செவ்வாய், 31 மார்ச், 2015

ஆல் த பெஸ்ட்!! ALL THE BEST!!!

Image result for SUCCESS AND FAILURE IN LIFE

சில நாட்களுக்கு முன் நான் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த போது என் அலை பேசி கூவியது. தோழி பத்மா.  நேற்றுதானே பேசினோம் என்று நினைத்தவாறே,

“ஹலோ பத்மா வெரி குட் மார்னிங்க்”

“..........(சிறிது நேர அமைதி) ஓ!  கீது! நீயா? ஸாரிப்பா...”

“ஹேய்! என்னாச்சு? என் நம்பர கால் பண்ணிட்டு “கீது நீயான்னா? என்னாச்சுப்பா, உனக்கு?”

“இல்ல கீது, என் சொந்தக்காரப் பொண்ணு பேரும் கீதா தான். அவ இப்ப +2.  ஸோ அவளுக்கு எக்ஸாம் தொடங்கப் போறதுல்ல, “ஆல் தெ பெஸ்ட்” சொல்லலாம்னு பேர போட்டா அது உன் நம்பருக்கு கால் வந்துருச்சு...”

“பரவாயில்லை எனக்கும் அந்த “ஆல் தெ பெஸ்ட்” பொருந்தும்.  சொன்னா தப்பில்லை.”

“விளையாடறியா கீது?!  நீ என்ன பரீட்சை எழுதப்போற?”

“என்னப்பா பரீட்சை எழுதினாத்தான் “ஆல் தெ பெஸ்ட்” சொல்லுவியா?  நான் தினமுமே பரீட்சை எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.  வாழ்க்கைப் பாடம் படிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன்.  வயசு 50 ஆனாலும், மரணம் வரை இந்த வாழ்க்கைப் பாடம் தொடருமே!  இதுதான் கஷ்டமான பாடம்பா....”

“ஆமாம் ல.....அப்ப .என்னையும் அந்த லிஸ்டுல சேத்துக்க! அப்ப, “ஸேம் டு யூ” னு சொல்லு”

“ஹஹஹ்ஹஹ...சரி, நீ என்ன பண்ணற, அந்த கீதா பொண்ணுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லு.  சரிதான்.  ஆனா அதை விட முக்கியம் அந்தப் பொண்ணு வாழ்க்கைப் பாடத்தக் கத்துக்கிட்டு, அதைக் கடந்து வரதுதான் ரொம்ப முக்கியம். அந்த பொண்ணு மட்டும் இல்ல, இப்ப இருக்கற தலைமுறைக்கு...வாழ்க்கைப் பாடம் ரொம்பவே முக்கியம். அந்தப் பொண்ணுக்குத் தமிழ் தெரியுமா?  தமிழ் தெரிஞ்சா, இல்லல்ல அதை விட அந்தப் பொண்ணோட அப்பா, அம்மாக்குத் தமிழ் தெரியுமானா, அவங்கள் எங்க ப்ளாகர் ஃப்ரென்ட் “முத்து நிலவன் ஐயா” அவரோட புத்தகம் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே” http://valarumkavithai.blogspot.com/2014/06/blog-post_16.html படிக்கச் சொல்லு.  புரிஞ்சுக்க “வாசிக்க” இல்ல “படிக்க” சொல்லு.

“நிச்சயமா...ஓகேப்பா..அப்புறம் கூப்பிடறேன்.”

      உரையாடல் முடிந்தது.  ஆனால், என் சிந்தனைகள் தொடர்ந்தன.  இந்தப் ப்ளஸ் 2 தேர்வுதான் நம் வாழ்க்கையையே முடிவு செய்வது போல், பல மாணவச் செல்வங்களும், பெற்றோர்களும் முடிவுக்கு வருகின்றனர்.  

    +2 என்பது மிகவும் முக்கியம் தான். ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்வி, தொழில், சமூக அந்தஸ்து, போன்ற பலவற்றை நிர்ணயிக்க. ஏன் அதன் முடிவுகள் நம் வாழ்க்கையை, எதிர்காலத்தையே கூட மாற்றி அமைக்கலாம். என்றாலும் அதுவே முடிவல்ல. தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை, குறைவான மதிப்பெண்கள் என்றால் தான் விரும்பியத் துறை அல்லது தேவையானத் துறை கிடைக்காமல் போவதனால்  ஏற்படும் விரக்தி என்று. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எண்ணங்களை மனதில் வாங்காமல், தாங்கள் நினைக்கும் துறையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குழந்தைகளை வற்புறுத்துதல் என்று ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு தொடர்கதையாகி வருகின்றது. 

      மகனுக்கு அவன் நினைத்தது தற்போது நடக்கவில்லை. நான் அவனுக்குச் சில நட்புடனான அறிவுரைகள் சொல்லி, மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். 

      “அம்மா, டோன்ட் டாக் ஃபிலாசஃபி டு எ பெக்கர்” இதை நீதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றாய். னௌ ஐ யாம் அ பெக்கர்” (Don’t talk philosophy to a beggar.  Now I am a beggar)

      “ஆம்! பசியோடு இருக்கும் ஒருவரிடம்  தத்துவம், அறிவுரைகள் பேசிக் கொண்டிருந்தால், அவரது அறிவிற்கு எட்டாதுதான். (பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்த பின்னும் கூட, சில ஆசிரியர்கள் பாடம்/அறிவுரை நடத்திக் கொண்டே போவார்கள், மாணவச் செல்வங்களின் பொறுமையை சோதிக்கும் அளவு. இந்த இடத்தில் வள்ளுவனார்???!!!) அது பல நாட்கள் பட்டினியாக இருப்பவர்க்குத்தான். நீ இப்போது பெக்கர் அல்ல.  உன் அறிவு மழுங்கிவிட்டதா? இல்லையே.  முயற்சி செய். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றாயோ அதற்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள். அடித்தளம் உறுதியாக இருந்தால், அதனை மேலே உயர்த்துவது எளிது.  நிச்சயமாக நீ விரும்புவது கிடைக்கும். மனதை சமநிலையில் வைத்து யோசித்துப் பார்.  தீர்வுகள் பளிச்சிடும். வாழ்க்கையைக் கடக்க பொறுமை தேவை.  உனக்கு அது நிறையவே இருக்கின்றதே.  இழந்திடாதே”

      நம் வாழ்க்கை கல்வி சார்ந்ததென்றாலும், தொழில் சார்ந்ததானாலும், தனிப்பட்ட வாழ்க்கையானாலும் எல்லாம் கலந்தது தானே வாழ்க்கைப் பாடம்! கொடுக்கப்பட்ட ஆறறிவிற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், நம்மை முதலில் ஒரு நல்ல மனிதனாக, மனித நேயம் மிக்க மனிதனாக, நல்ல விதத்திலான ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கிக் கொள்ளுவதும், அடுத்தத் தலைமுறையினருக்கும் அதைக் கற்பித்து வழி நடத்துவதும்தானே நமது தலையாய கடமை!

      பெற்றோர்களும், பெரியவர்களும், தங்கள் குழந்தைகளைத் தங்களது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவும், வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அந்தத் திறனை வளர்க்கவும் கற்றுக் கொடுத்திடல் வேண்டும். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் அறிவையும், எண்ணங்களையும் சொல்லிக் கொடுத்திடல் வேண்டும். ஒரு சிலவற்றைக் கற்றுக் கொடுத்திடலாம்.  சிலவற்றை பெற்றோர்களும், பெரியவர்களும் மாதிரிகளாக இருந்து வழி நடத்த வேண்டி வரும்.  சிலவற்றைப் போதிக்க வேண்டிவரும்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான் அமைந்துள்ளது நமது பாடத் திட்டங்கள். குழந்தைகளைப் பாட புத்தகப் புழுக்களாகவும், ஆமையும், முயலும் கதையில் வருவது போன்ற ஓட்டப்பந்தயம் போன்றும், வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் ஒன்றாக மட்டுமே அமைந்துள்ளது. சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கு உதவுவதாக இல்லை. வாழ்க்கைப் பாடம் என்பது எளிதல்ல. பல சிக்கல்கள் நிறைந்தது.  முள்ளினால் ஆன பாதைகளும் வழியில் உண்டு.  அவற்றை எப்படிக் கடந்திட வேண்டும் என்பதுதான் கற்க வேண்டிய ஒன்று. அனுபவப் பாடம் மிகவும் இன்றியமையாதது. வெற்றி, தோல்விகளுக்கு நாம் அளவிற்கு மீறிய  முக்கியத்துவம் கொடுத்தால், அவை பொறாமை, ஆணவம், கர்வம், கோபம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற, ஒரு மனிதனின் நல்ல ஆளுமையை வளரவிடாமல் தடுக்கும் குணங்களுக்கு வழி வகுக்கும்.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் சொல்லுவதைக் கேட்டிருப்போம்.  வாழ்க்கையில் எதை ஜெயிக்க வேண்டும்? யாருடன் போட்டி போடுகின்றோம்? படிப்பு என்றால் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், அவளை/அவனை விட அதிக மதிப்பெண் என்று போட்டியாகச் சொல்லலாம்.  பந்தயம் என்றாலும் ஜெயித்தல் என்பது பற்றிப் பேசலாம்.  அலுவலகம் என்றாலும் கூட ஜெயித்தல் என்பது பதவி உயர்வு என்பதன் அடிப்படையில் பேசலாம்.  ஆனால், வாழ்க்கையில்/ தனிப்பட்ட வாழ்க்கையில், எதை?  யரை ஜெயிப்பதற்காக, இல்லை தோற்கடிப்பதற்காக வாழ்கின்றோம்? நம் பெற்றொருடன்? கணவன், மனைவிக்குள் போட்டி? இல்லை குழந்தைகளுடன் போட்டியா? வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லையே! ஒப்பிட்டுப் பார்த்து வாழ்தல், ஒருவரின் வாழ்க்கையோடு மற்றொருவரின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வாழ்தல் என்பது மிகவும் கீழ்தரமான ஒன்று. அதை ஒரு அளவு கோலாக வைத்து வாழ்தல் மிகவும் அறிவிலித்தனமான செயல். எது அளவு கோல்? அதற்கு ஒரு எல்லை இருக்கின்றதா?

கல்வியானாலும், அலுவலகமானாலும், தொழிலானாலும், நாம் மற்றவரை விட உயர்ந்து முன்னே சென்றால், அதனை வெற்றி என்று சொல்லுகின்றோம்.  எதை வைத்து அளக்கின்றோம்? சரி, அந்த வெற்றி நிலையானதா?  எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? நிரந்தரமாக? இல்லை.  இல்லவே இல்லை.  ஒன்றில் வெற்றி என்று சொல்லப்படலாம்.  வேறொன்றில் அது தோல்வியைத் தழுவலாம். அதாவது சமுதாயத்தின் பார்வையில், அளவு கோலில். வெற்றி என்று சொல்லி பெறுபவர்கள் எல்லோருமே, என்றுமே முதல் நிலையில் இருப்பதில்லை. சறுக்கல்களும் நேரிடுவதுண்டு. எத்தனை பேர் இதனால் மன அழுத்தம் என்பதற்கு ஆளாகி, மன நிலை பிறழ்ந்து  போகின்றனர்!

வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும். எனவே நாம் நமது மன நிலையை சம நிலையில் வைத்துக் கொண்டு, நமது வாழ்க்கைக்கான இலட்சியங்கள், கொள்கைகள், என்று நாமே வரையறுத்துக் கொண்டு, அதை நோக்கிப் பயணிக்கும் சமயம், அன்புடனும், மனித்ததுடனும், நேர்மையுடனும் பயணித்து, மனம் தளராமல், சோர்வடையாமல் எதிர்வரும் இடர்களை, முட்டுக்கட்டைகளைத் தைரியமாக எதிர்கொண்டு, தகர்த்து வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தச் சூழலிலும் நீந்தி, அனுபவித்து, மகிழ்வுடன் வாழக் கற்போம், அடுத்தத் தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுப்போம்! வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே!  செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!

Image result for SUCCESS AND FAILURE IN LIFE
- கீதா

படங்கள் : courtesy -  google images

46 கருத்துகள்:

  1. சமுக சிந்தனைக்குறிய பதிவு வெற்றி-தோல்வி 80 நமது வாழ்வின் கடைசிவரை தொடந்து கொண்டேதான் இருக்கும்
    கடைசிவரை வாழ்வின் பாடம் படித்துக்கொண்டேதான் இருப்போம் இதில் எல்லை 80 இல்லை.
    எவ்வளவுதான் உழைத்து சம்பாரித்து செல்வந்தனாக வாழ்ந்தாலும் நமது மரணகாலம் வரை எந்த ஒரு மனிதரும் நம்மை துரோகம் செய்து விட்டாய் என்று சொல்லாமல் வாழ்ந்து விட்டோம் என்றால் அதுதான் முழுமையான வெற்றியாக நான் கருதுகிறேன்
    நமது மரணத்துக்குப்பிறகும் நமது பெயர் வாழ்ந்து கொண்டு இருந்தால் அதுவும் வாழ்வின் முழுமையான வெற்றியே....
    மனிதனாக வாழ்வோம்
    மனிதநேயம் காப்போம்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி! முதலில் ஓடோடி வந்து அழகான கருத்தையும் பதிந்தமைக்கு மிக்க நன்றி! ஆம்! மரணம் வரை பாடம் தான்...கற்றல்தான். கட்டுப்பாடுகளற்ற, சுயநலமில்லாத அன்பு இருந்துவிட்டால் (அன் கண்டிஷனல் லவ்) வாழ்க்கையை எளிதாக அனுபவிக்கலாம்.....

      மிக்க நன்றி! ஜி!

      நீக்கு
  2. பிறந்த நாளை நாம் கொண்டாடுவதை விட ,நாம் இறந்த பின் அடுத்தவர்கள் கொண்டாட வேண்டும் ,அதுதான் வாழ்க்கையின் வெற்றி !

    பதிலளிநீக்கு
  3. "பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்த பின்னும் கூட, சில ஆசிரியர்கள் பாடம்/அறிவுரை நடத்திக் கொண்டே போவார்கள், மாணவச் செல்வங்களின் பொறுமையை சோதிக்கும் அளவு. இந்த இடத்தில் வள்ளுவனார்???!!!" ______ ஹா ஹா ஹா ! நானும்கூட கவனித்திருக்கிறேன். பசி நேரத்தில் மாணவன் என்ன நினைப்பான் என்று ஆசிரியர் நினைத்திருந்தால் இந்த வேலை செய்யமாட்டார்.

    கட்டுரையைப் படித்ததும், தொலைதூரத்தில் இருந்தாலும், தேர்வெழுதிய மாணவர்களை நினைத்து கொஞ்சம் கவலை வரத்தான் செய்கிறது. இத்துடன் வாழ்க்கை முடிந்துவிடப் போவதில்லை என அவர்களுக்குள் ஒரு எண்ணம் வரவேண்டும். கீதா, ஆல் த பெஸ்ட் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சித்ரா! மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  4. அம்மா ஐம்பது(??) அவர்களை அருமையான தலைப்பில் ஆழமான சிந்தனை மலர்களின் மனம் வீச தூண்டிய தொலைபேசி "பத்துக்கு" பத்துக்கு பத்து மார்க்கு.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! பத்துக்கு பத்திற்கும்...ஐம்பது என் வயது என்று யார் சொன்னது....?

      நீக்கு
  5. எதை எதையோ குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் நாம் தோல்வியும் வெற்றிக்கான வழிகளில் உள்ள ஒரு படிதான் என்பதைச் சொல்லிக் கொடுக்க மறுத்து விடுகிறோம். கல்வி முறையை மாற்ற வேண்டும் என்ற குரல் நீண்ட நாட்களாகவே ஒழித்து வருகிறது. இன்னும் ஒரு உருப்படியான தீர்வு அதற்குக் கிடைக்கவில்லை. மதிப்பெண்கள் பெரிதாகப் போனதால்தான் பீகாரில் பெற்றோர்களே சுவரேறி நின்று பிட் கொடுத்தார்கள். உலகளவில் அசிங்கப் பட்டுப் போனோம்.

    இந்த வருடமும் கணக்குப் பரீட்சை முடிந்த மறுநாளே ஒரு மாணவன் அந்தத் தேர்வை தான் சரியாக எழுதவில்லை என்று தூக்கில் தொங்கியதாகச் செய்தித் தாளில் படித்தோம். ஆரம்பப் பள்ளி நிலையிலேயே ஸ்ட்ரெஸ் ரிலீவ் செய்யும் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும். மற்ற பாடக் காரர்கள் சென்டம் முக்கியம் என்று வலியுறுத்தினாலும், மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று சொல்லவும் ஒரு வகுப்பு ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஏற்படுத்தப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அழகான கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி. இது போன்ற தற்கொலைகள் மனதை வேதனைப்படுத்துகின்றன...அதனால் தான் இந்தப் பதிவு. மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்பதாலும் தான்...

      நீக்கு
  6. வணக்கம்
    நல்ல தலைப்புஎடுத்து எழுதிய விதம் சிறப்பாக உள்ளது.. உண்மைதான்
    அதாவது பாடலில் கூட சொல்லுகிறார்கள்- கருணையுள்ள மனதில்தான் இறைவன் இருக்கிறான் என்பது போலவும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருந்தால் மனித வாழ்வு சிறப்படையும“ த.ம4
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  7. வாழ்வின் துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு துவளாது, எதிர் கொண்டு நின்று போராடி வெற்றி பெறத்தான் கற்றுத்தர வேண்டும் இதுவே சிறந்த வாழ்க்கைக் கல்வியாகும்
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  8. சர்ச்சிலின் பொன்மொழி கட்டுரைக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. வாழ்க்கை கல்வி முக்கியம் என்பதை இதை விட சொல்வதற்கு என்ன இருக்கிறது...? அருமை... சிறப்பான ஆலோசனைகள்...

    பதிலளிநீக்கு
  10. எட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பார்கள். கல்வி மட்டும் வாழ்க்கைக்கு உதவாது வாழ் கைப்பாடங்களையும் நல்லொழு க்கத்தையும் கூட கற்றுக் கொடுக்கவேண்டும். வீட்டில் கற்றுக் கொள்ள மாட்டார்கள் எல்லோரும். அது பெற்றோரின் கடமை நமக்கென்ன என்று ம் சொல்லக்கூடாது இல்லையா சகோ. இருவருக்கும் பங்கு உண்டு தானே. முன்னர் எல்லாம் ராஜகுமாரர்களை ரிஷிமார்கள் அழைத்துச் சென்று அனைத்தையும் கற்றுக் கொடுத்து தானே பெற்றோரிடம் அனுப்புவார்கள். கல்விகற்கும் போதே இவற்றையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை ஈசியாக இருக்கும் இல்லையேல். ரொம்ப நொந்து போவார்கள் வாழ்க்கைப் படத்தை ஒவொன்றாக படிக்க மரணம் நெருங்கினாலும் படித்து முடியாது.all the best for every body. எனக்கும் தான் சகோ நான் என்ன படித்து முடித்து விட்டேனா உங்களில் ஒருத்தி தானே நானும் ஹா ஹா ... சேர்ந்தே படிப்போம். நல்ல விடயம் எடுத்து வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. மிக்க நன்றி கஹ்கோதரி தங்களின் அழகான விரிவான கருத்திற்கும், வாக்கிற்கும்! வாழ்த்திற்கும் நன்றி!

      நீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    தேர்வு காலத்தில் நல்ல பல கருத்துகளை... ,பயனுள்ள ஆலோசனைகளைச் சொன்னது பாராட்டுதலுக்குரியது.

    பெற்றோர்களும், பெரியவர்களும், தங்கள் குழந்தைகளைத் தங்களது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவும், வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அந்தத் திறனை வளர்க்கவும் கற்றுக் கொடுத்திடல் வேண்டும்.


    வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும்.

    “குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக்கூடாது...அதோ
    மழைக் காலம் வந்து கொண்டிருக்கிறது
    குளம் நிறைந்திருக்கிறதே என்று மீன் குதிக்கக்கூடாது... அதோ
    வெயில் காலம் வந்து கொண்டிருக்கிறது...”
    கண்ணதாசன் கூறுகிறார்.

    மேலும் அவர்....“ இறைவா! என் நிலையையும் நினைப்பையும் சமப்படுத்திக்கொண்டே இரு. நீ விரும்பினால் என் நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்திவிடாதே ! என்று கவியரசர் கூறுவது நினைவிற்கு வந்தது.
    இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும்.

    நன்றி.
    த.ம. 9,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் விரிவான கருத்திற்கு!

      நீக்கு
  13. நான் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் தேடி அலைந்த விஷயங்கள் எல்லாம் இப்போது முக்கியமாக தோன்றவில்லை. இன்று ஒரு விஷயத்தில் சிறு சறுக்கல் ஏற்படலாம், இருந்தாலும் அது நம்மை இன்னும் மேம்பட்ட இன்னொரு விஷயத்திற்கு வழிகாட்டும் என்று நம்பிக்கை எப்போதும் உண்டு. So Take the life as it comes! என்று வாழ பழகிக் கொண்டால் என்றும் சந்தோஷமே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான க்ருத்து! நான் எப்பொதும் சொல்வது ! அதே போல் Accept people as they are! இதுவும் நான் அடிக்கடிச் சொல்வதுண்டு...

      நீக்கு
  14. அன்புச் சகோ..!
    மிக முக்கியமான இடுகை இது.
    கல்வி என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை கசக்கின்ற ஒன்றாகவே காட்டப்படுகிறது.
    நேற்று என் வீட்டின் எதிர்ப்பறமுள்ள பெண்மணி ( மெத்தப்படித்தவர் தான் ) சோறுண்ண அடம் பிடித்த குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ இரு இரு இன்னம் ஒரு இரண்டுமாசம் தான்... உன்னைக் ஸ்கூல்ல சேத்ததுக்கு அப்பறம்தான் நீ சரிப்பட்டு வருவ“
    வாயில் ஒரு உருண்டையை விழுங்காமல் வைத்துக் கொண்டிருந்த குழந்தை வாயை இன்னும் அகலமாகத் திறந்து இன்னொரு உருண்டையையும் வாங்கி வெடுக் வெடுக் கெனக் கண்ணீருடன் விழுங்கத் தொடங்கியது.
    மணி அடித்த உடன் வீட்டிற்குச் சந்தோஷமாக ஓடிவரும் குழந்தைகள், விடுமுறை என்றால் துள்ளிக்குதித்து வீடு வரும் குழந்தைகள் இவர்கள் போதும் பள்ளி பற்றிய அவர்களின் மனதை எடையிட.....!
    ////(பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்த பின்னும் கூட, சில ஆசிரியர்கள் பாடம்/அறிவுரை நடத்திக் கொண்டே போவார்கள், மாணவச் செல்வங்களின் பொறுமையை சோதிக்கும் அளவு. இந்த இடத்தில் வள்ளுவனார்???!!!)////
    அநேகமாக,

    நீங்கள்

    செவிக்குணவு இல்லாத போது ..............

    என்பதைத் தான் சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    ஆசிரியர் ஊட்டுவது சுவையானதா கசப்பானதா என்பதை மாணவர் அல்லவா தீர்மானிக்க வேண்டும்.:))
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரரே! அழகான தங்களது கருத்திற்கு. ஐந்த நிகழ்வு மனதை வேதனிக்கின்றாது. இது போல பல தாய்மார்கள் இருக்கின்றார்கள். இருந்தார்கள் எனது உறவினிலும் நான் சொல்லப் போக அது மனவருத்தத்தை அளித்து....உறவே இல்லாது போயிற்று....ம்ம்ம்ம்

      செவிக்கு உணவில்லாத போது....அதே தான். நீங்கள் சொல்லியதும் சரியே சுவையாக இருந்தால் உணவு மறந்து விடும் இல்லை என்றாலும் கவலை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட ஆசிரியர்கள் எங்களுக்கு பலர் இருந்தார்கள். அதன் பின் ..ம்ம்ம்ம்ம் இல்லை என்பது வேதனைதான். இப்போது தங்களைப் போன்றோர் இருந்தால் உணவே வேண்டாம்தான்...

      நீக்கு
  15. அன்பின் கீதா, துளசிதரன்முதலில் ஒரு அருமையான கட்டுரைக்கு வாழ்த்துக்கள். என் பேரனின் வலைக்குச் சென்று நீங்கள் எழுதி இருந்த கருத்துக்களையும் படித்தேன் ஒரு புரிதல் மிக்கத் தாயாராய்த் தெரிந்தீர்கள். எந்த வேலைக்கும் தேர்வுக்கும் சென்றாலும் என் மூத்த மகன் என்னிடம் இந்த All the best என்னும் வார்த்தைகளை எதிர்பார்ப்பான். இதை படிக்கும் போது 2011 -ல் நான் எழுதி இருந்த வெற்றியும் தோல்வியும் என்னும் பதிவு நினைவுக்கு வந்தது சுட்டி தருகிறேன். படித்துப் பாருங்கள் மீண்டும் வாழ்த்துக்களுடன்
    http://gmbat1649.blogspot.in/2011/03/blog-post_07.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார் தங்கலின் பாராட்டிற்கு.

      மிக்க நன்றி சார் ...- தங்களின் பேரனும் நன்றாக எழுதுகின்றார். இப்போதும் நானும் மகனும்மிக நல்ல நண்பர்கள் சார். மிக்க நன்றி!

      நீக்கு
  16. ஏட்டு சுரக்காய் கறிக்குதவாது, தங்களின் இந்த பதிவு பொருத்தமான பதிவு.

    பதிலளிநீக்கு
  17. /// வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று பலரும் சொல்லுவதைக் கேட்டிருப்போம். வாழ்க்கையில் எதை ஜெயிக்க வேண்டும்? யாருடன் போட்டி போடுகின்றோம்? படிப்பு என்றால் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண், அவளை/அவனை விட அதிக மதிப்பெண் என்று போட்டியாகச் சொல்லலாம். பந்தயம் என்றாலும் ஜெயித்தல் என்பது பற்றிப் பேசலாம். அலுவலகம் என்றாலும் கூட ஜெயித்தல் என்பது பதவி உயர்வு என்பதன் அடிப்படையில் பேசலாம். ஆனால், வாழ்க்கையில்/ தனிப்பட்ட வாழ்க்கையில், எதை? யரை ஜெயிப்பதற்காக, இல்லை தோற்கடிப்பதற்காக வாழ்கின்றோம்? நம் பெற்றொருடன்? கணவன், மனைவிக்குள் போட்டி? இல்லை குழந்தைகளுடன் போட்டியா? வெற்றி, தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லையே! ஒப்பிட்டுப் பார்த்து வாழ்தல், ஒருவரின் வாழ்க்கையோடு மற்றொருவரின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து வாழ்தல் என்பது மிகவும் கீழ்தரமான ஒன்று. அதை ஒரு அளவு கோலாக வைத்து வாழ்தல் மிகவும் அறிவிலித்தனமான செயல். எது அளவு கோல்? அதற்கு ஒரு எல்லை இருக்கின்றதா?
    /////

    மிகவும் சிந்திக்க வைத்த கேள்விகள். வாழ்க்கைக் கல்வி பற்றிய முழுமையான பார்வை. வாழும் காலம்வரை பரிட்சையைத்தான் எதிர்நோக்கிறோம். எனவே பதட்டமின்றி எதிர்கொள்வோம். தன்னம்பிக்கை அளித்த பதிவு நன்றி கீதா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு! விரிவான பின்னூட்டத்திற்கு..

      நீக்கு
  18. " பெற்றோர்களும், பெரியவர்களும், தங்கள் குழந்தைகளைத் தங்களது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவும், வாழ்க்கையை எதிர்கொள்ளவும், அந்தத் திறனை வளர்க்கவும் கற்றுக் கொடுத்திடல் வேண்டும். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் அறிவையும், எண்ணங்களையும் சொல்லிக் கொடுத்திடல் வேண்டும். ஒரு சிலவற்றைக் கற்றுக் கொடுத்திடலாம். சிலவற்றை பெற்றோர்களும், பெரியவர்களும் மாதிரிகளாக இருந்து வழி நடத்த வேண்டி வரும். சிலவற்றைப் போதிக்க வேண்டிவரும். " என்ற வழிகாட்டலை வரவேற்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கட்டுரை... பாராட்டுகள்.

    நல்ல கருத்துகள். ஒவ்வொரும் படிக்க வேண்டிய கட்டுரை. தோல்வியில் துவண்டு விடும் நிலை தான் பலருக்கும். “வாழும் வரை போராடு..... வழி உண்டு என்றே பாடு” எனும் பாடல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்! நல்லதொரு பாடல் !

      நீக்கு
  20. //வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும். எனவே நாம் நமது மன நிலையை சம நிலையில் வைத்துக் கொண்டு, நமது வாழ்க்கைக்கான இலட்சியங்கள், கொள்கைகள், என்று நாமே வரையறுத்துக் கொண்டு, அதை நோக்கிப் பயணிக்கும் சமயம், அன்புடனும், மனித்ததுடனும், நேர்மையுடனும் பயணித்து, மனம் தளராமல், சோர்வடையாமல் எதிர்வரும் இடர்களை, முட்டுக்கட்டைகளைத் தைரியமாக எதிர்கொண்டு, தகர்த்து வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு, எந்தச் சூழலிலும் நீந்தி, அனுபவித்து, மகிழ்வுடன் வாழக் கற்போம், அடுத்தத் தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுப்போம்! வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே! செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!//

    தேர்வு நேரத்தில் அருமையான பதிவு. மொத்த வாழ்க்கைக்குமான அவசிய கருத்துக்களை ஒத்த இடுக்கையில் சொல்லிவிட்டீர்கள்.
    த ம 12

    பதிலளிநீக்கு
  21. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதே தவறு என்பது என் கருத்து! அடுத்த வீட்டு பிள்ளை நிறைய மதிப்பெண் எடுத்ததே! டாக்டருக்கு படிக்கிறதே என்று பிள்ளைகளை துன்புறுத்தாமல் அவர்களுடைய திறமையை அறிந்து அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வைத்தல் நன்று! சிறப்பான ஆலோசனை பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  22. ஆசானே...

    இந்த பதிவை படித்ததும்,

    " அவர்களாக வேண்டும் இவர்களாக வேண்டும் என நினைத்து போட்டியில் இறங்கி வாழ்க்கையை வீணாக்காதீர்கள் ! நீங்களே இயற்கையின் தனி பெரும் அற்புதம் என்பதை உணருங்கள் ! "

    என்ற ஓஷோவின் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன !

    யாருடன் என்றே தெரியாத ஒரு மாய போட்டியில் ஓடி ஓடி வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறோம் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! நல்லதொரு கருத்தை முன் வைத்திருக்கின்றீர்கள் நன்றி!

      நீக்கு
  23. //ஒவ்வொரு வருடமும் இந்த நேரத்தில் மன உளைச்சல் ஒரு தொடர்கதையாகி வருகின்றது.//

    அதேதான் கீதா இங்கும் ..2017 இல் தான் மகளுக்கு A levels ..இப்ப இருந்தே அதை குறித்த ஒரு பயம் எல்லா மாணவருக்கும் .தோல்வி வெற்றி சகஜம் வாழ்வில் ..இதை பெற்றோர் பிள்ளைகளுக்கு புரிய வைக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. MOCK EXAM is an examination,, taken as practice before an official examination
      in general students usually drastically improve from the mocks, Many students make such an improvement from their mocks to the real exam .if a child gets grade E in yr 9 by yr 11 she or he will be squeezed ! moulded to get Aor B...
      they determine ones predicted grade that is sent off to their College/ sixth forms..its really very hard for some, some kids have become depressed ..some try to take their own life:(
      i don't know why such a fuss for exams ..and nowadays here too schools are eager to boast about their results ..
      now my daughter is in yr 9 she will start 10 in september .she is going to write gcse in yr 11.but she has to take mock exams by 3rd week of april .. ..but i will take her out for next few days bcos i am concerned about her.. she's repeatedly talking about A STARS ...!

      நீக்கு
    2. Yeah really i feel why such a fuss! I have heard about UK education ...really sad to hear even in UK schools are eager to boast about their results.

      All the best for your daughter! Angelin. All the best for her mock exams too. Sure she will do well and come out with flying colours! May God Bless her!

      This all the best is not only for her exams! For her life too!

      நீக்கு
  24. //வெற்றி, தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அவை காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டேதான் இருக்கும். இவை நமது தலையில் ஏறாமல் கவனமாக இருத்தல் வேண்டும்.

    வாழ்க்கை வாழ்வதற்கே! ஆல் த பெஸ்ட்! மாணவச் செல்வங்களே! செல்வங்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தான்!! ஆம்! வாழ்க்கைப் பாடங்களைக் கற்று வாழத்தான்!//

    தன்னம்பிக்கையூட்டும் தங்கமான எழுத்துக்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னம்பிக்கையூட்டும் தங்கமான எழுத்துக்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். //

      மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கு! உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கின்றன. மிக்க நன்றி!

      நீக்கு