு கார் பரிசாகக் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இவர் தன் பெயரைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இவரது பெயரையும் பரிசுக் குலுக்கலில் சேர்த்திருக்கிறார்கள்.  அன்று இறுதி நாள்.  அடுத்த நாள் நடந்த குலுக்கலில் முதல் பரிசான அந்த ஃப்ரென்சு கார் பரிசாகக் கிடைத்திருக்கிறது.  உடனே மது அவர்கள் “இதெல்லாம் இறைவன் எனக்குத் தரவில்லை. உதவி தேவைப்படும் பலருக்கு உதவ என் கையில் தருகிறார். இதை நான் எனக்காக எடுக்கப் போவதில்லை.  உரியவர்களுக்கு பரிசுத் தொகையைப் பிரித்துக் கொடுக்கப் போகிறேன்” என்று சொல்லி இருக்கிறார். திரு மது அவர்களைப் பற்றி ஜிஎம்பி சார் விரிவாக எழுத இருக்கிறார்.

இடுகைகளைப் பற்றியும், பதிவர்களைப் பற்றியும் நீண்ட நேரம் நானும் ஜிஎம்பி சாரும் உரையாடினோம்.  அடுத்த நாள் காலை அவர் மணப்புள்ளிக்காவு கோயில் தரிசனம் முடித்து, திரு மது அவர்களின் காருண்யாவுக்கு சென்று அவரைக் கண்ட பின் ஆலத்தூர் வல்லங்கி போன்ற இடங்களுக்குச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதற்கு அடுத்த நாள் குருவாயூர் தரிசனம் முடித்த பின் நேராக பங்களூர் போவதாகவும் சொன்னார்.  ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஜிஎம்பி சாருடன் செலவிட்ட பின் மனதில் என்றென்றும் பசுமை மாறாமல் நிலைத்திருக்கப் போகும் நினைவுகளுடன் அவரிடமிருந்து விடை பெற்றேன்.

 படங்கள் : ஜிஎம்பி சார்




50 கருத்துகள்:

  1. நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி அய்யா. பகவான் ஜி அருளால் தற்போது தமிழில் கருத்திட முடிகிறது. விரைவில் பதிவுகளையும் தர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! பதிவுகள் இடுங்கள் நண்பரே!

      நீக்கு
  3. நெகிச்சியான சந்திப்பு ! நானும் என்றாவது ஜீ எம்பி சாரை சந்திக்கும் ஆவலில் இருக்கின்றேன் கடவுள் சித்தம்! அருமையான பகிர்வு துளசிசார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! கருத்திற்கு! நிச்சயமாகச் சந்திப்பீர்கள் நண்பரே!

      நீக்கு
  4. அனுபவித்து எழுதிய சந்திப்பு அனுபவம்
    மிக்க மகிழ்வளிப்பதாக உள்ளது
    அற்புதமான பகிர்வுக்கும்
    தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அட எவ்வளவு சுவாரஸ்யமான சந்திப்பு ரோம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எதோ நானே நேரில் உங்களை சந்தித்தது போன்று...... ஹா ஹா . நமக்கெல்லாம் கிட்டுமா தெரியலை. சரி இப்படியாவது சந்தோஷப் படுவோம். மது அவர்களோட செயல் சாலச் சிறந்தது. வார்த்தையே இல்லை பாரட்ட ........அவர்களை ..எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். ஆமா மது ..... என்பது நம்ம சகோதரர் கஸ்தூரியை தானே சொல்கிறீர்கள். இனிய பதிவு சகோ தோழி ,,,நன்றி தொடர வாழ்த்துக்கள் ...! நல்ல தலைப்புகளுடன் கலக்கல் பதிவுகள் தான் இப்போ எல்லாம். கலக்குங்க.
    ஆமா என் பக்கம் காணவே இல்லியே ம்...ம்...ம்.ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி!! தங்களின் கருத்திற்கு! வந்தோமே சகோதரி! பார்க்கின்றோம் ஏதாவது விடுபட்டுள்ளதா என்று....வராமல் இருப்போமா என்ன...

      நீக்கு
    2. நம்ம மது /கஸ்தூரி வேறு வகையில் கலக்குகின்றார் ஆசிரியராக....

      இந்த மது அவர்கள் மதுசூதனன் ஜிஎம்பி சாரின் நண்பர்....பாலக்காட்டில் இருக்கின்றார்....புகைப்படம் தந்திருக்கின்றோமே....

      நீக்கு
  6. இனிமையான சந்திப்புகள். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஒவ்வொரு விதத்தில் குரு ஆகிறார்கள் - திரு மது, திரு சுந்தரேசன் போல.

    பதிலளிநீக்கு
  7. இனிய சந்திப்பு... ஒவ்வொரு வரியிலும் உற்சாகத்தை அடைந்தேன்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  8. இனியதொரு சந்திப்பு.. நெகிழ்ச்சியான தருணங்கள்..

    தங்களின் பரவசம் எழுத்துக்களில் தெரிகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. ஜி எம் பி சார், மது சார், சுந்தரேசன் சார் பற்றிப் படித்து வியப்படைந்தேன்

    மனிதருள் மாணிக்கங்கள்.. !!!!!!!! வாழ்க வளமுடன்.

    பகிர்வுக்கு நன்றி துளசி சகோ

    பதிலளிநீக்கு
  10. அன்பே சிவம் அவர்களுடன் சில நாட்களுக்கு முன் செல்லில் பேசியதை தவிர நான் எதுவும் அருள் பாலிக்க வில்லை :)
    அந்த கால பேனா நட்பு போல் தொடரும் ,பதிவர்கள் நட்பு தரும் மகிழ்ச்சியை எழுத்திலே வடிக்க முடியாது !

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்,
    தங்களின் விவரிக்கமுடியாத மகிழ்ச்சி வார்த்தைகளில் தெரிகிறது. உண்மைதான் என்னவோ இவர்கள் எல்லாம் பல நாட்கள் பழகிய ஓர் உணர்வு மனதுள், எனக்கு தங்கள் தொலைப்பேசி எண் கொடுத்து தங்களிடம் விசு அவர்களின் நூல் வாங்க சொன்னார்கள், நம்மையும் சிலருக்கு தெரிகிறதே என் நினைத்தேன், அதுவே பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் போது நேரில் சந்தித்து பேசுவது என்றால்,,,,,,,,,,,
    பதிவு வழி தங்கள் மகிழ்ச்சியை நாங்களும் பெற்றோம்,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அருமையான சந்திப்பு. மனிதநேயம் மிக்க நண்பர்களை சந்தித்து வந்து இருக்கிறீர்கள்.
    நட்பு வாழ்க! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. இனிய சந்திப்பு
    மறக்க முடியாத கலந்துரையாடல்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. உங்களை எல்லாம் எப்போ பார்க்கபோகிறேன்னு தெரில

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைக் காண மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம் வாய்ப்பு கிடைக்கும் நண்பரே!

      நீக்கு
  15. இனிய சந்திப்பு நிகழ்வை, சுவையாகச் சொன்னீர்கள்!

    //ஃப்ரென்சு கார் பரிசாகக்//

    பதிலளிநீக்கு
  16. இனிதான சந்திப்பு.... நாம் எப்போது சந்திக்கப் போகிறோம்! புரியாத புதிர்..... சமீபத்தில் கூட பாலக்காடு வர வேண்டி ஒரு அழைப்பு வந்தது. இங்கிருந்து நகர முடியாத சூழல்.... நிச்சயம் வருவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக நாமும் சந்திப்போம் வெங்கட் ஜி! பாலக்காடு வரும்போது கண்டிப்பாகச் சொல்லுங்கள். வார நாட்களில் பாலக்காட்டில் தான் இருப்பேன். விடுமுறை நாட்களில் தான் ஊருக்கு/வீட்டிற்குச் செல்வேன். நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன். தற்போது கீதா டெல்லி வருவதால் அவர் தங்களைச் சந்திப்பார். கீதா சந்தித்தாலே நான் உங்களைக் கண்டது போலத்தான்....!!!

      தங்களைச் சந்திக்கும் ஆவலுடன்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு
  17. அருமையான சந்திப்பு... அழகான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  18. இந்த சந்திப்பில் நான் அடைந்த மகிழ்ச்சி சொல்லி மாளாதது. இத்தனைக்கும் தகுதி உள்ளவனா நான் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக சார்! உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் (றோம்) சார்!! வெகுநாட்களாக நினைத்து நடக்காதது நடந்தது! அதில் எனக்கும் மட்டற்ற மகிழ்வு! இன்னும் பலரைச் சந்திக்க ஆசைதான். அதற்கான வாய்ப்பை இறைவன் அருள்வார் என்று நம்புகின்றோம் சார்.

      மிக்க நன்றி சார்...

      நீக்கு
  19. நல்ல சந்திப்புப் பகிர்வு. நாங்களும் உடன் இருந்ததுபோல ஓர் உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஆசானே...

    உங்கள் பதிவின் ஆரம்ப பத்தியை நானும் பலமுறை வியந்ததுண்டு...

    அதற்கான காரணங்களாய் நீங்கள் குறிப்பிட்டது அனைத்தும் உண்மை. உங்களையும் சேர்த்து பல நேரில் பழகியிராத வலைப்பூ உள்ளங்களிடம் எனக்கு ஆத்மார்த்தமான நட்புணர்வு உண்டு. இவ்வளவுக்கும் வலைப்பூ ஆரம்பிப்பதற்கு முன்புவரை முகநூல் போன்ற தொடர்புகளிருந்து உருவாகும் முகமறியா நட்புகளின்பால் நம்பிக்கையற்று இருந்தவன் நான் !

    உங்களின் ஆசை நிறைவேறியதில் அகமகிழ்ந்தேன்...

    உங்களையெல்லாம் நேரில் காண எனக்கும் ஆவல்... பார்ப்பொம் ! அடுத்த முறை ஊர்வரும் போது நிறைவேறலாம்....

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் அழகான பின்னூட்டத்திற்கு! பாராட்டியமைக்கும் மிக்க நன்றி! நாமும் சந்திக்கும் நாள் வரும் காத்திருப்போம் நண்பரே!

      நீக்கு
  21. திரு மதுசூதனன், திரு சுந்தரேசன் போன்றவர்களின் சேவை போற்றுதலுக்கு உரியது. அவர்களை அறியத் தந்தமைக்கு நன்றி. திரு ஜிஎம்பி சார் திருச்சி வந்திருந்தும் எங்களால் பார்க்க முடியாத சூழல்! பார்க்கலாம். இப்படியான சந்திப்புகள் மகிழ்ச்சியை அள்ளித் தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு. நிச்சயம் உங்களுக்கும் வாய்க்கும் சகோதரி..

      நீக்கு
  22. மகிழ்ச்சியான சந்திப்பைக் கம்பன் போல் சொல்லி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் ரொம்பப் பெரிய வார்த்தைகள் சார். நான் மிகவும் சாதாரணமாகத்தான் எழுதியிருக்கின்றேன் சார்...மிக்க நன்றி...

      நீக்கு
  23. அருமையாக சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! சந்திப்புக்கள் நம்மை புத்துணர்வு அடையச்செய்கின்றன! தங்களையும் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது! இறைவன் சித்தமிருந்தால் சந்திப்போம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! நாமும் சந்திப்போம் நண்பரே! எனக்கும் அந்த ஆவல் உள்ளது. கீதா தங்களைச் சந்தித்தால் நான் சந்தித்தது போலத்தான்...நாம் சந்திக்கும் நாள் விரைவில் வரும் இறைவன் அருள்வார்!

      நீக்கு