செவ்வாய், 17 டிசம்பர், 2013

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள் அங்கத்திலே.........


சமீபத்தில் கேள்விப்பட்ட 4 மரணங்கள், அதுவும் தற்கொலைகள் சற்று வியப்பைத் தந்தது. செய்தித் தாளில் வராத தற்கொலைகள். நான்குமே பெண்கள். படித்தவர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள். சொல்லப்பட்டக் காரணம் இந்த நூற்றாண்டிற்கு, அதுவும் சமீபத்திய சமூகம் போகும் போக்கிற்கு சற்றும் ஒவ்வாத காரணமாக எனக்குப் பட்டது.  காரணம் கறுப்பு நிறமும், சற்று குறைவான அழகும், மாற்றுத் திறனாளிகளாக இருந்ததுனாலும், அதனால் திருமணம் தடை பட்டதும் தான். இதற்காகத் தற்கொலையா?  நம் சமூகம் இன்னும் மாறவில்லையா? என்னை யோசிக்க வைத்தது. இந்த அழகு இந்த சமூகத்தை என்ன பாடு படுத்துகிறது? சற்று கூடுதலோ என்று! இப்போதெல்லாம் இந்த அழகு என்பது மிகவும் இன்றியமையாதது என்பது போல் ஆகிவிட்டதோ? இல்லையென்றால், தெருவிற்கு தெரு, ஏன் கிராமங்களிலும் கூட அழகு நிலையங்களும், ஏகப்பட்ட அழகு சாதன விற்பனைக் கம்பெனிகளும் போட்டிபோட்டுக் கொண்டு உலகம் முழுவதுமே சிகப்பழகு க்ரீம்களையும், தலைச் சாயங்களையும் விற்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்குப் படு குஷிதான்!




இதற்கும் மேலாக பலர் (பண வசதி உள்ளவர்கள்) இறைவன்/இயற்கை தந்த அழகில் மனத்திருப்தியும் அமைதியும் அடையாமல், தங்கள் மனதில் ஒரு பிம்பம் வடித்து, அறுவை சிகிச்சை செய்து தங்கள் உடலில் அழகுத் திருத்தங்களைச் செய்து கொள்கிறார்கள்! உதாரணமாக உடல் எடை குறைப்பிற்கும், உடலில் உள்ள அதீத சதையைக் குறைப்பதற்கும், மூக்கை அழகு படுத்துவதற்கும், முகத்தை அழகுபடுத்துவதற்கும், முடியை வழுக்கைத் தலையில் நட்டு(!!) வளர்ப்பதற்கும், பல் வரிசைகளை அழகு படுத்துவதற்கும், பணத்தை வாரி இரைத்து, சமயத்தையும் செலவிட்டு, அழகைக் கூட்டி வயதைக் குறைத்து சமூகத்தில் உலா வருகிறார்கள்.



அழகு என்பது என்ன? நிறம் என்பது என்ன? உடலில் ஊனம் இருந்தால் தான் என்ன? எல்லா அழகுச் சாதனங்களின், குறிப்பாக அழகு க்ரீம் விளம்பரங்களிலும் சொல்லப்படும் “சிவப்பழகு தான் அழகா? நம் உடலில் உள்ள தோல் நிறமிகள் (skin pigmentation) நம் தோலினுள் ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துபவை. அவை ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஏற்படும் நிற மாறுபாடுகளை 10% கட்டுப்படுத்தும் வேலையையும், 90% பயோ கெமிக்கலினால் ஏற்படும் மாறுதல்களையும் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நிறம் போற்றப்படுகிறது. ஒரு சில நாடுகளில் தோல் நிறத்தின் தன்மையை அதற்கென்று உள்ள சில வார்த்தைகள், பாலின் நிறம் என்பது தொடங்கி ப்ரௌன் என்பது வரை மிக மிக ஆவேசமாகப் பேசப்படுகிறது.



நம் இந்தியாவில் வெளிர் நிறம் மிகக் கவர்ச்சிகரமானதாகவும், அதே சமயம் அடர்ந்த நிறம் தாழ்தப்பட்ட சாதியாகவும் கருதப்படுவதால், வெள்ளை நிறமாக்கும் க்ரீம்கள் என்று அழகு சாதனங்களுக்கு வியாபார ரீதியாக நல்ல சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல அழகான, வெளிர் நிறம் உடையவர்கள் உயர் சாதி எனவும் கருதப்படுகிறது.  என்னதான் நாம் அழகுச் சாதனங்களை உபயோகித்து நம்மை அலங்கரித்துக் கொண்டாலும், இறைவன் தந்த நம் உண்மையான சொரூபம் சொரூபம் தானே! அது மாறவா போகிறது? இல்லை நாம் யார் என்ற நமது உண்மையான அகத்தோற்றத்தையும், உள்ளத்தையும் அது காண்பிக்கப் போகிறதா?
ஒரு குழந்தை பிறந்ததுமே பொதுவாக நாம் கேட்கும் கேள்வி அது என்ன நிறம், அழகாக இருக்கிறதா, யாரைப்போல இருக்கிறது என்றும்தான். குழந்தை எப்படி இருந்தால் என்ன?  குழந்தை என்பது பூ போன்ற மென்மையான அழகுத் தளிர்தானே. பிறப்பிலிருந்தே இந்தப் பிரச்சினைகள் ஆரம்பிக்கத் தொடங்குகிறது. அழகு என்பது பெரும்பாலும் புற அழகைத்தான் நம் சமூகம் பேசுகிறது. அகத்தின் அழகை உற்று நோக்கினால் அது பல சமயங்களில் முகத்தின் அழகை விட பன் மடங்கு அழகாகத் தெரியும்!  அழகு என்பது தன்னம்பிக்கை தருவதுதான்.  என்றாலும், அதுவும் நம் மனதில்தான் இருக்கிறது.

பெண்கள் எதற்காக தாங்கள் அழகில்லை என்றோ, தங்களுக்கு உடலில் ஊனம் உள்ளது என்றோ, திருமணம் தடைபடுகிறது என்றோ வருந்த வேண்டும்? பொதுவாக, பெண்கள் சிறு வயதிலிருந்தே திருமணம் என்ற ஒரு பந்தத்தை முன்னிறுத்தித்தான் வளர்க்கப்படுகிறார்கள். திருமணம் என்பது உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவசியமான ஒன்றுதான். என்றாலும் அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் போது அந்தப் பெண்களுக்குத் திருமணம் தடை படும் சூழல் ஏற்பட்டால் மனம் தளர்ந்து தற்கொலை முடிவைத் தேடவைத்து விடுகிறது. முதிர்கன்னிகளும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பெண் அழகாக இருந்து மணம் ஆன பின் ஒரு விபத்தில் அழகை இழந்தாலோ, உடல் ஊனமுற்றாலோ என்ன செய்ய முடியும்? அது போல் திருமணமே வேண்டாம் என்று தீர்மானித்து வாழும் அழகான பெண்கள் இல்லையா?
நம்பள்கி தன்னுடைய அழகான ஆசிரியை ஆன ஒரு “Dr.சிகப்பழகியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும்.  நடிகை சோபனாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  அழகுள்ள அவர் கல்யாணமே செய்து கொள்ளாமல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, தனது நடனக் கலைக்காக அர்பணித்து மனம்கிழ்வுடன் வாழ்கிறார். எனவே அழகில்லை என்றோ, மாற்றுத்திறன் படைத்தவர்களாக பிறந்து விட்டோமே என்றோ திருமணம் ஆகவில்லையே என்றோ நினைத்து வருந்தி தற்கொலை முயற்சி வேண்டாம். நமக்கு நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஏற்ற வழியை கண்டுபிடித்து, அது சமூக சேவையாக இருக்கலாம், கலைத்திறன் அல்லது எழுத்தாற்றலை வெளிப்படுட்த்துவதாக இருக்கலாம் இல்லையேல் இறை உணர்வுடன் வாழும் வாழ்கையாகவும் இருக்கலாம். இவற்றில் நம் முழு கவனத்தையும் செலுத்தி பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை முன்னிறுத்தி அதில் முன்னேறி, தன்னம்பிக்கையையும், தங்கள் ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்வதுடன், கம்பீரமானத் தோற்றமும் மரியாதையும் தரக்கூடிய உடை அணிந்து, உடல் மொழிகளையும் மற்றவர்கள், குறிப்பாக ஆண்கள், மதித்து மரியாதை கொடுக்கும்படியாக அமைத்துக் கொண்டால், அதுவே அவர்களுக்கு மிக மிக கம்பீரமான, மரியாதையான அழகைச் சேர்த்து விடும். அந்த குண அழகுடன் கிடைத்தற்கரிய இவ் வாழ்வை நமக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக்கி வாழப் பழகிக் கொண்டால் வாழும் நாளெல்லாம் இன்ப மயமே.


இங்கு நான் நேரில் கண்ட ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எனது உற்ற நண்பர் துளசிதரனின் அக்கா ஒரு மாற்றுத் திறனாளி. (காதும் கேட்காது, வாய் பேச்சும் இல்லை. அதாவது அவரது பேச்சு அவருடன் நெருங்கிப் பழகியவருக்கு மட்டுமே புரியும். தனி அகராதி. எனக்கும் பழக்கமாகி விட்டது. எனது நண்பரின் குடும்பத்தில் நானும் ஒருவர்)



பல வருடங்களுக்கு முன்பு அவருடையத் திருமணவயதில் அவருக்குப் பார்க்கப்பட்ட ஆண்கள் எதிர்பார்த்ததோ வேறு. மாற்றுத்திறனாளியாக இருந்ததால் இரண்டாம் தாரமாகக் கேட்டு வந்திருக்கிறார்கள். அன்று அவர் எடுத்த முடிவு தைரியாமான முடிவு. திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து தன் பெற்றோருடனும், அவர்களது மறைவிற்குப் பின் தன் சகோதரனாகிய என் நண்பருடனும் மகிழ்சியாக அதே வீட்டில் எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டு, அம்மாவுக்கு நிகராகத் தன் ஆளுமைத் திறானால் வீட்டை நிர்வகித்துக் கொண்டு கம்பீரமாக இருந்து வருகிறார். என் நண்பர் அவரைத் தன் தாய் போலவும், அவருக்கு யாருமில்லையே என்ற மனக் குறை வரக்கூடாது என்பதற்காக தன் 3 குழந்தைகளில் ஒரு குழந்தையை தனது அக்காவிற்கும் கொடுத்து, (எல்லோரும் ஒரே வீட்டில்தான் தான் வாழ்கிறார்கள். அது வேறு!) அவர் குழந்தைகளும், மனைவியும் அவரிடம் அன்புடனும் இருந்து வருகின்றனர். அக்காவிற்குப் பாராட்டுக்கள்!! இது போன்று பல பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
பெண்களுக்கு மட்டுமல்ல இங்கே சொல்லப்படும் பிரச்சினைகள்.  ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் உண்டுதான். ஆனால் ஆண்கள் அதனை  வேறு விதமாகக் கையாண்டு விடுவதால் பெரிதாகக் கருதப்படுவதில்லை.
ஒரு சில சந்தர்ப்பச் சூழலில் தங்கள் அழகையும், தங்கள் மாற்றுத் திறனையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைக் குறைவாக எண்ணிக் கொள்ளலாம். எல்லோருமே இந்த உலகில் அழகானவர்கள்தான். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித் தன்மையுடன், அழகானவர்தான். நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடல் ஊனம் உங்கள் மீது, மற்றவர்களுக்குப் பச்சாதாபமோ இரக்கமோ ஏற்படுத்தக் கூடாது, உங்களையும் இந்த சமூகம் மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? ரொம்ப எளிது.  சுய கௌரவத்தையும், சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்காமல், தன்னம்பிக்கையுடன், உங்கள் திறமையைக் கண்டறிந்து அதை மேம்படுத்தி உங்களைத் தனித்தன்மை உடையவராக்கிக் கொண்டு ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கும் மேலாக உங்கள் முகத்தில் எப்பொழுதுமே புன்னகையை வரவழைத்துக் கொள்ளுங்கள். தன்னலமற்ற, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களைச் சுற்றி ஒரு பாஸிட்டிவ் சக்தியைப் பரப்பி பிரகாசமான ஒளிக் கதிர்களைப் படரவிடும். நீங்கள் உங்களிடம் குறைபாடுகள் என்று நினைக்கும் அனைத்துமே பின்புறம் தள்ளப்பட்டுவிடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!! வெற்றி உங்களுக்கே!!!
Beauty lies in the eyes of the beholder . காண்பவரின் கண்களில் தான் அழகு இருக்கிறது. அவர் உங்கள் முக அழகை விட குண அழகைத்தான் ரசிப்பார்.  ஏனெனில் அவருக்குத் தெரியும் Beauty is skin deep என்று.
                                                   _ கீதா




17 கருத்துகள்:

  1. வணக்கம்

    ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கும் மேலாக உங்கள் முகத்தில் எப்பொழுதுமே புன்னகையை வரவழைத்துக் கொள்ளுங்கள். தன்னலமற்ற, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களைச் சுற்றி ஒரு பாஸிட்டிவ் சக்தி.
    (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)
    நீங்கள் சொலவது உண்மைதான் நண்பரே... அருமையாக எழுதியுள்ளீர்கள். மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் சமூகத்தில் பெண்கள் இன்னும் தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட வேண்டும்!! மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நண்பரே!!

      நீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு என்று சொல்வதை விட பயனுள்ள பதிவு! துளசிதரனுக்கு அனேக வணக்கங்கள்; நாம் போகும் பொது ஒன்றும் கொண்டு செலவ்தில்லை; இங்கு இவர்களை அராசாங்கம் கவனித்துக் கொள்ளும்; இந்தியாவில் உற்றார் உறவினர் தான். இந்த சோகத்திலும் (சோகத்தில் பங்கேற்பதிலும்) ஒரு சுகம் இருக்கு!
    தமிழ் மனம் +1
    இதைப் பற்றி கருத்துக்கள் இன்று மாலை எழுதுகிறேன்.

    மறுபடியும், துளசிதரனுக்கு அனேக வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தோழி இதை எழுதி விட்டு எனக்கு அனுப்பித் தந்த போது என் அக்காவைப் பற்றியதை வெளிப்படுத்தல் அவசியமா என்று தோன்றியது. ஏனென்றால் அதில் என் அக்கா என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அன்புடனும், கடமையுடனும் , பொறுப்புடனும், செய்யப்படுபவை வெளியில் சொல்லப்படும்போது அது தற்புகழ்ச்சியாகிவிடும். மதர் தெரஸா போன்றோரும், பல முதியோர், அனாதைகள், சிறுகுழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், கான்சர் போன்ற நோயினால் கைவிடப்பட்டவர்கள் இவர்களுக்காகக் காப்பகங்கள் நடத்தி சேவை செய்வது, தன்னலமற்ற சேவை. சமூகத்தினால் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இங்கே என்னைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது, ஒரு குடும்ப உணர்வுகளாகிய அன்பு, கடமை, பொறுப்பு சார்ந்தது. பாராட்டுகளுக்கு நான் உரியவன் அல்ல என்பது எனது தாழ்மையான கருத்து. பெற்றோர் தம் குழந்தைகளுக்கும், குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கும் செய்வது போலத்தானே! எனக்கும், தோழிக்கும் வாக்கு வாதம். ஆனால், கீதா பிடிவாதமாக/உறுதியாக இருந்தார்., "இது உன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக அல்ல. இப்படியும் நடக்கத்தான் செய்கிறது. இது ஒரு நல்ல உதாரணமாக மற்றவர்களுக்கு இருக்கக் கூடுமே! இருக்கட்டுமே! இது நம் அக்கா எனும் ஒரு பெண், அதுவும் 40-45 வருடங்களுக்கு முன்பே தைரியமாக எடுத்த முடிவிற்காக. இப்போது, இந்தக் காலகட்டத்தில், படித்த, வேலைக்குச் செல்லும் பெண்கள், இதோ தற்கொலை செய்து கொண்ட, செய்து கொள்ள நினைக்கும் பெண்களுக்காக, ஒரு உதாரணமாகக் காட்டத்தான்" என்று பலதும் விவாதித்துத் தான் எழுதியதை நியாயப்படுத்தினார். கீதாவின் அன்புக் கட்டளைக்கு என்னால் அடிபணியாமல் இருக்க முடியவில்லை, முடியவும் முடியாது. எனவே, நானும் என் பங்கிற்கு, “நீ எழுதியதை உன் பெயர் போடுவதாக இருந்தால், அக்காவைப் பற்றி எழுதியதை சேர்த்துக் கொள் இல்லையென்றால் நீக்கி விடு” என்று அன்புக் கட்டளை இட்டேன். நாங்கள் இருவருமே கலந்து பேசி, இடுகை எழுதி, எடிட் செய்தாலும், அவர் எழுதிய இடுகைகள் எவற்றையும் அவர் பெயரில் வெளியிடவில்லை. விருப்பம் இல்லாதவர். அனுமதிக்கவும் மாட்டார்! தன்னை, தான் எழுதுவதை யாரும் அறியக் கூடாது, தான் யார் என்பதை யாரும் அறியக்கூடாது என்பதில் பிடிவாதம். நேற்றைய வாக்குவாதத்தில், எனது அக்காவைப் பற்றியதும் “என் அக்கா” என்றும் வரவேண்டும் என்று அவர் பிடிவாதத்துடன் விரும்பியதால், தன் பெயரை வேறு வழியின்றி என் கட்டளைக்குப் பணிந்து போட்டுக்கொண்டார்!
      உங்கள் வணக்கங்களுக்கு நான் நன்றி உரைக்கும் அதே சமயம் எனது பொறுப்புணர்வு இன்னும் அதிகமாகி விட்டதாக உணர்கிறேன்! அதற்கும் நன்றி!!

      நீக்கு
  4. Beauty lies in the eyes of the beholder . காண்பவரின் கண்களில் தான் அழகு இருக்கிறது. அவர் உங்கள் முக அழகை விட குண அழகைத்தான் ரசிப்பார். ஏனெனில் அவருக்குத் தெரியும் Beauty is skin deep என்று.//

    அருமையாகச் சொன்னீர்கள்
    விரிவான அருமையான
    இன்றைய சூழலில் அவசியமான
    பகிர்வினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!! உங்கள் கருத்துப் பகிர்தலுக்கும். மனமார்ந்த நல் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  5. என் நண்பர் அவரைத் தன் தாய் போலவும், அவருக்கு யாருமில்லையே என்ற மனக் குறை வரக்கூடாது என்பதற்காக தன் 3 குழந்தைகளில் ஒரு குழந்தையை தனது அக்காவிற்கும் கொடுத்து, //மனிதம் போற்றி வாழும் அவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!! கவியாழி! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும், வாழ்த்திற்கும்!!!!

      நீக்கு
  6. அகத்தின் அழகை உணர்ந்தவர்களுக்கு மற்றதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல... வாழ்த்துக்கள் ஐயா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்!! உங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும், ஓட்டிற்கும் மிக்க நன்றி!! நைனா!!!

      நீக்கு
  7. //அவர் உங்கள் முக அழகைவிட குண அழகைத்தான் ரசிப்பார்//
    உண்மை...உண்மை.

    அறிமுகமான புதிதில் ஒருவரின் புற அழகு நம்மைக் கவரலாம். அவருடன் நெருங்கிப் பழகும்போது, அகத்தில் மாசு படிந்திருப்பது தெரிந்தால் அவரின் அழகு நம் கண்களுக்கு அவலட்சணமாகத் தெரியும்.

    அழகை [புற அழகு] ஆராதிப்போர் அவசியம் படிக்க வேண்டிய உன்னதக் கருத்துப் பதிவு இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அறிமுகமான புதிதில் ஒருவரின் புற அழகு நம்மைக் கவரலாம். அவருடன் நெருங்கிப் பழகும்போது, அகத்தில் மாசு படிந்திருப்பது தெரிந்தால் அவரின் அழகு நம் கண்களுக்கு அவலட்சணமாகத் தெரியும்." 100% உண்மை.!! மிக அழகாகச் சொன்னீர்கள்!

      மிக்க நன்றி!! உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்!!

      நீக்கு
  8. மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்... ரசித்துப் படித்தேன்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு