புதன், 8 ஜனவரி, 2014

மண்ணில் விழும் நட்சத்திரக் குழந்தைகள் நல்லவராவதும், வல்லவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே - கற்றல் குறைபாடு - Learning Disability - 1



எங்கள் அகத்திற்கு வருபவர்கள் தயவு செய்து இந்தப் பதிவை வாசியுங்கள் என்பது எங்கள் வேண்டுகோள். இந்தப் பதிவு எல்லோருக்கும் என்றாலும், குறிப்பாகப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்குமான ஒரு பதிவு. அதாவது, நர்ஸ், மருத்துவர், பெற்றோர் இவர்களின் கவனக் குறைவால் சில குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு பற்றியது, அதிலும் எனது சொந்த அனுபவம்.  என் மகனிடம் இருந்தக் குறையை எப்படி அவன் கடந்து வந்தான்; நாங்கள் எப்படி அவனுக்கு உதவினோம் என்ற அனுபவம். 

உங்கள் குழந்தைகளை தயவு செய்து அடிக்காதீர்கள்.  படிக்கவில்லை என்றால் அடிக்காதீர்கள். குறிப்பாக, தரம் (Rank) அடிப்படையில் அடிக்கவே அடிக்காதீர்கள். “முட்டாள், “உனக்கு ஒன்றும் தெரியவில்லை, “அவனை/அவளைப் பார் எப்படி படிக்கின்றான்/ள் என்றும், இன்னும் பல Un parliamentary”  சொற்களை (என்னைப் பொருத்த வரை இவை தகாத வார்த்தைகள்தான்) உபயோகிக்காதீர்கள். இந்தப் பதிவு இரண்டு பாகங்களாக வரும், சற்று பெரிதாக இருப்பதாலும், ஒரு சில விஷயங்கள் கற்றல் குறைபாடு ப்ற்றி பேச வேண்டி இருப்பதாலும்.
இதனை, என் மகன் இந்த உலகிற்கு அறிமுகம் ஆனதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், அவன் பிறந்தபோது நேர்ந்த தவறினால், அவனுக்குக் கற்றல் குறைபாடு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது, நான் கற்று அறிந்ததும் அதுதான். என் பிரசவம் சிறிது கஷ்டமான பிரசவமாகிவிட்டது, நர்ஸ் சரியான நேரத்தில் கவனிக்காத காரணத்தினால். Prolonged Laborஎனக்கு இரண்டு முறை False labor pain வந்ததால், எங்கள் கிராமத்திலிருந்து டவுணுக்கு அடித்துப் பிடித்து செல்ல முடியாது என்ற காரணத்தினால் ஆஸ்பத்திரியிலேயே தங்கச் சொல்லிவிட்டார்கள். இரவு 11.30 மணிக்கு எனக்குப் பிரசவ வேதனை தொடங்கி,  தொடர்ந்து வலி வரத் தொடங்கியது. வராண்டாவில் நடந்து கொண்டே நர்ஸிடம் சொன்னேன். டாக்டர் வேறு ஒரு கேஸைப் பார்க்க வெளியில் சென்றிருக்கின்றார்கள் என்று சொல்லிவிட்டார்.    அப்போது மொபைல் ஃபோன் கிடையாது. அரை மணி நேரமாகக் குழந்தை அசைந்து, அசைந்து, இறுதியில் குழந்தையின் அசைவு நின்று விட்டது. குழந்தை சற்று பெரியதாக இருந்ததால், கை, கால் முட்டு, கால் விரல்கள் எல்லாமே என்னால், வெளியில் கை வைத்துப் பார்த்தாலே உணர முடிந்த்து. குழந்தை குறுக்குவாட்டில் (Horizontal ஆக) அப்படியே இருந்தது. என் அம்மா மிகவும் பயந்து விட்டார்கள். நான் சுத்தமாகப் பயப்படவில்லை. நான், என்ன செய்வது என்று தெரியாமல், வராண்டாவில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்து கொண்டே இருந்தேன். குழந்தையின் அசைவு நின்றதும் நர்ஸிடம் சொன்னேன். அப்போதும் அதே பதில்......இன்னும் பனிக்குடம் உடையல இல்ல.....ஒண்ணும் இல்ல...அப்படியே நடந்துட்டு இருங்க என்றார்.  “அசைவே இல்லை.  எப்படி பனிக்குடம் உடையும் என்று கேட்டதற்கு பதில் இல்லை. 2 மணி அளவில் திரும்பவும் நர்ஸிடம் கேட்டேன், அப்போதும் அதே பதில்தான். நேரம் ஆக ஆக, என்ன செய்வது என்று அறியாமல், மனம் வருந்தி, நான் பொறுமையாக நடப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை. வீட்டிலும் ஃபோன் வசதி கிடையாது. அந்த இரவில் ஆஸ்பத்திரியை விட்டு போகவும் முடியாது அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.  ஆண்கள் யாரும் இல்லை. 3.30 மணி அளவில் ப்ளீடிங்க் (Bleeding) ஆரம்பித்தது. திரும்பவும் எனது கெஞ்சல், நர்ஸின் அதே பதில். காலை 6.30 மணிக்கு டாக்டர் வரும் வரை நான் அப்படியே நடந்தும், உட்கார்ந்தும்....பிரார்த்தித்துக் கொண்டே, மனம் தளராமல், எப்படியும் குழந்தை நல்லபடியாக பிறந்து விடும் என்று பொறுமையாக இருந்தேன். டாக்டர் உள்ளே வரும்போதெ, “நீ எல்லாம் படிச்ச பொண்ணா?  நர்ஸ் கூடதானே இருந்தாங்க, சொல்லி என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? (அவர்கள் வீடு மாடியில். கீழே ஆஸ்பத்திரி.  உள் வழியாகப் போக முடியாது.  நான் நர்ஸை நம்பியதால்).  இந்த மாதிரி படிச்சவங்க எல்லாம் செய்ய வேண்டியது அப்புறம் எங்க மேல பழி போட வேண்டியது என்று திட்டிக் கொண்டே என்னைச் செக் செய்யத் தொடங்கினார்கள், எனிமா கொடுக்க்ச் சொன்னார்கள்.....  நான் அப்போது நர்ஸைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.  அவர்கள் தான் எனக்கு எல்லாம் செய்ய வேண்டும். டாக்டரின் கணவர் Anesthesiologist. அவர் குழந்தையின் heart beat செக் செய்தார். அவர் உடனே டாக்டரிடம் ஏதோ சொல்ல, உடனே எனக்கு C section க்கு- (சிசேரியனுக்கு) ஏற்பாடு செய்யத் தொடங்கினார்கள். எனக்கு நிலைமை புரிந்து விட்டது. குழந்தை உயிருடனா, இல்லையா...நம்பிக்கையுடன் பிரார்த்தனைதான். நான் பயப்படவும் இல்லை அழவும் இல்லை. இவர்களது ஆஸ்பத்திரியில் அதற்கான வசதி இல்லாததால், இந்த டாக்டர் செல்லும், அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ள வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு ஃபோன் செய்து தியேட்டர் எல்லம் ரெடி பண்ணச் சொல்லவும், அந்த ஆஸ்பத்திரிக்கு நாங்கள் சென்றோம். அங்கு சென்றதும், ஆப்பரேஷனுக்கான எல்லா ஏற்பாடுகளும் எனக்கும் செய்து விட்டு, பின்பக்கம் கீழே (Lower Back) மயக்க ஊசி போட்டதும், என் கண்கள் மூடப்பட்டாலும் எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை அனுமானிக்க முடிந்தது. அறுப்பது எல்லமே வலி இல்லையென்றாலும் உணர முடிந்தது. 9.57 குழந்தையை வெளியே எடுத்தார்கள். குழந்தையின் அழுகைச் சத்தம் இல்லை. தியேட்டரில் அதுவரை இருந்த பேச்சுக் குரல் நின்றது.  மயான அமைதி. நானும் கவலைப் படவில்லை. பிரார்த்தனை ஒன்றுதான். நம்பிக்கை, குழந்தை கண்டிப்பாக உயிருடன் இருக்கும் என்று.  அப்போது, எனக்கு குழந்தை அழவில்லை என்றால் பிரச்சினை வரும் என்பதைப் பற்றிய அறிவு இல்லை. சிறிது நேரம் கழித்து குழந்தையின் சத்தம் மெதுவாகக் கேட்டது. டாக்டர் “ஹப்பா என்று பெருமூச்சொன்று விட்டு, ஆண் குழந்தை, 4 kg, நல்ல நிறம், European Baby மாதிரி இருக்கிறான் என்று தகவல் சொன்னார். நான் பின்னர் நர்ஸைப் பற்றி சொல்ல, அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன்.


அவன் வளரும் போது வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும் எல்லமே சிறிது மெதுவாகத்தான் செய்வான். படியில் இறங்க வேண்டும் என்றால், உட்கார்ந்து, காலை முதலில் கீழே விட்டு ஆழம் பார்ப்பது போல் பார்த்து பின்னர்தான் இறங்குவான். சேட்டைகள் அதிகம் இல்லை. பேப்பர் கிழிக்க மாட்டான். நான் வரைவதைப் பார்த்து அவனும் பேப்பரில் ப்ரஷ்ஷை வைத்து கலர் அடித்து வரைவான். இவை எல்லாம் 1 ¼ வயதில். அவன் என்னுடன் ஓடி ஆடி விளையாடுவான் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. நான் அவனுக்குத் தோழி.  மற்ற குழந்தைகள் அவனுக்குச் சரிவரவில்லை. அவர்கள் எல்லோரும் சேட்டை செய்பவர்கள். அதுதானே இயல்பு. திருவனந்தபுரத்தில், நாங்கள் அப்போது குடியிருந்த வீட்டின் மாடியில் இருந்த பையன் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் ஸ்டுடன்ட். ஹவுஸ் சர்ஜன்ஸி பண்ணிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதுவும் குழந்தைகள் பிரிவில். எனக்கு அவர் குடும்பமே நல்ல நண்பர்கள். என் மகன் அவர்கள் வீட்டில் தான் விளையாடுவான். அவர் என் மகனை தினமும் கொஞ்சி விட்டு அவன் வாயில் கை வைத்து “கடி பாப்பா என்பார்.  பின்னர் பாப்பா பெயர் என்ன? அப்பா பெயர் என்ன, அம்மா பெயர் என்ன? இப்படி கேட்பார். தினமும் வாயில் கை வைத்துக் “கடி பாப்பா என்பார். எனக்குப் புரியவில்லை.  அவர் ஏதோ தனக்காக செய்து பார்க்கிறார் என்று விட்டுவிட்டேன். 
  
ஒரு நாள் மழை பெய்த போது என் மகனுக்கு உணவு கொடுத்துக் கொண்டே மழை என்று சொல்லிக் கொடுத்து மழை எப்படிப் பெய்யும், அதாவது தண்ணீர் ஆவியாகி........ என்ற அறிவியல் விளக்கத்தை அவனுக்குப் புரியும் வகையில் சொன்னேன்.  பின்னர், ஒரு நாள், நான் அடுப்பில் தண்ணீர் சுடவைக்க மூடியிட்டு தண்ணீர் கொதித்தவுடன் மூடியை எடுத்தவுடன் அதிலிருந்து சொட்டிய நீர்த் துளிகளைப் பார்த்து, தண்ணீர் ஆவியையும் பார்த்து உடன் என்னிடம் அதையும், மழையையும் ஒப்பிட்டு தன் சைகையால் சொன்னவுடன் எனக்கு ஆச்சரியம். அவனிடம் சிறிய குறை தெரிந்தாலும், அவனிடம் ஒரு தனித்தன்மை இருப்பது போல் தெரிந்தது. எதையுமே ஆராய்ந்து பார்க்கும் ஒரு பழக்கம்.  நுனிப்புல் மேயாமல். ஆனால் மற்றவர்களுக்கு அவன் குறை தெரியவில்லை. 
2 வயதிற்கு மேல்தான் பேச்சு வந்தது. அப்போது அவன் தன் அப்பாவிடம் சுவரில் மாட்டிவைத்திருந்த சுவர் கடிகாரத்தைக் காட்டி சைகயால் அது என்ன என்றான்.  அதற்கு என் கணவர், “வாட்ச் என்றார். உடனே, இல்லை என்பதற்காக தலையை ஆட்டிவிட்டு “Clock” என்று சொல்லிவிட்டு, கையில் மணிக்கட்டைக் காட்டி “வாட்ச் என்றான். அதே போன்று “Kite” என்ற சொல்லைக் கேட்டால் அவன் பருந்தையும் காட்டி, பட்டத்தையும் காட்டுவான். இது போன்று பல விஷயங்கள், சொற்கள், அதை உபயோகிக்கும் விதம் அவனது சில நடவடிக்கைகள், செய்கை எல்லாமே எனக்கு ஏதோ உணர்த்தியது. அவன் மற்ற குழந்தைகளுடன் நன்றாகப் பழகி, விளையாட வேண்டும் என்று சீக்கிரமாகவே பக்கத்திலிருந்த நர்ஸரியில் சேர்த்து விட்டோம். அவன் விளையாடினாலும், நண்பர்கள் என்று அப்படி எதுவும் ஸ்பெஷலாக அவன் யாருடனும் பழகவில்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் சரியாகிவிடும் என்று நினைத்து விட்டோம். பின்னர் LKG வகுப்பில் சேர்க்க பொது அறிவு, கணக்கு, இதெல்லாம் தயார் படுத்த அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லை. அவன் பொது அறிவு நன்றாக இருந்தது. அதுவும் விலங்குகள், புவியியல் சம்பந்தப்பட்ட வினாக்கள், ஒரு வார்த்தை என்பதால், அவனுக்கு அத்துபடியாக இருந்ததால் அவன் படிப்பைப் பற்றிய குறைபாடு தெரியவில்லை. ஒன்றாம் வகுப்பில் வந்தாயிற்று. அவன் பெரிய வாக்கியங்கள் எழுதவும், வீட்டுப் பாடம் செய்யவும் கஷடப்பட்டான். கணக்கில் வெறும் நம்பர் மட்டும் என்றால் நன்றாகச் செய்வான். வகைக் கணக்கு (Word Problem) என்றால் மிகவும் கஷ்டப்படுவான். எங்களுக்கு அவன் குறைபாடு தெரியவில்லை. சோம்பேறித்தனம் என்று நினைத்தோம்.  ஆனால், கோபப்பட்டதில்லை. அப்போது, ஒரு நாள், டாக்டர் பையன் Orthopedics  மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தவர் வந்தார். அன்றும் அவர் அவன் வாயில் விரல் கொடுத்து “கடி பாப்பா என்றார்.  அம்மா பெயர் என்ன, அப்பா பெயர் என்னா.......என்பதை வேகமாக, மாற்றி மாற்றிக் கேட்டார்.

“என்ன கிருஷ்ணா, சின்னவனா இருந்தபோதும் இதையேதான் செஞ்ச.  இப்ப அவன் வளர்ந்து 1 ஆம் வகுப்பு வந்தாச்சு. இன்னமும், நீ ஒரு டாக்டரா இருந்தும் இப்படி கை எல்லாம் வாயில் விட்டு செய்யறியே.  அப்புறம் கேள்வி வேகமா கேக்கற...என்ன இது எதுக்கு இப்படி செய்யற?  என்றேன். அதற்கு அவர்,

இல்ல விரல் விட்டு “கடி அப்படினா உடனே கடிக்கணும். அப்பவும் இவன் கடிக்கல இப்பவும் இவன் கடிக்க மாட்டேன்றான்.  அம்மா பெயர் என்ன......அப்படி எல்லாம் கேட்டா அவன் உடனே பதில் சொல்ல மாட்டேங்கறான். கொஞ்சம் யோசிச்சுதான் பதில் சொல்லறான் என்றார்.
அதற்கு நான், “அப்படினா என்ன பிரச்சினை என்றேன். 



அவர், “பிரச்சினைனு இல்ல.  ஸ்கூல்ல அவன் டீச்சர்ஸ் சப்போர்ட் கிடைச்சுதுனா, முன் (Front) பெஞ்சில் இருப்பான்.  இல்லை என்றால் பாக்(Back) பெஞ்சில்தான் இருப்பான் என்றார். ஆனால், அவர் வேறு விளக்கம் கொடுக்கவில்லை என்பதால் எனக்கும் அதைப் பற்றி யோசிக்கவோ,கேட்கவோ தெரியவில்லை என்பதைவிட எனக்கு அப்போது அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை எனலாம்.

12 ஆம் வகுப்பு வரை Back  பெஞ்சில் இருந்த மகன், கற்றல் குறைபாடு இருந்தவன், இப்போது கால்நடை மருத்துவராகி, கானடா சென்று Clinical Training  எடுத்துக் கொண்டு Diplomate of American College of Veterinary Surgery வாங்க வேண்டும் என்ற துடிப்பில், அதற்கான பரீட்சையில் ECFVGA (Education Council For  Foreign Veterinary Graduates) நடத்தும் முதல் கட்டம் BCSE (Basic Clinical Science Exam) க்ளியர் செய்து விட்டு, NAVLE (North American Veterinary licensing examபரீட்சை எழுத முயற்சி செய்து கொண்டிருக்கின்றான் என்றால்  (இதற்கு பிறகும் ஒரு பரீட்சை இருக்கின்றது CPE (Clinical Proficiency Exam)  இது அங்கு Clinical Training பயிற்சி செய்த பிறகுதான், அங்கு சென்றுதான் க்ளியர் செய்ய வேண்டும்.) இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்பதும், அதனுடன், கற்றல் குறைபாடு பற்றியும், அடுத்த இடுகையில்.

பி.கு. எனது மகனின் கால்நடை மருத்துவ மேற்படிப்பைக் குறித்து  எழுதியதன் நோக்கம். இதை வாசிக்கும், கால்நடை மருத்துவர்களோ இல்லை அவர்களது பெற்றோரோ தங்கள் மகனோ, மகளோ கால்நடை மருத்துவ மேற்படிப்பு வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டால் அதற்கான வழிமுறைகள் என்ன, அதனைப் பற்றிய தகவல்கள் முழுவதும் அறிய உதவுமே என்பதுதான்.


23 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள பதிவு.... நாலு பேருக்கு உதவும் என்ற நல்ல நோக்கில் இப்படிபட்ட தரமான பகிர்வை பகிர்ந்தற்கு பாராட்டுக்கள் & எனது சல்யூட்.

    பதிலளிநீக்கு
  2. பதிவின் தலைப்பு மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழன் அவர்களுக்குத் தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! ஆம், அமெரிக்காவில் குழந்தை பிறப்பு மட்டுமல்ல, பள்ளியிலும் கூட குழந்தைகள் நன்றாக நடத்தப்படுவார்கள் என்ற அனுபவம் உண்டு. நல்ல அனுபவம். இதன் தொடர் பதிவில் அது சொல்லப்படும். தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு

  3. இந்தியாவில் டாக்டர்களும் நர்சுகளும் பண்ணும் அட்டகாசம் மிக அதிகம் அவர்களிடம் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை. இந்தியாவில் குழந்தை பெறும் ஒவ்வொரு பெண்ணும் குழந்தை உண்டாகி இருக்கும் சமயத்தில் அல்லது பிள்ளை பெறும் சமயத்தில் நிச்சயம் அமெரிக்காவில் இருக்க வேண்டும் இங்குள்ள நர்சுகள் செய்யும் பணிவிடை மிகவும் ஆச்சிரியப்பட வைக்கிறது

    பதிலளிநீக்கு
  4. கடவுளை நம்பாத நான் என் குழந்தைகளை அடித்தது இல்லை!
    குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லும் ஆத்திகர்களிடம் குழந்தையை அடிப்பது நீங்கள் வணங்கும் தெய்வத்தை அடிபதற்க்கு சமம் அல்லவா என்று கேட்டால் அடியாத மாடு படியாது என்றார்கள்?

    அடப்பாவி, அப்ப குழந்தையை தெய்வமாக்கி பிறகு தெய்வத்தை மாடாக்கி விட்டாயே என்றால், விதண்டாவாதம் பேசும் உன்னுடன் மனுஷன் பேசுவானா என்றார்கள்!

    "ஆம், நீ மனிதன் இல்லை; உன்னுடன் பேச மூடியாது தான் " என்று நான் முடித்துக் கொள்வேன்.

    எங்க குடும்பம் பெரிய குடும்பம்; எங்க அப்பா எங்களை [குழந்தைகளை] அடித்தது இல்லை! அடிக்காமல் குழந்தைகளை நன்றாக வளர்க்கு முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் எங்கள் அப்பா? திட்டுவது உண்டு; என்றுமே அவனைப் பார் இவனைப்பார் என்று சொன்னதில்லை; எங்கள் அப்பாவைப் பொறுத்தவரை உலகத்திலேயே அறிவாளிகள் அவர் குழந்தைகள், அவர் எல்லா பேரன் பேத்திகள் மட்டுமே---ஆம் நாங்கள் மட்டுமே! ஜி..டி நாயுடு கூட [அறிவாளி] கிடையாது!

    இன்றும் போனில் பேசினால், ________ குட்டி என்று தான் கூப்பிடுவார்.எப்படி கண்ணா இருக்கிறே என்ற கேள்வி தான்!

    நல்ல பதிவு! +!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி உங்கள் அப்பா உங்களுக்கு ரோல் மாடல் என்பது தெரியும் நீங்கள் உங்கள் ஒரு பதிவில் இதை பற்றி சொல்லியிருந்தீர்கள். சொல்லப்போனால் நான் இந்தப் பதிவை அடித்த போது குழந்தைகளை அடிக்காதீர்கள் என்று அடித்த போது உங்கள் பதிவு நினைகவுக்கு வந்தது.
      மிக்க நன்றி நம்பள்கி உங்கள் கருத்திற்கு!!

      நீக்கு
  5. தில்லைகாத்து குழந்தை பெறும் சமயத்தில் உங்களிடம் இருந்த மன திடம் என்னை வியக்கவைக்கிறது.பாராட்டுக்கள் இன்னும் உங்களிடம் அந்த மனதிடம் இருக்குமென நம்புகிறேன் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழன் அவர்களுக்கு இந்த தில்லைஅகத்தில் இரண்டு பேர் சேர்ந்து எழுதுகின்றோம். துளசிதரன், கீதா. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஸோ இந்த பதிவு கீதாவாகிய நான் எழுதியது அதுவும் அது என் அனுபவம் என்பதால். இதுவும் கூட என் நண்பர் துளசி எடிட் செய்து கொடுத்தார். திருத்தங்கள் செய்தார். ஒருவருக்கொருவர் கலந்து பேசித்தான் எல்லா இடுகைகளுமே.

      அந்த மனதிடம் எனக்குச் சிறு வயது முதல் உண்டு என்றாலும் திருமணம் ஆனதிலிருந்து இப்போது வரை கூடுதலாக இருக்கத்தான் செய்கிறது. ஒருவேளை, எப்போதாவது, அது சிறிது ஆட்டம் கண்டாலும் உடன் என் நண்பர் அதை நிலை நிறுத்திவிடுவார்.

      தங்கள் பாராட்டுக்கள் எனக்கு இன்னும் ஊக்கத்தையும், மனோதிடத்தையும் தருகின்றது.!! மிக்க நன்றி! தங்கள் வாழ்த்துக்கும்!

      நீக்கு
    2. என் பெயரை (கீதா) என்று நான் எழுதுவதற்கு பொதுவாக எழுதியதில்லை. ஆனால் என் நண்பர் மிகவும் என்னை வற்புருத்தி, எழுத வேண்டும் என்பார் அதனால் ஓரிரு இடுகைளில் என் பெயர் எழுதியுள்ளேன். மற்றபடி எழுதுவதைத் தவிர்த்து விடுவேன். அதனால் உங்களுக்கு ஒருவேளை சிறிது குழப்பம் வந்திருக்கலாம். இப்போது அது நீங்கி இருக்கும் என நினைக்கின்றேன்!

      நீக்கு
  6. வணக்கம்
    நண்பரே..

    எல்லோரும் அறிய வேண்டிய கருத்தை நல்ல கருத்தாடல் மூலம் மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...நண்பரே.

    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்! வாங்க நண்பர் ரூபன்! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் , ஓட்டிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. அனைவருக்கும்பயன்படும் அருமையான பகிர்வு
    விரிவாகவும் எளிமையாகவும் சொல்லிப்போனவிதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்களின் பாராட்டிற்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும்! பகிர்வு தொடரும் இன்னும் ஒரு பாகத்தில் முடிக்க நினைத்துள்ள்ளோம். நாளை இரவு பதிவேற்றம் செய்ய முடியும் என்று நினைக்கின்றோம்! நன்றி!

      நீக்கு
  8. விழிப்புணர்வூட்டும் தன்னம்பிக்கையை விதைக்கும் தரமான பதிவு... வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்... ஆவலோடு காத்திருக்கிறேன்...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நைனா! தங்கள் பாராட்டுக்கள். என்னை விட கஷ்டப்படும் எத்தனையோ பெண்கள் இந்த உலகில் இருக்கின்றார்கள்! தன்னம்பிக்கையுடன் போராடும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கம் அளிப்பவர்கள்தான். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி: நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" எத்தனை அருமையான வரிகள்! இது என் மனதில் எப்போதுமே இருக்கும்!

      மிக்க நனறி நைனா. நாளை இரவு இதன் அடுத்த பதிவு 2 பதிவேற்றம் செய்வோம் என நினைக்கின்றோம். அதற்குல் எழுதி முடித்துவ் விடுவேன் என நினைக்கிறேன். பார்ப்போம்!

      நீக்கு
  9. மகன் நன்று படிக்க வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவியாழி அவர்களே!! தங்கள் வருகைக்கும், என் மகனைத் தாங்கள் வாழ்த்தியற்கும்!!!

      நீக்கு
  10. அடுத்த பதிவை எதிர்ப்பார்க்க வைத்து விட்டீர்கள் !
    த.ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளி இரவு பதிவேற்றம் செய்யப்படும். பகவான் ஜி! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. தங்களின் அனுபவம் அனைவருக்கும் பாடம்... தங்களின் மகனுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! DD! தங்கள் வருகைக்கும், வாழ்த்டிற்கும்! உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்: வாழ்த்தும் போது என் மகனுக்கு என்ன குறைச்சல்? மிக்க நன்றி!!

      நீக்கு
  12. இனி குழப்பமே இல்லை...! (http://dindiguldhanabalan.blogspot.com/2013/04/There-is-no-confusion.html) - நேரம் கிடைக்கும் போது வாசிக்கவும்...

    பதிலளிநீக்கு