சனி, 3 ஜனவரி, 2015

மாணவனை அடித்த ஆசிரியர் 6 மாதங்களாக மாலத்தீவுச் சிறையில்!!!

Another Malayali teacher jailed in Maldives

ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களில்  ஏராளமானோர், நம் நாட்டிலுள்ளப் பள்ளிகளில் சேர இயலாததாலும், சேர விரும்பாததாலும், அரேபிய நாடுகள், மாலத்தீவுகள், பூட்டான், ஆப்பிரிக்க நாடுகள் போன்ற தூர நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பள்ளிகளில் கல்வி கற்பிப்பதுண்டு.  அங்கெல்லாம் நம் நாட்டில் கிடைப்பதை விட நல்ல ஊதியங்கள் கிடைத்தாலும், அங்கெல்லாம் உள்ள ஆசிரிய மாணவ உறவுகள், ஆட்டோ டிரைவர் மற்றும், ஆட்டோ பயணிகளுக்கு இடையே உள்ள உறவு போல் வலுவில்லாத, தற்காலிக உறவுகளே! அதைப் புரிந்து கொண்டு தானுண்டு தன் வேலை உண்டு என்றும், தன் வேலை என்பது மாணவர்கள் விரும்பும் விதத்தில், அவர்களுக்கு ஒரு விதத்திலும் சிரமம் ஏற்படுத்தாமல், அதே சமயம் அவர்கள் சிரமப்படுத்தினாலும் அதை எல்லாம் பொருத்துக் கொண்டு அஹிம்சாவாதியாக அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும். அல்லாமல் அவர்கள் வகுப்பில் கவனிக்காமல் இருக்கின்றார்கள் என்றோ, ஆசிரியரை மனம் நோகும் விதம் கேலி செய்கிறார்கள் என்றோ, அவர்களது கையிலுள்ள அழுகிய தக்காளி மற்றும் முட்டைகளை ஆசிரியர்கள் மீது வீசுகின்றார்கள் என்றோ....? (இப்படி எல்லாம் மாலத்தீவு அரேபிய நாடுகளில் உள்ள சில பள்ளிகளில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது) அவர்களிடம் கோபமாகப் பேசி, கோபத்தில் அவர்கள் மீது கையை ஓங்கினால், நம் ஜெயசந்திரன் மொக்கேரிக்கு நேர்ந்த கதிதான். (பிரபாகரன் எனும் ஆசிரியரும் சில மாதங்கள் முன் மாலத்தீவு சிறையில்....)

கோழிக்கோடு, குற்றியாடியைச் சேர்ந்த ஜெயசந்திரன் மொக்கேரி, நல்ல ஒரு எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதியும் கூட. கடந்த 2007 முதல் மாலத்தீவு கல்வி இலாக்காவின் ஃபாப்பு சியலி அட்டோளியில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணி புரிகின்றார்.  வகுப்பில் எப்போதும் எல்லா ஆசிரியர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனை பொறுமையிழந்து அடிக்கப் போய், அதன் காரணமாக கடந்த 6, 7 மாதங்களாக மாலத்தீவுச் சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கிறார்.  ஸ்கூல் அதிகாரிகள் வழக்கைத் திசை திருப்பி மாணவரை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லி ஜெயச்சந்திரனுக்குக் கடுமையான தண்டனைக் கிடைக்கப் பெற முயல்கின்றார்களாம்.  சம்பவம் நடந்த மறு நாளே ஜெயச்சந்திரன் மாணவரின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசி வழக்குத் தொடர வேண்டாம் என்று அவர்கள் கையால் எழுதி வாங்கி போலீசாருக்குக் கொடுத்த பின்னும் பள்ளி அதிகாரிகளின் தலியீட்டால் ஜெயச்சந்திரன் அடுத்த நாளே கைது செய்யப்பட்டிருக்கிறார்.  ஜெயச்சந்திரனின் மனைவி மாதம் இரு முறை அவருடன் பேச முடிந்தாலும் வழக்கைப் பற்றியோ விசாரணையைப் பற்றியோ தேவையான விவரங்கள் கிடைப்பதில்லை.  ஜெயச்சந்திரனின் வழக்கறிஞர், ஜெயச்சந்திரனுக்கு எதிராகப் பள்ளி அதிகாரிகள் புதிய புதிய குற்றங்கள் சுமத்தி வழக்கைத் திசை திருப்ப முயல்வதாகச் சொல்கிறார்.  இப்படி, மாலத் தீவு பள்ளி அதிகாரிகள் கடந்த 7 ஆண்டுகளாக அங்கு ஆசிரியராகப் பணியாற்றிய ஜெயச்சந்திரனைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றார்கள்.  அப்பள்ளியில் அவருடன் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் ஜெயச்சந்திரனுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அநீதியைப் பற்றி மாலத்தீவு ஹை கமிஷனருக்கு மனு கொடுத்தும் பலனில்லை.  ஜெயச்சந்திரனின் மனைவி, ஜெயச்சந்திரன் மாலத்தீவில் கைது செய்யப்பட்டதும், கேரள முதல்வருக்கு ஒரு மனு கொடுத்தும் இது வரை பலன் ஒன்றும் இல்லை. 

இந்திய அரசு இச்சம்பவத்தில் ஈடுபட்டு அந்த ஆசிரியரைக் காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும்.  நம் நாட்டவர்களும், பிற நாடுகளுக்குச் செல்லும் போதும், அங்கு வாழும் போதும் அந் நாட்டின் சட்டங்களைப் புரிந்து, அங்கு நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பது சிரமம் என்பதை உணர்ந்து பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். Prevention is better than cure! என்பதை மறக்கக் கூடாது.


இங்கிலாந்திலும் இந்த அளவு மனிதாபிமானமற்ற செயல் என்று சொல்ல முடியாத, ஆனால் இது போல் அந்நிய நாட்டின் சட்டம் மறந்ததால் அஜித் அக்வால் என்பவருக்கு அவரது பதவி பறி போயிருக்கின்றது.  பஞ்சாபைச் சேர்ந்த, ஆனால் தற்போது இங்கிலாந்தில் வாழும், அஜித் அக்வால் டெர்பி நகராட்சி கவுன்சிலர் மட்டுமல்ல நீதிபதியும் கூட. விடுமுறைக்கு இந்தியா வந்த அவர் யாரோ சொன்னதைக் கேட்டு ஒரு ஏகே47 துப்பாக்கியைக் கையில் பிடித்தபடி ஒரு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க அது சமூக வலைத்தளங்களில் வர, அச்சம்பவம் விவாதமாகி, அதன் விளைவாக அவர் தன் தவறுக்கு வருந்துவதாக அறிக்கை விடுத்த பின்பும், பலனின்றி அவரது நீதிபதி பதவி பறி போய் விட்டது.  இப்படி நம்மவர்கள் பிற நாடு சென்று அங்கு வாழும் போது, அந்நாட்டின் சட்டங்களை அறிந்து அதை மதித்து மிகவும் கவனமாக அங்கு வாழும் வரை வாழ வேண்டும். அஜித் அத்வாலுக்குப் பறி போன நீதிபதி பதவி திரும்பக் கிடைக்க நாம் பிரார்த்திக்க வேண்டிய அவசியம் இல்லைதான்.  ஆனால், ஜெயச்சந்திரனுக்கு விடுதலை கிடைத்து அவர் தன் குடும்பத்தாருடன் ஒன்று சேர்ந்து வாழ நாம் பிரார்த்திப்போமே!  

48 கருத்துகள்:

  1. பள்ளி நிர்வாகமே அவரை பலி வாங்க நினைப்பது அநியாயம்...
    பாவம் அவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழ பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! அவர் விடுதலையாகி குடும்பத்துடன் இணைய பிரார்த்திப்போம்! மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. ஜெயச்சந்திரன் விடுதலையாகி குடும்பத்துடன் இணைந்து வாழ இறைவனை பிரார்த்திப்போம் வேறு என்ன செய்யமுடியும் நம்மால் இந்தப்பாலும் அரசாங்கத்தை இதற்க்கு மேல் ஒன்றும் கேட்க முடியாது.
    எத்தனையோ சூடானியர்கள், அபேபியர்கள்கூட இந்தியாவின் கல்விமுறைகண்டு இந்தியாவில் படிக்க வைக்கிறார்கள் இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு செலவு குறைவு நமது நாட்டில் பணமுதலைகள் வெளிநாட்டில் படிக்கவைப்பதே நமக்கு கௌரவம் என நினைக்கிறார்கள்.
    தமிழ் மணம் இணைப்புடன் வாக்கும் ஒன்று
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தும் சரியே. செலவு குறைவு கல்வியும் கிடைக்கின்றது என்று பல ஆப்பிரிக்கர்கள் கூட இங்கு வந்து கல்வி கற்கின்றார்கள். நல்ல கருத்தை முன் வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  3. வணக்கம் ஐயா
    கொடுமையான விசயம் ஐயா. அறிவைப் போதிக்கும் ஆசானுக்கு இப்படியொரு நிலையென்றால் மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும்? வேறு நாட்டிற்கு செல்லும் போது அந்நாட்டின் சட்டத்திட்டங்களை அறிந்து செயல்பட வேண்டும் இல்லையென்றால் துன்பம் தான் என்பதற்கு நீங்கள் மேற்சொன்ன இரு நிகழ்வுகள் சாட்சி. கண்டிப்பாக ஐயா ஆசிரியர் தன் குடும்பத்தாருடன் இனிய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம். விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றிகள். மனிதாபிமானம் தாங்கிய பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  4. அந்த ஆசிரியரின் நிலைமை யோசித்தாலே மனது சஞ்சலபடுகின்றது. அவர் விடுதலை செய்ய இறைவனை பிரார்த்திப்போம். ஆனால் அந்த இங்கிலாந்தை சேர்ந்தவர் சிறிது ஜாக்கிரதையாக இருந்து இருக்க வேண்டும். நீதிபதி பதவியில் இருப்பவர் AK 47 துப்பாக்கியோடு புகைபடத்தில் நிர்ப்பது நல்லது அல்ல என்றே தோன்றுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் தங்கள் கருத்த் சரியே நீதிபதி கவனமாக இருந்திருக்க வெண்டும்

      நீக்கு
  5. கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்று பெருமை பேசி வரும் வேளையில் இது போன்றதொரு இழி நிலையினை எண்ணி வேதனைத் தீயில் வெந்தே போனேன்.
    ஜெயச்சந்திரனுக்கு விடுதலை கிடைத்து அவர் தன் குடும்பத்தாருடன் ஒன்று சேர்ந்து வாழ நாம் பிரார்த்திப்போமாக!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு! நல்லதே நடக்கட்டும்!

      நீக்கு
  6. இதில் இந்திய அரசின் தவறு நிறைய; இங்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு போகும் மக்களுக்கும், ஏன் கோடையில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கும்--என்ன என்ன செய்யவேண்டும் செய்யக்கூடாது என்று அறிவுரை சொல்வார்கள். உதாரணமா போது இடத்தில் முத்தம் கொடுக்ககூடாது; துடைக்க பேப்பர் கிடையாது! கக்கூசை முதலில் செக் செய்யவேணும்; எல்லோரும் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க போவதில்லை. சவூதி செல்லவேண்டும் பெண்கள் உடைகட்டுப்பாடு பற்றி.
    இங்கும் அடித்தால் ஜெயில் தண்டனை கிடைக்கலாம். இதெல்லாம் அரசின் கடமை.
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நம்பள்கி! இப்படி விவரம் இல்லாமல் பலர் வெளி நாடுகளில் சென்று கஷ்டப்படுவதுண்டு.....பாவம்தான்! செல்லும் முன் தங்களை எஜுகேட் செய்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டு செல்வது நல்லதுதான்.

      மிக்க நன்றி நம்பள்கி!

      நீக்கு
  7. வணக்கம்
    சிறப்பான விவரிப்பு... உண்மைதான் தாங்கள் சொல்வது... அவரின் நீதிபதி பதவி கிடைக்க இறைவனை பிராத்திப்போம் பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. மிகவும் கண்டணத்திற்கு உரிய செயல் ஐயா
    ஆசிரியர் விடுவிக்கப்பட்டாகவேண்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும்! ஆம் விடுவிக்கப்பட்டால் நலல்தே! பார்ப்போம்...

      நீக்கு
  9. மனிதாபிமானம் குறைந்து கொண்டே வருகிறது...

    சில இடங்களில் "கிலோ எத்தனை விலை...?"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் டிடி! மனிதாபிமானம் குறைவது உண்மையே!

      நீக்கு
  10. சங்கடமான செய்தி...
    நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் ..

    பதிலளிநீக்கு
  11. குட்டி நாட்டின் சட்டம் கொதிக்க வைக்கிறதே !மத்திய அரசு உடனே தலையிட்டு அவரை உடனே அழைத்துவர முயற்சி செய்ய வேண்டும் !
    த ம6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பகவான் ஜி! ஆனால் அவர்களது சட்டம் அப்படி இருக்கும் போது...இங்கும் பல சமயங்களில் அப்படித்தானே நடக்கின்றது...குற்றமற்றவர் உள்ளேயும் குற்றம் புரிந்தவர்கள் வெளியேயும்....பார்ப்போம்...

      நீக்கு
  12. ஆசானே,
    வணக்கம். தாமத வருகையை மன்னியுங்கள் ஆசானே! இது வழக்கமாகிவிட்டது. இம்முறை விடைத்தாள்களில் நீண்டுபோயின பொழுதுகள்!
    இந்தச் சம்பவம் ஒரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடன் ஆசிரியப் பயிற்சி பெற்ற என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை ஞாபகப்படுத்தி விட்டது.
    கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்தவன் அவன்.
    அங்கு எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுமி அவனை விரும்பினாள்.
    அவனுக்கோ அதில் உடன்பாடில்லை. அவன் ஒரு லட்சியவாதி ... படிக்கும் போதே!!
    அச்சிறுமி அவள் வீட்டில் சொல்லி,அச்சிறுமியின் வீட்டில் இவனை மாப்பிள்ளை கேட்டுவர அவன் திட்டி அனுப்பிவிட்டான்.
    ஒருவாரம் கழித்து, அச்சிறுமியைப் பலாத்காரம் செய்துவிட்டான் என்று புகார் கொடுத்துவிட்டனர் சிறுமியின் பெற்றோர்.
    காவல் நிலையத்திலும் பேரம் நடந்தது. அவளைத் திருமணம் செய்வதாய் இருந்தால் வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொன்னார்கள்.
    அவனோ வழக்குப் பதிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டான்.
    அடுத்த கட்டமாக பத்திரிக்கை நிருபர்களை அழைத்து ஆசிரியர் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டார் என்று பேட்டி.
    அடுத்தநாள் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் செய்தி வந்தது.
    அச்சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும், நீதிபதி முன் தனியே விசாரிக்கப் பட்ட போதும் குற்றச்சாட்டு பொய் என்பது தெரியவந்தது.
    ஒரு வருட பணியிடை நீக்கத்திற்குப் பின் அவன் மேல் குற்றம் ஏதும் இல்லை என்ற தீர்ப்பு வந்து அவன் விடுவிக்கப்பட்டான்.
    அது பற்றி எந்தப் பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை.
    அவனைவிட அவன் குடும்பத்தினரும், நட்புகளும் பட்ட வேதனை அளவிட முடியாதது.
    அவன் அடைந்த அவமானத்திற்கு என்ன பதில் சொல்ல முடியும் இவர்களால்?
    வந்ததும் வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் சென்று விட்டான் அவன்.
    இன்னும் திருமணம் ஆகவில்லை அவனுக்கு..!
    ஆசிரியர்கள் யாரும் குற்றம் செய்யாதவர்கள் என்பது நான் சொல்ல வரும் கருத்தல்ல.
    பொத்தாம் பொதுவான இந்தக் கருத்தேற்றத்தில் பாதிக்கப்படும் நிரபராதிகள் படும் வேதனைகளுக்கு உரிய நியாயம் கிடைப்பதில்லை என்பது கொடுமைதான்.
    உங்களது பதிவில் மீண்டும் என் நண்பனின் நினைவு கண்முன் வந்துவிட்டது.
    நல்ல பதிவு ஆசானே!
    நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் கொடுமையாக இருக்கின்றதே! நிச்சயமாக என்னதான் தீர்ப்பு சாதகமாக வந்தாலும், அதுவரை அவர் அனுபவித்த வேதனைகளுக்குப் பதில் என்ன? ஆம்! உரிய நியாயம் கிடைப்பதில்லை. அது மிகவும் கொடுமையான விஷயம். இது நமது கோட்டுகளில், சமுதாயத்தில் நடக்கும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. மட்டுமல்ல நீதி வழங்க வேண்டிய கோர்ட் எதை வைத்து நீதி வழங்குகின்றது? வாதம், பிரதிவாதம் அப்படித்தானே! இந்த வாதங்களில் நிரபாரதியின் பக்கம் நியாயம் இருந்தும், வாதம் சரியான விதத்தில் எடுத்து முன் வைக்கப்படவில்லை என்றால் அங்கு அவர் குற்றவாளியாக்கப்படுகின்றாரே! யார் மீது தவறு? கோர்ட் இதற்கு என்ன பதில் சொல்லும்? நமது சட்டம் இதற்கு என்ன பதில் சொல்லும். அந்த இடத்தில் ஹுயூமன் வேல்யூஸ் பந்தாடப்படுகின்றதே! எனவே சட்டம் என்பதெல்லாம் வேஸ்டோ என்று தோன்றுகின்றது பல சமயங்களில்.....மனிதனுக்கு மனிதன் அன்பையும் நேயத்தையும் வளர்த்துக் கொண்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்....

      மிக்க நன்றி ஆசானே! நல்ல ஒருபின்னூட்டத்தைப் பகிர்ந்ததற்கு!

      நீக்கு
  13. அதிக ஊதியத்துக்காக அயல் நாடு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டாமா. ஒரு ஆசிரியராக பதிவுகளில் ஆசிரிய மாணாக்க உறவுகள் பற்றி நிறையவே எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயல்நாடு செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் தான். ஆனால் பல சமயங்களில் அங்கும் சட்டம் பொய்த்துவிடுகின்றதே! சார்!

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  14. ஆசிரியர் பணி இனி மிகவும் கடினமான ஒன்றாக அமையும்.மாணவர்களின் சேட்டைகள் எல்லை மீறுபவை. பேருந்து,ரயில்களில் அவர்கள் செய்யும் அட்டகாசங்களை அளவிடற்கரியது ஆசிரியர்கள் பலி கடாக்கள் ஆக்கப் படுவது தவிர்க்கப் படவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! உண்மையே! மாணவர்களின் நடத்தை சரியில்லாமல் போவது ஒரு அவல நிலை! அதைத் திருத்தும் ஆசிரியர்கள் பலிகடாக்கள்தான்....இந்த உண்மை சுடலாம்..உண்மை சுடத்தான் செய்யும்..மிகவும் சரியான கருத்து நண்பரே!

      மிக்க நன்றி!

      நீக்கு
  15. ஆச்சரியமான அதிர்ச்சிதரும் தகவல்
    நல்லது நடக்க நாங்களும் பிரார்த்திக்கிறோம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! ரமணி சார்! அதிர்ச்சியான செய்திதான். நலல்து நடக்கப் பிரார்த்திப்போம்....மிக்க நன்றி சார்!

      நீக்கு
  16. ஜெயச்சந்திரனுக்கு விடுதலை கிடைத்து அவர் தன் குடும்பத்தாருடன் ஒன்று சேர்ந்து வாழ நாம் பிரார்த்திப்போமே! //

    பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  17. தமிழகத்திலும் இந்த நிலைவர இன்னும் அதிக நாள் இல்லை என்றே தோண்டுகிறது. ஆசிரியர் தான் என்ற மனோபாவம் எவ்வளவு தவறோ அதே போலவே இதுபோன்ற செய்திகளில் மாணவர்களுக்கு சில இடங்களில் தவறுசெய்துவிட்டு தப்பித்துகொள்ள வாய்ப்பளிக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டி இருக்கிறது. கொஞ்சம் மென்மையான குரல், பழக்கவழக்கம் கொண்ட ஆசிரியர்களை மாணவர்கள் கேலியாக நடத்துவதை இப்போதே பார்க்கமுடிகிறது சகாஸ். ஆண்டு தொடக்கத்தில் சிந்தனையை தூண்டும் பதிவு. வாழ்த்துக்கள் சகாஸ்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நியாயமான கருத்து! ஆம்! மென்மையான ஆசிரியர்கள் மட்டுமல்ல கொஞ்சம் மாணவர்க்ளைத் திருத்தும் ஆசிரியரும் பலிகடாக்கள்தான்....இரு பக்கமும் நிய்யாயங்களும் உள்ளன. அநியாயங்களும் உள்ளன....இரண்டும் ஒரு புள்ளியில் சமனிலையான புள்ளியில் சந்தித்தால் மட்டுமே நல்லது நடக்கும்...

      மிக்க நன்றி! ககொதரி1

      நீக்கு
  18. ஆசிரியர்கள் வயதில் குறைந்த சிறுவர்களுக்கு  கற்பிக்கும்போது  தேவையேற்படின் தண்டனை வழங்கலாம் . அத்ற்கு எத்தனையோ முறைகள் இருக்கின்றன . ஆனால்  உடல் ரீதியாக அடித்து துன்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எமதுநாடுகளில் அதுவே நடைமுறையாகிவிட்டது . சிறு வயதிலிருந்தே ஒருவனை அடிமைப்படுத்தி விட்டால்  அவன் தான் அவன் தான் அடிமையாக இருப்பதையே உணராமல்நடந்து கொள்வான் ,
    இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலரும்  அடித்த ஆசிரியருக்காக அனுதாபபடுவதும் , அடி வாங்கிய மாணவனப்பற்றி சிந்திக்காது  விட்டதும் கூட அந்த அடிமை மனோ பாவமே காரணம். தெற்காசிய நாடுகளில் மானவர்களை நல்வழிபடுத்துகிறோம் எனும் பெயரில் அடித்துநொருக்குவார்கள் ,எனது அனுபவத்தில் பெயர்பெற்ற பாடசாலையில் படித்தநான் , அங்கு சந்தேகம் கேட்ட மாணவர்களையே ஆசிரியர்கள் அடித்துநொருக்குவதை பார்த்திருக்க்றேன். அத்ற்கு பின்  யாரும் சந்தேகமே  கேட் க மாட்டார்கள் , அவர்கள் எதிர்ப்பார்ப்பதும் அதைத்தான் .
    ஆசிரியர்களாக இருந்தாலும் வயதில் குறைந்த சிறுவர்களை அடித்து துன்புறுத்துவது சிறுவர் துஷ்பிரயோகம் மட்டுமல்ல அது மனித உரிமை மீறலாகும்.
    இங்கு ஆசிரியர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள்  இதைப்பற்றி அறியாதவர்கள் மட்டுமல்ல ,  சிறிய வயதிலிருந்தே ஆசிரியர்களிடம் அடிபட்டு வளர்ந்ததனால் அதுவே சரியான உலகநடைமுறை என வளர்ந்த பின்னாலும் நம்புகிறார்கள் ,நான் முன்பு குறிப்பிட்ட அடிமைகளைப்போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களது கருத்தை வரவேற்கின்றோம். கருத்து மிகவும் சரியே! ஆனால்,
      அந்த ஆசிரியர் உண்மையாகவே அந்த மாணவைத் துன்புறுத்தினாரா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எப்படி கோர்டில் இரு பக்க நியாங்களையும், வாதங்களையும் ஆராய்கின்றார்கள் எனப்து பொதுவான அபிப்ராயம். ஆனால் அங்கும் பல சமயங்களில் நீதி புதைக்கப்படுகின்றது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

      ஆசிரியர்கள் சந்தேகம் கேட்கும் மாணவர்களை அடிப்பதைப் பற்றியும், அதனால் மாணவர்களின் மன நலன் எந்த விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பது பற்றியும், பெற்றோர்கள் எந்த விதத்தில் காரணமாக இருக்கின்றார்கள் என்பது பற்றியும் எங்கள் தளத்தில் இரு பக்கமுள்ள கருத்துக்களையும் முன் வைத்து கட்டுரைகள் எழுதியுள்ளோம். நண்பரே! கல்வி இடுகைகள் ஏராளம். எந்த ஒரு நிகழ்விற்கும் இரு பக்கங்கள் உண்டு. இங்கு பின்னூட்டம் இடுபவர்களும் இரு பக்க நியாயங்களையும் அலசக்கூடியவர்களே! அதுவும் இவர்களிலும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர் நண்பரே!

      நமது சொந்த அனுபவங்கள் நம்மை பல சமயங்களில் பயாஸ்டாடகச் சிந்திக்க வைக்கத்தான் செய்கின்றன. என்றாலும் நாங்கள் எங்களால் முடிந்த வரை அன் பயாஸ்டாக இருக்கவே விரும்புகின்றோம். நண்பரே! தங்களது இந்தக் கருத்தை முன்வைத்து ஏற்கனவே ஒரு இடுகை எங்கள் தளத்தில் இருக்கின்றது!

      மிக்க மிக்க நன்றி! நண்பரே! தங்களின் கருத்துக்களை முன்வைக்க வேண்டுகின்றோம். வரவேற்கின்றோம். மீண்டும் மிக்க நன்றி!

      நீக்கு
  19. அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல். ஆசிரியர் விரைவில் விடுதலையாகுவதற்கு பிராத்திப்போம்.
    பள்ளி நிர்வாகமே அவரை பழி வாங்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
    பொதுவாக நிர்வாகத்தினர் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியரின் நலனைத்தான் முதலில் பார்ப்பார்கள். ஆனால் இங்கு நடப்போதோ வேறு. என்ன செய்வது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! அதிர்ச்சியூட்டும் தகவல்தான்! பல சமயங்களில் நீதியும் நேர்மையும் புதைக்கப்படுகின்றது! பிரார்த்திப்போம்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  20. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய கண்ட அனுபவம்! மாணவர்கள்
    முதலில் நம்மைப் பற்றி நன்கு பரிந்து கொள்ளுமாறு செய்யவெண்டும்! அதாவது எந்த மாணவனும் ,அவன் செய்யும் தவறை நாம் திருத்துவது அவனுடைய நன்மைக்காவே என்பதை அவன் உணருமாறு செய்துவிட்டால் போதும்! அதன் பிறகு தண்டித்தாலும் கண்டித்தாலும் , தொல்லை வருவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! தாங்களும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உண்டா! மிக்க சந்தோஷம் புலவர் ஐயா! மிகவும் நல்ல ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள்! நாம் நல்லதுதான் சொல்கின்றோம் என்று மாணவன் உணருமாறு செய்து நாம் நம்மை நிலைனிறுத்திக் கொண்டால் தொல்லை இல்லைதான். நல்ல கோணத்தில் முன் வைக்கப்பட்டக் கருத்து. ஆனால் புலவரெ இதுவும் சில சமய்ங்களில் பொய்த்துப் போகின்றது அப்படிப்பட்ட சம்பவங்களும் உள்ளன.....

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  21. இது கொடுமை! இவர்களுக்கு விடுதலை கிடைத்து குடும்பத்தாருடன் ஒன்று சேர்ந்து வாழ நான் பிரார்த்திகிறேன்!

    நான் பிரார்திப்பது மட்டுமலாமல், இனிமேல் என்றும் நல்லது நடக்க நானும் என் மனைவியும் பிரார்த்திக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹாஹ்ஹ் நம்பள்கி! இது உங்கள் அக்மார்க் ஸ்டைல்!! உங்கள் நக்கலை மிகவும் ரசித்தோம்...

      மிக்க நன்றி நம்பள்கி!

      நீக்கு

  22. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  23. ஆசிரியர் மாணவர் உறவு என்பதானது இந்த நிலைக்கு ஆளாகிவிட்டது. வேதனைக்குரிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் கருத்திற்கும்! பதில் கொடுக்கத் தாமதமாகிவிட்டது ஐயா மன்னிக்கவும்!

      நீக்கு
  24. எப்படியெல்லாம் நடக்கிறது அதிர்ச்சியாக இருக்கிறது. பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு