புதன், 5 பிப்ரவரி, 2014

குரு தட்சிணை





     திருச்சூர் பேருந்து நிலையம். குமரேசன், உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் தன் ஊராகிய சேலம் செல்வதRkuற்காக, பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர். ஒடிசலான தேகம். ஓய்வு பெற்ற ஆசிரியருக்கான எல்லா அடையாளங்களும் இருந்தன. கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் இரு பெண்கள் இருப்பதை அவர் நெற்றியில் இருந்த கவலை ரேகைகள் ஜோசியம் சொல்லியது. காத்திருந்ததில் கால்கள் வலிக்கத் தொடங்கவே உட்கார இடம் தேடினார். தமிழ் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். சுற்றிலும் மலையாளக் குரல்கள்தான்!  மலையாள மாதம் மகரம் (தை மாதம்) தொடங்கி சபரி மலை மகர விளக்கு முடிந்த பின்னும் கூட, சற்று தூரத்தில் ஒரு டீக்கடையில், தாஸேட்டன் தனது இனிமையான குரலில், மகர விளக்கிற்கு ஐயப்பனை விளித்துக் கொண்டிருந்தார்.  அடுத்த கோவை பஸ் எத்தனை மணிக்கு என்று, குமரேசன் அருகிலிருந்த மலயாளச் சேட்டனிடம் கேட்டார்.


 “9.30 மணிக்காணு என்ற பதில் வந்தது. 8 மணிதான் ஆகியிருந்தது. இன்னும் 1 ½ மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பஸ்ஸும் பேருந்து நிலையத்திற்குள் வரும் போதும், அது செல்லும் இடம், புறப்படும் நேரம் எல்லாம் நேர்த்தியாக, நல்ல குரல் வளம் உடைய ஒருவர் பேருந்து நிலைய டைம் கீப்பர் அறையிலிருந்து, ஒலிபெருக்கியில் அறியிச்சுக் (அறிவித்துக்) கொண்டிருந்தார். எல்லா மலையாளிகளின் குரலும் இனிமையாக இருக்குமோ? தாஸேட்டனின் குரல் போன்றே! அவர் நின்றிருந்த இடத்திற்கு எதிர்த்தாற் போல இருந்த சுவரில்  கேரள நாட்டிளம் பெண் லக்ஷ்மி மேனன் அழகாய் கொஞ்சி சிரித்துக் கொண்டிருந்தார் விஷாலுடன். மலையாளத்துக் குட்டிகளுக்கு தமிழ் நாட்டில் காற்று அடிக்கின்றது!  மலையாள நாட்டில் இப்போது தமிழ் படங்களின் வருகை அதிகம் போலும்!


இவ்வாறான எண்ண ஓட்டத்தில் இருந்த குமரேசனுக்கு வயிறு கொஞ்சியது! கெஞ்சியது! அருகிலிருந்த சிற்றுண்டிக் கடைக்குச் சென்று சாப்பிடலாம் என்றால், இந்த வயதான காலத்தில் சாப்பிட்டாலும் தொந்தரவு, சாப்பிடாவிட்டாலும் தொந்தரவுதான்.  மாத்திரை சாப்பிட வேண்டும் என்று இரண்டு இட்லிகள் சாப்பிட்டு வயிற்றின் கெஞ்சலை அடக்கினார்.  தேங்காய் எண்ணையில் செய்த கேரள சிப்ஸ் கண்ணில் படவும், வீட்டிற்கு வாங்கலாம் என்று நினைத்த போது அடுத்த உபாதை.  கழிவறை எங்கே என்று தேடி, விசாரித்து இயற்கை அழைப்பை முடித்துக் கொண்டு திரும்பும் சமயம், திரும்பவும் அந்த சிப்ஸ் கடை கண்ணில் படவும், மணி 9.30 ஆக இன்னும் 10 நிமிடங்களே உள்ளது என்று கைக்கடிகாரத்தில் பார்த்ததும், தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கே விரைந்தார். திடீரென்று, அருகில் தமிழ் குரல்.

“ஸார் என்னை நினைவுருக்கா சார்?  சீனிவாசன். 10 வருஷத்துக்கு முன்னாடி, 12 ஆம் வகுபில் நீங்கள் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தீர்கள்! 

வயதானதால் கண்ணில் சற்று மங்கல். கண்ணைக் கசக்கிக் கொண்டு அவனை உற்றுப் பார்த்து, மூளையைக் கசக்கிக் கொண்டு நெற்றியில் தேய்த்துக் கொண்டார்.

“ம்ம்ம்ம்ம்ம்....எந்த பாட்ச்?

“சார்... 2003 ஆம் பாட்ச்.ஆங்கிலம் கற்று நன்றாகப் பேச வேண்டும் என்று எங்களுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னீங்க! அப்ப கேக்கலை...இப்ப.....என்னோட வாழ்க்கை எப்படியோ போயிடுச்சு. ஒருதடவ வகுப்புல ஒவ்வொருத்தரா எழுந்து நின்னு எங்களுக்குள்ள ஆங்கிலத்துல உரையாடல் பயிற்சி கொடுத்த போது, நான் தப்பா பேசினேன்னு வகுப்பே சிரிச்சிச்சு.  நீங்க அவங்களைத் திட்டினீங்க, அந்த மாதிரி சிரிக்கக் கூடாது, அது கேலி செய்யற வகுப்பு இல்ல, கற்பதற்கான வகுப்பு.  தவறு யார் வேணாலும் செய்ய வாய்ப்புண்டு.  திருத்திக்கறதுதான் விவேகமான வாழ்க்கை...அப்படினு எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாதுனு அவங்கள எல்லாம் திட்டினீங்க சார்..

“இப்ப நினைவுக்கு வருதுப்பா....தப்பா உச்சரிப்பு செய்து.......... இவ்வளவு நினைவு வைச்சுருக்கியாப்பா.....ரொம்பவே சந்தோஷமா இருக்கு....

“அதேதான் சார்.  உங்கள மாதிரி ஒரு நல்ல மனசுள்ள ஆசிரியரை எல்லாம் பார்க்கவே முடியாது சார்.  எங்களை நல்வழிப்படுத்தவும், ஆங்கிலத்துல பேசணும்னும் எவ்வளவோ முயற்சி எடுத்தீங்க சார்.  உங்களை மறக்கவே முடியாது............சார், நீங்க எப்படி இந்தப் பக்கம்?

“சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்பா.  ஆமாம் நீ என்னப்பா செய்யற? இங்கே?

“சார் நீங்க சொன்ன அட்வைஸ் எல்லாம் கேக்காம போனதால அப்புறம் படிப்பைத் தொடர முடியல. ஏதேதோ வேலை பார்த்து இப்ப இங்க சிப்ஸ் கடை போட்டுருக்கேன் சார்.  பக்கத்துல சின்ன ரூம் எடுத்து தங்கியிருக்கேன் சார். குடும்பம் அங்க தமிழ் நாட்டுலதான்.  கோயபுத்தூர்ல...........சார், நான் இதோ ஒரு 5 நிமிஷத்துல வந்திடறேன் சார்  என்று சொல்லிவிட்டு சிப்ஸ் பாக்கெட் எடுத்து வர ஓடினான்.


அதற்குள் கோவை செல்லும் பஸ் வந்து விட குமரேசன் ஓடினார்.  கூட்டம் நெருக்கித் தள்ளியது.  பையை வைத்துக் கொண்டு ஏற முயன்ற போது ஷர்ட் பாக்கெட்டை பின்புறமிருந்து ஒரு கை தொட்டு பர்ஸை அப்பேஸ் பண்ணியது. கத்திப் பயனில்லை.  எல்லோரும் ஏறி சீட் பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். யாருக்கும் அருகில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கும் எண்ணமும் இல்லை.  குமரேசன், பையைக் கீழே வைத்து விட்டு ஓடுவதா இல்லை பையைத் தூக்கிக் கொண்டு ஓடுவதா என்று குழம்பிவிட்டு பையோடு அவன் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினார்.  அங்கிருந்தவர்களில் சிலர்,


“சாரே அவண்ட கையில் ப்ளேடு காணும் .  கீறிக் களையும், அடுத்துப் போகிலது என்றும் எச்சரித்தனரே தவிர யாரும் உதவுவதாக இல்லை. இருட்டில் அவன் ஓடியே போய் விட்டான்.   கையில் காசில்லை! டிக்கெட் எடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். திரும்பவும் திருமண வீட்டிற்கே ஒரு ஆட்டோவில் சென்று விஷயம் சொல்லி உதவி கேட்கலமா, அது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம்....

அப்போது சிப்ஸ் பாக்கெட்டுகளுடன் அங்கு வந்த சீனிவாசன், அவர் கையில் சிப்ஸ் பாக்கெட்டுகளைக் கொடுத்து விட்டு, விஷயம் அறிந்தவுடன்,

“என்ன சார், நடந்தது நடந்து விட்ட்து, இங்கு இப்படித்தன் பல சமயங்களில் நடக்கும்.  நான் தான் இருக்கேனே சார், உங்களுக்கு உதவ...தயங்காதீங்க சார், நீங்க எனக்கு என் அப்பாவைப் போல சார்...


  அவரை மெதுவாக பஸ்ஸில் ஏற்றி, சீட்டில் அமர வைத்து ரூ. 500 ம் அவர் கையில் கொடுத்தான்.  குமரேசன் கண்களில் கண்ணீர் தளும்பியது!

“இந்த இக்கட்டான சமயத்துல ஆபத்பாந்தவனா, தெய்வம் மாதிரி வந்து உதவியிருக்கப்பா! ஆசிரியரை அந்த நிமிஷமே மறந்து போற இந்தக் காலத்துல, வருஷம் ஆகியும், என்னையும் மறக்காம ...அதுவும் உதவி வேற செய்யற.......நா ஒருபோதும் மறக்க மாட்டேன்! ரொம்ப நன்றிப்பா!.  நான் வீடு திரும்பியதும் உனக்கு நான் இந்தப் பணத்தை அனுப்பித் தரேன்.   கண்டிப்பா எங்க வீட்டுக்கு உன் குடும்பத்தை கூட்டிட்டு வரணும்.

“என்ன சார் இதுக்கு போயி இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. எனக்கு நீங்க பணத்தைத் திரும்பி எல்லாம் தர வேண்டாம் சார்.  என்னை உங்க மகனா நினைச்சுக்குங்க!  நீங்க எங்களுக்குச் செய்ததை விடவா சார்?  நீங்க எங்களை எல்லாம் நல்லவர்க்ளாக இருக்க வேண்டி சொன்ன வார்த்தைகள், அறிவுரைகள் எல்லாம் தான், நான் இப்ப வாழும் வாழ்க்கையைத் தந்திச்சு சார்.   இது ஒரு சின்ன குரு தட்சிணைனு நினைச்சுக்கங்க! கண்டிப்பா நானும் என் குடும்பத்தோட உங்க வீட்டுக்கு வருவேன். எங்க வீட்டுக்கு நீங்களும் வரணும் சார்பஸ் புறப்படப் போகுது.........சார், உடம்ப பாத்துக்கங்கஇதுதான் என் மொபைல் நம்பர் சார்.   என்ன உதவி வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க.  நான் வரேன் சார்


தான் ஆசிரியராக இருந்ததற்கு மிகவும் பெருமை அடைந்தார். சந்தோஷமடைந்தார். படிப்பு சரியாக இல்லாமல் போனாலும் நல்ல மனிதனாக வாழும் சீனிவாசனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் அடைந்தார்.  என்றோ தான் சொன்ன சிறு அறிவரைகள் ஒரு மாணவனை, நல்ல மனிதனாக மாற்றியிருப்பதும், இப்போது அதே மாணவன் இந்த இக்கட்டான நிலைமையில் தன் அறிவுரையை நினைவு கூர்ந்து, குரு தட்சிணை என்ற பெயரில் உதவியதையும் நினைத்து மிகவும் மகிழ்வுற்றார். அவனுக்காக இறைவனிடம் வேண்டி, மனதில் வாழ்த்தினார்!  பஸ்ஸும் ஒரு நல்ல ஆசிரியரைச் சுமந்து புறப்பட்டது.

29 கருத்துகள்:

  1. நல்லதை மாணவனிடம் விதைத்ததால் நல்லதை அறுவடை செய்தார் tha.ma 1

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை
    இல்லாமல் போகும் போதுதான்
    அதன் அருமை தெரியவரும்.. அதைப்போலதான் (ஆங்கிலம் )

    ஆசிரியர்களை மதித்து நடக்கும் மாணவர்கள் இப்போ குறைவு என்றுதான் சொல்லவேண்டும் இருந்தாலும் சில மாணவர்கள் மத்தியில் தங்களுக்கு கற்பித்த ஆசிரியரை வாழ் நாளில் கூட மாறக்காமல் இருக்கிற மாணவர்களும் உள்ளார்கள் அதில் ஒருவர்தான் நீங்கள் சொன்ன மாணவன்..... குருதட்சினை பற்றி கூறிய கருத்தாடல் மிக அருமையாக உள்ளது ...வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, படிப்பு என்பதும் ஒரு பிழைப்பிற்காகவே என்பதையும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் புரிந்து கொண்டிருப்பார்...

    பதிலளிநீக்கு
  5. தவறு யார் வேணாலும் செய்ய வாய்ப்புண்டு. திருத்திக்கறதுதான் விவேகமான வாழ்க்கை...அப்படினு எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக் கூடாதுனு //குறு தட்சணையாக கிடைத்தபோதும் மாணவனை வீட்டுக்கு அழைத்து மகிழும் வாய்ப்பையும் கொடுத்துவிடுவார்.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமை... எதார்த்தமான சம்பவங்கள் எளிமையான நடையில்... பொருத்தமான படங்கள்...!

    //கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் இரு பெண்கள் இருப்பதை அவர் நெற்றியில் இருந்த கவலை ரேகைகள் ஜோசியம் சொல்லியது.//

    அருமையான வர்ணனை...!

    பதிலளிநீக்கு
  7. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
  8. காலத்தினால் செய்த குருதட்சனை !
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. ஆசிரியருக்கு சிப்ஸ்-ஐ மீண்டும் எங்கு/எப்போ நோக்கினும் ஞாபகம் வரும்..!!
    போட்டாச்சு... போட்டாச்சு..!!

    பதிலளிநீக்கு
  10. விதைப்பதே முளைக்கும் என்பதை வலியுறுத்தியது பதிவு வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  11. சரிதான்! டிடி! இதுவும் யோசிக்க வைக்கிறது! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  12. ஆசிரியரை மகுடம் ஏற்றிய தங்கள் தட்சிணை! மிக்க நன்றி ஜி! மறு தட்சிணை வைத்தாயிற்று!

    கருத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. தான் ஆசிரியராக இருந்ததற்கு மிகவும் பெருமை அடைந்தார். சந்தோஷமடைந்தார். படிப்பு சரியாக இல்லாமல் போனாலும் நல்ல மனிதனாக வாழும் சீனிவாசனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் அடைந்தார்//

    அருமையாகச் சொன்னீர்கள்
    நல்ல பொருளாதார வசதியுடன் இருக்கும்
    மோசமான மனிதனைவிட இத்தகைய
    சிறந்த மனிதரைத்தான் நிச்சயம் ஆசிரியர் விரும்புவார்
    மனம் கவர்ந்த பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. மதுரைத் தமிழன், உங்கள் கருத்து சரிதான்! நன்றி!!!

    பதிலளிநீக்கு
  15. நண்பர் ரூபன், தங்கள் அருமையான கருத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. கவியாழி! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்ளும் ஆசிரியர்களின் மத்தியில் இந்த ஆசிரியர் தனியாக மிளிரத்தான் செய்கிறார்!

    பதிலளிநீக்கு
  17. நைனா தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  18. அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. வாங்க மலர்வண்ணன்! வெகு நாட்கள் கழித்து வருகை!! சந்தோஷம்!

    சரிதான்! இனி பர்சை எப்படிப் பாதுகாப்பது என்பதிலும் மிகக் கவனமாக இருப்பார்! ஒவ்வொரு இடத்திலும் இது போல மாணவன் வருவானா?!! என்ன?

    பதிலளிநீக்கு
  20. படிப்பு சரியாக இல்லாமல் போனாலும் நல்ல மனிதனாக வாழும் சீனிவாசனை நினைத்து சந்தோஷமும், பெருமையும் அடைந்தார்.

    ஏணியாகவும் , தோணியாகவும் உள்ள ஆசிரியர் சமுத்தாயத்திற்கே இது தானே பெருமை! அருமையாக உள்ளது!

    பதிலளிநீக்கு
  21. //ஏணியாகவும் , தோணியாகவும் உள்ள ஆசிரியர் சமுத்தாயத்திற்கே// அருமையான கருத்து! ஐயா தாங்கள் புலவர் இல்லையா....ஏணி...தோணி என்று அழகான க்ருத்துமிக்க சொற்களைக் கையாண்டுள்ளீர்கள்!! நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கு! வருகைக்கும்!

    பதிலளிநீக்கு
  22. //வெங்கட் நாகராஜ் 6 February 2014 21:09
    சிறப்பான கதை.//

    மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்!

    பதிலளிநீக்கு
  23. ஆசிரியராகிய நமக்கு மாணவர்கள் நம் பிள்ளைகள் தான்.
    அவர்கள் பொருளாதார வளர்ச்சி நம் இரண்டாம் பட்சம்.
    அவர்கள் மனிதநேயமே நம் கற்பித்தல் உச்சம்.
    ரைட்டா சார்?

    பதிலளிநீக்கு
  24. மிக மிகச் சரியே! நூற்றுக்கு நூறு சரியே!! (ஆசிரியர் அல்லவா அதான் மார்க் வந்து விட்டது!!) "இந்த ஆசிரியர் கற்பித்த மாணவர்கள் அதி புத்தி சாலிகள், நல்லா வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர் என்பதை எல்லாம் விட, நல்ல ஒழுக்கமுள்ள, மனம் உள்ள மாணவர்களாக இருக்கின்றார்கள்" என்றால் அதை விட மகிழ்வும், பெருமையும் வேறு ஏது?!!!

    தங்கள் அருமையான கடுத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு