புதன், 11 டிசம்பர், 2013

கடவுள் ஏன் கல்லானார்?......இந்த மடேஸ்னானம் செய்யும் பாழாய் போன மனிதர்களைப் பாராது இருக்கத்தானோ?



பிராமணர்களின் எச்சில் இலையில் படுத்து உருண்டால் தங்களுடைய மாறாத தோல் வியாதிகள் மாறும் என்றும், வியாதி இல்லாதவர்களுக்கு ஒருபோதும் தோல் வியாதிகள் வரவே வராது என்றும், மோக்ஷம் கிடைக்கும் என்றும் நம்பும் ஆயிரக்கணக்கான பிற்பட்ட மற்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் கர்நாடகத்தில் மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடத்தும் இந்த முட்டாள் தனத்தைப் பற்றி நினைக்கையில் இதயம் வலிக்கின்றது. 2012 ல், கர்நாடக உயர் நீதி மன்றம் அருவருக்கத்தக்க இந்த மூட நம்பிக்கையை நிறுத்தக் கூறி ஆணை பிறப்பித்ததை, உச்ச நீதி மன்றம் ஸ்டே செய்ததுதான் இந்தக் கேவலமான எச்சில் இலையில் உருளும் வழக்கம் மீண்டும் நடக்கக் காரணம்.  ஓட்டுக்களில் மட்டும் கவனம் செலுத்தும் அரசியல் வாதிகளின் மௌனம் இது போனற சம்பவங்களுக்கு உரமாவதால், இந்தக் காட்டுமிராண்டித்தனம் தடையின்றி நடக்கின்றது. அதுவும், சைவக் கடவுளான சுப்ரமணியன் முன்.(வைஷ்ணவ மதம்தான் விஷ்ணுவின் நெற்றியிலிருந்து பிறந்த பிராமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதம்).  எதிர்கால சந்ததியினர் இது போன்ற சம்பவங்களை காணவும், கேட்கவும் செய்யும் போது அவர்களுடைய அறிவாற்றல், சிந்திக்கும் திறன் இவை எல்லாம் ஆவியாகி மூடநம்பிக்கைகள் நிறைந்த மூட சமூகத்தின் பாகமாக அவர்களும் மாறித்தான் போவார்கள்.



இது போன்றவை தமிழகத்தில் நடக்காமல் இருப்பதற்கு நம் பெரியார்தான் காரணம்.  




அது போல் கேரளாவிலும் சம்பவிக்காமல் இருக்க ஸ்ரீ நாராயண குரு தான் காரணம்.  இல்லையேல் பிற்பட்ட, தாழ்த்தப்பட்டத் தமிழர்களும், மலையாளிகளும் இது போல் உருண்டுகொண்டுதான் இருந்திருப்பார்கள். 




இதில் என்ன முரண்பாடு என்றால், சாதிகளை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், தாழ்தப்பட்ட மக்களும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று போராடிய பசவண்ணா என்னும் சமூக சீர்திருத்தவாதி வாழ்ந்த கர்நாடகாவில் இது போல் நடப்பது அவமானமாகத்தான் கருதப்படவேண்டும். இந்த மடத்தனமான மடேஸ்நானம் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது.  இங்கு நம் மௌனம் தற்கொலைக்குச் சமம்.  இதை ஒரு ஜோக்காக எடுக்காமல், ஒவ்வொரு இந்தியனும் தனக்குக் கிடைத்த ஒரு ஷாக்காக எடுத்து, ஆத்திக, நாத்திக வித்தியாசம் பாராமலும், சாதிமத வித்தியாசம் பாராமலும் அரசியல் லாபம் பார்க்காமலும், இது போன்ற மூட நம்பிக்கைகளை வேரோடு பிடுங்கி எறிய உறுதி எடுத்து அதற்காகச் செயல்படவேண்டும். 


பின் குறிப்பு: இன்னும் ஓரிரு சம்பவங்களை இத்துடன் இணைத்தால் இந்த இடுகை பெரிதாகிவிடும் என்ற காரணத்தினால் அடுத்த இடுகையில் இதன் தொடர்பான சம்பவங்களை எழுதவிருக்கிறோம். தயவு செய்து வாசிக்க மறக்க வேண்டாம்.


23 கருத்துகள்:

  1. ஜாதி இல்லை என்று சொல்லும் பிராமணர்கள் இதை நிருக்த ஆவண செய்யவேண்டும். எச்சை இலைகளை கொடுக்ககூடாது. எல்லா மனிதர்களும் சமம் எனும் போது இது என்ன கண்றாவி!
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! நன்றி! நம்பள்கி! நீங்கள் சொல்லுவது மிகச் சரிதான்! இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்!! படித்த, அறிவியல் சமூகத்தில், அறிவியல் யுகத்தில் நடக்கும் செயலே அல்ல! இதற்கு நாங்கள் பின்னூட்டம் இட்டால் அது ஒரு இடுகை அளவு ஆகிவிடும் என்பதால் இங்கு நிறுத்திக் கொள்கிறோம் நம்பள்கீ!!

      + 1 ற்கு நன்றி!!!

      நீக்கு
  2. வணக்கம்
    அருமையாக சிந்தித்து எழுதியுள்ளிர்கள்.. தொடருகிறேன் பதிவுகளை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    பதிவை மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. கடவுள் ஏன் கல்லானார்? கேள்வியிலே பதில் இருக்கு; மனிதன் தனது பிழைப்புக்கு ஒரு உருவம் கொடுத்தான்! பூஜை செய்தால் பவர் வரும் என்று காதில் பூமலை சூடினான். பேய்க்கு சிலை வைத்தாலும் அதையும் கும்பிடுவார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி! உங்களுடைய இந்தக் கருத்து எங்களுக்கு ஒரு புதிய இடுகையை இட வழிகாட்டி இருக்கிறது!!. நன்றி!! என்ன செய்ய? ஏமாற்றுபவனும் இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை! ஏமாற்றப்படுபவனும் இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை.!! புரிந்து கொண்டிருந்தால் இந்த மொள்ளமாரித்தனதை இருவருமே செய்யாமாட்டார்கள்! நன்றி நம்பள்கி!

      நீக்கு
  5. இந்த முட்டாள் தனத்தைப் பற்றி நினைக்கையில் இதயம் வலிக்கின்றது///அறிவிலிகளின் ஆனந்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள்! கவியாழி! நன்றி வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  6. பொது மன்றம் என்ன, நீதி மன்றம் என்ன மூடநம்பிக்கையாளர்கள் எங்குதான் இல்லை?

    படித்த மூடர்களைத் திருத்த முடியாது. என்ன செய்ய?

    பயனுள்ள சிறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே! எத்தனை எழுதினாலும், எத்தனைபேர் எழுதினாலும், மக்கள் தாங்களாக சிந்திக்க வேண்டும் இல்லை கருத்துமிக்கவர் சொல்லும் கருத்துக்களில் உள்ள உண்மையையாவது ஆராய்ந்து சிந்திக்க வேண்டும். இது நடக்காத வரை எந்தப் பிரயோசனமும் இல்லை. நன்றி உங்கள் வருகைக்கும் நல்ல கருத்திற்கும்!!

      நீக்கு
  7. பதில்கள்
    1. கொடூரம்தான்..அராஜகம், காட்டுமிராண்டித்தனம், கேவலம், அட்டூழியம், இன்னும் என்னவெல்லாம் வார்த்தைகள் அகராதியில் உண்டோ எல்லாத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!!! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!!!

      நீக்கு
  8. நல்ல வேளை ,உருள்வதோடு நிறுத்திக் கொண்டார்கள் ..அதில் உள்ள எச்சில் பருக்கைகளை தின்னச் சொன்னாலும் செய்வார்கள் ...இவர்கள் மனிதனாக வாழ்வதற்கே லாயக்கில்லாதவர்கள் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைவிட ரொம்ப மோசமாகச் செய்வார்கள்! உருள முடியாதவர்கள் மறு நாள் காலை எச்சிலை துப்பச் சொல்லி துப்பல் வாங்குவதற்காகக் கூடச் செல்லலாம். என்ன செய்ய? எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவன் வாக்கு இயவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே! அதனால் தானே இப்படியெல்லாம் நடக்கிறது! நன்றி பகவாஞ்ஜி!! வோட்டிற்கும்.

      நீக்கு
  9. நல்ல வேளை ,உருள்வதோடு நிறுத்திக் கொண்டார்கள் ..அதில் உள்ள எச்சில் பருக்கைகளை தின்னச் சொன்னாலும் செய்வார்கள் ...இவர்கள் மனிதனாக வாழ்வதற்கே லாயக்கில்லாதவர்கள் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
  10. இங்கு உள்ள பெரிய பெரிய மனிதர்கள் இதை பற்றி சிறிதும் பேச மாட்டார்கள்.
    வெட்க கேடு.
    பகுத்தறிவை கேலி செய்து கிண்டல் செய்து எழுதும் பலரை இந்த செயலை செய்ய சொல்ல வேண்டும்.
    அப்போது தான் புரியும் அதன் அவலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகமூடி அணிந்து வரும் உங்களை வரவேற்கிறோம்!! உங்கள் கருத்தையும் தான்!! ஆம் தாங்கள் சொல்வது போல அது தான் கேலி செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்றும் கூடக் கொள்ளலாம். நன்றி! வாசித்து வருகை தந்து கருதிட்டதறாகு!!! முகமூடியை எடுத்துவிட்டு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!! பரவாயில்லை. நன்றி!!!

      நீக்கு
  11. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் தமிழகம் பல்வேறு மட்டங்களில் முன்னேற்றம் கண்டமைக்கும் மூட நம்பிக்கைகள் நம்மிடையே வலுவிழந்தமைக்கும் பெரியாரின் பங்கு நிறையவே உள்ளது. அவரின் பெயரைச் சொல்லி தான் ஐம்பது ஆண்டுகாலம் திராவிட கட்சிகள் ஆட்சியும் செய்து வருகின்றன. அண்ணாவின் ஆட்சிக்கு பின் பெரியாரின் சிலைக்கும், படத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், அவரது கொள்கைக்கு கொடுக்கப்படாமல் பரண் மீது வைக்கப்பட்டு விட்டது, கடந்த 25 ஆண்டுகளாக புதிதாக முளைத்து வரும் இந்து, இஸ்லாம், கிறித்தவ மதப் பிரச்சாரங்களும், சாதியங்களும் தமிழர்களை மீண்டும் எங்கு கொண்டு போய் சேர்க்குமோ எனத் தெரியவில்லை. கடந்த 150 ஆண்டுக்கு முன் வரை தமிழர்கள் நாட்டுபுற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். அவர்கள் பார்ப்பன மயமாக்கப்படவில்லை. ஒரு சில ஆதிக்க வெள்ளாள, செட்டியார்கள் மட்டும் தான் பார்ப்பனிய இந்து மதத்தை பின்பற்றினர், ஏனையோர் மதுரைவீரன், மாரியம்மன் என உள்ளூர் தெய்வங்களை வணங்கினர். ஆனால் தேசியவாதமும், புதிய பொருளாதாரமும் நாட்டுப்புற தெய்வங்களை எல்லாம் பார்ப்பனிய மயமாக்கிக் கொண்டு வருவதோடு பண்டைய தமிழர் வாழ்வியல் எச்சங்களும் முற்றாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவும் வருந்ததக்கதோர் சமூக அழிவே எனலாம்.

    ஒரு பக்கம் பெரியாரின் கொள்கைகள் மூட்டைக்கட்டப்பட்டும், மறுபுறம் தமிழ் மொழி சிதைக்கப்பட்டும், இன்னொரு புறம் தமிழரின் நாட்டுப்புற மதம் குலைக்கப்பட்டும் வருகின்றது. இதனைச் செய்வது யார் என சற்று சிந்தித்தால் ஊடகங்கள், அரசு அதிகார எந்திரங்கள் மற்றும் அவற்றுக்கு வால் பிடிக்கும் இயக்கங்கள். ஊடகங்களிலும், அரசு அதிகார எந்திரங்களிலும் யார் பெரும்பான்மையாக செயல்பட்டு வரா..?!!? என்பதை கொஞ்சம் சிந்தித்தால்..

    எப்படி அய்யனார் அய்யப்பனாகவும், மாரியம்மா துர்க்கையாகவும் மாற்றப்பட்டு வருவது புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் பெயரால் நடக்கும் சமூக அநீதிகள், மூடநம்பிக்கைகள் எவையுமே அனுமதிக்கப்படக் கூடாது. தாங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் சரியே! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!

      நீக்கு
  12. எனக்கு இந்த சுட்டி தந்து படிக்க வைத்ததற்கு நன்றி. இந்தப்பதிவுக்கும் ஓராண்டு முன்பாகவே மடேஸ்நானவா மடஸ்நானவா என்னும் பதிவு எழுதி இருந்தேன் அதன் நீட்சியே என் கடைசிப்பதிவு. இந்தப்பதிவில் காணும் ஒரு கருத்தை மறுதளிக்கிறேன் இந்த உருளல் பிரார்த்தனை தமிழ் நாட்டில் பெரியார் புண்ணியத்தால் இல்லை என்று எழுதி இருக்கிறீர்கள் என்பதிவுக்கு வந்த பின்னூட்டப்படி இந்த ஆராதனைகரூர் அருகே இருக்கும் நெரூரில் நடை பெறுவது தெரிகிறது சதாசிவப் பிரம்மேந்திர சுவாமியின் சமாதியில் இன்றும் இது தொடர்வதாக அறிகிறேன் மனிதருள் ஆழ்ந்து கிடக்கும் குருட்டு நம்பிக்கையைப் பெரியாராலும் போக்க முடியாது. ஏனென்றால் இதைச் செய்பவர்கள் சிந்தனா சக்தியை இழந்தவர்கள் என்றே தோன்றுகிறதுஅய்யனாராகவோ அய்யப்பனாகவோ ஒரு சக்தியின் பெயரால் பல குருட்டு நம்பிக்கைகள் இன்னும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. //இது போன்றவை தமிழகத்தில் நடக்காமல் இருப்பதற்கு நம் பெரியார்தான் காரணம். // - நான் என் சிறுவயதில், 5-6வது படிக்கும் வயதில், இராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய கோவிலில் கண்டிருக்கிறேன். கோவில் பக்தர்களுக்கு அருகில் பெரிய பந்தலில் அன்னதானம் நடைபெற்றபோது, அவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் இலையின்மேல் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு