சனி, 31 ஆகஸ்ட், 2013

வெற்றிப் பிள்ளையார்


நான் வேலைக்குச் செல்கின்ற வழியில் உள்ள நடை பாதைப் பிள்ளையாருக்கு எல்லா நாளும் ஒரு வணக்கம் போடாமல் செல்வது கிடையாது.  நடைபாதைப் பிள்ளையார் என்றதும், மிகவும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.   மிகப் பெரிய பணக்காரர்.  சிறிய கோவில் தான் ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறும் அளவு வளர்ந்து விட்டார்.  
அதன் பிறகு அவரது மவுசும் கூடிப்போனது. காரில் வந்து இறங்கும் பக்தகோடிகள் காரை நிறுத்தக் கூட இடம் இல்லாத அளவு பிள்ளையார் ப்ரகாசிக்கத் தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  கூட்டம் அலை மோதத் தொடங்கியது.  தேங்காய் உடைப்பு, சந்தனக் காப்பு, அபிஷேகம், பிள்ளையார் சதுர்த்திக்கு ஒருவாரத் திருவிழா, தேர்வு சமயங்களில் கேட்கவே வேண்டாம், கூடும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கூட்டம் என்று ஜெகத்ஜோதியாகவும், ஜெகத்ரக்ஷகனாகவும் பிரபலாமாகி விட்டார்.  வெற்றி வினாயகர் என்ற பெயர் கூட அவருக்குச் சூட்டியாகி விட்டது. 
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சிக் கழகத்திலிருந்து மேலதிகாரிகள் வந்து, இங்கு தேங்காய் உடைப்பதும், பக்தர்கள் கூடுவதும் நடைபாதையில் நடப்பவர்களுக்கு நடக்க முடியாமல் போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக உள்ளதால், அந்தப் பிரதான சாலையை அகலப் படுத்தப் போவதாகக் கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி நடவடிக்கை எடுத்தபோது மக்கள் திரளாகக் கூடி எதிர்த்து ஆர்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, ஒரு சில மதவாத அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கூட்டி எப்படியோ பிள்ளயாரை அங்கிருந்து அப்புறப்படுத்தாதபடி பார்த்துக் கொண்டனர்.  அவருக்குண்டான ஆதரவைப் பார்க்கவேண்டுமே நீங்கள். ஒரு அரசியல்வாதிக்குக் கூட இந்த அளவுக்கு ஆதரவுக் கூட்டம் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. பல சாதிக்காரர்கள் ஒற்றுமையாக அங்கு கூடி போரடியபோது எனக்கு மிகவும் சந்தொஷமாக இருந்தது. நானும் வேண்டிக் கொண்டேன்.  ‘தமிழ் பண்பாட்டிற்கு ஒவ்வாத இந்த சாதி அரசியலை தமிழகத்திலிருந்து வேரோடு அழித்தால், 101 தேங்காய் உடைக்கிறேன் என்று’.
என்ன சிரிப்பு? நடக்காத விஷயத்துக்கு 101 தேங்காய்னாநீங்க நினைக்கற மாதிரி இவரு சாதாரண பிள்ளையார் இல்லீங்க. வெற்றிப் பிள்ளையார்என்னைய 101 தேங்காய் உடைக்க வைப்பாருஅவர மட்டுமில்ல என் தமிழகத்தயும் நான் நம்பறேன்.  ஏன்னு கேட்டிங்கனா இது சாதி, மதம் பாக்காம வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
அதனால தானே இங்க புரட்சித் தலைவர் முதல்வராக அவரு இறுதிக் காலம் வரை இருந்தாருஅதனால தமிழ் இதயங்களுக்கு சாதி அரசியல் தற்சமயம் வந்த ஒரு மோசமான நோய்வெற்றிப் பிள்ளையார் அந்த நோய உறுதியா குணப்படுத்துவாரு.
ஒருவேளை, கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடியே இவரு இந்த மாதிரி சாதாரண பிள்ளையாரா இல்லாம வெற்றிப் பிள்ளையாரா இருந்திருந்தார்னா, அன்னைக்கே நம்ம தலைவர் ரஜனிய அரசியலுக்கு கொண்டு வந்து இந்த சாதி அரசியல தடுத்திருந்திருப்பாரோம்ம்ம்ம் இனி அது நடக்காதுதமிழ் இதயங்கள்ள அந்த அளவுக்கு கவரக் கூடிய ஒருத்தரு வரணும்பிள்ளையார் யாரையாவது கண்டுபிடிச்சு அனுப்புவாருனு நம்பணும்அவருக்கும் 101 தேங்காய் கமிஷன் கிடைக்கும்ல.”
அங்கு வந்த இரு அதிகாரிகளின் மகள்களுக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததற்குக் காரணம் அவர்கள் இந்தக் கோவிலை அப்புறப்படுத்த வேண்டி வந்ததால்தான் என்றும், அந்த சாமிக் குற்றத்தை உணர்ந்த அவர்கள் இப்போது இந்தப் பிள்ளையாரின் பக்தகோடிகளில், ஸாரி, பக்த பதினாயிரங்களில் எல்லாவற்றிற்கும் முன் பந்தியில் நிற்கும் இருவர்களாக மாறியதாக அங்கு பூ விற்கும் பெண்களும், பிச்சைக்கார்களும் கூடப் பேசிக் கொண்டார்கள்.  இதை எல்லாம் பிள்ளையார், வெற்றிப் பிள்ளையார் என்ற பெயருக்கேற்றபடி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
எது எப்படியோ, எனக்கும் இந்தப் பிள்ளையாருக்கும் உள்ள உறவு இன்று நேற்றல்ல.  பல வருடங்களாக.  அவர் அந்த நடைபாதையில் உள்ள மரத்தடியில் சிறிய கல்லின் மீது எளிமையாக, சாதாரணமாக யாரோ கட்டிவிட்ட ஒரு அழுக்குத் துணியில் வீற்றிருந்த காலம் தொட்டுப் பழக்கம்.  எனக்கு அவர் என்றுமே அதே பிள்ளையார்தான்.  என் ரகசியங்களைக் கூட அவரிடம் தினமும் பகிர்ந்து கொள்வேன்.  இவ்வளவு ஏன், அவர் மணமாகாதவராக இருந்தாலும், எத்தனை வருடங்களாகியும் இதுவரை மாறாமல் என் மனதில் இருக்கும் என் காதலைப் பற்றிக் கூட அவரிடம் பேசிப் பகிர்ந்து கொள்வதுண்டு.  அத்தனைக்கு என் உற்ற நண்பர் அவர்.  அவரைச் சுற்றி பக்தர்களும், பிச்சைக்காரர்களும் அதிகமாயினர்
நான் இதுவரை இந்த பிச்சைக் காரர்களுக்கு ஒரு  ரூபாய் கூடப் போட்டதில்லைஅதனால், எனக்குக் கருணையே கிடையாது என்று நினைத்து வட வேண்டாம். பத்திரமறிந்துப் பிச்சையிடு. காசிட்டு இவர்களை உழைத்து சம்பாதிக்க விடாமல் சோம்பேறிகளாக்கி விடுகிறோம் என்ற எண்ணம்தான் காரணம்.   இவர்கள் யாரும் வேலை செய்து பிழைக்கக் கூட முடியாதபடி உடல் ஊனமுற்றவர்களோ, மனம் ஊனமுற்றவர்களோ கிடையாது.. 
 இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்றுதான் பிள்ளயாரைப் பார்க்கப் போனேன்.  இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள். 
கோவில் இன்னும் சிறிது விரிவாக்கப்படுவதால் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.  தேங்காய் உடைப்பதற்கு என்று ஒரு பெரிய தொட்டி, திருவனந்தப்புரத்திலுள்ள பழவங்காடிப் பிள்ளையார் கோவிலில் உள்ளது போன்று, கட்டப்பட்டிருந்தது.  பிச்சைகாரர்களில், பழையன கழிதலும், புதியன புகுதலும் போல ஒரு சிலர் காணாமல் போயிருந்தனர். 
ஒரு சிலர் புதியவர்களாக இருந்தனர்.  அதில் ஒருவர் மட்டும் இந்தத் தொழிலுக்கே புதியவர் போன்று இருந்தார். அவர் யாரிடமும் யாசிக்காமல் எதையோ பறிகொடுத்தது போன்று விட்டத்தையே வெறித்தபடி இருந்தார்.  பூக்காரியிடம் அருகம்புல் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றேன்.  அர்ச்சகர் என்னை இரண்டு மாதம் காணாததைப் பற்றி விசாரித்தார்.  நான் இரண்டு மாதங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதற்கான பணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு வாசலுக்கு வந்தேன்.  அப்போதும் யாசிக்கும் கூட்டத்தில் இருந்த அந்தப் புதியவர்  ஏனோ என் மனதை நெருடினார்.  பூக்காரியின் அருகில் வந்து என் செருப்பை அணியும் போது என் நலம் பற்றி விசாரித்து விட்டு, என் கண்கள் அந்தப் புதியவரை நோக்கிப் போவதைப் பார்த்து அவளே அவரைப் பற்றிக் கூறத் தொடங்கினாள். 
பக்கத்தில இரண்டு தெரு தள்ளித்தான் குடியிருந்தாரு. சொந்த வீடுதான்.  அவரு நல்ல பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சவரும்மா.  பெரிய்ய வேலைல இருந்தாரு. அதான்மா இந்தக் காரெல்லாம் வீட்டுக்கு கூட வந்துக் கூட்டிட்டுப் போவுமே, அதென்னவோ பேரு வாயில நுழயல, அத்த வுடு, அந்தக் கம்பனி கவுந்துருச்சு.  அதான் எல்லா பேப்பர்லயும் வந்துச்சே.  இவரு செய்யாத தப்பு இவரு பெரிய்ய பொறுப்புல இருந்ததுனால இவரு மேல பழி வந்துருச்சு.  இவரு நிறைய லட்சம் லட்சமா ரூபா கட்டும்படியா ஆயிடுச்சு.  போலிசு கேசு ஆயிப்போச்சு.  பொண்டாட்டிக்காரி அவங்க வீட்டுல நல்லப் பணம். நல்லப் பணக்காரி.  அவ இவர அம்போனு வுட்டுட்டு, புள்ளங்கள இட்டுகிட்டு பொறந்தவூட்டுக்குப் போயிட்டா.  என்னப் பொம்பள அவ.  இப்படியா கட்டினவர நடுத்தெருல வுட்டுட்டுப் போவா? இவலாம் பொம்பள ப்பு.  இவரு இங்க நாதியத்துக் கெடக்காரு.  என்னத்த சொல்ல.  கோயிலு ஐயருதான் இரக்கப்பட்டு அவருக்கு கோயில்ல செய்ற ப்ரசாதம் கொடுப்பாரு.  அவரு செல சமயம் வாங்கிக்குவாரு.  செல சமயம் இந்தா இப்ப உக்காந்துருக்காரு பாரு இப்படித்தான்.  அப்புறம் இங்க இருந்த சிலதுங்கள ஏதொ கூட்டர வேலை, தோட்ட வேலை வாங்கிக் கொடுத்து இட்டுட்டுப் போய்ட்டாங்க.  இவருக்கும் அந்தப் பிள்ளையார்தான் ஏதாவது வழி காட்டணும்.  என்று இரண்டு மாதக் கதையை சொல்லி முடித்தாள்
எனக்கு மனது வேதனையாக இருந்தது. உண்டியலில் போட்டப் பணத்தை இவருக்குக் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.  பிள்ளையாரும் சந்தோஷப்பட்டிருப்பார்.  கோவிலில் இடுவது நல்ல விஷயம்தான்.  ஆனால் அதைவிட உண்மையாக நலிந்த ஒருவருக்குக் கொடுத்து இருக்கலாம் என யோசித்துக் கொண்டே நடந்தேன். அப்போது அந்தப் பூக்காரி சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்தது. “அந்தப் பிள்ளையார்தான் ஏதாவது வழி காட்டணும்”. அந்த மனிதருக்கு நிரந்தரமான வருமானம் கிடைப்பதற்கு அவருக்கு எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு வழி செய்யலாமே என்றுத் தோன்றியது. பிள்ளையார் என் மனதில் வேறு ஒரு சிந்தனை தோன்றக் காரணமாகி விட்டார். திரும்பிப் பார்த்தேன் அவரை. 

"இங்கு வருபவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுதானே என் ஸ்டைல். அதனால் தானே வெற்றிப் பிள்ளையாராக நான் இங்கு வீற்றிருக்கிறேன்.  குறைகளுடனும், குறைகளைத் தீர்க்கும் திறமை உடையவர்களும் இங்கு வருகிறார்கள். என்னிடம் சொல்லிவிட்டாய் இல்லையா நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ போய் ஆகவேண்டியதைப் பார்" என்று என்னைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது. 
ஒரு நம்பிக்கைத் தோன்ற என் குற்ற உணர்வு மறைந்து, அவருக்கு உதவும் எண்ணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று யோசித்தேன், யாருக்காவது உதவும் எண்ணம் வந்து விட்டால் நமது மனதில் எப்படி ஒரு இனம் புரியாத மகிழ்வுணர்வு வருகிறது என்று  நினைத்தபடியே பிள்ளையாரைத் திரும்பிப் பார்த்துவிட்டு என் அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். அப்போதும் வெற்றிப் பிள்ளையார் அவர் பெயருக்கேற்றபடி ஒர் மர்மப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக