சனி, 31 ஜனவரி, 2015

சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா

 

       “நான் இந்துவாக இறக்க மாட்டேன்.” இதைச் சொன்னவர் நம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை 141 நாட்களில் எழுதி சாதனை படைத்த டாக்டர் ஆம்பேத்கார். அவர் இங்கிலாந்தில் தங்கியிருந்த வீட்டைக் கோடிகள் கொடுத்து வாங்கும் நம் அரசு அதை ஒரு ம்யூசியமாக மாற்ற இருக்கிறது. இப்படி எல்லாம் பெருமைப்படுத்தப்படும் அவர் மகர் சாதியில் பிறந்ததால் பட்ட அவமானங்களாலும், அனுபவித்த வேதனைகளாலும் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கானத் தாழ்த்தப்பட்டவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டவர்கள் படும் அவமானத்தையும், வேதனையையும் கண்டதாலும், தீண்டாமையை ஒழித்தாலும் அவ்வளவு எளிதாக, சாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்ததாலும் லட்சக்கணக்கான, தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுடன் புத்த மதம் தழுவினார்.  அவர் சொன்னது போல அவர் ஒரு இந்துவாக இறக்கவில்லை. புத்த மதத்தவனான [ ஒரு இந்தியனாக இறந்தார்.

       இந்து மதத்தை விட்டுப் போனவர்களுக்கு, போகின்றவர்களுக்குச் சாதியில்லை.  அல்லது சாதிகளால் வரும் பிரச்சினைகள் இல்லை என்பதுதான் உண்மை. 

“புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாம் மதம் போல் இந்த இந்து மதத்திற்கு உயிர் கொடுத்தது யார்?” என்று கேட்டால்,

“இவை எல்லாம் தோன்றும் முன் இந்தியாவில் இருந்த மதம் இது” என்பது பதில்.

“அம்மதங்கள் தோன்றும் முன் “சைவ, சமண மதங்கள் தானே இருந்தன”?, என்று கேட்டால்,

“வைணவமும் இருந்தது. சைவமும், வைணவமும் சேர்ந்துதான் இந்து  மதம்  உண்டானது '' என்பது பதில்.

“எப்போது, யார், ஏன் சைவத்தையும், வைணவத்தையும் கலந்து இந்து மதத்தை நிறுவினார்கள்”? என்று கேட்டால் பதிலே இல்லை.

“அப்படியானால் சாதிகள் எப்படித் தோன்றின?” என்பதற்குப் பதிலாக

“விஷ்ணு பகவானின் நெற்றி, தோள், வயிறு, கால் போன்ற பாகங்களிலிருந்து தோன்றிய மனிதர்கள், வழி வந்தவர்கள் தான் உயர்ந்த, மற்றும் தாழ்ந்தவர்கள்.  மிக உயர்ந்தவர்கள், கொஞ்சம் உயர்ந்தவர்கள், இடைப்பட்டவர்கள், தாழ்ந்தவர்கள்.  இப்படி மேலிருந்து கீழாக '' என்கின்றார்கள்.

“அப்படியானால், சிவநெறி பின்பற்றி வாழும் சைவ மதத்தினருக்குச் சாதிகள் பாதகமில்லையே ?'' என்று கேட்டால்,'' இந்து மதத்தில் சைவமும் உட்படுத்தப்பட்டதால், சாதி சைவ மதத்தினருக்கும் பாதகமே'',என்பது பதில் .

இப்படி இறைவனைக் கூறு போட்டு ஏலம் விட்டதைப் பார்த்த , இறைவன் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்களையும், அநீதிகளையும் கண்டு, பொறுக்க முடியாமல்தான், “மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியாததை, இறைவனால் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது......அப்படியானால் இறைவனே இல்லை” என்ற முடிவுக்கே வந்தார் தந்தை பெரியார்.  மட்டுமல்ல மூட நம்பிக்கைகள்  மற்றும்  தீண்டாமையை ஒழிக்க சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியும், கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தும் , ஆதரித்தும் திராவிடர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால், எப்படியோ காலப்போக்கில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களில் பலரும், பார்ப்பன விரோதத்தையும், நாத்திகத்தையும், மூட நம்பிக்கை எதிர்ப்பையும்  மட்டும் உள்வாங்கி, சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பை மறந்தே போனார்கள் என்றே தோன்றுகின்றது.  அதன் விளைவோ தமிழகத்தில் சாதிக்கட்சிகளும், சாதிக் கலவரங்களும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.  முற்பட்டோருக்கும், பிற்பட்டோருக்கும் இடையே இருந்த இடைவெளி , விரிசல் இப்போது பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே வந்திருக்கிறது.  ஒரு காலை பாதித்திருந்த யானைக்கால் வியாதி மருந்து சாப்பிட, அது வலது காலை விட்டு இடது காலுக்கு வந்த கதை போலாகிவிட்டது. 

       மதசார்பற்ற இந்தியாவாக இனி இந்தியா இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூச்சலிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  இருக்கிறது .அதற்கு  எதிர் குரல் கொடுத்து பலனில்லை எனும் நிலை நம்நாட்டில்.  எனவே, மதத்தையும், சாதியையும் ஒழிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.  சரிநிகர் சமானமாக பல மதங்கள் உள்ள  நம் நாட்டில் ,  சரிநிகர் சமானமான   பல சாதிகள் என்ற நிலையை உருவாக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது. முற்பட்டவர்களை, பிற்பட்டவர்கள் புறக்கணித்து நாங்கள் ஒருவிதத்திலும் பிற்பட்டவர்கள் அல்ல என்று உறுதியாய் இருந்தது இடைவெளியை இல்லாமல் செய்தது போல், பிற்பட்டோரிடம், நாங்கள் ஒருவகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று சொல்லி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழவேண்டும்.  தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்தான் உயர்வு மனப்பான்மை உள்ளோரது சூழ்ச்சிக்குப் பலியாடாகின்றவர்கள்.  “நாமார்க்கும் குடியல்லோம்” என வாழ்ந்தால் மட்டும் போதாது. அப்படி வாழத் தெரியாத வாழ தைரியமில்லாத நம்மைச் சூழ்ந்துள்ள எல்லோருக்கும் உதவி,  அப்படிப்பட்டவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தி, வரையப்பட்ட ஒரு கோடை அழிக்காமலேயே அதனருகே அதை விட பெரிய கோடாகவோ, அதற்கு சமமான கோடாகவோ மாறி, மாற்றி இன் நிலைக்கு ஒரு விடை காண வேண்டும்.

சாதியை ஒழிக்க சில சமுதாயத்தினர் மட்டும் சாதிப் பெயரை இனியும் உபயோகிக்காமல் இருந்து பயனில்லை. முள்ளை முள்ளால் எடுப்பது போல் - If you want peace be prepared for war, என்பதைப் போல - சாதியை சாதியால் முறியடிக்க, எல்லோரும் அவர்களுக்கு உகந்த ஒரு பெயரை சாதிப் பெயராக உபயோகிப்பது நல்லது என்று தோன்றுகின்றது. அப்படி எல்லோரும் உபயோகித்தால் நாளடைவில் சாதிப் பெயர் என்பது ஒரு சுருக்கொப்பம் (இனிஷியல்) போல ஒரு அடையாளம் ஆக வாய்ப்பு உண்டு. இதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், வட இந்தியாவில் பிற்பட்டவர்களான யாதவர்கள், யாதவ் என்று சாதிப் பெயர் வைத்துள்ளது போல் மீணா எனும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களது சாதிப் பெயரை தங்கள் பெயருடன் உபயோகின்றார்கள். பெரும்பாலும், அப்படி எல்லோரும் அவரவர்களது சாதியை அவர்களது பெயருடன் இணைத்திருக்கிறார்கள். எனவே, சாதி பார்க்கும் மனிதர்களிடையே நான் இன்ன சாதி என்று சொல்லத் தயங்கவோ, அஞ்சவோ தேவையில்லை.  ஏனென்றால் சாதியை உருவாக்கியது இறைவன் அல்ல. தந்திரசாலிகளான சில சுயநலவாதிகள். அந்த விஷப்பாம்புகளுக்கு பாதுகாவலர்களாய் நிற்பவர்கள், அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அநீதியைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அதனால் தான் “காலமெல்லாம் வாழும் காதல்” எங்கெல்லாம் எப்போதெல்லாம் எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் அவர்கள், நம் நம்பள்கி சொல்வது போல், “யாரவன்/அவள் நம் சாதியா. அப்படின்னா, சம்பந்தம் பேசிக் கல்யாணத்தைப் பேசுவோம். இல்லை வேற சாதின்னா அருவாளை எடுத்துட்டுப் போய் கலவரம் பண்ணி அவங்க கதைய முடிப்போம்” என்று கொந்தளிக்கிறார்கள். 

இப்படிப்பட்டவர்கள் வாழும் நாட்டில் தான், சாதியில்லை என்று உதட்டளவில் மட்டும் சொல்லாமல், சாதி பாராமல் எழிலை தன்னில் ஒரு பாகமாக்கி சாதியை ஒழித்து வாழும் பெருமாள் முருகன், நம் முன்னோர்கள் சாதி பார்த்ததில்லை எனும் உண்மையை தன் மாதொருபாகனில் சொல்லத் துணிந்திருக்கிறார்.  அதற்கு நாங்கள் எழுதிய விமர்சனத்திற்கு வந்த பின்னூட்டங்களுக்கு அவ்வப்போது பதில்கள் கொடுத்திருக்கின்றோம்.  ஆனால், பல பின்னூட்டங்களிலும், பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பல நல்ல  விளக்கங்கள் தரப்பட்டிருந்தன. நிறைகளும், குறைகளும் சுட்டிக்காட்டப்பட்டன.  பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நண்பர்கள் மலரன்பனும், வருணும் அருமையாக எழுதியிருந்தார்கள்.  ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்தான் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இரு வாத முகங்கள். அவற்றை எல்லாம் எழுதிய நம் பதிவர் நண்பர்கள் எல்லோரும் இடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் ஆழமாக வாசித்து, உணர்ந்து கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  எனவே, அவையெல்லாம் இவ்விடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் புரிந்து கொள்ள அவசியாமானவையே.  

இங்கு முக்கியமாக சாதி பற்றிய எங்கள் கருத்தைச் சொல்லவே இந்த இடுகை. சாதி இரண்டொழிய வேறில்லை என்று நம்பும் எங்களுக்கு, சாதி ஒழிய வேண்டும் என்று விரும்பும் எங்களுக்கு மாதொருபாகனை எழுதிய முருகனுக்கு எதிராக நடந்தவை வேதனை தந்தது.  அதே சமயம், அவர் கொங்கு வெள்ளாளரையும், திருச்செங்கோடையும் குறிப்பிட்டதால், அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், மற்றும் வேதனையை நினைக்கையிலும் எங்களுக்கு வேதனையே.  எழுத்தாளரான முருகனே தனது படைப்பு கொங்கு வெள்ளாள சமுதாயத்தையும், திருச்செங்கோடில் வாழ்பவரையும் வருத்தியதை எண்ணி வருந்தி ,'' திருச்செங்கோடு மக்களை விட பெரிதல்ல எனது புத்தகங்கள் '', என்று சொல்லிய பின்னும், அவரை மீண்டும் மீண்டும் சொல்லாலும், செயலாலும், துன்புறுத்த முயல்வது மனிதாபிமானமுள்ளவர்கள் செய்யக் கூடாத ஒன்று. சென்னை உயர்நீதி மன்றமும், இது போல் ஒரு எழுத்தாளனின் எழுத்துச் சுதந்திரத்தை, மாவட்டப் பஞ்சாயத்து தன் அதிகாரத்தை உபயோகித்து கவர்வது முறையல்ல என்று சொல்லி இருக்கிறது.  தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள பெரும்பான்மையான எழுத்தாளர்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து  அவர் தொடர்ந்தும் எழுத வற்புறுத்துகிறார்கள் . மட்டுமல்ல அவர் இதற்கு முன் கொங்குநாட்டவருக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் எழுதியவைகளை எல்லாம் மறந்து விடவும் கூடாது.  அது போன்ற பல படைப்புகளை வாசிப்பவர்களது மனம் புண்படாமல் இதற்கு முன் எழுதியது போல் அவரால் இனியும் எழுத முடியும்.  அவர் எழுத வேண்டும்.  எழுதுவார் என்று நம்புவோம். 


பின் குறிப்பு: “1950, 60 களில் பிறந்த கொஞ்சப் பேர்தான், இப்பவும் சாதி பேசி கலவரம் பண்ணிக் காதலைத் தடுக்கறாங்க.  அவனுக செத்தாத்தான் இந்தச் சாதிப் பிரச்சினை ஒழியும்” கயல் படத்தில் நாயகன் சாதி பாராமல் காதலிக்கும் காதலர்களை பிரிக்க முயல்பவர்களைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகள்தான் இவை.  இதைக் கேட்டதும், அந்த வசனம் எழுதிய கைககளைக் குலுக்கி அவர் வாயில் சர்க்கரை போட வேண்டும் போலிருந்தது.  திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்தான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுதான் என்றாலும், இளைஞர்களில் சிலரேனும் இப்படிச் சிந்திக்கின்றார்கள் என்பதை எண்ணி மகிழத் தோன்றுகின்றது.  இப்படி எல்லோரும் சிந்த்திக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் வருகின்றது.  எப்படியோ மனதில் சின்னதாக ஒரு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தலை தூக்குகின்றது. 

வியாழன், 29 ஜனவரி, 2015

நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டியவற்றை நாற்சந்திக்குக் கொண்டுவருவது முறையா


நண்பர் மதுரைத் தமிழன் அவர்கள், சில தினங்களுக்கு முன் தன் வலைத்தளத்தில், “அவள் விகடனில்” வெளியான ஆ! அமெரிக்க மாப்பிள்ளை! அக்கரையிலிருந்து ஒர் அலறல்” என்ற ஒரு கட்டுரையை பகிர்ந்திருந்தார்.  அதற்கு வந்திருந்த எதிர்வினைக் கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார். பகிர்வுக்கு, ஒரு பின்னூட்டம் இடலாம் என்று சென்ற போது, நிறைய எண்ணங்கள் வந்து அலைமோதியதால், பின்னூட்டம் பெரிதாகி விடும் என்பதால் இங்கு பதிவாக இடுகின்றோம்.

இந்தப் போட்டி உலகில், பத்திரிகைகள், செய்தியாளர்கள் எல்லோருமே பரபரப்புச் செய்தி வெளியிட இயங்குவது என்பது, நிதர்சனமான உண்மை, என்பது பல சமயங்களில் நிரூபணமாகின்றதுபெண் கொடுமை என்பது எல்லா சமூகத்திலும், உலகம் முழுவதும் ஏதோ ஒரு விதத்தில் நடக்கத்தான் செய்கின்றதுஅது அமெரிக்கா செல்லும் இந்தியப் பெண்களுக்கு மட்டும் என்று இல்லை. அப்படிப் பார்த்தால் இந்தியப் பெண்கள் மணமானபின், உலகின் பல நாடுகளில் வசிக்கின்றார்கள். நிற்க,

இந்தியாவில் நடக்காத கொடுமைகளா? பலர் அதை வெளியில் சொல்லுவதில்லை, சட்டத்தின் முன் கொண்டு வருவதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும், உலகம் முழுவதுமே, சிற்றறிவுக்கு எட்டிய வரை பெண்களுக்கு ஆதரவாகத்தான் சட்டம் இயங்குகின்றதுஎப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும். பெண் பத்திரிகைகளும் சரி, பிற பத்திரிகைகளும் சரி,  ஊடகங்களும் சரி, பெரும்பாலும்/எப்பொழுதுமே பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றித்தான் பேசுகின்றன.  ஆண்களுக்கு நடக்கும் இன்னல்களைப் பற்றி அவர்களது கோணத்தில் எந்த சமுதாயமும் ஆராய்வதாகத் தெரியவில்லை.  இருக்கலாம் ஆனால் மிகச் சிறிய அளவே.

ஆண்களை வஞ்சிக்கும் பெண்கள், பணத்திற்காகக் கணவனுடன் வாழும் பெண்கள், பணத்திற்காக, கணவன் செய்யாத கொடுமைகளை எல்லாம் சொல்லி, பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விவாகரத்து கோரும் பெண்கள், குடும்பத்தில், தனது எதிர்மறையான ஆதிக்கத்தினால் கணவனை, அவரது தாய், சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரிக்கும் பெண்கள், மனைவி என்ற பெயரில்/உரிமையில் அதீத பொசசிவ்னெஸினால்/அதீத ஆதிக்கத்தினால், தங்கள் கணவரின் முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும் பெண்கள், என்று ஒரு ஆணுக்கு நேரும் இன்னல்களைப் பற்றி பேசுவதில்லை. பல ஆண்கள் சமரசம் (காம்ப்ரமைஸ்) என்று – சமரசம் என்பது அவசியமே,  ஆனால், அது வரம்பை மீறிச் சென்று ஒரு ஆணின் எதிர்காலமும், அவனது ஆசைகளும், குறிக்கோள்களும் தடைபட்டு ஆழ்மனதில் உறங்கிப் போகும் அளவிற்கு சிலபெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  
ஏன் இந்த சமூகம் பெண்களை மட்டுமே முன்னிருத்திப் பேசுகின்றது? ஆண்களைப் பற்றி, அவர்களின் துன்பங்களைப் பற்றிப் பேசுவதில்லை?

அவள் விகடன் கட்டுரை, நடு நிலைமையானக் கட்டுரை என்று சொல்வதற்கில்லைபெண்கள் பத்திரிகை எல்லாமே பெண்களுக்கு ஆதரவு என்று சொல்லிக் கொண்டு, குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டுஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்லுவது வாடிக்கையாகி விட்டதுஇது போன்ற செய்திகளை வெளியிடுவது அதிகமாகி உள்ளதுஇரு பாலாரிடையேயும் +, - இருக்கத்தான் செய்கின்றதுஅதைக் கடந்து வருவது அவரவர் கையில் தான் இருக்கின்றது. அல்லாமல் அதைப் பொதுவாக வைத்து அபிப்ராயம் சொல்லுவது என்பது ஆரோக்கியமற்ற சூழலையும், ஆண், பெண் உறவுகள் நல்ல விதத்தில் அமையாமல் போகவும் வாய்ப்பு உள்ளதுஇது பெண்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட (ப்ரி டிட்டெர்மின்ட்) எண்ணத்துடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கவும் தூண்டுவதாக உள்ளது.

முக்கியமாகச் சொல்ல விழைவது. சற்று அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்: ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையில், எந்த வகையிலும் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. இருவரும் சமமே. வேறுபடுவது என்பது ஆணிற்கும், பெண்ணிற்கும் பிறப்பு முதலே மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகளும், ஆணும், பெண்ணும் பருவ வயதை அடையும் போது அவர்களது மூளையில் ஏற்படும் வேதியியல் ரசாயன மாற்றங்களினாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுவதால்தான். அதனால் தான் பெண்களின் உணர்வுகளுக்கும், ஆண்களின் உணர்வுகளுக்கும் வித்தியாசம் ஏற்படுகின்றது. பெரும்பான்மையான பெண்கள், ஆண்களை விட வெகு எளிதாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதும் இதனால்தான். ஒரு ஆணின், வாழ்க்கையைக் குறித்த கோணமும், பார்வையும், பெண்ணின் பார்வையும் வித்தியாசப்படுகின்றது. ஒரே விதமானப் பிரச்சினைகளை அணுகும் முறையிலும் இரு பாலாருக்கும் வித்தியாசம் உண்டு. அது போலத்தான் தீர்வுகளிலும் வித்தியாசம் ஏற்படும். ஆணின் அணுகு முறையும், பெண்ணின் அணுகு முறையும் வித்தியாசப்படும் – உணர்வுகளின் அடிப்படையில். பெரும்பான்மையான பெண்கள் எளிதாக உணர்ச்சிவசப்படுவார்கள். ஆண்களும் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான் என்றாலும் விகித அளவு குறைவே. இது தான் கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்கள்.

இந்த மாற்றங்களை ஒரு நேர் கோடாகக் கொண்டால், கணவனும், மனைவியும் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றார்கள் என்பதைப் பொருத்துதான் பிரச்சினைகள் வளர்வதும், வளராமல் இருப்பதும். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்துவிட்டால் பிரச்சினைகளே இல்லையே. இதில் ஈகோ என்பது எட்டிப்பார்க்கும் போதுதானே பிரச்சினைகள் வலுக்கின்றன.  இரு மாடுகள் கட்டப்பட்ட மாட்டு வண்டி சீரிய நிலையில் செல்ல வேண்டும் என்றால் இரு மாடுகளும் சமமாக நடந்தால்தான் வண்டியும் சம நிலையில் ஓடும். அது போலத்தான் குடும்பமும்.

எதற்காக இது இங்கு என்று நீங்கள் வினா எழுப்புவது தெரிகின்றது. வருகின்றேன்.

இவை எல்லாம் உடகங்களும் அறியாமல் இல்லை. எல்லா ஊடகங்களிலும் ஏதாவது ஒரு உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகர் இது குறித்துப் பேசத்தான் செய்கின்றார். அப்படி இருக்க, எதற்காக இப்படிப் பத்திரிகையில், ஊடகங்களில் குடும்ப விஷயங்களை அம்பலப் படுத்த வேண்டும். அலச வேண்டும்? தொலைக்காட்சிகளிலும், கதையல்ல நிஜம், சொல்லுவதெல்லாம் உண்மை, போன்ற நிகழ்ச்சிகள், குடும்ப விஷயங்களை, உறுப்பினர்களை அழைத்து வந்து, இந்த உலகம் முழுக்க அவர்கள் வீட்டு அவலங்கள் காட்சிப்படுத்த வேண்டும்? எதற்காக ஊடகங்கள் இது போன்ற நிகழ்வுகளை வெளியிட வேண்டும் (பெண்கள் பத்திரிகைகள்) தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டும்? இதனை ஊக்குவிக்க வேண்டும்? வெறும் விளம்பரமே! டிஆர்பி ரேட் ஏற்றவும், பத்திரிகைகள் பரபரப்பாக விற்கப்படவும் செய்யப்படுபவையே. தொலைக்காட்சியில் வருபவர்கள் பெரும்பான்மையோர் மிகவும் சாதாரணமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாமர மக்கள். அவர்களுக்கு இதைப் பற்றிய ஒரு பார்வை இல்லை எனலாம். விழிப்புணர்வு இல்லை. இவர்களை ஊடகங்கள் தங்களுக்குச் சாதகமாக உபயோகபடுத்துகின்றன என்றுதான் தோன்றுகின்றது. இதனால் இவர்களது பிரச்சினைகள் பெரிதாகின்றதே அல்லாமல் தீர்வு காண முடியுமா? படித்தவர்களும், பத்திரிகைகளுக்கு, இது போன்று தங்கள் குடும்ப பிரச்சினைகளைப் பேசுவது அத்தனை ஆரோக்கியமானது அல்ல. விரிசல் அதிகமாகுமே அல்லாமல் புரிதல், சேர்தலுக்கான சாத்யக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. சுய மரியாதையை இழப்பதாகத்தான் உள்ளது.

கணவன், மனைவிக்குள் பிரச்சினை, மாமியார், மருமகள் பிரச்சினை என்பது சமுதாயப் பிரச்சினை என்று கொள்வதற்கல்ல. அது குடும்பப் பிரச்சினை.  நியாயம் வேண்டும் என்றால், குடும்ப உறுப்பினர்களுடன் பேசி இருதரப்பு நியாங்களையும், உணர்வுகளையும் முன் வைத்து சமரச முடிவுக்கு வரலாம். தீர்வு காண விழையலா.  இல்லையேல், குடும்ப நல, உளவியல் ஆலோசகர்களை அணுகலாம்.  இப்போது, பாமர மக்களுக்கும் உதவும் வகையில் ஆலோசகர்கள் இருக்கின்றார்கள். இல்லையேல், காவல் நிலையத்தை அணுகலாம். சட்ட ரீதியாகச் செல்லலாம். அதை விட்டு இப்படி ஊடகங்கள் வாயிலாக ஒரு குடும்பப் பிரச்சினை/விஷயங்கள் அம்பலமாவது ஆரோக்கியமானது அல்ல. குடும்பப் பிரச்சினைகள் நான்கு சுவர்களுக்கு வெளியில் வரும் போது அவை ஊதப்பட்டு, ஊதப்பட்டு, பூதாகாரமாக ஊதிப் போகுமே அல்லாமல், பலூன் வெடிப்பது போல் வெடிக்குமே அல்லாமல் தீர்வு கிடைக்காது.

ஒன்று மட்டும் புரிகின்றது. சமுதாயம் ஆரோக்கியமாக இல்லாமல் விஷமாகிப் போவது போல் உள்ளது. நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! சொல்லுங்கள், நம் வீட்டுப் பிரச்சினைகள் அடுத்த வீட்டிற்குத் தெரிவதையே விரும்பாத நாம், நாற்சந்தியில் வெளியாவதை விரும்புவோமா? (கீதா வாயை மூடிப் பேச வேண்டுமோ?!!!)

-கீதா


செவ்வாய், 27 ஜனவரி, 2015

வாயை மூடிப்/பொத்திப் பேசவும்- இது திரைவிமர்சனம் அல்ல

 

சமீபத்தில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. மிக மிக நல்ல கருத்துடைய படம். வாய் மூடாமல் பேசினால் பிரச்சினைகள்.  வாய் மூடிவிட்டாலும் பிரச்சினைகள். அதனால் வாய் மூடிப் பேசவும். அதாவது எப்போது எதை எப்படிப் பேச வேண்டும் என்பதே! அதைப் பார்த்த போது, இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்தத் தலைப்பைப் பொருத்திப் பார்த்ததன் விளைவே இந்தப் பதிவு.

மாதொருபாகன் தான் இப்போது தமிழ் நாட்டின் சூடான இடுகை. 2010 ல் வெளிவந்த புதினம். இலக்கியவட்டத்திற்குள் இருந்த இந்தப் புதினம் பற்றியோ, பெருமாள் முருகன் பற்றியோ, எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு இன்று தெரிகிறது என்றால், இன்று உலகம் முழுவதும் இது பேசப்படுகிறது என்றால், சாதாரண மனிதரும் இதைப் பற்றிப் பேசி இந்தப் புத்தகத்தை வாசிக்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம், ஒரு சிலர் வாயைத் திறந்து பேசியதால், இல்லையில்லை கத்தியதால்தான். நன்றி அந்தக் கூட்டத்திற்கு! எங்களுக்கும் இவரைப் பற்றியும், இவரது எழுத்துக்களைப் பற்றியும் அறிய தந்தமைக்கு. பேசியிருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது.  பேசவில்லை!  வரம்பிற்கு மீறிய தாக்கங்கள். புத்தகம் வெளியாகி இரண்டு வருடங்கள் சென்ற பிறகு சர்ச்சை எழுந்து புத்தகம் உலகம் முழுவதும் செல்லும் அளவு, அதிக அளவு விற்க உதவியதற்கும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்! இதற்கு மேல் அவர்களுக்கு நன்றி உரைப்பதற்கில்லை. வெளியாகி 2 வருடங்களுக்குப் பிறகுதான் சர்ச்சை.  அப்படியென்றால் இரண்டு வருடங்கள் யாருமே அந்தப் புத்தகத்தை வாங்கவுமில்லை. வாசிக்கவுமில்லை போலும். இதிலிருந்தே தெரிகின்றது இதற்குக் காரணம் சாதி, மதவாதிகளும், அரசியலும். விஸ்வரூபம் படத்திற்கும் இதுதான் நடந்தது! கமல் நாடு விட்டுப் போவேன் என்றார்.  ஆனால் பின்னர் சமரசமாகி இங்குதான் இருக்கின்றார். அது போல பெருமாள் முருகனும் மீண்டு வருவார்!  எழுதுவார் என்று நம்புவோம்.  அவர் புத்தகங்கள் மீண்டும் விற்பனைக்கு வரவேண்டும் என்பதும் வேண்டுகோள்!

ஒரு புனைவில் சொல்லப்படும் ஒரு நிகழ்விற்காக, அதுவும் 1930-40 களில் நடப்பதாகச் செல்லப்படும் ஒரு நிகழ்விற்காக, அதுவும் குறிப்பிட்ட சமூகத்தில், ஊரில் நிகழ்வதாகச் சொல்லப்பட்டதே இன்று, அந்த எழுத்தாளர் தனது ஊரை விட்டே துரத்தப்பட்டு புலம் பெயரக் காரணம்.  “கீதா வாய் பொத்திப் பேசு”.......சாதி நம் நாட்டில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. எனவே யாகாவாராயினும் சாதி பற்றி பேசும் போது நா காக்க...

மாதொருபாகன் முதல் பாகம் மட்டுமே. இன்னும் இரண்டு பாகங்கள் உள்ளன.  அர்த்தநாரீஸ்வரர், ஆலவாயன். அதன் தொடர்ச்சியாக  இதையும் படித்தால்தானே முழுக் கருத்தும் கொள்ள முடியும்? ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பார்த்தால்தான் முழுவதும் புரியும்.

சர்ச்சையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்பவர்கள் சற்று யோசியுங்கள். அரசாங்கத்திற்குத் தெரிந்தே நடக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கு சமூகத்திலிருந்து ஏன் எதிர்ப்புகள் இல்லை? அங்கும் சில சமயம் தவறுதலாகவோ இல்லை விருப்பப்பட்டோ பிறக்கும் குழந்தைகள் இந்த சமூகத்தில் உலா வரத்தான் செய்கின்றன. அங்கு சாதிகள் பேசப்படுவதில்லையே! எதிர்ப்பதில்லையே. அந்தத் தொழிலே உலகறிய நடக்கத்தானே செய்கின்றது. எத்தனைப் பெண்கள் கடத்தப்படுகின்றார்கள், விரும்பிச் செல்கின்றார்கள்! எதிர்ப்புகள் இல்லை. தொழில் செய்யும் பெண்கள் எல்லா சமூகத்திலும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் நம் கண் முன்னே நடக்கும் இந்த நிகழ்வுகளுக்கு இல்லாத எதிர்ப்புகள் எப்போதோ நடந்தது என்று புனைவில் சொல்லப்பட்டதற்கு எதிர்ப்புகள். அதுவும் வெளிவந்து இரண்டு வருடங்கள் சென்ற பின். தற்போதய அரசு சுத்தம் பற்றி பேசி வருகின்றது.  இந்தத் தொழிலை, தற்போதைய அரசாங்கம் சுத்தம் செய்யுமா?

 மட்டுமல்ல சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்த ஒன்று. அதை எழுதியிருந்தவர் ஒரு பத்திரிகையாளர்தான். ஒரு ஊரில் வயதுக்கு வந்த கன்னி கழியாத பெண் குழந்தைகள் மட்டுமே ஏழ்மையின் காரணமாக ஆண்கள் இருக்கும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு 4,5 நாட்காள் இருந்து வேலை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்களாம்.  இதற்கு அந்தக் குடும்பத்திற்கு லட்சங்கள் வழங்கப்படும். அந்த பெண்குழந்தைகளின் திருமணச் செலவிற்கு அந்தப் பணத்தை பெற்றொர் உபயோகிப்பார்களாம். அனுப்புபவரும் தாய்/பெண், இதற்கு ஏற்பாடு செய்பவரும் ஒரு பெண். இதற்கு எதிர்ப்புகள் ஏன் வரவில்லை? பெண்களும், பெண்குழந்தைகளும் விற்கப்படுவதும் நடக்கத்தானே செய்கின்றது. இது நடப்பது இப்போது. இக்காலக்கட்டத்தில். இதற்கெல்லாம் கொந்தளிக்காதவர்கள், எழுத்தாளர் எப்போதோ நடந்ததாக, அதுவும், கண் முன்னே நடக்காத சம்பவம் புனைவாக எழுதியமைக்குக் கொந்தளிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. கொந்தளித்தது மட்டுமல்ல, புத்தகங்களை எரித்து, அவரை ஊரை விட்டே துரத்தி, அவர் தனது புத்தகங்களை எல்லாம் சந்தையிலிருந்தும், பதிப்பகங்களிலிருந்தும் அகற்றி விற்பனைக்கு இல்லை என்பதையும், தானும் இனி எழுதப் போவதில்லை என்றும் அறிவிக்கவும் வைத்திருக்கிறது இந்த சமூகம்.  இதற்கு முன்னும் ஒரு சில எழுத்தாளர்களுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் முருகனுக்கு ஏற்பட்டது கொடுமையிலும், கொடுமை. ஒரு எழுத்தாளரை முடக்கியிட்டிருக்கின்றது. ஒரு எழுத்திற்கு எதிர்ப்புகள் வரலாம். தவறில்லை. அதை வாயை மூடிப் பேசியிருக்கலாமே. அமைதியான முறையில் கதாசிரியருடனேயே பேசித் தீர்த்திருக்கலாமே!

மிகவும் கீழ்த்தரமான ஆபாசமானப் புத்தகங்கள் எல்லாம் இந்த சமூகத்தில் புழக்கத்திலிருக்கத்தானே செய்கின்றன? அதை எழுதும் எழுத்தாளர்களை ஏன் இந்த சமூகம் எதிர்த்துப் போராடுவதில்லை? நீலப்படங்கள்? ஏன் அதற்கு இந்தச் சமுதாயம் வாயைத் திறந்து பேசவில்லை? வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கின்றது? வாயைத் திறந்தாலும் நல்லதில்லை. வாயை மூடிக் கொண்டு மௌனம் சாதித்தாலும் நல்லதில்லை.  வாய் மூடிப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமூகமும் அதன் அங்கத்தினராகிய நாமும். உணர்வுகள் ரீதியாக இல்லாமல் அறிவு சார்ந்ததாக, ஆரோக்கியமான வாதங்களினால்.

பதிவு ரொம்ப சீரியஸாகப் போவதால் ஒரு சின்ன பின் குறிப்பு: “சரிதாயணம் எனும் நூலை எழுதிய எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களை எதிர்த்து கு.வா.க (குழப்ப வாதிக் கட்சி) வன்மையாகக் கண்டித்து ஆர்பாட்டம்”.  அவர் தனது நூலில் “அரசியல் வாதிகள் எல்லோருமே கோமாளிகள் என்று சொல்லியதால் நாங்கள் அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் “உண்ணும் விரதம்” இருப்போம்.” பந்தலில் “பின்” விளைவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி தொண்டர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

எங்கள் கட்சிப் பெண்கள் குழு, எங்கள் கட்சித் தலவியான சரிதா அவர்களின் தலைமையில், “குடும்ப ஒற்றுமைக்காகவும், கட்சி ஒற்றுமைக்காகவும் இரவு பகல் பாராது கண் அயராது போராடும் பெரிய மருமகளாகிய எங்கள் தலைவி சரிதா, மற்ற மருமகள்களுடனும், மாமியாருடனும் சண்டை போட்டு குடும்பத்தை பிரித்ததாகச் சொல்லியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  மட்டுமல்ல அவர் மைசூர்பாகைச் செங்கல் போல செய்ததை பாராங்கல்லு போல செய்திருக்கிறார் என்றுக் குறிப்பிட்டு அவர் பல்லு உடைந்ததாகச் சொல்லியிருப்பதால் நாங்கள் இந்த மாதம் முழுவதும் எங்கள் தலைவி செய்யும் மைசூர்பாகாலேயே அவரது வீடு முழுவதும் நிறைத்து வைத்து, அதாலேயே சுவரும் எழுப்பப் போகின்றோம். எங்கள் தலைவியைப் பற்றி, தனது மனைவி என்று பாராமல்  இப்படி எழுதியதற்காக...எறும்புகள் மொய்க்கட்டும்...”  எங்கள் ஆர்பாட்டம் தொடரும். எங்கள் தலைவி சரிதாவிடம் அவர் சமரசம் செய்யும் வரை...

பின் குறிப்பிற்குப் பின் குறிப்பு: கணேஷ் அண்ணா மாதொருபாகனுக்கு எதிர்ப்பு வந்ததால் அது ஹாட் சேல் ஆகியதால் தனது நூலும் ஏதாவது சர்ச்சையில் சிக்கினால் விற்றுப் போய்விடுமே என்று தனது வலையில் ஆதங்கப்பட்டுக்???!!! கொண்டதால், ஏதோ எங்களால் முடிந்த அளவு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளோம். இனி அண்ணாவின் பாடு, தலைவி சரிதாவின் பாடு.  சமரசமாகுமா?  நூல்கள் விற்குமா?  பொருத்திருப்போம். வெயிட்டிங்க் ஃபார் தலைவி சரிதாஸ் சிக்னல்.!

-கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

சனி, 24 ஜனவரி, 2015

மாதொருபாகன் பற்றிய எங்களது பாகம்


        வெறும் வாயை மெல்லும் எங்களுக்கு மாதொருபாகன்எனும் அவலை மெல்லுங்களேன்என்று சொல்லி எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த உதவிய பதிவர் சகோதரி/தோழி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு முதற்கண் நன்றி.
       இந்தப் புதினத்தை வாங்க முடியாதச் சூழல். வருத்தம். அப்போதுதான் நண்பர் மலர்தரு மது/கஸ்தூரி அவர்கள் தனது வலையில் தரவிறக்கம் செய்யப் பகிர்ந்திருந்தார். நாங்கள் அவருக்கு நன்றி நவில, அவர் டெல்லி தமிழ் சங்கத்தின் தூணான திரு ஷாஜகான் அவர்கள் பகிர்ந்திருந்ததைத்தான் தந்தேன் எனவே அவருக்குத்தான் நன்றி நவில வேண்டும் என்று கைகாட்ட, திரு. ஷாஜகான் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!  அதைப் பகிர்ந்த நண்பர் மது அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
                                ************************************************

        “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. அவன் இனி உயிர்த்தெழப் போவதில்லை.  மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை.  இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர்வாழ்வான்.”

இதை வாசித்த போது எங்களுக்கு ராபர்ட் ப்ரௌனிங்க் எழுதிய “பேட்ரியட்” (Patriot) எனும் கவிதைதான் நினைவுக்கு வந்தது.  ஒரு வருடம் முன்பு நாட்டுக்குச் செய்த நற் செயலுக்கு வீர நாயகனாக எல்லோராலும் புகழப்பட்ட, வாழ்த்தப்பட்ட, நடந்த வழிகளில் பூக்கள் தூவி வரவேற்கப்பட்ட நாயகன், ஓராண்டுக்குப் பின் ஏதோ ஒரு மன்னிக்க முடியாத சேதம் நாட்டிற்கு இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, காண்போரெல்லாம் எறியும் கற்களால் அடிபட்டுக் கழுமரத்திற்குக் கொண்டு செல்லப்படும் போதும், வருந்தாமல் தான் செய்த நற்செயலை தவறாகப் புரிந்து கொண்டதால்தனக்கு  இவ்வுலகில் கிடைக்காத நீதி இறந்த பின் இறைவன் முன் செல்லும் போது கிடைக்கும், என்ற நம்பிக்கையுடன் நடந்து செல்லுகிறான் கழுமரத்தை நோக்கி. வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதையும் ஒரு போதும் விட்டகலாத அருமையான கவிதை. 

       ஆனால், கவிதை நாயகனுக்கு இருந்த நம்பிக்கை நம் பெருமாள் முருகனுக்கு இல்லை. பதிலாக, ஏறத்தாழ 35 புத்தகங்களை எழுதிய அவர், இனி எழுதப் போவதில்லை என்று சொன்னதோடு நில்லாமல் தான் எழுதிய எல்லா புத்தகங்களையும் பதிப்பகத்தினின்று, தேவையான நஷ்ட ஈடு கொடுத்துத் திரும்பப் பெறப்போவதாகச் சொல்லியது மனதைச் சுடுகின்றது.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெங்குவினால் வெளியிடப்பட்ட அவரது ஒன் பார்ட் வுமன்க்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கின்றது.  இவ்வருடம் அவர் சாகித்திய அகாடமி விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டும் இருந்தார்.  இதற்கிடையில் கொங்கு நாட்டவரின் வரலாற்றை விவரிக்கும் முத்துச்சாமிக் கோனாரின் புத்தகத்தை உயிர்ப்பித்து கொங்கு நாட்டவரின் தனித்தன்மையை உலகறியச் செய்ததால், “க்ரோனிக்ளர் ஆஃப் கொங்குஎன்றெல்லாம் புகழப்பட்ட அவரதுப் புத்தகத்தை (மாதொருபாகனை) அதே கொங்கு வெள்ளாள சமுதாயத்திலுள்ள சிலரை முன்னிருத்தி தீக்கிரையாக்கி அவருள் உயிர் வாழ்ந்த எழுத்தாளரைக் கொன்றே விட்டார்கள்.

       நான்கு வேதங்களும் அத்வைதத்தை ஆதாரமாகக் கொண்டவை. அதனால்தான், ரிக் வேதம் அறிவும், ஞானமுமே இறைவன் என்றும் (ப்ரஞ்ஞானம் பிரம்மா), யஜுர் வேதம் நானே இறைவன் என்றும்” (அஹம் ப்ரம்மாஸ்மி), சாம வேதம், இறைவன் நீயே என்றும் (தத்துவமசி)  அதர்வ வேதம், இந்த ஆத்மாவே இறைவன் என்றும் (அயமாத்மா ப்ரம்மா) சொல்கின்றன. உன்னுள் கடந்து (கட (உன்) உள்) கடவுளைக் காண வேண்டுமே அன்றி கடவுளைத் தேடிப் போய் பயனில்லை என்பதுதான் அத்வைதத் தத்துவம். இத்தத்துவத்தின் அடிப்படையில்தான், சம்ஸ்க்ருதத்தில்  மொழியாக்கம்  செய்யப்பட்ட வேதங்களை  வாசிக்காமலேயே ,  நம் முன்னோர்களான சித்தர்களாலும், முனிவர்களாலும் த்யானத்தில் ஆழ்ந்து தன்னுள் உறையும் இறைவனாம் சிவலோகத்தையும், சிவ யோகத்தையும், சிவ போகத்தையும் தன்னுள் உணர்ந்து பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடிந்திருக்கின்றது.  பிறப்பு, மற்றும் இறப்பு பற்றிய எண்ணம் அவர்களை ஒருபோதும் பாதிக்கவில்லை, பாதித்ததில்லை  என்பது மட்டுமல்ல, மற்றவர்களை அது பாதிக்கும் பட்சம், அவ்விரண்டிலும் அவர்கள் மற்றவர்களுக்கு உதவியே ஆக வேண்டும் எனும் கட்டம் வரும் போது சித்தர்களும், முனிவர்களும் அத்தகையவர்களுக்கு  உதவுவதும் உண்டு. புராணங்களில் எத்தனையோ முனிகள் வாரிசில்லா வேந்தர்களுக்குக் குழந்தை பாக்கியம் பெற அவர்களது விந்தை வழங்கியதாகச் சொல்லப்படுகின்றது. அதே போல் அளவிற்கு அதிகமான அக்கிரமங்களையும், அநீதியையும் இழைப்பவர்களைக் கொன்று குவித்த பரசுராமனைப் போன்ற முனிகள் மட்டுமல்ல, ஊழ்வினைப் பயனாக துன்புறும் இவ்வுலக வாழ்வைத் துறந்து இறையடி சேர முனிகளிடம் தங்களைக் கொன்று உதவ வேண்டும் என வேண்டுவோரைக் கொன்று உதவும் முனிகளும் நம் நாட்டில் இருந்திருக்கின்றார்கள் . மட்டுமல்ல , நான் கடவுள் படத்தில் காசியில் அகம் ப்ரம்மாஸ்மி”(நானே கடவுள்) எனும் தத்துவத்துடன் வாழும் முனிகள் இப்போதும் அப்படிச் செய்து, வேண்டுவோருக்கு மோட்சம் கிடைக்கப் பெற உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

       13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் முளைத்த ஜாதிகள் ஓரிரு நூற்றாண்டுகளில் தென்னகத்தையும் விழுங்கிவிட்டது. பெரும்பான்மையான வலுவுள்ளவர்களும், வாயுள்ளவர்களும் உயர் சாதியினரான போது, சிறுபான்மையினரான வாயில்லா வலுவிழந்தவர்கள் கீழ் சாதியினராக ஆக்கப்பட்டனர்.  அப்போதும் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையே சாதிகள் நுழையவில்லை.  ஆனால், அதன் பின் நம் நாட்டை ஆண்ட முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் உயர் சாதியினர் சொன்னதை மட்டும் கேட்டதால், இடையில் தோன்றிய சாதி வேற்றுமைகளை வேரறுக்க அவர்களும்  ஒன்றும் செய்ய வில்லை. அப்படி நிறத்திலும், உருவிலும், மொழியிலும் வித்தியாசமில்லாதவர்கள் சாதியால் மட்டும்  நம் நாட்டில் வித்தியாசப்பட்டுப் போனார்கள். அப்பொதும், சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இடையே சாதிகள் முளைக்கவில்லை. 19 ஆம் நுற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், நம் நாட்டவரிடையே ஆங்கிலேயர் பாதிப்பால் பல மாற்றங்களும் வந்தன. செயலிலும், சிந்தனையிலும் வந்த மாற்றங்கள் மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடும் திறன் உடையவையாய் இருந்தும் சாதியை எதிர்க்கும் திறன் அதற்கு இல்லாமல் போனது.  அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் திருச்செங்கோட்டில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதை தான் பெருமாள் முருகனின் மாதொருபாகன். 

         ஒரு சமூகம், ஊர்கள், அங்கிருக்கும் பிரசித்தி வாய்ந்த மலைக் கோயில் (அர்தநாரீஸ்வரர் கோயில்), அந்தக் கோயில் திருவிழா, அந்த மலையில் பாவாத்தா என்று தெய்வமாகக் கொண்டாடப்படும் ஒரு பெண் தெய்வம், இதனால், அங்கிருக்கும் சுற்றுப்பட்ட கிராமங்களில் பதிவான நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் அந்த மக்களின் வாழ்வில் எப்படிப் புரையோடிப் போயிருக்கின்றது, என, கொங்குதமிழில் பயணிக்கின்றான் மாதொருபாகன்.

       காளி, பொன்னாள் என்ற இரு முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்கள் வாழ்வியல், அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, சமூக நம்பிக்கைகள், குறிப்பாகக் குழந்தை பிறக்கவில்லை என்றால், அந்த மலைக் கோயில் திருவிழாவின் 14 ஆம் நாள், சாமி மலையேறுவதற்கு முந்தைய நாள், அங்கு வரும் முனிகள் மற்றும் சித்தர்கள் மட்டுமல்ல , ஆண்கள்  அனைவரும் ,சாமிகள் என்றும், குழந்தையில்லாப் பெண்கள் இந்த சாமிகளில் எந்தச் சாமியுடனும்/ஆணுடனும் இணைந்தும்  குழந்தை பெறலாம், பிறக்கவில்லை என்றால் அடுத்த வருடம் நடக்கும் திருவிழாவில் 14 ஆம் நாள் இது போன்று இணைந்து பெறப்படும் குழந்தைகள் சாமி பிள்ளைகள் என்று நம்பப்படும் ஒரு வழக்கத்தினாலும், குழந்தை இல்லை என்பதால் எழும் மனதைத் துளைக்கும் உணர்வு பூர்வமான ஊர் பேச்சுக்களும், குழந்தைப் பேறு இல்லாமல் போனாலும், மிகவும் அந்யோன்யமாக, அன்பான தாம்பத்தியத்துடன், வாழும் காளி, பொன்னா வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதுதான் கதை.

       காளி, பொன்னாள் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பும், அந்யோன்யமான தாம்பத்தியமும், கதை முழுவதும் மிகவும் அருமையாகப் பரவிக் கிடக்கின்றது.  கதைக் களத்தின் வர்ணனைகள், விவரணங்கள், மலையைப் பற்றிய வர்ணனைகள், காளியும், பொன்னாளின் அண்ணன் முத்துவும் குடிப்பதற்காகத் தேடிக் கண்டறியும் மலையின் ரகசியமான, அழகான இடங்களின் வர்ணனைகள், நம் கண்முன் காட்சிகளை விரிய வைத்து, நம்மையும் அந்த இடங்களுக்கே பயணிக்க வைக்கின்றார், அந்த மண்ணிற்கே உரிய மணத்துடன்.

       தம்பதியருக்குக் குழந்தை இல்லை என்றால் சமூகம் என்ன பேச்சு பேசுகின்றது என்பதை, காளியும், பொன்னாவும் அந்த வார்த்தைகளால் படும் கஷ்டங்களின் மூலம் கண் முன் கொண்டுவருகின்றார் ஆசிரியர்.  இப்படிப் பேசப்படுவது இப்போதும் கூட பல கிராமங்களில் இருந்துதானே வருகின்றது. ஒரு சமூகத்தின் நிகழ்வுகள், வாழ்வியல், நாகரீகம் என்று பல தகவல்களைப் பதிந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.  பல இடங்களில் சாதிகள் பற்றிய சிறிய கேலிகள் இருப்பது ஆசிரியரின் சாதி எதிர்ப்பு பற்றிய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றது.

        கதை வலுவிழக்கும் இடங்கள்: குழந்தை இல்லை என்றால், குறைபாடு காளி, பொன்னாள் இருவருக்கும் இருந்திருக்கலாம், இல்லையென்றால் இருவரில் ஒருவருக்கு இருந்திருக்கலாம். இதை ஆசிரியர் ஒரே ஒரு இடத்தில் சொல்லி இருந்தாலும், அதை வலுவாகச் சொல்லாததால் அங்கு சறுக்கல். இந்தக் காலகட்டத்தில் கூட, குழந்தை இல்லை என்றால், சமூகம் பெண்களைத்தான் முதலில் குறை சொல்லுகின்றது. அப்படியிருக்க, இக்கதை சொல்லப்படும் காலகட்டத்தில் இன்னும் மோசமாகத்தான் இருந்திருக்கும். அதனால், காளியின் தாயார், காளிக்கு இரண்டாவது மணம் பற்றி வற்புறுத்துவது, பொன்னாளின் அம்மாவிற்கும் அதில் எதிர் கருத்து இல்லை என்பதால் கதை சரியாகச் செல்வதாகத்தான் உள்ளது. குறை பொன்னாளிடம் என்று சொல்லப்படுவதாக அர்த்தமாகின்றது. ஆனால், அடுத்து, காளியின் அம்மாவும், பொன்னாளின் அம்மாவும், பொன்னாளை திருவிழாவின் இறுதி நாளாகிய 14 ஆம் நாளுக்கு, சாமி பிள்ளை பெற வேண்டி வேறொரு ஆணுடன் இணைய அனுப்ப முடிவெடுக்கிறார்கள் .  குறை உள்ள பொன்னாள் என்பதாக அவர்கள் நினைத்ததால் தானே காளிக்கு இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது. அப்படியிருக்க பொன்னாள் எப்படிச் சாமிப் பிள்ளை பெற முடியும்? காளிக்குக் குறை இருப்பதாக ஆசிரியர் எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை.  பரிகாரமும், கஷாயங்களும் பொன்னாளுக்குத்தான்.

2. காளிக்கு மறுமணத்தில் முற்றிலும் உடன்பாடில்லை என்பதையும், பின்னர் இரு தாய்மார்களும், பொன்னாளை திருவிழாவின் 14 ஆம் நாள் அன்று அனுப்பி சாமி குழந்தை பெற வைக்கலாம் என்று முடிவெடுப்பதை அறியும் காளி, குழந்தை இல்லை என்றாலும், பரவாயில்லை, மறுமணமோ, சாமி குழந்தையோ தேவையில்லை, பொன்னாள் மட்டும் போதும், சாமிக் குழந்தை என்று பெறுவது எல்லாம் முன்பு வழக்கமாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படியிருக்க வேண்டும் என்றில்லை, தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும், பொன்னாள் தன் உடம்பின் ஒரு பாகம் என்பதையும், அவன் பல இடங்களில் சொல்லி, முத்துவிடமும் சொல்லி, மாதொருபாகன் என்ற அர்த்தத்தை அருமையாக, அந்த சமூகத்தின் ஒரு சாதாரண மனிதனின் அடையாளமாகக் காட்டி வரும், ஆசிரியர் இறுதியில் பொன்னாளின் முடிவின் மூலம் பதைபதைக்க வைப்பது மட்டுமின்றி காளியின் மூலம் காட்டும் அர்த்தத்தையே மாற்றிவிடுவது போல் உள்ளது.

       3. திருவிழாவின் 14 ஆம் நாள் பொன்னாளை அவளது பெற்றோரும், தனது தாயும் அனுப்பி விடுவார்களோ என்று அவன் இரு வருடங்கள் திருவிழா நோன்பிக்கு அனுப்பாமல் இருந்து, அப்படிக்  குழந்தை பெறுவதில் காளிக்கு முற்றிலும் உடன்பாடில்லை என்று அறிந்தும், குழந்தை இல்லை என்றாலும், அவர்களது தாம்பத்யம் மிகுந்த அன்புடனும், இனிமையாகவும் இருந்தும், அவனது அன்பை முழுமையாகப் புரிந்து இருந்தும், பொன்னாள் இறுதியில், வீட்டாரின் பேச்சைக் கேட்டு, அன்பானக் கணவனைத் துறந்து, அந்த நாளுக்குச் செல்வது ஆச்சரியமாக உள்ளது.  எந்தப் பெண்ணும், இத்தனை அன்பான கணவன் இருக்கும் போது இது போன்ற ஒரு செயலைச் செய்வாளா என்பது இடிக்கின்றது. அதற்கு இரு பெண்கள் அதுவும் தாயார்கள் துணை நிற்பது நெருடுகின்றது.

       பொன்னாள் புறப்பட்டுப் போகும் போது, அவள் அப்படி யாருடனும் இணைந்து விடக் கூடாது என்று, அவளது அந்தப் பயணம் முழுவதும் மனம் பதைபதைக்கின்றது, கதையை வாசிக்கும் போது. ஆசிரியர் பொன்னாளை அதே பொன்னாளாக மீட்டு வந்துக் கதையை முடிக்க வேண்டும் என்று மனது வேண்டத்தான் செய்தது. பொன்னாள் எவனோ ஒருவனைப் பார்த்து புன்னகைத்து அவனுடன் சேரும் போது மனது வேதனித்தது. காளி அந்தப் பழக்கத்திற்கு முற்றிலும் எதிராக இருப்பதாகக் காட்டிய இடத்திலும், இறுதியில், காளி தன்னை ஏமாற்றிய பொன்னாளை நினைத்துத் துடித்து, வெறுத்துக் கத்தும் இடத்திலும் பிரதிபலிக்கும் கதாசிரியரின் எண்ணங்கள் ஏனோ இந்த சர்ச்சை செய்யும் மனிதர்களின் கண்களில் படாமல் போனது. பொன்னாளையும் அந்த நிகழ்விற்குப் போகாமல், அதற்கு உடன்படாத, அதை எதிர்க்கும் பெண்ணாகக் காட்டி, அந்த நம்பிக்கைக்கு எதிரான ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி புரட்சிப் பெண்ணாகக் கதையை முடித்திருக்கலாமோ என்றும் தோன்றியதை மறுக்க முடியவில்லை.

          மாதொருபாகன் என்ற தத்துவத்தின் அர்த்தத்தையும், சாமி பிள்ளை என்ற வழக்கத்தையும், கதாசிரியர் இந்தப் புனைவில் முடிச்சுப் போட்டு தவறான கோணத்தில் பார்த்திருப்பதாகத்தான் முடிவு சொல்லுகின்றது. அதனால்தான் பொன்னாளை அந்த சாமிப் பிள்ளை வழக்கத்தை ஏற்பது போல் முடித்துள்ளார். காளியின் மூலம் வெளிப்படும் மாதொருபாகனும், பொன்னாவின் மூலம் வெளிப்படும் மாதொருபாகனும் முரண்படுகின்றது. மாதொருபாகனின் தொடர்ச்சிதான் ஆலவாயனும், அர்த்தநாரீஸ்வரரும் என்றால் அந்த பாகங்களையும் படித்துவிட்டுத்தான் நாம் முழுக் கருத்தையும் முன்வைக்க முடியும்.  இந்தப் பார்வை பாகம் மாதொருபாகனுக்கு மட்டுமே.  முழுப் பார்வை என்று கொள்வதிற்கில்லை.  ஏனென்றால் காளி இறுதியில் ஏமாற்றம் அடைந்து “நீ தவிச்சுக் கிடக்கோணும்டி” என்று சொல்லுவதும் , கயிற்றையும்மரக் கிளையை  பார்ப்பதன் விளைவும்    ஒருவேளை மற்றைய பாகங்களில் பேசப்பட்டிருக்குமோ?  வாசிக்க வேண்டும்.  பேசப்பட்டிருந்தால், ஆசிரியரின் பார்வை எப்படிச் செல்லுகின்றது என்று பார்க்க வேண்டும்.

       மகாபாரதம், புராணங்களில் எல்லாம் சொல்லப்படுவது போல், ஒரு காலத்தில், மலை கோவிலில் நடக்கும் 14 நாள் திருவிழாவிற்கு சித்தர்களும், முனிவர்களும் குழந்தைப் பேறு இல்லாத மாதர்களுக்குக் குழந்தை பெறும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கலாம். நூற்றாண்டுகளுக்கு முன்பு சாமிக் குழந்தைகளுக்கு சாதி தேவை இல்லாமல் இருந்தது.  ஆனால், பிற்காலத்தில் சாதி அறிய வாய்ப்பில்லாததால் சில குழந்தைகள் பாபக் குழந்தைகள் என சொல்லப்பட்டிருக்கலாம்.  இப்பொதும் சில குழந்தைகள் வாடகைக் கர்பப்பையிலும், தானம் செய்யப்படும் விந்துவாலும் நவீன மருதுவமனைகளில் பிறப்பதுண்டுதானே.  அதே போல், அதே அளவில் அன்று சாமிக் குழந்தைகள் பிறந்திருக்கலாம். அறிவியல் ரீதியாகப்  பேசும்போது  ஒத்துக்கொள்பவர்கள் , ஆன்மீக ரீதியில் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்தானே .மட்டுமல்ல ,   பெருமாள் முருகன் சொல்லி வந்த போது திருவிழாவின் 14 ஆம் நாள் மலை எங்கும் காமப்பசியுடன் வரும் ஆண்களும், குழந்தை பெற ஆசையுடன் வரும் பெண்களும் அலைந்து திரியும் இடமாகத் திருச்செங்கோடு ஆகி விடுகின்றது. அத்துடன்  ஏராளமான சாமிக் குழந்தைகளும் அவர்களது பின் தலைமுறையினரும் வாழும் இடமாகத் திருச்செங்கோடு ஆக்கப்பட்டதால் அங்குள்ளோரின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் பெருமாள் முருகன்.  நிற்க,

          என்றாலும், இப்போது எழுந்திருப்பது தேவையில்லாத சர்ச்சைகள். சல்மான் ருஷ்டி,  Hitchens, Christopher (2007), God Is Not Great: How Religion Poisons Everything, கும், ஏன் நம் சுஜாதாவிற்கும் எதிர்ப்புகள் வரத்தான் செய்தன.  சுஜாதாவின் நாவல் நிறுத்தப்பட்டதும் உண்டு. அது தொடராக வந்ததால். ஒரு எழுத்து என்று வரும் போது மாறுபட்டக் கருத்துக்கள் வரலாம். விமர்சிக்கப்படலாம். நல்ல ஆரோக்கியமான நிலையில். தவறில்லை. ஆனால், அதை முடக்கும் அளவிற்குப் போவது என்பது அதிகபட்சம்.  

இறுதியாகச் சொல்லிக் கொள்வது, நம் வாசிப்பு விரிவடைய வேண்டும். நமது பார்வையும் விரிவடைய வேண்டும். சமூகம், மதம், ஜாதி, நம்பிக்கைகள் என்ற ஒரு எல்லைக்குள் இல்லாமல், எல்லைக்கு அப்பாற்பட்டதாக, ஒரு பக்கச் சார்புடையதாக இல்லாமல், நடுநிலைமையுடன், தீர்க்கமான பார்வையுடன் வாசிப்பு இருந்தால், இது போன்ற சர்ச்சைகள் எழாமல், ஆரோக்கியமான விவாதங்களும், இன்னும் பல நல்ல படைப்புகளும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை. சமூகத்தில் சமத்துவம் , சம உரிமை, சகோதரத்துவத்தை , சாதி,தீண்டாமை  மற்றும் பாலினம் பேசி தகர்த்தெரிந்த, டாக்டர் அம்பேத்கரால் தீ கொளுத்தப்பட்ட,கொளுத்தப்பட  வேண்டிய  மனுஸ்ம்ருதியும், அதுபோல்  கொளுத்தப்பட வேண்டியபலவற்றையும்  கொளுத்தியும், அது சாம்பலாகாமல் இருக்கும் போது, மாதொருபாகனை அவ்வளவு எளிதாகச் சாம்பலாக்கி விட முடியாது.  சாம்பலாகிப் போக அனுமதிக்கவும் கூடாது. இச்சூதின் பின் பொறாமை உள்ள எழுத்தாளர்களும், சந்தர்ப்பவாதிகளான அரசியல் வாதிகளும் ஏன் கொங்கு சமுதாயத்தினரை இழிவுபடுத்தக் காத்திருக்கும் சந்தர்ப்பவாதிகளும் இருக்கலாம். அவர்களது வெற்றி தற்காலிகமே! தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வி இருக்கிறது. ஆனால், தர்மம் வெல்லவே செய்யும்! முருகன், பெருமாள் முருகனாகி மீண்டும் எழுதத்தான் வேண்டும்!  எழுதத்தான் செய்வார்! நம்புவோம் .... காத்திருப்போம்.